பீறிடும் விஜய் மல்லையாவின் பீரும் அதில் வழியும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களின் ரத்தமும்

ஆறு மாதங்கள் சம்பளமே வாங்காத மாத சம்பளக்காரர்களின் நிலை எப்படிப்பட்டது? அடுத்த மாதம், அடுத்த மாதம் சம்பளம் வந்துவிடும் என ஒவ்வொரு மாதத்தையும் கடனில் ஓட்ட வேண்டியிருக்கும். மூன்றே மாதங்களில் சம்பள பாக்கியைவிட கடன் பெரிதாகிவிடும்.

மாத சம்பளத்தை வைத்து ‘கௌரவ’ வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்துக்கு கடன் மிகப்பெரிய அவமானம். இக்கட்டான வாழ்க்கைச்சூழலை கையாள்வதற்குக் கிடைக்கும் நம்பிக்கைகளைவிட, ஊதியம் இல்லாத சூழலில் நம் சமூகம் நமக்குத்தரும் அவநம்பிக்கைகள் அதிகம். அப்படியொரு சூழல்தான் மனஸ் சக்ரவர்த்தி என்ற ஊழியரின் குடும்பத்திலும் ஏற்பட்டிருக்கிறது. எளிதில் சமூக உணர்வுகளுக்கு ஆட்பட்டுவிடும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அடுத்த கட்ட செயல்பாடு தற்கொலையை நோக்கியதாகத்தான் இருக்கும். 45 வயதான சுஸ்மிதாவின் முடிவு நமக்குச் சொல்வதுவும் அதுதான். ஆனால், தன் தற்கொலைக்கு முக்கிய காரணமான அந்த கணம் பொருந்திய திருவாளர் கணவானை அவர் காட்டிக்கொடுத்திவிட்டார். இதோ பெருமையுடன் அவரைப் பற்றி சொல்லலாம். அவர்தான் வளங்கொழிக்கும் யுனைடெட் பீவரீஸ் குரூப்பின் தலைவரான விஜய் மல்லையா!

யுனைடட் பீவரீஸின் கீழ் யுனைடெட் பீவரீஸ் லிமிடெட், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், மேங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெட்டிலைசர்ஸ், யுபீ இன்ஜினீயரிங், யுபீ ஹோல்டிங்கஸ் லிமிட், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாமே விஜய் மல்லையாவின் நிறுவனங்கள். கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸைத் தவிர எல்லாமே வளங்கொழிக்கும் நிறுவனங்கள்தான். இந்தியாவின் 40 சதவீகித மதுபான மார்க்கெட்டை வைத்திருக்கிறது யுபீ. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு 50 சதவீகித அளவிற்கு மதுபான வகைகளை ஏற்றுமதி செய்கிறது. உலக அளவில் பிரபல பிராண்ட் மது நிறுவனங்களை தேடித்தேடி வளைத்துப் போடுகிறது யுனைடட் பீவரீஸ். இந்தியாவின் விற்பனையாகும் பீரில் 60 சதவீகிதம் யுபீ லிமிடெட்டின் தயாரிப்புதான்.

இவ்வளவு லாபத்தில் கொழித்தாலும் மாடல்களுக்கும் நடிகைகளுக்கும் வாரி வழங்கும் விஜய் மல்லையாவுக்கு தனக்காக உழைத்த ஊழியர்களுக்கு சம்பளம் தர மனதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாதது, அப்படியே ஊதியம் கொடுத்தாலும் உழைப்பை கடைசி துளி ரத்தம் உள்ளவரை உறிஞ்சுவது இதற்கிடையில் இந்திய கம்பெனி முதலாளிகளுக்கு மிகப்பெரிய முன்னுதாரதாரமாகி இருக்கிறது கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ். கம்பெனி நஷ்டத்தில் இயங்குகிறது என்கிற காரணம் காட்டி, பல மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளத்தை பாக்கி வைத்திருக்கிறார் மல்லையா. ஊடகங்களில் பலமுறை இந்த விஷயம் வெளிவந்திருக்கிறது, ஒரு வரிச் செய்தியாக. வரி பாக்கி வைத்திருப்பதால், கிங் ஃபிஷரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. ‘கணக்குகளை செயல்படுத்துங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தைத் தருகிறேன்’ என்று ரொம்பவும் நாசூக்கான பதிலையே கூறிக்கொண்டிருந்தார் மல்லையா. சம்பள பாக்கி பிரச்னையை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை.

தங்களுடைய செல்லப் பிள்ளை, சினிமா ஸ்டார்களுக்கு இணையான பேஜ் 3 நாயகன் விஜய் மல்லையாவின் ‘ஏர்லைன்ஸ் கனவு சிதைந்து போயிடுச்சே’ என்றுதான் ஊடகங்கள் கவலைப்பட்டன.

(செய்திகளை அலசி ஆராய்வதில் முன்னோடி தொலைக்காட்சி நிறுவனமான என்டீடிவி, மல்லையாவுடன் சேர்ந்து குட் டைம்ஸ் என்ற சேனலை நடத்திவருகிறது. தன்னுடைய மது வகைகளை பிரபலப்படுத்த மல்லையா ஆரம்பித்த லைஃப் ஸ்டைல் சேனல் இது.) வங்கிகளிடம் வாங்கிய கடனை ஏப்பம் விட்டதுபோததென்று, விஜய் மல்லையாவுக்கு மேலும் கடன் தர வேண்டும் என்று அவை எழுதின. விஜய் மல்லையாவை நொடிந்துபோன பெரும்தனவானாக உருவகப்படுத்தி ‘அச்சச்சோ’ என்று உச்சுக்கொட்டியே பக்கங்களை எழுதித் தள்ளின.

முடியைத் திறந்துவிட்டதும் பொங்கும் பீர்போல யுனைடெட் பீவரீஸ் மூலம் மல்லையாவின் பணப்பெட்டி நிரம்பி வழிந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படி வழிந்து கொண்டிருக்கும் பணத்தின் ஒரு சிறு துளி போதும் இந்த ஊழியர்கள் குடும்பத்தின் பசியாற்றுவதற்கு.
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸை ஆரம்பிப்பதற்கும் நடிகைகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியை வாரி வழங்குவதற்கும் யுனைடெட் பீவரீஸ் நிறுவனத்தில் கிடைத்த அபரிமிதமான லாபம் தேவைப்பட்டது. ஆனால் கிங் ஃபிஷரின் நஷ்டத்தை ஈடுகட்ட அல்ல, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூட பீர் விற்ற பணத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பது எந்த வகையான பிஸினஸ் மேனேஜ்மெண்ட்? இது சரியா என்று, கிங் ஃபிஷர் பீரை திறந்து வைத்துக்கொண்டு நீங்கள் யோசியுங்கள். அல்லது சிரிப்பு நடிகர் சந்தானம் போல ‘பீர் கூலீங்கா இல்லையே’ என டாஸ்மார்க் ஊழியரிடம் சண்டை இடுங்கள்.