விநாயகர் சதுர்த்தியும் துரத்தியடிக்கடிக்கப்படும் யானைகளும்

விநாயகர் சதுர்த்தி நாடெங்கிலும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தனை வருடங்களாக எங்கள் தெருவில் தோன்றாத பிள்ளையார், இந்த ஆண்டு கோலாகலமாக வீற்றிருக்கிறார். உபயம் இந்து முன்னணி. என்னுடைய இந்தப் பதிவு அதைப்பற்றியதல்ல. யானைகளை துரத்தியபடி யானை தலையைத் தாங்கி நிற்கும் ஒரு கடவுளை வணங்கும் நம்மைப் பற்றிய சுயவிமர்சனம் இந்தப் பதிவு. யானைக் கடவுளை வணங்கும்படி எனக்கு குழந்தைப் பருவத்தில் சொல்லித்தரப்பட்டது. யானைக் கடவுளுக்கான விழாவை நான் பிறந்த ஊரில் விமர்சையாகவே கொண்டாடுவார்கள். ஆனாலும் பிரத்யேகமான கவர்ச்சியோ, உறவோ யானை கடவுள் மேல் எனக்கு ஏற்பட்டதில்லை. யானைகள் மேலும் அப்படித்தான். அது என்னோடு வாழும் ஒன்றாகவே பட்டது. அதன் பேரில் வியப்பும் இல்லை, ஈர்ப்பும் இல்லை. யானைகள் வந்து செல்லும் வழித்தடத்தில்தான் எங்களுடைய பள்ளிப் பயணம் இருக்கும். யானை தின்றுவிட்டுப்போன பலாப்பழங்களை சேகரிப்பது என்னுடைய பால்ய கால ஆர்வமாக இருக்கும். காட்டு யானைகளை பால்ய வயதில் நேரில் பார்த்த நினைவு எனக்கு இல்லை. வளரும் பருவத்தில் தெருவில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த யானைகளைப் பார்த்திருக்கிறேன். சமீபகாலத்தில்தான் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மூங்கில் கிளைகளை ஒடித்துக்கொண்டிருந்த ஒரு யானைக் கூட்டத்ததைப் பார்த்தேன்.

யானைக்கும் எனக்குமான தொடர்பு நான் ஏழுமாத கருவாக இருந்தபோதிலிருந்து ஏற்பட்டது. என்னை கர்ப்பத்தில் சுமந்திருந்த அம்மா, விறகுகட்டுகளை தலையில் தூக்கி சுமந்தபடி அந்திவேளையில் வீடு திரும்பியபோது யானையைப் பார்த்து அலறி விழுந்ததாகவும் அப்போது இடுப்பில் ஏற்பட்ட வலி இப்போதும் இருக்கிறது என்று என் அம்மா இறக்கும்வரை சொல்லிக்கொண்டிருந்தார். நான் பிறந்தது யானைகள் நடமாட்டம் உள்ள, சூழலியல் மொழியில் சொல்லப்போனால் யானை வழித்தடத்தின் மேல் அமைந்த ஒரு ஊரில். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது அந்த ஊர். இந்த ஊர் குறித்து நான் எழுதிய இந்தப் பதிவில் படிக்கலாம். சுற்றிலும் காடு, சிறிது பண்படுத்தப்பட்ட விவசாய நிலம், அதை நம்பிருந்தனர் அந்த ஊர் மக்கள். 25 ஆண்டுகளுக்கு முன்புவரை மண்சாலைகள்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்த ஊருக்குச் சென்று வந்திருந்த அம்மா, தார்ச்சாலைகள் போடப்பட்டு பேருந்து போக்குவரத்து வசதியும் செய்திருப்பதாக சொன்னார். இதேபோல அந்த வனப்பகுதியில் இருந்த மற்ற ஊர்களுக்கும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருக்கும், மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும், கட்டடங்கள் பெருகியிருக்கும் (இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஊரில்  யானைகள் வந்து செல்லும் பலாமரக்காட்டை அழித்து குடியிருப்புகள் கட்டப்பட்டன), மக்களும் பெருகியிருப்பார்கள். ஆனால் யானைகள்?

யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக செய்திகளில் அதிகம் அடிபடும் பகுதியாக இப்போது இந்தப் பகுதி மாறியிருக்கிறது. வெட்கமே இல்லாமல் அது எப்படி மனிதர்களால் மட்டும் பொய்யை மெய்யாக்க முடிகிறது? யானைகளின் வாழ்விடங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதென்னவோ நாம்தான். வாழ்விடங்களைப் பிடிங்கிக்கொண்டு அகதிகளாக துரத்தியடிக்கப்படும் இந்த உயிர்களின் மேல் ஏன் நமக்கு எந்த கரிசனமும் வருவதில்லை? மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில் எனக்கு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அந்த மக்களுக்கு நம்மோடு சகஉயிரியாக இருக்கும் காட்டுயிர்களின் மேல் அக்கறை இல்லாமல் இருக்கிறதே என்பதே என்வேதனை. இதற்கெல்லாம் காரணகர்த்தாக்களாக அரசுகளைத்தான் கைகாட்ட வேண்டியிருக்கிறது. ஒருபக்கம் வெறுமனே கண்துடைப்புக்காக கொண்டுவரப்படும் வனத்துறை சட்டங்கள், இன்னொரு பக்கம் வனத்தை ஒட்டியுள்ள நிலப்பரப்பை அசுரவேகத்தில் ஆக்கிரமிப்பு செய்வது. இரண்டும் முறைகேடு மிகுந்த இந்த அரசுகளின் அவலட்சணமான முகங்கள்.

Elephant family

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு யானை குடும்பம்

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளை பழங்குடிகளைத் தவிர, புதிய குடியேறிகள் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் இருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தொடக்கம் முதலே அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அடுத்தது காட்டுயிர் நடமாட்டம், குறிப்பாக யானை வழித்தடங்களை அறிவியல் ரீதியாகக் கண்டறிந்து அந்த வழித்தடங்களில் உள்ள குடியிருப்புகள் அப்புறப்படுத்துதல், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைச் செய்யவில்லை. அடுத்தது வனத்துறைக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருக்கும் ஆன்மிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்களை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது. அரசுகளின் ஆதரவோடு நடக்கும் சூழலியல் சார்ந்த மிகப்பெரிய முறைகேடு, ஊழல் இதுவாகத்தான் இருக்கும். யானை உள்ளிட்ட காட்டுயிர்களின் அழிவுக்கு அடித்தளமாக இருக்கும் இந்த பிரச்னைகளை களையாமல் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளாக்கப் போவதாக 6 காட்டுயானைகளைப் பிடித்து பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே…

படம் நன்றி : தி நேச்சர் டிரஸ்ட்

புலி உறுமல் கேட்குமா?

புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. இன்று அதே சமூகத்தின் சந்ததிகள்தான் புலிகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நம் தேசிய விலங்கான புலிகள் எஞ்சியிருப்பது வெறும் 1411 மட்டுமே.

புலி ஒரு காட்டுயிர் மட்டுமல்ல, வளமான காட்டின் அடையாளம். அதாவது நாமும் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளும் சிறப்பான வாழ்வை வாழப்போகிறோம் என்பதற்கான குறியீடு. அடர்ந்து வளர்ந்த மரங்களும் புல்லும் புதரும் நிறைந்த காட்டில் அதை உணவாக உண்ணும் முயல், மான், மாடு, காட்டுப் பன்றி, குரங்கு போன்ற உயிரினங்கள் வாழும். இவற்றின் எண்ணிக்கை கூடும்போது புலி, சிறுத்தை, நரி, ஓநாய் உயிரினங்களின் உணவுத் தேவை தீர்ந்து அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இந்த மூன்றும் சங்கிலித்தொடராக தொடரும்போதுதான் காடு தன் இயல்பைத் தொலைக்காமல் இருக்கிறது. பருவ மழை சரியான பருவத்தில் பொழிந்து ஆறு பெருகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. எல்லாமே ஒன்றொடொன்று தொடர்புடையவை. சென்னையில் இருக்கும் நான், மேற்கு தொடர்ச்சி மலையின் ஏதோ ஒரு சரணாயத்தில் வாழும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என ஏன் கவலைப்பட வேண்டும் என கேட்டுவிட முடியாது! நம் ஒவ்வொருவரின் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை புலிகள். காடுகள் வேகமாக அழிக்கப்படுவதாலும் தோலுக்காக வேட்டையாடப்படுவதாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசும் தன்னார்வர்லர்களும் முழுமூச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்பாடுகளால் புலிகளின் எண்ணிக்கையும் சக இரையுண்ணிகள், அவற்றின் இரைகள், தாவர வளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வருடந்தோறும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த ஒன்பது வருடங்களாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறார் சென்னையிலிருந்து இயங்கிவரும் நேச்சர் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் திருநாரணன்.
“தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வனங்களில் நடந்த கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறேன். இந்த வருடம் ஆனைமலை பகுதியில் கணக்கெடு எடுத்தோம். புலிகள் கணக்கெடுப்பு என்று பெயர் இருந்தாலும் காட்டில் உள்ள அதாவது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் இருக்கும் மரம், செடி, விலங்குகள், பறவைகள் என அத்தனையையும் கணக்கெடுக்க வேண்டும். இதுதான் செயல்முறை. இதை வைத்துதான் புலிகளின் எண்ணிக்கையும் வாழ்வாதாரமும் கணிக்கப்படும்.

அந்த வகையில் ஆனைமலை சரகம் வளமோடு இருக்கிறது என்பதை நேரிடையாக பார்க்க முடிந்தது.
இவ்வளவு உயிரினங்கள் இருக்கின்றன என்று ஆறே நாட்களில் கணக்கிட்டு சொல்லிவிட முடியாது. புலி, சிறுத்தை போன்றவற்றை நேரிடையாக பார்ப்பதும் அரிதான விஷயம். அதனால் அவற்றின் கால்தடங்கள், கழிவுகள், மரங்களின் மேல் அவை ஏற்படுத்திச் சென்ற உராய்வுகள் இவற்றை வைத்து கணக்கெடுப்பு செய்கிறோம். மான் இனத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றின் கழிவு பொருட்களை வைத்துதான் அவை இந்த வகையைச் சேர்ந்தவை என்று குறித்துக்கொள்கிறோம். நீர் நிலைகளில் விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். அங்கு அவை விட்டுச்சென்ற அடையாளங்களையும் சேகரிப்போம். நீர்நிலைகளை வைத்து யானைகளின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதெல்லாம் மறைமுக கணக்கெடுப்பில் வருபவை. பெரும்பாலும் காட்டுயிர் கணக்கெடுப்பில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. » » » »

பல காலமாக பின்பற்றிவரும் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கூறமுடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலர் மற்றும் மாலிக்குலர் மையம் (Centre for cellular and Molecular Biology) புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது புலிகள் விட்டுச்சென்ற தடயங்களிலிருந்து அவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதே இந்த முறை. உயிரினம் ஒவ்வொன்றுக்கும் டிஎன்ஏ அமைப்பு வேறுபட்டு இருக்கும். இதை வைத்து துல்லியமாக புலிகளின் எண்ணிக்கை சொல்ல முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி நிறுவனம். முதுமலை வனசரணாலயத்தில் இந்த கணக்கெடுப்பு முறை சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து சரணாலயங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும் என்கிறது இந்நிறுவனம்.

« « « காட்டுயிர் வளத்தை மட்டுமல்ல, காட்டை நம்பி, அவற்றை சுற்றி வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை கவனிப்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற வகையில் முக்கியமான பணி. இந்த வருடம் ஆனைமலையில் வசிக்கும் முதுவர் பழங்குடி மக்களை சந்திக்க முடிந்தது. காட்டின் நடுவே உடுவம்பாறை, சங்கரன்குடி, பரமன்குடி போன்ற வசிப்பிடங்களில் அவர்களைப் பார்த்தோம். காடு, வனஉயிரினங்கள் குறித்த அவர்களின் அறிவு வியத்தலுக்குரியது. பழங்குடி இன மக்களைத்தான் வேட்டை தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பயன்படுத்திவருகிறது. காடு குறித்த அறிவுச்செல்வம் மிக்க இந்த மக்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் அரசு, அதற்குரிய வேலை உள்ளிட்ட பொருளாதார தேவைகளை செய்துகொடுக்க வேண்டும்” என்ற திருநாரணன்…» » » »

அடர் காடுகளில் மட்டுமே புலிகள் வசிக்கும். கடலும் ஆறு சேரும் முகத்துவாரப் பகுதியில் வசிப்பதால் வங்காளப் புலிகள் தனிச்சிறப்பானவை. அலையாத்தி(மாங்குரோவ்) மரங்கள் நிறைந்த சுந்தரவனக்காடுகளில் வாழும் வங்காளப் புலிகள், இன்னும் 60 வருடங்களில் அழிந்து விடும் என எச்சரித்துள்ளது உலக காட்டுயிர் பாதுகாப்புக்கான நிதியம்.

« « « “ஆனைமலை சரகத்தில் காட்டுவளம் நல்லநிலையில் இருந்தாலும் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தலையீடு அதிகமாகவே இருக்கிறது. புதிதாக முளைத்திருக்கும் தேயிலை தோட்டங்களும் அதை ஒட்டி எழுந்துள்ள குடியிருப்புகளும் காட்டுயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை. இப்படி காட்டின் பகுதிகளை அபகரித்துக்கொண்டு, பின் நாளில் புலிகள் வேட்டையாடுகின்றன, யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று கூச்சலிடுவதில் எந்த நியாயமும் இல்லை!” என்று முடித்தார்.


நாடு முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு காட்டுயிர் ஆர்வலர்களுக்கு இது ஆறுதலுக்குரிய செய்திதான் என்றாலும் இந்த வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு இன்னும் நிறைவே செய்யவேண்டியிருக்கிறது.