காடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிரபல தொடரான சந்தனக்காடு தொடரில் வீரப்பனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் ஒகேனக்கல் காட்டுப் பகுகளில் மறைந்திருப்பதாக ஒரு காட்சி. அந்தக் காட்டுப் பகுதியைக் காட்டுவதாக சில கோப்புக் காட்சிகளைக் காட்டினார்கள். அதில் யானைகள், குரங்குகள், சிங்கங்கள் உலவுவதாகக் காட்டினார்கள். எனக்கோ ஒரே ஆச்சரியம் ஒகேனக்கல் காட்டில் சிங்கமா? மதிப்பிற்குரிய வீரப்பன்தான் தோலுக்காக சிங்கங்களை சுட்டு வீழ்த்தியிருப்பாரோ என்று தோன்றியது. தொடரை இயக்கிய கெளதமனின் காட்டுயிர் அறிவை எண்ணி வியந்தேன். அது இருக்கட்டும், சிங்கங்கள் நம் நாட்டுக்கு உரிய உயிரினங்களே இல்லை என்கிறார் பிரபல காட்டுயிர் ஆய்வறிஞர் வால்மீகி தாப்பர்.

சமீபத்தில் இந்தியாவின் முதன்மையான வரலாற்றறிஞர்களுள் ஒருவரான ரோமிலா தாப்பர் மற்றும் மொகலாய வரலாற்று ஆய்வாளர் யூசுப் அன்சாரியுடன் வால்மீகி தாப்பர் எழுதிய Exotic Aliens: The Lion & The Cheetah in India என்ற நூல் சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் நம் நிலப்பரப்புக்குரிய உயிரினங்களே இல்லை என்கிறது. பல்வேறு வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார்கள் இவர்கள். இந்திய காட்டுயிர் சகாப்தத்தில் இது மிக முக்கியமானதொரு ஆய்வு நூலாக பார்க்கப்படுகிறது. பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்திலும் இந்தியாவில் கிர் காடுகளிலும் மட்டும்தான் சிங்கங்கள் வாழ்கின்றன. ஆப்பிரிக்க சிங்கங்கள் உருவத்தில் பெருத்தவை. ஆசிய சிங்கங்கள் எனப்படும் இந்திய சிங்கங்கள் உடலமைப்பில் சிறியவை.காட்டின் அரசனாக நாட்டுப்புற கதைகளிலும் வலிமை, வீரத்தின் அடையாளமாக வரலாற்றிலும் சொல்லப்பட்ட சிங்கங்கள், நம் நாட்டுக்குரிய பிரத்யேக உயிரினங்கள் இல்லை என்பது பலருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கலாம்.

’’உலகின் எல்லாக் கண்டங்களிலும் தொன்மையான மத வழிபாட்டுக்குரிய விலங்காக சிங்கம் இருந்திருக்கிறது. இதை வலிமையின் சின்னமாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் கொண்டாடிய பகுதிகளில் இது காட்டில் உலவியிருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கும் என்று கருதுவதற்கு வாய்ப்பில்லை. பைபிளில்கூட சிங்கங்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை பாபிலோனிய பகுதிகளில் சிங்கத்தின் எலும்புகூடுகளோ, அவற்றின் மிச்சங்களோ கண்டறியப்படவில்லை. இங்கிலாந்து, பெல்ஜிய பேரரசுகளின் சின்னமாக சிங்கங்கள் உள்ளன. ஆனால் அந்தப் பகுதிகளில் மனித குடியேற்றத்திற்கு முந்தைய கால சிங்கங்களின் புதை படிமங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை’’ என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளரும் கவிஞருமான ருத் படெல்.

exotic aliens the lion and the cheetah in india

இவருடைய கருத்துப்படியே தமிழில் சங்க இலக்கியங்கள் தொட்டு எண்ணற்ற இலக்கியங்களில் சிங்கம் தொடர்பான வர்ணணைகள், உவமைகள், வியப்புகள், போற்றுதல்கள் பதியப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் குறித்து பல்வேறு காலக்குழப்பங்கள் இங்கே உண்டு. பொதுவாக முதலாம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்டிருக்கலாம் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.

வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர், அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போதோ அல்லது அவருடைய படையெடுப்புக்குப் பிறகோ சிங்கங்களின் வருகை நிகழ்ந்திருக்கலாம் என்கிறார். அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு கி.மு. 327ல் நிகழ்ந்தது. சங்க இலக்கியங்களில் கிரேக்க, ரோமானிய மக்களுடன் வணிக தொடர்பு இருந்தது சொல்லப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரபூர்வ சான்றுகளாக புதுச்சேரி அரிக்கமேடு பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள ரோமானிய கலைப்பொருட்கள் மற்றும் நாணயங்கள் (கி.மு. 1 நூற்றாண்டைச் சேர்ந்தவை) மூலம் தெரிந்துகொள்ளலாம்.

எனவே இவ்வகையான தொடர்புகள் மூலம் சிங்கங்கள் இங்கே வந்திருக்கலாம், அல்லது சிங்கத்தைப் பற்றி வாய்மொழியாகவோ சித்திரங்கள் மூலமாகவோ பண்டைய தமிழ்மக்கள் அறிந்திருக்கலாம். வலிமையின் வீரத்தின் அடையாளமாக இருந்த சிங்கங்கள் ஏன் சேர, சோழ, பாண்டிய அரசர்களின் கொடிகளில் இடம்பெறவில்லை? சிங்கத்துடன் ஒப்பிட்டு பாடப்பெற்றவ மன்னர்கள் ஏன் தங்கள் கொடிகளில் சிங்கத்தைக் கொண்டிருக்கவில்லை. சிங்கம் இந்த மண்ணுக்குரிய விலங்கு அல்ல என்பதற்கு இதை ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம். மற்றொரு முக்கியமான ஆதாரமாக தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்லும் ஐந்திணைகளை எடுத்துக்கொள்வோம். இதில், காடும் காட்டைச் சார்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் குறிஞ்சித் திணையின் கருப்பொருள்களில் புலி, யானை, கரடி,பன்றி என்ற விலங்குகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. சிங்கத்தை வேறு திணைகளின் கருப்பொருள்களிலும் சொல்லப்படவில்லை.

DSCN0715

மாமல்லபுர சிங்க சிற்பம்

அடுத்து, பல்லவர் கால மாமல்லபுர கல்சிற்பங்களில் சிங்க உருவங்கள், சிலைகள் பல இடங்களில் வடிக்கப்பட்டுள்ளன. இதை சிங்கங்கள் தமிழகத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரமாகக் கொள்ளலாம் என காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான சு. தியடோர் பாஸ்கரன் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்னும் நூலில் சிங்கங்கள் பற்றி கட்டுரையில் தெரிவிக்கிறார். பல்லவர்கள் (கிபி 6ம் நூற்றாண்டு) வடக்கிலிருந்து வந்தவர்கள் என்கிற கருத்தாக்கத்தை வரலாற்றாசிரியர்கள் பலர் முன்வைக்கிறார்கள். சிங்கங்கள், வட இந்தியாவில் நன்கு அறிமுகமான விலங்காக இருந்திருக்கலாம், அது வழிபாட்டுக்குறியதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அதன்பேரில் நம்பிக்கை கொண்டிருந்த பல்லவர்கள் இங்கு ஆட்சி செலுத்தியபோது அவற்றை சிலைகளாக செதுக்கியிருக்கக்கூடும்.

காட்டுயிர் எழுத்தாளர் ச.முகமது அலி, சிங்கங்கள் 6000 வருடங்களுக்கு முன்பு வடக்கு ஆப்பிரிக்கா வழியாக இந்தியாவிற்குள் வந்திருக்கலாம் என்கிற கருத்தை முன்வைக்கிறார். பண்டைய நகரமான பால்க் (ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பகுதி)லிருந்து கி.பி. 6ம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தவை என்கிறார் வால்மீகி தாப்பர். காலங்கள் வேறுபட்டாலும் இருவருடைய முடிவுகளும் சிங்கங்கள், இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டவை என்பதை சொல்கின்றன. எதற்காக சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டன? அரசர்கள், குறுநில மன்னர்கள் தங்களுக்கு கட்டுப்பட்ட வனப்பகுதிகளில் செல்லப்பிராணிகள் போல் விட்டு வளர்ப்பதற்காக கொண்டுவந்தனர். 17ம் நூற்றாண்டில் மொசாம்பிக் காடுகளிலிருந்து அதிக அளவிலான சிங்கங்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் வால்மீகி. சிவிங்கிப்புலிகளை மொகாலய மன்னர்கள் தங்கள் அரண்மனைகளிலேயே செல்லப்பிராணிகளாக வளர்த்திருக்கிறார்கள்.

அக்பரிடம் 1000 சிவிங்கிப்புலிகள் இருந்ததாக அக்பர் நாமா என்கிற நூல் கூறுவதாக கட்டுரை ஒன்றில் சு. தியடோர் பாஸ்கரன் தெரிவிக்கிறார். அதேபோல் திப்பு சுல்தானிடம் 16 சிவிங்கிப்புலிகள் இருந்ததாகவும் அதே கட்டுரையில் சொல்லியிருக்கிறார். சிறுத்தை சற்றே பெருத்த உருவமும் உயரத்தில் சற்றும் குறைந்தும் இருக்கும். சிறுத்தை நீண்டு உயர்ந்த ஒல்லியான உடல்வாகைக் கொண்டது. இப்படியான உடல்வாகால் சிவிங்கிப்புலியால் மிக வேகமாக ஓட முடிகிறது. இந்த காரணத்தால்தான் இந்திய மன்னர்கள் காட்டில் வேட்டையாடச் செல்லும்போது சிவிங்கிப்புலிகளை தங்களுடன் அழைத்துச் செல்வதை விரும்பியிருக்கின்றனர். சிங்கங்களைப் போலவே சிவிங்கிப்புலிகளும் வேற்று நிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை என்பதற்கான வலுவான ஆதாரங்களாக இவற்றைக் கொள்ளலாம்.

FourSeals

ஹரப்பா முத்திரைகள்

இந்த நூலில் ரோமிலா தாப்பர், ’’சிங்கங்கள் இந்த மண்ணுக்குரிய தனித்துவமான விலங்காக இருந்திருக்கும் பட்சத்தில் இந்தியாவின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான ஹரப்பா முத்திரைகளில் புலி, காளை, காண்டாமிருக உருவ முத்திரைகள் உள்ளதுபோல், சிங்க முத்திரை ஏன் இடம் பெறவில்லை? 8லிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களில் சிங்க உருவங்கள் எதுவும் காணப்படவில்லை’’ என்கிறார். ’’புலிகள், சிறுத்தைகளோடு சிங்கம், சிவிங்கிப்புலிகளும் நம் காடுகளில் திரிந்திருக்குமென்றால், புலிகள், சிறுத்தைகள் மட்டும் இன்றுவரை எப்படி நிலைத்திருக்க முடிகிறது. இவற்றின் வலிமையோடு ஒப்பிடும்போது சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் வலிமை குறைந்தவை அல்ல.  எனில் எப்படி அவை முற்றிலுமாக அழிந்துவிட்டன?’’ என்கிற கேள்வியை முன்வைக்கிறார் வால்மீகி. ’

’குஜராத்தில் ஜூனாபாத் நவாப், சிங்கங்களைப் போற்றி வளர்த்தார். தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து வேறுபகுதிகளுக்கு சிங்கங்கள் கொண்டு செல்லப்படுவதை தடை செய்தார். இன்றைய குஜராத் ஆட்சியாளரும் சிங்கங்களை தம் மாநிலத்தின் சொத்தாகக் கருதுகிறார். மத்திய பிரதேச மாநில வனப்பகுதியில் சிங்கங்களைக் கொண்டு போய் விட்டு, அவற்றைப் பெருக்கும் திட்டத்தை எதிர்த்தார் மோடி. இந்த விஷயத்தில் முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களின் நிலைபாடு ஒன்றாகவே இருக்கிறது’’ என்கிறார் வால்மீகி.

இந்த நூலின் தொடர்ச்சியாக தமிழ் இலக்கியங்கள், வரலாற்று குறிப்புகளில் சிங்கம் மற்றும் சிவிங்கிப்புலிகள் குறித்து மறுவாசிப்பு அவசியமாகிறது. இந்த நூலை மறுத்தோ, ஆதரித்தோ பல்வேறு தடையங்கள் கிடைக்கலாம். இந்த நூலைப் பற்றிய அறிமுகத்தில் ’’இருக்கவே இருக்காது!’’ என தன்னுடைய வியப்பைத் தெரிவிக்கிறார் சான்சுவரி ஏசியா ஆசிரியர் பிட்டு சாஹல். உண்மை சில சமயங்களில் வியப்பையும் ஏற்படுத்துவதுண்டு. Exotic Aliens: The Lion & The Cheetah in India  புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

தமிழகத்தில் 1500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்

‘‘ஓவியங்கள்னு சொன்னாலே அது மேற்கத்திய பாணி ஓவியங்கள்தான் ஆயிடுச்சு. பல ஆயிரம் காலத்து பாரம்பர்யத்தை மறந்துட்டு அதைத்தான் நாமும் எந்த கேள்வியும் கேக்காம ஏத்துக்கிட்டிருக்கோம். இனி வரப்போற தலைமுறையாவது நம்மோட கலை பண்பாட்டை தெரிஞ்சிக்கணும்தான் நாங்க காடுகளையும் மலைகளையும் தேடி பயணப்பட்டுக்கொண்டிருக்கோம்’’ என்கிறார் பழங்கால பாறை ஓவிய கண்டுபிடிப்பாளரான காந்திராஜன்.

test 2
சென்னை எழும்பூர் அரசு கவின் கலை கல்லூரியில் பகுதி நேரமாக ஓவியக்கலையைச் சொல்லித்தரும் காந்திராஜனுக்கு பழங்கால ஓவிய மரபுகளைத் தேடி போவதுதான் முழுநேர வேலை. தன்னைப்போலவே ஆர்வமுள்ள முன்னாள், இன்னாள் கவின் கலை மாணவர்களுடன் சேர்ந்து மரமான கலைகளைத் தேடி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் அப்படியொரு பயணத்தில் பொள்ளாச்சி ஆழியாறு அருகில் 1500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். வீடியோ இணைப்பு இங்கே

ஓவியங்களை பிரதியெடுக்கிறார் காந்திராஜன்

ஓவியங்களை பிரதியெடுக்கிறார் காந்திராஜன்

‘‘பழங்குடி இன குழந்தைகளுக்கு அடிப்படையான சில ஓவிய பயிற்சிகள் கொடுக்கிறதுக்காக நாங்க ஆழியாறு பக்கத்துல இருக்கிற சின்ன வாய்க்காமேடுங்கிற இடத்துக்குப் போயிருந்தோம். பயிற்சி வகுப்புகளுக்கு நடுவே பழங்கால ஓவிய மாதிரிகள் சிலதை காட்டி, இதுமாதிரியான ஓவியங்களை பார்த்திருக்கீங்களா?ன்னு கேட்டோம். அதுல ஒரு பொண்ணு அவங்க ஊர் காட்டுல ஏதோ ஒரு இடத்துல யானை மாதிரியான ஒரு மிருகத்தை வரைஞ்சிருக்கிறதை பார்த்ததா சொன்னாங்க. அப்புறம் அந்தப் பொண்ணோட ஊரான மாவடைப்புக்கு போய் விசாரிச்சி இந்த இடத்தை கண்டுபிடிச்சோம்.

ரொம்பவும் அடர்ந்த காட்டுப் பகுதியில இருக்கிற குன்று அது. அந்த குன்றை கொப்பத்து மலைன்னு சொல்றாங்க. சாதாரணமா கைக்கு எட்டின தூரம் மட்டும் வரையாம அந்த காலத்திலேயே சிரமப்பட்டு ஏணிமாதிரியான பொருளை பயன்படுத்தி வரைஞ்சிருக்காங்க. பொதுவா பழங்காலத்து ஓவியங்கள்ல வரையப்பட்ட வேட்டையாடற காட்சிகளைத்தான் இவங்களும் வரைஞ்சிருக்காங்க.

DSCN5337

ஒரு ஓவியத்துல மேய்ஞ்சுகிட்டிருக்கிற மாடுகளை புலி ஒண்ணு வேட்டையாட பார்த்துக்கிட்டிருக்கு, அதுக்கு கீழே ஒரு வட்டம், அதுக்குள்ள சில மனிதர்களையும் வட்டத்துக்கு வெளியே சில மனிதர்களையும் வரைஞ்சிருக்காங்க. தங்களோட சேர்ந்தவங்கன்னு காட்டறதுக்காக மனிதர்களை வட்டம் போட்டு காட்டியிருக்காங்க. இப்படி ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களை கவனிச்சு வரைந்தவர்கள் நிச்சயம் திறமைசாலிகளாகத்தான் இருப்பார்கள்.
ஆஸ்திரேலியாவுல இருக்கிற பழங்குடிகள் பாறைகள்ல வரைஞ்சிக்கிட்டிருந்த ஓவியங்களை துணிகள்ல வரைய ஆரம்பிச்சு தங்களோட பாரம்பரியத்தை காப்பாத்திட்டாங்க. ஆனா, நம்ம நாட்டுல அப்படிப்பட்ட மாற்றங்கள் ஏன் வரலைன்னு அக்கறை உள்ளவங்க யோசிக்கணும்!’’ என்கிறார் காந்திராஜன். இவர்கள் கண்டுபிடித்த சில இடங்களை தமிழக தொல்லியல் துறை பாதுகாக்க முனைந்துள்ளது.

 

 

பாம்புகளோடு யானைகளும் புலிகளும் சாகடிக்கப்பட வேண்டியவைதான்!

தமிழில் விவசாயம், தொழிற்நுட்பம், மேலாண்மை குறித்த எழுத்துக்கள் ரொம்பவே குறைவு. இப்போதுதான் அவற்றையெல்லாம் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் துறைகளில் தமிழ் பத்திரிகைகள் வருவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. பொருளாதார ரீதியிலான பலவீனம் காரணமாக இந்தப் பத்திரிகைகள் பெரிய அளவில் வாசகர்களை சென்று சேருவதில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த விகடன் கொண்டுவந்ததுதான் ‘பசுமை விகடன்’.
தரமான கட்டுரைகளுடன் இயற்கை விவசாயம் குறித்து சூழலியல் நோக்கில் தொடர்ந்து எழுதிவருகிறது பசுமை விகடன். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது ‘பசுமை விகடன்’ வாங்கிப் படிக்கும் வாசகி நான்.

தற்போது கடைகளில் இருக்கும் இதழில் பதினைந்து அடி நீளமுள்ள ராஜநாகத்தை அடித்துக் கொன்றதாக அப்பையா நாயக்கர் என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்துவிட்டதாக இதில் ஒரு செய்தி. ‘மரத்தடி மாநாடு’ என்ற தொடரில் (விவசாயம் சார்ந்த நல்லது கெட்டதுகளை அரட்டை பாணியில் சொல்லும் பகுதி) இதில் வரும் ஏரோட்டி என்ற கதாபாத்திரம் இந்த செய்தியை சொல்வதோடு, ‘‘ஏதோ கடத்தலுக்காக அடிச்சுக் கொன்னுருந்தா ஜெயில்ல போடறதுல தப்பில்ல.. பாவம், பயந்துபோய் அடிச்சவறுக்கும் அதே கதியா?’’ என்றுநொந்துபோய் சொல்வதாக முடித்திருக்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள ஒரு கிராமத்திலிருந்து மீட்ட ஆண் ராஜநாகத்துடன் காட்டுயிர் ஆய்வறிஞர் ரோமுலஸ் விட்டேகர்.

அடர்ந்த வனங்களில் மட்டுமே வாழும் ‘ராஜநாகம்’ இந்திய மண்ணுக்கே உரித்தான அரிய வகை உயிரினம். கிட்டத்தட்ட அழிந்துகொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் காட்சியகங்களில் மட்டுமே இது வாழும். அரிதாகிக் கொண்டிருக்கும் உயிரினம் என்பதால்தான் இதைக் கொல்லவோ, உயிரோடு வைத்திருக்கோ தடை விதித்து சட்டம் இயற்றி இருக்கிறது வனத்துறை. ‘‘பயந்துபோய் அடிச்சவறுக்கும் இதே கதியா?’’ என்று இந்தப் பத்தியை எழுதியவர் கேட்டிருப்பது இது குறித்து அவருக்கு உள்ள போதாமைக்காட்டுகிறது. இப்படியொரு போதாமையில்தான் எல்லா கட்டுரைகளும் எழுதப்படுகிறதா என்கிற சந்தேகமும் நமக்கு வருகிறது. நம்முடைய கவலையெல்லாம் லிவசாயிகள் மத்தில் நல்லதொரு மதிப்பைப் பெற்றிருக்கிற பத்திரிகை, அவர்களுக்கு தவறான வழிகாட்டியாக மாறிவிடக்கூடாது என்பதுதான். கோவை, நீலகிரி மாவட்டங்களில் யானைகளுக்கும் விவசாயி (காட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள்)களுக்கும் உள்ள பிரச்னை அவ்வப்போது செய்தியாகிறது. தன் விவசாய பூமிக்குள் யானை புகுந்துவிடாமல் இருக்க,. மின்சார கம்பிகளில் வேலிகட்டி, யானைகளை பலியிடுவதை நியாயப்படுத்த முடியுமா?
அல்லது தன் இடம் பறிபோகும்போது வழியில்லாமல் குடியிருப்புகளில் புகுந்துவிடும் புலிகளை கொன்றுவிட்டு, ‘என் இடத்தில் வந்துவிட்டது’ என்று சொல்லலாமா? 15 அடி நீள பாம்பைக் கொன்றது சரியென்றால், 11 அடி நீளமுள்ள புலிகளைக் கொல்வதும் யானைகளைக் கொல்வதும் சரிதான்!

படங்கள் நன்றி : KING COBRA RESEARCH STATION, WESTERN GHATS 

புலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

காட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில்  இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

நிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
பந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger  என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.