கோவன் அப்படியென்ன தவறு செய்துவிட்டார்?

may-day-kovilpatti-kalai-2

மக்கள் பாடகர் கோவன் அரசியல்வாதிகளைப் போய் சந்தித்தது குறித்து நிறைய விமர்சனங்கள் வருகின்றன. சில முற்போக்காளர்களும்கூட சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்கள். நாகரிகமாக எதிரியிடம் கைக்குலுக்குவதைக்கூட விரும்பாத எல்லா நேரத்திலும் பகைமை தோலில் தூக்கி சுமக்க வேண்டும் என்பது இவர்களுடைய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. மனிதத்தை வலியுறுத்தும் பலரும் இதைச் சொல்வது முரணாக இருக்கிறது.

சாதாரணமாக வயதான ஒரு பெரியவரிடம் பேசும்போது குனிந்து வளைந்துதான் பேசமுடியும். அதுதான் பணிவு. அந்தப் பணிவு 90 வயதுகளில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்கும்போது வருவது இயல்பானதே. அதற்கெல்லாம் ஒரு சாயம் பூசப்பார்ப்பது அநாகரிகம். கருணாநிதியைப் பார்த்ததுபோலத்தான் மற்ற தலைவர்களையும் கோவன் சந்தித்திருக்கிறார்.  மரியாதை நிமித்தமாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்ததாக கோவன் சார்ந்த மகஇக அமைப்பு சொல்லிவிட்டது.

எதிர்நிலையில் நின்று பேசக்கூடியவர்கள் ஆனால், தன்னுடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கொடுத்தவர்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இன்னமும் வினவு தளத்தில் கருணாநிதியை, ஸ்டாலினையும் திருமாவளவனையும் விஜயகாந்தையும் கடுமையாக விமர்சித்து எழுதிய கட்டுரை அப்படியேதான் உள்ளன. வினவு தளத்தில் ஆட்சியாளர்களின் தவறு விமர்சித்து எப்போதும் எழுதப்பட்டுதான் வந்திருக்கிறது. நாளை இந்த அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா செய்ததையே செய்தாலும் அவர்கள் விமர்சிக்கத்தான் போகிறார்கள்.

எனவே, எல்லா செயலுக்கும் முடிச்சுகள் போடாமல் கொஞ்சம் நாகரிகக் கண்கொண்டு பாருங்கள் நண்பர்களே!

 

தமிழில் இயற்கை எழுத்தின் தொடர்ச்சி…

DSCN0286

கொன்றை மலர், சென்னை கோட்டூர் புரத்தில்.

தமிழில் இயற்கை தொடர்பான எழுத்தைப் படிக்கும் பரவசத்துக்கு இணையாக வேறு எந்த வகையான எழுத்திலும் நான் உணர்ந்ததில்லை. எந்த வகையான எழுத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு உணர்வு. நான் பரவசத்தை இயற்கை எழுத்தில் அடைகிறேன்.

நேற்று காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன் அவர்களின் வலைப்பதிவை நானும் என் குழந்தை கோசியும் பார்த்தோம். நான் படித்தேன், அவன் பதிவின் ஊடாக இருந்த காட்டுயிர் புகைப்படங்களை ரசித்தான். தமிழில் காட்டுயிர் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். அதில் நிச்சயம் ப. ஜெகநாதன் குறிப்பிடத்தகுந்தவராக கொள்ளலாம். இவருடைய பறவைகள் பற்றிய நூலான பறவைகள் :அறிமுகக் கையேடு (க்ரியா வெளியீடு, மற்றொரு ஆசிரியர் ஆசை) நூலை படித்திருக்கிறேன். அப்போதுதான் இவரைத் தெரிந்துகொண்டேன். தமிழகத்தில் காணப்படும் பறவைகளின் தமிழ் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொதுவான இயல்புகளை படங்களோடு வெளியிட்டிருக்கும் அந்த நூல் பறவைகள் பற்றி அறிதலில் ஆர்வமிருப்பவர்கள் சிறந்த ஆரம்ப நிலை வழிகாட்டி. என் குழந்தைக்கு பறவைகள் பற்றிச் சொல்லித்தரவும் இதைத்தான் நான் பயன்படுத்துகிறேன். தமிழில் இப்படியொரு நூல், இதை விரிவுபடுத்திய அடுத்தடுத்த நூல்கள் நிறைய வரவேண்டும். அந்த வகையில் க்ரியாவும் ப.ஜெகநாதன் மற்றும் ஆசை ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

நான் குறிப்பிடவந்தது பா.ஜெகநாதன் இயற்கையை ரசனையோடு எழுதக்கூடிய கட்டுரையாளராகவும் இருக்கிறார் என்பதே. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் அவ்வவ்போது எழுதிவந்திருக்கிறார். எனக்குத்தான் தெரியவில்லை. இயற்கை எழுத்தைப் பொறுத்தவரையில் இயற்கையின் மீது அன்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சிறந்த எழுத்தை உருவாக்க முடியும். அந்தவகையில் ப.ஜெகன்நாதனின் எழுத்தில் இயற்கை மீதான அன்பு பல கட்டுரைகளில் புலப்படுகிறது. கோடையில் பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்களை நம்மில் எத்தனை பேர் ரசிக்கப் பழகியிருக்கிறோம். கொன்றை பற்றிய ஒரு கட்டுரைக்கு பொன் என கொன்றை மலர் என கவித்துமாக தலைப்பு வைத்திருக்கிறார். பல கடினமான வாழ்க்கைச் சூழல்களை நான் இந்தக் கொன்றை மலர்களிடம் தொலைத்திருக்கிறேன். இதன் பெயரே ஒரு கவிதைப்போலத்தான் எனக்குத் தெரிகிறது. இயற்கை எழுத்து என்பது வெறுமனே ரசிப்பது மட்டுமல்ல, அதன் அறிவியல் தன்மையையும் பேச வேண்டும். அதையும் செய்கின்றன இவருடைய எழுத்துக்கள். இயற்கை எழுத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் இவருடைய வலைதளத்திற்குச் சென்று கட்டாயம் படியுங்கள். நேற்றும் இன்றும் நானும் என் குழந்தையும் இவருடைய வலைதளத்திற்குச் சென்று ரசித்தோம்.

…………………………………………………………………………………………………………………………………………………………………………….

ர்ப்ப்பை வாய் புற்றுநோய் சோதனைக்காக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெண்களை பயன்படுத்துவதாக வினவில் இன்று படித்தேன். இதுகுறித்து 2010ல் மருத்துவர் புகழேந்தி கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்போது நான் பணியாற்றிய இதழில் இந்த கட்டுரையை எழுதியிருந்தேன். அப்போது ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பழங்குடியினப் பெண்களை இந்த சோதனைக்காக பயன்படுத்தியிருந்தார். அந்த சோதனையில் 3 பெண்கள் தடுப்பு மருந்து உட்கொண்டு பரிதாபதாக உயிரிழந்தார்கள். அந்த சமயத்தில் அதைப் பற்றி சில மாற்று இதழ்களில் கட்டுரைகள் வந்தன. ஆனால் இப்படி இந்தியப் பெண்கள் சோதனை எலிகளாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இப்போது தமிழகம்வரை இந்த சோதனைக்களம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதைக் கண்டிக்க, இதைத் தடுத்த நிறுத்த ஏன் யாரும் அக்கறை காட்டவில்லை. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்னையாகப் படவில்லையா? நாளை நம் வீட்டுப் பெண்ணும் சோதனை எலியாக்கப்படலாம் என்பதை இவர்கள் உணர்வார்களா?

அறத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்த சவுக்கு!

சவுக்கு தளம் தடை செய்யவேண்டும் என்கிற அறிவிலித்தனமான உத்தரவு வந்த வேகத்தில் குப்பைத்தொட்டிக்குள் போய்விட்டது. அது அப்படித்தான் போகும். ஆனால் ஊடகத்தை முடக்கும் அளவுக்கு நீதித்துறை சிலரின் கைபாவையாக மாறியிருப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம். வாய்கிழிய அறம் பேசும் ஊடகங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்திருக்கிறது சவுக்கு. ஒரு வலைத்தளம் மிகப்பெரிய ஊழலின் முக்கியமான ஆதாரத்தை வெளிக்கொண்டு வந்திருப்பது இந்திய ஊடக வரலாற்றில் இதுவே முதல்முறை. இணைய ஊடகத்தில் இதை முக்கியமான வரலாற்று நிகழ்வு என்றே சொல்லலாம்.

சமீபத்தில் அறம் பேசும் சில பத்திரிகையாளர்களால் நான் வேலையிழந்து நெருக்கடிக்கு உள்ளானேன். மிகவும் சோர்வான தருணம் அது. அறப் புரட்சியாளர்களுக்கு சத்தியமாக நான் நல்லதையும் செய்யவில்லை, கெட்டதையும் செய்யவில்லை. நான் வேலையில் இருக்கக்கூடாது, அல்லது எனக்கு வேலை கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் ஏன் இத்தனை காழ்ப்போடு இருக்கிறார்கள் என்று சத்தியமாக இதுவரை எனக்குத் தெரியவில்லை. இந்த அறம் பேசும் ஊடகக்காரர்களை சவுக்கு தோலுரித்துப் போட்டது! இங்கே இன்னொன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தக் கட்டுரைகளில் நான் எந்த இடத்திலும் வரவில்லை. எந்தவிதமான தகவல்களும் சவுக்கு நான் தந்ததில்லை. ஆனால் நான் நேரடியாக கண்டவற்றை அப்படியே எழுதியிருந்தார்கள் சவுக்கில். என்னைப் போல் பாதிக்கபட்டவர்களின் குரலாக அது இருந்தது.

நான் சோர்ந்து போகும்போதெல்லாம் எனக்கு நம்பிக்கை அளித்தவர்கள் வினவு தோழர்கள். இப்போது சவுக்கும் அதில் இணைந்து கொண்டுள்ளது. சவுக்கின் பணி தொடர வேண்டும். எந்தவித சமரசங்களுக்கும் அதில் அது இசைந்துகொடுக்கக்கூடாது. ஊடகத்தின் எதிர்காலம் என்பது அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ இல்லை அது இணையத்தில்தான் இருக்கிறது. சமரசங்களுக்கு இசைந்து கொடுக்காத ஊடகமாக சவுக்கு வளர வேண்டும் என்று இந்த தருணத்தில் விருப்பம் தெரிவிக்கிறேன்.