இன்னுமொரு ’சிறந்த பட்டியல்’!

News reader Poonguzhali

தமக்குத் தெரிந்தவர்கள், தமக்குத் தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என தன் சுயத்தை சுற்றியிருப்பவர்களை மட்டும் பட்டியல் போடுவது எழுத்தாளர்கள், ஊடகக்காரர்களின் வழக்கமாகிவிட்டது. நியூஸ் மினிட் பட்டியல் எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. பட்டியலில் உள்ளவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்தான்.

ஆனால், பு.தலைமுறையின் ஜென்ராம், நியூஸ் 7 செந்தில், விஜயன் இவர்களின் பங்களிப்பை இந்தப் பட்டியல் புறக்கணித்துள்ளது. பூங்குழலி, வெங்கட பிரசாத்தின் மனைவி என்ற அளவிலே சுருக்கப்பட்டிருக்கிறார். பூங்குழலியின் தமிழ் உச்சரிப்பும் எளிமையும் என்னை மிகவும் ஈர்த்தவை. நியூஸ் 7 செந்தில், விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முன் அந்த தலைப்பு சார்ந்து உழைப்பது அவர், பங்கேற்பாளர்களிடம் முன்வைக்கும் கேள்விகளால் தெரிகிறது. எல்லா நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள், மடக்குகிறார்கள். ஆனால் செந்திலின் கேள்விகளில் எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மேதைமை இருப்பதில்லை.

அதுசரி, ஏன் பிரைம் டைம் விவாத நிகழ்ச்சிகளை பெண் தொகுப்பாளர்கள் யாரும் தொகுப்பதில்லை? தொலைக்காட்சிகளிலும் பெண்ணுக்கு சமையல், சேமிப்பு, கல்வி, விவசாயம், விளையாட்டு என்கிற சஃப்டான துறைகள் மட்டும் ஒதுக்கப்படுவதன் பின்னணி என்ன?
பெண் தொகுப்பாளர்களுக்கு சர்ச்சையான அரசியல், சமூக விவாதங்களை தொகுக்கும் திராணி இல்லை என்று ஊடகங்கள் ஒதுக்குவதாக எடுத்துக் கொள்ளலாமா?

இது இறுதி அறுவடை!

DSCN1881

எல்லோருக்குமான கவலை நதிகள் பாய்ந்து வளப்படுத்தும் விவசாய நிலங்கள் பற்றியதாக இருக்கிறது. நதி வழி விவசாயம் இன்று மேட்டிமைதனத்தோடு யாரோ உழைத்து யாருக்காகவோ விளைவிப்பதாக மாறிவிட்டது. சம்பா அரிசி விளைவிக்கும் விவசாயி, ரேஷன் அரிசியை உண்பதுதான் யதார்த்தம். இந்த சம்பா அரிசி நாளை இல்லாமல் போய்விடுமே என்கிற ஆதங்கம்தான் இதை உண்பவர்களுக்கு இந்த விவசாயிகளின் மேல் அதீத அக்கறையை ஏற்படுத்துகிறது. ஊடகங்களை அணுக முடியும் இவர்களால் அவர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது. அல்லது குரல் கொடுப்பதாக பாவ்லா காட்ட முடிகிறது. இவர்கள் இருக்கட்டும், வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து, தன் வயிற்றுக்கு பருப்பையும் திணையையும் விளைவிக்கும் விவசாயிகளும் இங்கே பெருமளவில் இருக்கிறார்கள். தமிழகம் என்ன திரும்பிய பக்கமெல்லாம் நதிபாயும் வெனீஸா என்ன? இல்லை, வறண்ட பூமியும் இங்கே உண்டு.  ஆனால் இன்றைய மக்களின் சொத்து குவிக்கும் ஆர்வம் மானாவாரி நிலங்களை கூறுபோட்டு வீட்டு மனைகளாக மாற்றிவிட்டது. எல்லா ஊர்களில் மானாவாரி விவசாய நிலங்கள் கூறுபோடுவது கண்மூடித்தனமாக நடந்துவருகிறது.

DSCN1891

DSCN1941
சமீபத்தில் என் ஊருக்குச் சென்றிருந்தபோது இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டேன். எங்கள் வீட்டருகே இருந்த விவசாய நிலம் கூறுபோடப்பட இருக்கிறதாம். இதுதான் கடைசி அறுவடை என்று தெரிவித்தார் அந்த நிலத்தில் விவசாயம் செய்யும் அந்தப் பாட்டி. மகனின் கடன்களை அடைக்க நிலத்தை கூறுபோடப் போவதாக சொன்னாள் பாட்டி. அந்த நிலத்தின் மீது எங்கள் குடும்பத்திற்கு இருந்த பிணைப்பு நெடியது. மழைக்காலங்களில் காளானையும் கீரைகளை எங்களுக்கு தந்தது அந்த நிலம். மாடுகள் இருந்தபோது அந்த நிலத்தில் வரும் புல்லும் எங்களுக்கு பயன்பட்டது. அதைவிட மகிழ்ச்சி நிலம் பூ, காயுமாக நிறைந்திருப்பதை காணும்போது கிடைக்கும். இதை நம்பி வரும் கரிச்சான், மைனா, அக்காக் குருவி, தவிட்டுக்குருவியை காண்பதும் இனிது. இனி எதைக் காண்போம் என்று தெரியவில்லை!

கருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க காத்திருக்கும் காமுகர்களின் சமூகம்!

Copy of Photo-0008_1

‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

வறட்சியால் துவண்டு கிடக்கும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதில் மெட்ரோ பாலிடன் சென்னையைத் தேடி வரும் ஆயிரக்கணக்கானவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் என்று சொன்னார். 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை அவருக்கு. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட, ஆரம்பத்தில் விவசாயம் பார்த்து வாழ்ந்திருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன் நகரத்து கட்டட வேலைகளுக்கு விவசாயிகள் வரத் தொடங்கிய நேரத்தில் இவரும் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். சித்தாளாக 15 ஆண்டுகள் கல், மண் சுமந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். தற்போதும் இங்கேயே வசிக்கிறார்.

சமீபத்தில் இவருடன் பேசியபோது இயல்பாக இவர் சொன்ன அந்த விஷயம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருமகள் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருப்பதாக சொன்னவர், இந்த முறை ஆண்தான் என்று உறுதியாக தெரிந்துவிட்டது என்றார்.

‘எப்படி?’
‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

‘எந்த ஆஸ்பிட்டல்? பேர் என்னா?’

‘பேர் தெரியலமா, ஆயிரபா குடுத்தா ஸ்கேன் பண்ணி சொல்லிர்றாங்க. எம் மருமவ அங்கதான் போய் பாத்துட்டு வந்துருக்குது. ஆம்பளை புள்ளன்னு சொல்லிட்டாங்களாம்.’

‘ஹாஸ்பிட்டல் பேர் தெரியலையா?’

‘தெரில…என்னான்னு. இப்படி ஸ்கேன் பண்ணி சொல்றாங்கன்னு தெரிஞ்சி கெவர்மெண்ட்ல சீல் வச்சிட்டாங்களாம். பூட்டு போட்டிருந்தாகூட பின் பக்கமா போயி வந்துகுனுதான் இருக்காங்க.’

அதற்கு மேல் அவரிடமிருந்து தகவல்களைப் பெற முடியவில்லை. அரசாங்கம் சீல் வைத்த பிறகும் ஒரு மருத்துவமனை இயங்குகிறது என்றால், அதற்கு பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பு முதன்மையான காரணம். அடுத்த காரணம் தவறை கண்டுகொள்ளலாம் இருக்கும் அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள என் பூர்விக கிராமத்துக்குச் சென்றிருந்தபோது இதேபோல் இன்னொரு சம்பவத்தையும் கேள்விப்பட்டேன். என்னுடன் படித்த பெண் அவர், அவருக்கு ரெண்டு பெண் குழந்தைகள், மூன்றாவதாக கர்ப்பமானதாகவும் 5 மாதத்தில் அது பெண் என்று தெரிந்துவிட்டதால் கலைத்துவிட்டதாகவும் சொன்னார்.

‘அப்பாடா பெண் சிசுக்கொலைகளை ஒழித்துவிட்டோம். தொட்டில் குழந்தை திட்டம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது’ அரசுகள் ஒருபுறம் கூவிக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பெண் சிசுக்கொலைகள் நவீன வசதிகளோடு உலா வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஆரம்ப கட்ட சமூக சீர்திருத்தத்தைக் கூட செய்ய முடியாத அரசாங்கம் காமுகர்களிடமிருந்து எப்படி பெண்களைக் காப்பாற்றும்?

அப்படியே கருவிலிருந்து தப்பி வந்தாலும் 3 வயதில், 12 வயதில், 22 வயதில், 38 வயதில், 50 வயதில் ஏன் 70 வயதில்கூட காமுகர்கள் விடமாட்டார்கள். கருவிலிருந்து கல்லறை போகும்வரை பெண்ணை சிதைக்க காத்துக்கொண்டிருக்கிறது இந்த கேடுகெட்ட சமூகம்!

பாம்புகளோடு யானைகளும் புலிகளும் சாகடிக்கப்பட வேண்டியவைதான்!

தமிழில் விவசாயம், தொழிற்நுட்பம், மேலாண்மை குறித்த எழுத்துக்கள் ரொம்பவே குறைவு. இப்போதுதான் அவற்றையெல்லாம் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் துறைகளில் தமிழ் பத்திரிகைகள் வருவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. பொருளாதார ரீதியிலான பலவீனம் காரணமாக இந்தப் பத்திரிகைகள் பெரிய அளவில் வாசகர்களை சென்று சேருவதில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த விகடன் கொண்டுவந்ததுதான் ‘பசுமை விகடன்’.
தரமான கட்டுரைகளுடன் இயற்கை விவசாயம் குறித்து சூழலியல் நோக்கில் தொடர்ந்து எழுதிவருகிறது பசுமை விகடன். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது ‘பசுமை விகடன்’ வாங்கிப் படிக்கும் வாசகி நான்.

தற்போது கடைகளில் இருக்கும் இதழில் பதினைந்து அடி நீளமுள்ள ராஜநாகத்தை அடித்துக் கொன்றதாக அப்பையா நாயக்கர் என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்துவிட்டதாக இதில் ஒரு செய்தி. ‘மரத்தடி மாநாடு’ என்ற தொடரில் (விவசாயம் சார்ந்த நல்லது கெட்டதுகளை அரட்டை பாணியில் சொல்லும் பகுதி) இதில் வரும் ஏரோட்டி என்ற கதாபாத்திரம் இந்த செய்தியை சொல்வதோடு, ‘‘ஏதோ கடத்தலுக்காக அடிச்சுக் கொன்னுருந்தா ஜெயில்ல போடறதுல தப்பில்ல.. பாவம், பயந்துபோய் அடிச்சவறுக்கும் அதே கதியா?’’ என்றுநொந்துபோய் சொல்வதாக முடித்திருக்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள ஒரு கிராமத்திலிருந்து மீட்ட ஆண் ராஜநாகத்துடன் காட்டுயிர் ஆய்வறிஞர் ரோமுலஸ் விட்டேகர்.

அடர்ந்த வனங்களில் மட்டுமே வாழும் ‘ராஜநாகம்’ இந்திய மண்ணுக்கே உரித்தான அரிய வகை உயிரினம். கிட்டத்தட்ட அழிந்துகொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் காட்சியகங்களில் மட்டுமே இது வாழும். அரிதாகிக் கொண்டிருக்கும் உயிரினம் என்பதால்தான் இதைக் கொல்லவோ, உயிரோடு வைத்திருக்கோ தடை விதித்து சட்டம் இயற்றி இருக்கிறது வனத்துறை. ‘‘பயந்துபோய் அடிச்சவறுக்கும் இதே கதியா?’’ என்று இந்தப் பத்தியை எழுதியவர் கேட்டிருப்பது இது குறித்து அவருக்கு உள்ள போதாமைக்காட்டுகிறது. இப்படியொரு போதாமையில்தான் எல்லா கட்டுரைகளும் எழுதப்படுகிறதா என்கிற சந்தேகமும் நமக்கு வருகிறது. நம்முடைய கவலையெல்லாம் லிவசாயிகள் மத்தில் நல்லதொரு மதிப்பைப் பெற்றிருக்கிற பத்திரிகை, அவர்களுக்கு தவறான வழிகாட்டியாக மாறிவிடக்கூடாது என்பதுதான். கோவை, நீலகிரி மாவட்டங்களில் யானைகளுக்கும் விவசாயி (காட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள்)களுக்கும் உள்ள பிரச்னை அவ்வப்போது செய்தியாகிறது. தன் விவசாய பூமிக்குள் யானை புகுந்துவிடாமல் இருக்க,. மின்சார கம்பிகளில் வேலிகட்டி, யானைகளை பலியிடுவதை நியாயப்படுத்த முடியுமா?
அல்லது தன் இடம் பறிபோகும்போது வழியில்லாமல் குடியிருப்புகளில் புகுந்துவிடும் புலிகளை கொன்றுவிட்டு, ‘என் இடத்தில் வந்துவிட்டது’ என்று சொல்லலாமா? 15 அடி நீள பாம்பைக் கொன்றது சரியென்றால், 11 அடி நீளமுள்ள புலிகளைக் கொல்வதும் யானைகளைக் கொல்வதும் சரிதான்!

படங்கள் நன்றி : KING COBRA RESEARCH STATION, WESTERN GHATS