மழைக்காலத்தில் காய்கறித் தேவையை தீர்த்துவைக்கும் வீட்டுத்தோட்டம் போடலாம். ஆலோசனை தருகிறார் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்…
வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகிவிட்டது. வறண்டு போயிருந்த நிலமெங்கும் பச்சை வண்ணம் போர்த்த ஆரம்பிக்கும். இந்தக் காலமே வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைக்க ஏற்ற காலம். சத்துமிக்க மழைநீர் செடிகளின் வளரும் திறனை ஊக்குவிக்கும். பருவநிலையில் செடிகளின் வளர்ச்சியைப் பராமரிக்கும். இதற்குப் பிறகு வரும் நான்கு மாதங்கள்தான் சென்னை போன்ற நகரங்களில் காலநிலைக்கு செடிகளை வளர்க்கக்கூடியதாக இருக்கிறது. கொளுத்தும் வெயில் நேரங்களில் செடிகளின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது, பசுமை குடில்கள் அமைத்துதான் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, பருவம் பார்த்து பயிர் செய் என்பதற்கேற்ப இந்தக் காலக்கட்டத்தை வீட்டுத்தோட்டம் அமைப்பது அதன் மூலம் சிறிய காலக்கட்டத்திற்காவது ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை விளைவித்து உண்ணலாம்.
வீட்டுத்தோட்டம் போடும் முன் இது அவசியம்!
வீட்டைச் சுற்றியிருக்கும் நிலத்திலேயோ அல்லது மாடியில் தொட்டிகள் அமைத்தோ தோட்டம் அமைக்கலாம். இரண்டில் எது செய்வதனாலும் நிலத்தைவிட அரை அடி அளவுக்கு உயரத்தை உயர்த்தி அதன்மேல் தோட்டம் அமைக்க வேண்டும்.
மாடியில் செங்கல்லை அடுக்கி அதன் மேல் தொட்டிகள் அமைக்க வேண்டும். அதுபோல தரையில் மேல் மண்ணை நன்றாகக் கொத்திவிட்டு, அதை மேடாக அமைத்து பாத்தி போல உருவாக்க வேண்டும்.
விதைகள் நடும் முன் கட்டாயம் இதைச் செய்யுங்கள்!
விதைகள் அல்லது செடியை நடும் முன் தொட்டி மண்ணிலும் தரை மண்ணிலும் எருவைக் கலந்து வைக்க வேண்டும். மண்புழு உரம் அல்லது இயற்கை உரங்களை பயன்படுத்துவதே நலம். வீட்டுத் தோட்டம் அமைப்பதன் நோக்கமும் அதுதானே. அடுத்து, விதைகள் அல்லது செடி நடும் முன் நடவேண்டிய இடத்தில் சிறிதளவு சாம்பல் போடுவது நலம். சாம்பல் கிடைக்காதவர்கள் கடைகளில் கிடைக்கும் வறட்டியை எரித்து சாம்பலாக்கி பயன்படுத்தலாம். சாம்பலில் பொட்டாசியம், நைட்ரஜன் சத்துக்கள் அதிகம். இவை செடிகளின் முதல் கட்ட வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
மூடாக்குப் போடுங்கள்!
காய்ந்த இலை, தழைகளை நட்ட விதைகளின் மேல் மூடாக்காகப் போடுங்கள். இந்த சருகுகள் மக்கி மண்ணில் நுண்ணுயிர்களை அதிகப்படுத்தும். நுண்ணுயிர்கள் மண் வளத்துக்கு அவசியமானவை. மண் வளமாக இருந்தால் செடியும் வளமாக வளரும்.
வீட்டிலேயே பயிர் வளர்ச்சி ஊக்கி தயாரிக்கலாம்
இப்போது பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இயற்கை முறையில் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தயாரிக்கலாம். வீட்டில் பழுத்து வீணான பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது நன்கு பழுத்த பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம். அதில் சம அளவு வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கரைசலை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு 15 நாட்களுக்கு அடைத்து வையுங்கள். இந்தக் கரைசல் நுரைத்து வாயு வெளியேறும் அதனால் அவ்வவ்போது திறந்து மூடி வையுங்கள். 15 நாட்களுக்குப் பிறகு தெளிந்த கரைசல் உருவாகியிருக்கும். இந்தக் கரைசலை தேவையான நேரங்களில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். இதைப்போல தூக்கி எறியும் வீணான மீன் பாகங்களை வைத்து, இதேபோல் மீன் அமினோ கரைசல் தயாரிக்கலாம்.
தோட்டத்தில் என்னென்ன செடிகள் நடலாம்?
அடிக்கடி வீட்டில் உபயோகப்படுத்தும் தக்காளி, மிளகாய் போன்ற செடிகளை நடலாம். கத்தரி, வெண்டை, சுண்டைக்காய் போன்ற செடிகளை நடலாம்.
பூச்சிகள் வந்தால் என்ன செய்வது?
சத்துக்கள் கொடுத்தாகிவிட்டது; செடியும் வளர்ந்தாகிவிட்டது; பூச்சிகள் வந்தால் என்ன செய்வது? வேப்ப எண்ணெய்யுடன் சோப்பு கலந்தால் வெண்மையான கரைசல் உருவாகும். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… இந்தக் கரைசலை நீரில் கலந்துதான் செடிகள் மேல் தெளிக்க வேண்டும். செடிகள் மேல் தெளிப்பதற்கு முன் ஒன்றிரண்டு இலைகளில் அடித்து நான்கைந்து மணிநேரம் காத்திருங்கள். இலைகள் கருகாமல் இருந்தால் செடிகளுக்குத் தெளிக்கலாம். கருகினால் மேற்கொண்டு அந்தக் கரைசலில் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும்.