நாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை

நாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?

‘‘பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, உடல் ரீதியான துன்புறுத்தலை வெளியே  கொண்டுவருவதற்காக தொடங்கப்பட்டதே ‘மீ டூ’ இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம், உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் ஆண்களால்  ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் தொடர்புடைய சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் ஆன போதும் இப்போது வெளியே சொல்கிறார்கள்.  தனியாக ஒலிக்கும் குரலுக்கு இத்தனை வீரியம் இருந்திருக்காது; கூட்டுக்குரலாக ஒலிக்கும்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை வெறுமனே பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலாக மட்டுமே பார்த்து, ‘எனக்கு நடக்கவில்லை’  அல்லது ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நடக்கவில்லை’ என பலர் ஒதுங்கிப் போகக்கூடும். தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் மீ டூ  இயக்கத்தின் மூலம், பல முகம் காட்ட விரும்பாத பெண்கள், பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை  முன்வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்னை அல்ல.  நம் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை  என்பதை நாம் உணர வேண்டும்.

பெரும்பாலும் 90 சதவீதம் பெண்கள் இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். சிலர் தங்களுக்குள்ளாகவே இத்தகைய  ஒடுக்குமுறைகளைப் பேசி கடந்துவிடுகிறார்கள். சிலர் கூட்டாக இணைந்து அத்துமீறல் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களை  பாதுகாத்துக்கொள்கிறார்கள். சிலர் வேலைக்குச் செல்வதே வேண்டாம் என முழுக்குப் போடவும் செய்கிறார்கள். இறுதியில் இத்தகைய  நடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள் தொடர்ந்து இதையே அடுத்து வருகிற பெண்களுக்கும் செய்ய துணிகிறார்கள்.பெண்களின் மீது ஈர்ப்பு  கொள்வது ஆண்களின் இயல்பு. பணிபுரியும் இடங்களில் பாலின ஒடுக்குமுறைகள் நிகழத்தான் செய்யும் என சிலர் வாதிடுகிறார்கள்.  இதில் முதல் பாதி மட்டுமே உண்மை. ஆண்களிடம் ஈர்ப்பு கொள்வது பெண்களுக்கும்  இயல்பாக நிகழக்கூடியது. அதை பெண்கள் எப்படி  கையாள்கிறார்கள். ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாலின ஒடுக்குமுறை என்பது ஆணுக்கு கிடைக்கும் அளவற்ற அதிகாரத்தின் விளைவாக நடப்பது. இதை தொடர்புடைய ஆண்கள்  அவமானமாகக் கருத வேண்டும் என்பதாலேயே மீ டூ இயக்கத்தை ‘பெயர்களை சொல்லுதல் – அவமானம் கொள்ளச் செய்தல்’ என  அழைக்கிறார்கள். தனக்காக தன் குடும்பத்துக்காக பணிபுரிய வருகிற ஆணுக்கு இருக்கும் அதே நிர்பந்தமும் லட்சியமும் பெண்ணுக்கும்  இருக்கும். பஞ்சாலைக்கு தின சம்பளத்துக்கு செல்கிற பெண்ணுக்கும், ஐ.டி. நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கும்  அவரவர்க்குரிய வாழ்வியல் நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதை அதிகாரத்தால் சிதைக்க நினைப்பதே ஆணாதிக்கம். இந்த  ஆணாதிக்க சூழலை மாற்ற முனைந்திருக்கும் கூட்டுக்குரல் ‘மீ டூ’.

மீ டூ இயக்கத்தில் பேசப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை விஷயங்கள் எவை?

Abuse(துன்புறுத்தல்)- ஒரு நபர் இன்னொருவர் மீது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ  துன்புறுத்துவது. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆண், ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக இணங்க  வற்புறுத்தி அதை அந்தப் பெண் மறுக்கும்போது, அவளுடைய இன்கிரிமென்ட், ப்ரோமோஷனில் கை வைப்பதுகூட துன்புறுத்தல் வகையைச்  சேர்ந்ததுதான்.

Boys’ club – (பணியிடத்தில் ஆண்கள் மட்டும் ஒரு குழுவாக இயங்குவது) பெரும்பாலான பணியிடச் சூழலில் இது நடக்கும். இவர்கள்  சேர்ந்து அலுவலக பெண்களைக் கிண்டலடிப்பார்கள், பாலியல் ஜோக்கடித்து பெண்களை மோசமாகப் பேசி சிரிப்பார்கள். பெண்களை  மதிக்காது; எல்லா இடமும் ஆணுக்கானதுதான் என நிறுவ முயல்வதும் ஒடுக்குமுறையே!

Male entitlement – (ஆண் என்ற தகுதியே சமூக அந்தஸ்துகளை பெற போதுமானது எனக் கருதுவது) பணியிடங்களில் குறிப்பிட்ட பணியை ஆணால் மட்டுமே செய்ய முடியும் எனச் சொல்வார்கள். ஊடகங்களில் புலனாய்வு நிருபர் பணிக்கு பெண்களை  சேர்க்காமல் இருப்பதைச் சொல்லலாம்.

Mansplaining (ஆண்களுக்கு எல்லாம் தெரியும்) தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல அறிவுரைகளை கூறுவார்கள். பொதுவாக,  பெண்களை நெருங்குவதற்காக ஆண்கள் இதைச் செய்வார்கள்.

Molesting – (விருப்பமில்லாமல் அழைத்தல்) ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் நிராகரித்த பிறகும் பாலியல் உறவுக்கு  அழைப்பது.

Negative questioning – (எதிர்மறையாகக் கேட்பது) இதை நிறையப் பெண்கள் எதிர்கொண்டிருக்கலாம். இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு,  பதிலை எதிர்பார்ப்பார்கள்.

Negging – (உணர்வுரீதியான துன்புறுத்தல்) ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் குறை  சொல்லிக்கொண்டிருப்பது.

Policing – (கண்காணித்தல்) ஒரு நபரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் ஒரு பெண் ஒதுங்க விரும்பினாலும் அந்தப் பெண்ணை  கண்காணித்துக்கொண்டே இருப்பது. இதை செய், அது கூடாது என கட்டுப்படுத்த நினைப்பது.

ஏதோ கிசுகிசு போல எண்ணி  நகர்ந்துவிடாமல், இந்த இயக்கத்தை ஆதரிப்பது நமது கடமை. ஏனெனில்,  பணியிடங்களில் பாலியல் சமத்துவம் என்பது நமக்கு பின்னால்  வருகிற அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் பெற்றுத்தர வேண்டிய உரிமை.’’

நன்றி: குங்குமம் தோழி

கட்டுரையில் த வயரில் வந்த கட்டுரை ஒன்றிலிருந்து ஒடுக்குமுறை சொல்லாடல்கள் சிலவை எடுத்தாளப்பட்டுள்ளன.

முகப்புப் படம் நன்றி: நியூயார்க்கர்

எழுத வாய்ப்பளித்த தோழர் மகேஸ்வரிக்கு அன்பும் நன்றியும்.