யானையும் பலாமரமும் கூடவே சாதியும

இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்  என் கிராமம் தன் சுயமான அடையாளத்துடனே இருந்தது. சுனை நீரை தேக்கி வைத்திருக்கும் பாறைகளும் புதர் படிந்த காடுகளும் சூழ இருந்தது என் கிராமம். ஜுலை மாதங்களில் வானம் பார்த்த பூமியெங்கும் போர்த்தப்பட்டிருக்கும் மஞ்சள் நிற கடுகு பூக்கள் அழகோ அழகு! நீர் வளம் நிறைந்த இடத்தில்கூட அவ்வளவு செழிப்பாக ராகி பயிர் வளர்ந்து நான் பார்த்ததில்லை. இந்த பூமியில் எதைப்போட்டாலும் அது பல மடங்காகி வீடு வந்து சேரும்.  பலாமரங்களும் பேரிச்சம் மரங்களும் தேக்கு மரங்களும் என் கிராமத்தை இன்னும் வசீகரமாக்கிக் கொண்டிருந்தனர். பக்கத்திலே காடு என்பதால் பலா பழங்களை ருசிக்க யானைகள் எங்கள் வீடுகளுக்கு அருகேயே வந்துவிடும். சற்று தூரத்தில் பலாபழங்களை ருசி பார்த்துக்கொண்டிருக்கும் யானைகளை விரட்ட தீப்பந்தம் ஏந்தியபடி கும்பலாக செல்வார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இப்படி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரக்கூடும் என்று முன்னோர் அறிந்திருந்த படியால் கிராமத்தை பள்ளமான பகுதியில் அமைநத்திருந்தார்கள். கிராமத்துக்குள் நுழைய செங்குத்தாக கீழ்நோக்கி இறங்கி வர வேண்டியிருக்கும். இதேபோல நிலக்கடலை அறுவடையாகும் நேரத்தில் முள்ளம்பன்றிகள் வந்து ருசி பார்த்து, நாங்கள் விளையாட இரண்டு முட்களை தன் உடம்பிலிருந்து உதிர்த்துவிட்டு போகும்.
தமிழகடத்தில் இருந்தாலும் எங்கள் ஊரில் கன்னட மொழி பேசுபவர்கள்தான் வசித்தோம். இரண்டொரு தமிழ் குடும்பத்தினரும் கன்னடமே பேசினார்கள். அய்யந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளியிலும் கன்னட மொழி வழிக்கல்விதான் சொல்லித்தரப்பட்டது. அதனால் தமிழ் படிக்க நான் நான்கைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. என்னோட எனக்கு அடுத்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் நண்பர்களும் வருவார்கள். பெட்ரோல், டீசல் வாசனை நுகர்ந்திராத அந்த மண் சாலையில் நாங்கள் விளையாடிய படிய காட்டுச்செடியில் கனிந்திருக்கும் பழங்களை பறித்து சாப்பிட்டுக்கொண்டு பள்ளி போய் சேருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ஒற்றையடி பாதையை கண்டுபிடித்துக்கொண்டு சாகச பயணம் செய்வோம். மாம்பழ சீசன் என்றால் சொல்லவே வேண்டாம்.. வழி நெடுக விதவிதமான மாம்பழங்கள் மரங்களிலிருந்து பழுத்து விழுந்து கிடக்கும். விருப்பம் போல அள்ளித் திண்று, மாடுகள் தண்ணீர் குடிக்க வெட்டி வைத்திருக்கும்   குளங்களில் கை கழுவுவோம். அந்த காலத்தை நினைத்தாலே இனிக்கிறது!
எங்களுடைய ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் இருக்கும். காப்பிச்செடிகளும் செர்ரி மரங்களும் டேரியாவும் டிசம்பர் பூக்களும் பீன்ஸ் செடியும் சிவப்பு‍, வெள்ளை கொய்யா, சப்போட்டா பழ மரங்களுமாக நிறைந்திருக்கும்.
இவையெல்லாவற்றையும் எங்கள் கிராமத்தில் இருந்த‌ சாதி  முழுங்கிக்கொண்டிருந்தது. கன்னட லிங்காயத்துகளுக்கென தனி வீதியும், இடைநிலை சாதிகளுக்கென தனி வீதியும் தலித்துகளுக்கு தனி வீதியுமாக சாதியின் கனகச்சிதமான அடையாளத்தோடு இருந்தது எங்கள் கிராமம். ஊருக்கு நடுவே இருந்த கிணற்றில் இடைநிலை சாதிக்காரர்களும் லிங்காயத்துகளுமே  தண்ணீர் எடுக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தார்கள். தலித்துகள் ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தலித்துகளுக்கு அவரசமாக தண்ணீர் தேவைப்பட்டால் கிணற்றை பயன்படுத்தும் உரிமை பெற்றவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைந்து ஊற்றுவார்கள். நான் கிராமத்தில் வசித்த‌ பத்தாண்டுகாலமும் இந்த எழுதப்படாத விதி எந்த சந்தர்ப்பத்திலும் மீறப்படாமல் இருந்தது.
இடைநிலை சாதிக்காரர்கள் லிங்காயத்துகளின் சமையல‌றைக்கும் பூஜை அறைக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தலித்துகளுக்கான அனுமதியோ எல்லோர் வீடுகளிலும் வாசல் படியோடு நின்றுவிட்டது.
சாதி படிநிலைக்கு ஏற்றபடி தன்னைவிட உயர்சாதியை சேர்ந்தவரை  ‘சாமி’ என்றுதான் விளிப்பார் கீழ்சாதி என்று கருதப்பட்டவர். கன்னடர், தெலுங்கர், மராத்தி, தமிழர் என்று பல மொழியினர் சேர்ந்து வசித்த என் கிராமம் திட்டம்போட்டு உருவாக்கியதைப்போல முழுக்க முழுக்க சாதியத்தால் உண்டாக்கப்பட்டிருந்தது. கிராமத்தை விட்டு வந்து 15 வருடங்கள் ஆகிறது. சாதியத்தை உடைக்கும் முயற்சிகள் ஏதேனும் நடந்ததா என்பது பற்றி தெரியவில்லை. சாதி படிநிலை ஒழிந்துபோன என் கிராமத்தை தரிசிக்கவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு தெரியும் நான் வரும்போது காபி கொடுக்க எனக்காக அங்கே தனியாக ஒரு கோப்பையை எடுத்து வைத்திருப்பார்கள் என்று…