ஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதிவு செய்வதற்காக இன்றைய நாளிதழ்களை தேடியபோது, கிருஷ்ணகிரி கல்லூரி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தியை தினமலர் எழுதியிருக்கும் விதம் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்தது. உடலால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை எழுத்தால் வன்முறை செய்திருந்தது தினமலர். சம்பவத்தை நேரில் பார்த்து எழுதியதைப் போல் எல்லா தகவல்களும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் பாதி இட்டுக்கட்டிய பொய். மஞ்சள் பத்திரிகைகளில் எழுதுவதுபோல படிப்பவர்களுக்கு கிளுகிளுப்பான உணர்வை தர வேண்டும் என்று எழுதுபவர்கள் பத்திரிகையாளர்களா? இவர்களிடம் எப்படிப்பட்ட ஊடக அறத்தை எதிர்பார்க்க முடியும்? இதோ இந்தச் செய்தியைப் படித்துப் பாருங்கள்.

கிருஷ்ணகிரி: காதலனை கட்டிப்போட்டு விட்டு, கல்லூரி மாணவியை கற்பழித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், வேலம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவருக்கும் இடையே கடந்த ஒராண்டாக காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் கல்லூரி முடிந்த பின், பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, இருவரும் காரில் சென்று ராயக்கோட்டை அருகேயுள்ள கோட்டம்பட்டி என்ற இடமருகே, உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த, வாகன ஓட்டிகளான பிரகாஷ்(28), சுப்ரமணியம்(28), பிரகாஷ்(24) மற்றும் மணி(22) ஆகியோர் காதலர்கள் இருவரையும் பார்த்துள்ளனர். அவர்கள் நான்கு பேரும், காதலனை கட்டிப்போட்டு விட்டு, கல்லூரி மாணவியை கற்பழித்துள்ளனர். மேலும் அதனை தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். பிரகாஷ் என்பவரின் செல்போன் எண்ணை கொடுத்து, தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என மிரட்டியுள்ளனர். சற்று நேரட்டில் மாணவியும், அவரது காதலனும் மயங்கினர். இதனை அந்த பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி.,அமல்ராஜ் மற்றும் எஸ்.பி., கண்ணம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவியிடமிருந்த செல்போன் எண்ணை கொண்டு 4 பேரையும்பிடித்த போலீசார், அதில் மணியை தவிர மற்ற மூன்று பேரை கைது செய்துள்ளனர். மணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.