சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள்

‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

‘நோய் வருவதற்கு உண்டான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள் என்கிற பிரச்சாரங்கள் மருந்து நிறுவனங்களின் பணப்பையை நிரப்புவதற்காக செய்யப்படுபவை’ என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து பற்றி ஒரு பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஆந்திராவில் சோதனைக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை உட்கொண்ட மூன்று இளம்பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த இந்த மூவரும் பழங்குடி இன பெண்கள்.இந்த பெண்கள் இறந்ததற்கான காரணம் தடுப்பு மருந்தை உட்கொண்டதுதான் என்று தெள்ளத்தெளிவாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. வழக்கம் போல ஆந்திர காவல் மற்றும் சுகாதாரத்துறை மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டார்கள் என அறிக்கை (டெக்கான் கிரானிக்கல் செய்தி) விட்டு, சம்பவத்தை மூடிமறைத்துவிட்டார்கள்.  இன்னொரு தகவல் என்னவென்றால் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பழங்குடி பெண்களுக்கு சோதனை ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்திய அரசு, பழங்குடி மக்கள் மேல் ஆபரேஷன் கிரீன் ஹண்டில் இறங்கியிருக்க, மற்றொரு புறம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பழங்குடி பெண்களை சோதனை எலிகளாக்கி இருக்கின்றன. இந்த மருத்துவ அத்துமீறலை எமக்கு தெரியப்படுத்தியவர் மருத்துவர் வீ. புகழேந்தி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத் கதிர்வீச்சு அபாயம் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர். சர்ச்சை குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் இவரிடம் கேட்டோம்…

“இந்தியாவில் அதிக பெண்கள் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாவது சர்விக்கிள் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான். வருடத்திற்கு கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகவும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் அறிகுறி கண்டறியப்படுவதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறு வயதிலேயே பாலியல் தொடர்பு (பால்ய திருமணங்கள் மூலமாக) ஏற்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது, பால் உறுப்புகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, கர்ப்பத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் போன்றவையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள். இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்துதான் இப்போது அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் வீ. புகழேந்தி. தொடர்ந்த அவர்,

“இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தின் விலை 10 ஆயிரம் ரூபாய். தடுப்பு மருந்துகளை இலவசமாகப் போடுகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கும்போதே அலட்சியம் காட்டுபவர்கள் இருக்க, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எத்தனை பேர் போடுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தின் பெரிய பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தை போடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் Gardasil என்ற பெயர் கொண்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை, ஆந்திரா மற்றும் குஜராத்தில் வசிக்கும் 14 வயதுக்குக்கு உட்பட்ட (செக்ஸுவலாக ஆக்டிவ் ஆகும்முன் இந்தத் தடுப்பு மருந்து போடப்பட வேண்டும்) பழங்குடி பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை ரீதியில் அளித்திருக்கிறார்கள். மூன்று தவணைகளில் போடப்பட்ட இந்த மருந்தை மூன்றாவது தவணையாக உட்கொண்ட ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் இந்தப் பெண்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவபரிசோதனை முடிவுகள் சொல்கின்றன.

தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்போது மயக்கம், தலைவலி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் உச்சபட்சமாக உயிரிழப்பும் நிகழலாம் எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த டாக்டர் டயானா ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் 14 வயது இளம் பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டயானா ஹார்ப்பரே ஒப்புக்கொண்ட உண்மை இது. அதோடு இந்தத் தடுப்பு மருந்து புற்றுநோய் வந்தால் அதனுடைய தாக்கத்தை குறைக்குமே தவிர, முற்றிலும் வராமல் தடுக்காது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடுதான் பழங்குடியின இளம்பெண்கள் சோதனை மிருகங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் விபரீத சோதனைகளுக்குப் பலியாவோர்களோ என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தடுப்பு மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறார்களே தவிர, தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அக்கறைப்படவில்லை” என்று காட்டமான டாக்டர் வீ. புகழேந்தி, கர்ப்ப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் கிராமப்புறங்களில்தான் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வை கட்டாயம் செய்தாக வேண்டும். அடுத்து, நாப்கினை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பால் உறுப்புகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு, இவற்றை முழுவீச்சோடு செய்தாலே கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இறப்பு விகிதம் தன்னால் கீழே இறங்கிவிடும்” என்று முடித்தார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து சர்ச்சை குறித்து தெஹல்கா இதழ் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. படிக்க…

வலைப்பதிவர்கள் குறித்து தினகரன் வசந்தம்…

வலைப்பதிவர்கள் சங்கம் அமைப்பது குறித்து சூடான விவாதங்களைப் படித்தபோது, வலைப்பதிவர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. கூகுளில் தேடினேன் கிடைத்தது. சென்னைப் பட்டினம் டாட் பிளாக் ஸ்பாட் டாட் காமில் இருந்தது. நன்றியுடன் இங்கே பிரசுரித்து, சேமித்துக் கொள்கிறேன்.


கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு குங்குமம் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தினகரன் வசந்தம் இணைப்பின் பொறுப்பாசிரியர் சிவராமன் சார் கொடுத்த அசைண்மெண்ட் இது. அதே தேதியிட்ட வசந்தம் இணைப்பில் மு.வி. நந்தினி பெயரில் வேறு கட்டுரை எழுதியிருந்ததால், கட்டுரை சாரா என்கிற புனைபெயரில் பிரசுரமானது.

“கோர்வையாக எழுதுகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர் ஆகிவிட முடியாது!” – ஜெயராணி

நான் ஜர்னலிஸம் மாணவி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் படித்தேன். பேசுவதும் பழகுவதும் எழுதுவதும் பள்ளி நாட்களிலேயே எனக்கு இயல்பாகவே வந்தது. பட்டப்படிப்பு முடித்ததுமே நாளிதழ் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் ஜர்னலிஸம் படித்துவிட்டுதான் பத்திரிகையாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாழ்வில் இதுவரையிலும் எடுத்த மிகச் சரியான முடிவுகளில் அதுவும் ஒன்றென தோன்றுகிறது. எனக்கான எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டது ஜர்னலிஸம் படிப்புதான். புகைப்படக்கலையையும் அங்குதான் கற்றுக் கொண்டேன்.

தூக்குவதற்கு சிரமமான நிக்கான் மெட்டல் பாடி கேமராவை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிய நாட்கள் தான் என் எல்லா பயணங்களுக்கும் மூலம்.

உலகமென்றால் அது வீட்டின் நான்கு சுவர்தான் என்று கற்றுக்கொடுத்த மிக கட்டுப்பாடானக் குடும்பத்திலிருந்து கற்பிதத்திலிருந்து விடுபட்டு என் கால்களையும் சிந்தனையையும் சுதந்திரப்படுத்திக் கொண்டேன்.

நடந்து நடந்து இவ்வுலகைக் கடந்துவிடும் பேராவலில் சுற்றிய நாட்கள் அவை.     பயணமும் அதில் கிடைத்த அனுபவங்களும்தான் என்னை செதுக்கியது.

கோர்வையாக எழுத வருகிறவர்கள் யாரும் செய்தியாளராகிவிட முடியும் என்றாலும்.. பத்திரிகை அறம், சுதந்திரம் போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுத் தேர்ந்தது ஜர்னலிஸம் படித்த அந்த இரண்டாண்டுகளில்தான். என்ன மாதிரியான செய்தியாளராக இயங்கப் போகிறோம் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக என் கற்றல் காலம் அமைந்தது. அதற்காக, ஜர்னலிஸம் படித்தவர்கள் எல்லோருமே பத்திரிகை அறத்தை மீறாதவர்களாக இருப்பார்கள் என்றோ படிக்காதவர்கள் எல்லோரும் அறத்தை புறக்கணிக்கிறவர்கள் என்றோ சொல்ல வரவில்லை.

பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் இன்று இருக்கிற நிலையில், ஊடக அறம் பற்றின புரிதலோ விழிப்புணர்வோ இல்லையென்றால் நிச்சயம் சுரணையற்ற செய்தியாளராகிவிட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் புதியவர் ஒருவருக்கு செய்தி எழுத கற்றுத் தரும் ஊடகங்கள் ஒருபோதும் அறத்தை போதிப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலும் உரிமைகளை பாதிக்கிற செய்திகளாகவே நாம் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன. ஜர்னலிஸம் படிக்கிறவர்களுக்கு பத்திரிகை அறம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இயல்பாக அமைகிறது. பின்னர் பணி காலத்தில் அதை செயல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு அவரவர் கைகளில். கற்றல் வழி நடத்தல் என்பது என் பிடிவாதம் என்பதால் இந்த பத்தாண்டுகளில் பத்திரிகை அறத்தை கேள்விக்குள்ளாக்குகிற எந்த செய்தியையுமே நான் எழுதவில்லை.

எழுத்து மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தேன் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் அது பொய். தனிப்பட்ட முறையில் என் எல்லா உணர்வுகளுக்கும் உகந்ததாக இந்த துறை அமைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவரரின் திறமைக்கும் குணத்திற்கும் ஏற்ற வேலை என்று ஏதாவது இருக்குமில்லையா? என் குணத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியது பத்திரிகைத் துறை. காரணம் எழுத்து, புகைப்படம், பயணம் என்ற மூன்று அற்புதமான விஷயங்களையும் என்னால் இங்கு செயல்படுத்த முடிந்தது.  விரும்பியதையே தொழிலாக, வேலையாக செய்வது எத்தனை சுகம்! எத்தனையோ இன்னல்களுக்கிடையில் அந்த சுகத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா நவீன துறைகளைப் போலவும், பெண்கள் ஊடகப் பணிக்கு வருவதற்கு குடும்பங்கள் தடை போடுகின்றன என்பது உண்மைதான். சில ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கிராமம் ஒன்றிலிருந்து சென்னை நோக்கிய என் பயணம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு இந்த சவால் இருக்கிறது. இந்த சவால்களை ஏதாவது இயக்கங்கள் வந்துதான் எதிர்கொள்ள வேண்டும் என்றில்லை. தடைகளைத் தாண்டும் மனப் பக்குவத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஊடகத் துறையில் பெண்கள் முதல் தலைமுறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளோ அடக்குமுறைகளோ இன்று பெருமளவில் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு என்று பேசிக் கொண்டிருப்பது அபத்தம். இந்த மாதிரியான குறுகிய விவாதங்களை நாம் கடந்தாக வேண்டும்.

பெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி. அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள். திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள்.

வெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது.

பெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்.
ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்கள் சம அளவில் பெண்களாலும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். போட்டியும் பொறாமைகளும் இருக்கிற வரை இந்த நிலை நிலையானது என்றே தோன்றுகிறது. அதனால் அதிகபட்ச மன உறுதியை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று பெண்களுக்கிருக்கும் சவால்களுக்கு ஒத்த அளவிலான பிரச்சனைகள் ஆண்களுக்கும் இருக்கிறது. அதற்கு காரணம் ஊடகத்துறையில் மேலோங்கி இருக்கும் பண்ணையார்த்தனம். ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்களா என்று  மிக உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் மன உளைச்சலை தரக் கூடிய மற்ற எல்லா துயரங்களையும் ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். பிரச்சனை ஆண் பெண் என்ற அடிப்படையில் வருகிற பாலின பாகுபாடு அல்ல. புரொபஷனலிஸம் என்று சொல்லக்கூடிய தொழில் நேர்த்திக்கு இருக்கும் தட்டுப்பாடு. ஒரு ஊழியரை எப்படி நடத்துவது அல்லது கையாள்வது என்ற அடிப்படை நாகரிகம் தெரியாத மேலதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். ஊடகத்துறையிலும் இருக்கிறார்கள். ஒரு அலுவலகத்தில் 10 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் அந்த 10 பேரும் ஒரே மாதிரியான அல்லது சம அளவிலான திறமைகளை கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. யார் யாருக்கு என்னென்ன திறமை இருக்கிறது என்று கண்டறிவதும் அவரை குறிப்பிட்ட அந்த வேலைக்கு பயன்படுத்துவதும் தலைமைப் பண்பின் முக்கிய அம்சம். ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகளை வழங்குவதால் மட்டுமே எந்த ஒரு நிறுவனமுமே அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.

ஊடகங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால் செய்திகளில் மிக மோசமாக வெளிப்படும் ஆண் நெடி குமட்டலை உண்டாக்குவதாக இருக்கிறது!. தப்பித் தவறி கூட ஒரு பெண் செய்திகளில் அடிபட்டுவிடக் கூடாது. குற்றச்செய்திகள் என்றால் நிலைமை மிக மோசம். ஆண் நிருபர்களின் அதிகபட்ச கற்பனைத் திறனும் வக்கிரங்களும் வெளிப்படுவது பெண்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில்தான்.

பெரும்பாலான செய்திகள் இப்படி அந்த நேர கிளுகிளுப்பிற்கும் பரபரப்பிற்காக மட்டுமே எழுதப்படுகின்றன. பத்திரிகைகளில் நிலைகொண்டிருக்கும் ஆண் மொழியும், மேலோங்கியிருக்கும் ஆண் மனோபாவமும் மிகவும் மோசமான பாதிப்புகளை சமூகத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவோ விமர்சனங்களுக்கு உள்ளான போதும் இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திகளில் அடிபடும் பெண்களை அழகி என்று குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. பெருமளவில் பெண்கள் ஊடகப்பணிக்கு வந்தால் இந்த அவலம் மாறுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். ஏனென்றால் வருகிற எல்லோருமே ஆண் பெண் பாரபட்சமில்லாமல் கண்மூடித்தனமாக வழக்கமான இந்த எழுத்துமுறைக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சில பத்திரிகைகளில் பெண்களும் ஆண் மொழியில் ஆண் மனோபாவத்துடன் எழுதுவதை பார்க்க முடிகிறது. தன்னளவில் மிக நேர்த்தியான மொழியாற்றலையும், சமூகப் பார்வையையும் செய்தி எழுதும் நுணுக்கத்தையும்  கொண்டிருந்தாலே ஒழிய இதுபோன்ற வக்கிரங்களில் இருந்து தப்பிப்பது கடினம். ஜாதி, மத, பாலின அடையாளங்களைக் கடந்த சமத்துவ மொழி ஊடகங்களின் இன்றைய மிகப் பெரியத் தேவையாக இருக்கிறது.   வேண்டும் க்ண்க்இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்தி பலரை ஏமாற்றி பணம் பறித்தார் அதனால் அவர் செத்துப் போக்

திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போலவோ அல்லது இந்த சமூகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ ஜர்னலிஸ்ட்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.
துப்புரவுப் பணியைப் போலத் தான் ஊடகத்துறையும். ஒரு துப்புரவுப் பணியாளருக்கு இருக்கும் பொறுப்பை விடவும் அதிகமாக ஜர்னலிஸ்ட்களுக்கு பொறுப்புணர்வு இருப்பதாக நான் நம்பவில்லை. முன்னவர் புற சுகாதாரத்திற்கும் பின்னவர் அக சுகாதாரத்திற்காகவும் பணி புரிகிறார்கள் அவ்வளவே வித்தியாசம். ஆனால் இங்கு நிறைய பேர் ஜர்னலிஸ்ட் என்று மார்தட்டிக் கொள்வதில் ஒரு வறட்டு கவுரவத்தைப் பார்க்க முடிகிறது. இது தேவையில்லாதது. வேறெந்தத் துறையில் வேலை செய்கிறவர்களைப் போல பத்திரிகையாளர்களும் தங்களை சாதாரண மனிதர்களாக முதலில் கருதத் துவங்க வேண்டும். யாரும் ஜர்னலிஸ்ட்டாகவே பிறப்பதில்லை. மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் போல பத்திரிகையாளர்களுக்கு கல்வி தகுதி கட்டாயமாகத் தேவைப்படாத நிலையில் எழுதத் தெரிகிறவர்களும் பேச முடிகிறவர்களும் பத்திரிகையாளராகிவிட முடிகிறது. கல்வித் தகுதி அவசியமில்லாத ஊடகத் துறைக்குத் தேவைப்படுவது மனித நேயமும், சமூக அறிவும் பொறுப்புணர்வும் மட்டுமே! செய்தி எழுதுதலின் நுணுக்கங்கள் அரசியல் நிகழ்வுகள், பொது அறிவு விஷயங்களை எல்லாம் களத்தில் இறங்கியவுடன் காலப் போக்கில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் உள்ளார்ந்தவை. எல்லா தனி நபர்களுக்கும் அது இருக்க வேண்டும் என்றாலும் பல தரப்பினரையும் சென்று பறைசாற்றுகிற பணியைச் செய்கிற ஊடகவியலாளர்களுக்கு கூடுதலாக இருந்தாக வேண்டும்.

மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும் சமத்துவத்திற்கு எதிரான வார்த்தைகளை இதுவரையும் நான் எழுதவில்லை. இனிமேலும் எழுதமாட்டேன்.  என் எழுத்துக்களும் கருத்துக்களும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு. எல்லோருக்குமான அன்பு. குழந்தைகள், திருநங்கைகள் ஆண், பெண், இன்ன மொழி பேசுபவர், இந்த ஊர்க்காரர், நாட்டுக்காரர், சாதி, மதம் என எந்த பாகுபாடுமின்றி வரக்கூடிய இயல்பான அன்பு. இந்த உலகத்தின் அதிகபட்சத் தேவை அதுதான். கூட்டம் போட்டு, மேடையில் முழங்கினால்தான் என்றில்லை, தன்னளவில் எல்லோரும் அன்பானவர்களாக, உரிமை மீறல்களை அனுமதிக்காதவர்களாக இயங்கிக் கொண்டிருந்தாலே போதும். இவ்வுலகத்தின் அவலங்கள் முடிவுக்கு வந்துவிடும். சமூகப் பொறுப்புணர்வோடு பணிபுரியும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.
அன்பும் உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும். அவை அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுமே தவிர ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.

ஜெயராணி…
ஆறாம்திணை என்ற இணையதளப் பத்திரிகையில் பணியைத் தொடங்கி, குமுதம், விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் சுமார் ஏழாண்டுகள் வேலை பார்த்தவர். தற்போது சன் செய்திப் பிரிவில் சிறப்பு செய்தியாளாராக பணியாற்றும் ஜெயராணி, நிஜம் நிகழ்ச்சியில் செய்தியாளராகவும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருக்கிறார். மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தில் இயங்கினாலும் பெண்கள், குழந்தைகள் திருநங்கைகள், தலித் மக்கள், சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் முரசு போன்ற மாற்று இதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், தீராநதி, புது விசை, முற்றுகை ஆகிய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன.

‘இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட்’ அமைப்பு ‘ஆனந்த விகடனில் விகடனில’ வெளியான ”இளைப்பாற விரும்புகிறோம்” கட்டுரைக்காக சிறப்புப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது. (2004 )

‘இந்தியா டுடே’ பத்திரிகை ‘இந்தியாவின் 38 முக்கியமான பெண்களில்’ ஒருவராக தேர்ந்தெடுத்தது (2005)

ஊடகத்துறையில் தொடர்ந்து ஆற்றி வரும் பங்கிற்காக ‘அன்னைத் தெரஸா பல்கலைக்கழக’த்தால் ‘சிறந்த பத்திரிகையாளரா’க கவுரவிக்கப்பட்டார். (2009)

பின்குறிப்பு : எனக்குப் பிடித்த பத்திரிகையாளர் என்ற வகையில் ஜெயராணியிடம்  நேர்காணல் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது நிறைவேற காலம் இன்னும் கணியவில்லை. பிடித்த பத்திரிகையாளர் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அது நேர்காணலை எழுதும்போது சொல்லுவேன்.
இங்கே பிரசுமாகியிருக்கும் கட்டுரை நான் எழுதியது அல்ல. பெண்ணே நீ மாத இதழுக்காக ஜெயராணி எழுதியது. மார்ச் பெண்ணே நீ இதழில் எடிட் செய்யப்பட்டு வெளியான கட்டுரையின் முழுவடிவத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.
பெண்ணே நீ இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்தமைக்காக பெண்ணே நீ க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துக்களை ஒட்டி ஜெயராணி, சுகிதா, நான் மூவருமாக நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.   அதனாலே இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டேன். ஜெயராணியும் அனுப்பித் தந்தார். விஷயமுள்ள கட்டுரை எல்லாதரப்பையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.

குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்!

சென்னை, வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று சொல்லப்படும் பிரமாண்டமான குப்பைமேடு!  சென்னையின் குப்பைகளைக் கிண்டிப் பசியாற பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கிறது பெலிக்கன் பறவை. விரையும் வாகன இரைச்சல்களுக்கு இடையே இன்னும் பல நூறு வெளிநாட்டுப் பறவைகள் திடுக்கிட்டுத் தவிக்கின்றன. காகத்தைத் தவிர, வேறு பறவையைப் பார்க்க முடியாதசென்னை நகரத்துக்குள் விதவிதமான வண்ணத்திலும் வடிவத்திலும் வித்தியாசமான பறவைகள் எப்படி வந்தன? குப்பைமேட்டில் இவற்றுக்கு என்ன வேலை?
”வேடந்தாங்கலைவிட இரண்டு மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது பள்ளிக்கரணை!” என்கிறார் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பல்லுயிர் பெருக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.
”கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, மஞ்சள் வாலாட்டி, சோழக் குருவி, நீர் தாழைக் கோழி, நாமக் கோழி, தாமிர இலைக் கோழி, அரிவாள் மூக்கன், செந்நீலக் கொக்கு, கானான் கோழி, பவளக் கொத்தி என உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வந்து போகும் இடம் இது. இங்கே வளர்ந்து நிற்கிற கோரைப் புல், இயற்கையான பயோஃபில்டர். வேண்டாததை உறிஞ்சிவிட்டு, நல்லதை அப்படியே அரணாகப் பாதுகாக்கும். பறவைகள் இதில்தான் கூடு கட்டி வாழும். ஆனால், குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நச்சு நிலமாக்கிவிட்டார்கள். ஆமை, மீன் போன்ற உயிரினங்கள் மாசுபட்ட நீரிலும் வாழப் பழகிவிட்டன. ஆனால், அதைப் பிடித்து உண்கிற ஏழை மனிதனுக்குத்தான் புதுப்புது வியாதிகள் வருகின்றன” என்கிறார் சூழலியல் ஆர்வலரான திருநாரணன்.
”1970-களின் தொடக்கத்தில், வேளச்சேரியில் இருக்கும் என் தாத்தா வீட்டுக்கு வருவேன். பேருந்தில் வரும்போது சைதாப்பேட்டை முடிகிற இடம்தான் கடைசி நிறுத்தம். அங்கே தொடங்கி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வரைக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் தண்ணீர்தான் இருக்கும். ஏரிக் கரையில் நடந்தபடியே நீரில் மூழ்கி இரை தேடிக்கொண்டு இருக்கும் விதவிதமான பறவைகளை ரசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
தென்னிந்தியாவிலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ரொம்பவும் ஸ்பெஷலான பகுதி. சதுப்பு நிலமென்றால் ஆறு அடிக்கும் குறைவாகத் தண்ணீர் இருக்கும், உயிர் வளம் நிறைந்த குழைவான மண்ணுடன் இருக்கும். மற்ற இடங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் உப்புத்தன்மை இருக்கும். ஆனால், பள்ளிக்கரணை ஒரு பக்கம் நல்ல தண்ணீர் உள்ள சதுப்பு நிலமாகவும் இன்னொரு பக்கம் உப்புத்தன்மை கலந்த சதுப்பு நிலமுமாகவும் இருக்கிறது. 114 வகையான பறவைகள், 46 வகையான மீன்கள், 29 வகையான புல் வகைகள், ஆமை, தவளை வகைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள் என வளமான பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதி. 2002-ல் இருந்து இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்ற வேண்டுமெனப் பல போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக இப்போதுதான் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியிருக்கிறார்கள்” என்றவர், இவ்வளவு வளமிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாழான கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.


”சென்னை நகரம் விரிவடைந்துகொண்டே போனபோது, வட சென்னைப் பகுதி கிட்டத்தட்ட ஆந்திர எல்லையைத் தொட்டுவிட, தென் சென்னையின் மீது அனைவரின் கவனமும் திரும்பியது. வெள்ளைக்காரன் காலத்திலேயே ‘புறம்போக்கு மேய்ச்சல் நிலம்’ என அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத் தைச் சீரழிக்கும் பணி அப்போது மும்முரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. ‘புதுசா காலனி போடணுமா… பட்டா போடணுமா… பள்ளிக் கரணையில் போடலாம்’ என்கிற அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிவேகமாக நடந்தன. இது எல்லாமே அரசாங்கத்தின் ஆதரவோடுதான் நடந்தது. உண்மையில் பள்ளிக்கரணையைச் சீரழித்ததே அரசாங்கம்தான்.
பெருங்குடியில் குப்பை கொட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியார் கல்லூரிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டவும் கொடுத்துவிட்டு, வளமான தண்ணீர் உள்ள பகுதியில் எந்தவித ஒழுங்கும் இல்லாமல் இஷ்டப்படி குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறது சென்னை மாநகராட்சி. ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த சதுப்பு நிலத்தில், இப்போது உயிர்ப்போடு இருப்பது 420 ஹெக்டேர் மட்டும்தான். ஆக்கிரமிப்புகள் போக மீதியிருக்கிற 132 ஹெக்டேர் அளவுக்கு குப்பைகளைக் கொட்டிப் பாழடித்து வைத்திருக்கிறார்கள்.

சென்ற மாதம் ஏதோ ரசாயனத்தைக் கொட்டியதால் இந்தப் பகுதி தண்ணீர் முழுக்க சிவப்பு நிறமாக மாறிவிட்டது; கூடவே சகிக்க முடியாத நாற்றம் வேறு. மக்கும் குப்பை, மக்காத குப்பை என எல்லாமே ஒன்றாகக் கொட்டி அமுக்கிவைத்திருக்கிறார்கள். குப்பை பொறுக்குகிறவர்கள் டயர் போன்ற பொருட்களில் இருக்கும் இரும்பைப் பிரித்தெடுக்க நெருப்பு வைத்துக் கொளுத்திவிடுகிறார்கள். அந்த நெருப்பு எல்லா இடங்களுக்கும் பரவி, ஏரியாவே எப்போதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. ஒரு லட்சம் பேர் ஒரே இடத்தில் அமர்ந்து புகை விடுவதற்குச் சமமான அளவு, புற்றுநோய் உண்டாக்கும் டயாக்சின் உள்பட நச்சு வாயுக்கள், இந்தக் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளியாகிறது. அரசாங்கத்திடம் இந்தப் பிரச்னையை எத்தனையோ முறை எடுத்துச் சொல்லிவிட்டோம். இன்னும் நடவடிக்கைதான் இல்லை!” என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ.
தற்போது பள்ளிக்கரணையில் குப்பைமேட்டில் குப்பை பொறுக்குகிறவர்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஒக்கியம் நகராட்சி. ஆனாலும் நூறு சிறுவர்களுக்கு மேல் குப்பை பொறுக்க தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார் குப்பை மேட்டில் காவல் காக்கும் அரசு ஊழியர் ஒருவர். அந்தப் பகுதியைக் கடக்கும்போதே நுனி நாசிவரை நாற்றம் ஏறுகிறபோது, அதிலேயே உழலும் குப்பை பொறுக்குகிற சிறுவர்களின் உடல் நலனுக்கு யார் பொறுப்பாவார்கள் என்று தெரியவில்லை.
குண்டூசி குத்துமளவுக்குக்கூட இடம் தெரியாமல் மொய்த்துக்கொண்டு இருக்கும் ஈக்களோடு நாள் முழுக்கக் காவலில் இருக்கும் அரசாங்க ஊழியர்களின் நிலைமையும் பரிதாபம்தான்.
”மாநகராட்சி இப்போது கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் மட்டுமே குப்பை கொட்டுகிறது. இந்தக் குப்பைகளிலிருந்து உரம், மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் பெருங்குடியில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது” என்கிறார் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன்.

சென்னையின் நீர்வளம் குறையவோ கூடவோ காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக் கப்படுவதில்தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள். இன்னொரு அதிர்ச்சியானவிஷயமும் தெரிய வந்தது. 2005-ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்குக் காரணம்பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் பாழடிக்கப்பட்டதுதான்!

”சென்னையின் ஒட்டுமொத்த மழைநீருக்கும் வடிகாலாக இருப்பது பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம்தான். ஒரு பக்கம் நீரைத் தேக்கிவைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் சிறிது சிறிதாக மீதியிருக்கிற நீர் ஒக்கியம் மடுவுக்குச் செல்கிறது. அந்த மடுவிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்குள் செல்கிறது. அந்த வழியாகத் தான் கடல் தண்ணீரும் உள்ளே வரும். ஆனால், ஒக்கியம் மடுவு இருந்த இடத்தை முற்றிலுமாக அடைத்துவிட்டது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. தண்ணீரைத் தேக்கிவைக்கும் இடத்திலும் குப்பைகளைக் கொட்டி சின்னச் சின்ன மலைகளை உருவாக்கிவிட்டார்கள். பிறகு எப்படி வெள்ளம் வடியும்? வெள்ளப்பெருக்கு வராமல் இருக்கும்?
ஒட்டுமொத்தமாக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கத்தின் மீது மட்டுமே சொல்லி விட முடியாது. நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும் என்று அத்தனை குப்பைகளையும் வீதியில் சேர்க்கிற நாமும்தான் குற்றவாளிகள். எத்தனை பேர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று வீட்டிலேயே தரம் பிரித்து அனுப்புகிறோம்?! நாமே தவறுக்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, எல்லாம் பாழான பிறகு உச்சுக்கொட்டுவதில் என்ன பயன்?” – நாளைய சந்ததி கேட்கப்போகும் கேள்வியை இப்போதே கேட்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ!

நன்றி : காட்டுயிர் புகைப்படக்கலைஞர் ஸ்ரீராம்