சித்தாந்த எதிரியை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறதா காங்கிரஸ்?

அண்மையில் கூடிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பிறகு, அம்மாநிலம் முடக்கத்துக்கு உள்ளாகியிருப்பது, காஷ்மீர் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் இருப்பது, பொருளாதார மந்தநிலை, ஐஐடியில் தொடரும் மரணங்கள் இப்படி சூடான பல விசயங்களை விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி. ஆர். பாலு ஒரு விசித்திரமான பிரச்சினையோடு நாடாளுமன்றம் வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு விடுதலை புலிகளால் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார் டி. ஆர். பாலு.

மிகச் சமீபத்தில் சோனியா, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டது மோடி அரசு. சுமார் 3000 பேரைக் கொண்ட இந்த சிறப்பு பாதுகாப்பு குழு, தேர்ச்சி பெற்ற கமாண்டோக்களைக் கொண்டது. இப்போது அளிக்கப்பட்டிருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பில் டெல்லி போலீசைச் சேர்ந்த 100 மட்டுமே இருப்பர். காலம்காலமாக அதிஉயர் பாதுகாப்பில் இருந்த காந்தி குடும்பத்துக்கு, சிறப்பு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தற்போது கூடியிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் பல காங்கிரஸ் எம்.பிக்கள் பேசினர். ராகுல் காந்திக்கும் ப்ரியங்கா காந்திக்கும் அச்சுறுத்தல் இருந்ததாலேயே சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாக பலரும் பேசினார்கள். அவர்கள் விடுதலை புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லவில்லை. ஆனால், டி. ஆர். பாலு பேசும்போது விடுதலை புலிகளால் அச்சுறுத்தல் என அமைப்பின் பெயர் குறிப்பிட்டு பேசினார்.

சர்வதேச அளவில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு, இப்போது பெயரளவில் கருத்தியல் ரீதியாக மட்டும் வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர் சிலர் இணைந்து விடுதலை புலிகள் அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட செத்துப்போன ஒரு இயக்கத்தை காரணம் காட்டி, சோனியா காந்திக்கு பாதுகாப்பு கேட்கிறார் டி.ஆர். பாலு என இந்த விவகாரத்தை சமூக ஊடகங்களில் மக்கள் கேலி செய்தனர்.

உண்மையில் காங்கிரசுக்கும், அதனுடன் கூட்டணியில் உள்ளவர்களுக்கும் காலம் 2008-ஆம் ஆண்டிலேயே நின்றுவிட்டதோ என கேள்வி எழுப்புகிறது மேற்படியான விவகாரத்தில் இவர்கள் நடந்துகொள்ளும் விதம். தொடர்ச்சியான வெற்றிகள், பதவிகள் கண்ட மிதப்பு இவர்களை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

மிக முக்கியமான காலக்கட்டத்தில் நாடு இருக்கும்போது, ஒரு எதிர்க்கட்சிக்குரிய பணியை காங்கிரஸ் செய்கிறதா? பாஜக அசுரத்தனமாக வளர்ந்துகொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் எந்தப் பாதையில் பயணிக்கிறது? 70 ஆண்டுகாலமாக பேணிக்காத்த மதச்சார்பின்மை – பன்மைத்தன்மை எனும் சித்தாந்தங்களை அழித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மைவாதத்தை எப்படி காங்கிரஸ் எதிர்கொள்ளப் போகிறது?

காங்கிரசும் வாரிசு அரசியலும்

2013-ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடியை பாஜக, பிரதமர் வேட்பாளராக களமிறக்கியபோது,‘பரம்பரை பரம்பரையாக அதிகாரத்தில் உள்ளவர்களின் வாரிசு பிரதமராக வேண்டுமா, மக்களில் ஒருவராக சாதாரண டீக்கடைக்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவர் பிரதமராக வேண்டுமா’ என பாஜக தரப்பில் முழக்கம் வைக்கப்பட்டது. அப்போதுதான் 2014-ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து ராகுல் காந்திக்கு காங்கிரசில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தியை குறிவைத்தும் தன்னை எளியவராகக் காட்டிக் கொண்டும் மோடி ஆட்சியைப் பிடித்தார்.

எனவே, காங்கிரசின் வாரிசு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதா; ஒட்டுமொத்தமாக இந்தியாவிலேயே வாரிசு அரசியல் ஒழிக்கப்பட்டுவிட்டதா என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன. வாரிசு அரசியல் என மூச்சுக்கு முந்நூறு முறை சொன்ன பாஜகவில்தான் இப்போது வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது என்பது தனிக்கதை. இங்கே நாம் பேச வேண்டியது வாரிசு அரசியலால்தான் காங்கிரஸ் தோற்றதா என்பதைத்தான்.

இந்தியா போன்ற வளரும் நிலையில் உள்ள ஜனநாயக நாடுகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாதது என்றே உலகளாவிய அரசியல் திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள். ஜனநாயகத்தின் அடுத்தக்கட்டத்தில் அதுதானாகவே உதிர்ந்து விழும் என்பது அவர்களுடைய கருத்து. ஆக, காங்கிரசின் தோல்வி என்பது ஒரு சித்தாந்தம் அசுரத்தனமாக எழுந்து நின்றதால் ஏற்பட்ட பக்க விளைவு. அது பாஜகவின் பெரும்பான்மை வாதம், இந்து தேசியவாதம் எனும் சித்தாந்தம்.

பெரும்பான்மை வாதத்தை, இந்து தேசியவாதத்தை காங்கிரஸ் இனம் கண்டதா?

பாஜகவின் இந்து தேசியவாதம் குறித்து மிதப்பான நிலையிலேயே கடந்த 30 ஆண்டுகாலமும் காங்கிரஸ் அணுகியது. காங்கிரசில் இருந்தவர்களே கூட அந்த சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களாக இருந்தனர். மதச்சார்பின்மைக்கும், பெரும்பான்மைவாதத்துக்குமான வேறுபாட்டை தெளிவுபடுத்த அங்கே சரியான ஆட்கள் இல்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. சோனியா காந்தியை வெளிநாட்டவர், அவர் இந்திய பிரதமராக பதவி ஏற்கக்கூடாது என பாஜக தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டபோதே, காங்கிரஸ் தலைமை விழித்துக்கொண்டிருக்க வேண்டும். இறுதியில் அந்த பிரச்சாரம் வென்று, சோனியா பிரதமராகவே முடியவில்லை என்பது நினைவுகூறத்தக்கது. பெரும்பான்மை தேசியவாதம் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருப்பதைக் காட்டிய முக்கியமான குறிகாட்டி இது. அதிலும் காங்கிரஸ் கோட்டை விட்டது.

இன்னொறு முக்கியமான விசயம், பாஜகவை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருந்த இந்து அமைப்புகளின் வளர்ச்சி, அவர்களுடைய திட்டங்களை முறியடிக்க காங்கிரஸ் தவறியதைக் கூறலாம். பசுவளைய மாநிலங்களில் பெருநகரம், நகரம், கிராமம், மலைக்கிராமம் என பல்வேறு சூழல்களில் பல்கிப் பெருகிக்கொண்டிருந்த இந்து அமைப்புகளை காங்கிரஸ் குறைத்து மதிப்பிட்டு விட்டது. பாஜக என்ற கட்சியின் பெயரைக்கூறாமலேயே உள்ளூர் மக்களை மதத்தின் பெயரால் திரட்டி வைத்திருந்தன இந்த அமைப்புகள்.

இசுலாமிய தீவிரவாதம், இடது அமைப்புகளின் தீவிரவாதம் இவை மட்டுமே நாட்டுக்கு அச்சுறுத்தல் என நம்பிக்கொண்டிருந்தது காங்கிரஸ். இவை அனைத்தையும் காட்டிலும் நாட்டையே அடியோடு மாற்றும் பெரும்பான்மை வாதம் படுவேகமாக வளர்ந்து வருவதை அந்தக் கட்சி கவனிக்கவில்லை. இதன் பாரதூரமான விளைவுகளை முதன்முறையாக 2014-ஆம் ஆண்டில் பாஜக பெற்ற அபார வெற்றி சுட்டிக்காட்டியது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்தோம்; இப்போது ஓய்வெடுத்துக் கொள்வோம் என்பதுபோல, தோல்வியை குறித்து ஆய்வு செய்யாமல் காங்கிரஸ் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றது.

ராகுலின் எதிர்ப்பு போதுமானதாக இல்லை!

இந்து பெரும்பான்மைவாத சித்தாந்த பின்னணியில் அபார வெற்றியுடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது பாஜக. மெதுவாக தன்னுடைய சித்தாந்தத்தை அமலாக்கத் தொடங்கியது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், பசுமாட்டை முன்னிறுத்திய கும்பல் வன்முறைகள், தலித்துகள் – பெண்களுக்கு எதிராக பாஜக தலைவர்களின் அவதூறு பேச்சுகள், பாஜகவை சித்தாந்த ரீதியாக எதிர்த்த செயல்பாட்டாளர்களின் படுகொலைகள் நாட்டை உலுக்கின. தூக்கத்தில் இருந்த காங்கிரஸ் விழித்தது. பாஜகவின் சித்தாந்தமே எதிரிதான் என்பதை அறியாவிட்டாலும், அதன் மதவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கு அவ்வவ்போது எதிர்வினையாற்றியது காங்கிரஸ்.

காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தமே காரணமாக இருந்தது என ராகுல் காந்தி மேடைகளில் பேசினார். இது நீதிமன்ற வழக்காக மாறியது. ராகுல் நீதிமன்றத்துக்கு அலைகழிக்கப்பட்டபோதும், தனது கருத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனாலும், இந்து தேசியவாதத்தை எதிர்ப்பது எங்கே பெரும்பான்மை இந்துக்களை எதிர்ப்பதாகிவிடுமோ என பயந்தது காங்கிரஸ். வட மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களின்போது, கோயில்களுக்குச் சென்றார் ராகுல். கோயில்களுக்குச் செல்வது இந்துக்களை கவரத்தான் என பாஜக தரப்பு அதை கேலி செய்தது. எதைச் செய்தால் மக்களின் மனங்களைப் பிடிக்கலாம் என்பதில் பாஜகவின் பாணியை பின்பற்றலாம் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம். அதுவும் கைகூடவில்லை. பெரும்பான்மைவாதத்துக்கு எதிர் பெரும்பான்மைவாதம் ஆகிவிடாது. இது எளிய சூத்திரம்.

பாஜகவின் இரண்டாவது வெற்றியில் காங்கிரஸ் பாடம் கற்றுக்கொண்டதா?

முதல் வெற்றியைக் காட்டிலும் பாஜக இரண்டாவதாக பெற்ற வெற்றி, இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடும் என எவரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. சங்க பரிவாரங்களின் நீண்ட நாளைய கனவான ‘இந்து அரசு’ இரண்டாவது வெற்றியில் சாத்தியமாகிக் கொண்டு வருகிறது. நிர்வகித்து வந்த காஷ்மீரை அம்மக்களின் உணர்வுகளையும் மீறி தனதாக்கிக் கொண்டது, அயோத்தியில் ‘இந்து பெரும்பான்மைவாத’த்தின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதை இஸ்லாமிய மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்தது, அஸ்ஸாமில் முசுலீம்களை வெளியேற்றும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருப்பது என முழு ‘இந்து அரசு’க்கான நிலையை நோக்கி பாஜக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்திய சுதந்திரத்தின்போது ‘பன்மைத்துவம்தான் இந்தியாவின் ஆன்மா’ என காங்கிரஸ் தலைவர்கள் உறுதியோடு நின்றது இன்று வெறுமனே வரலாறாக மட்டுமே எஞ்சும் நிலைக்கு நாடு சென்றுவிட்டது. வரலாற்று நூல்கள், பாடப்புத்தகங்களிலிருந்து இந்த வாக்கியமும்கூட பெரும்பான்மைவாத அரசால் நீக்கப்படலாம். சோசலிச இந்தியாவை கனவு கண்ட நேரு, இன்றிருக்கும் ஆட்சியாளர்களால் ஒரு எதிரி போலவே காட்டப்படுவது, காலக்கொடுமை! காந்தி தற்செயலாக இறந்தார் என பாடப்புத்தகங்களின் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். பிரிட்டீஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி, இறுதி வரை விசுவாசமாக இருப்பேன் என்றவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தரக் காத்திருக்கிறது ஆளும் அரசு.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத, பார்க்காத இந்தியாவை இனி வரும் காலங்களில் நாம் பார்க்க இருக்கிறோம். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, பெரும் தொண்டர் படையைக் கொண்ட ஒரு கட்சியாக காங்கிரஸ் இதை முறியடிக்க, தனது மூதாதையர்களின் இந்தியாவை தக்க வைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது? சில்லறைத்தனமான விசயங்களில் கவனம் செலுத்தாமல், ஆக்கப்பூர்வமாக காங்கிரஸ் எப்போது சிந்திக்கும்? வாரிசு அரசியல், ஊழல் அரசியல் (இவை இரண்டிலும் காங்கிரஸைக் காட்டிலும் பாஜக மோசமானது) என்பதை ஒதுக்கிவிட்டு, காங்கிரஸை இன்னமும் நம்பிக்கையாக மக்கள் பார்க்கிறார்கள். மக்களின் உயிர்வாழும் சுதந்திரம், அவரவர் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம், பன்மைத்துவத்தைக் காப்பாற்றும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. இதை காங்கிரஸ் எப்போது உணரப் போகிறது?