ஏழு நதிகளின் நாடு எது?

ஏழு ஆறுகளின் பூமியில் ஆரியர் வருகை என்றொரு அத்தியாயம் வரலாற்றாசிரியர்.டி.டி கோசாம்பியின் ’இந்திய வரலாறு’ என்ற நூலில் உண்டு. ஆரியர்களுக்குத்தான், அவர்கள் முதலில் வருகை தந்த இடம், ஏழு ஆறுகள் பாயும் பூமியாக இருக்கிறது. அங்கிருந்து அவர்களுடைய வரலாறு தொடங்குகிறது என்கிறார் கோசாம்பி.

இந்நிலையில் ‘ஏழு நதிகளின் நாடு’ என தலைப்பில் ஒரு நூல் வருகிறது. அது எப்படி இந்திய வரலாறு ஆகும்? அதற்கு முன்பே வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்கள் உள்ளிட்ட மண்ணின் மைந்தர்களின் வரலாறு ‘ஆப்பிரிக்க’ வரலாறில் இணையுமா?

இந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நூல் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கியவாதிகளின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதாகப் படித்தேன். சுவாரஸ்யமான(வரலாற்றில் சுவாரஸ்யத்தின் தேவை என்ன? சுவாரஸ்யம் என்ற வார்த்தையிலேயே வரலாறு அழிக்கப்பட்டுவிடுகிறது) வரலாற்று நூல் என்று பலரும் பாராட்டுகிறார்கள். வாசிக்க வேண்டும்தான். ஆனால், ஏழு நதிகளின் நாடு என தலைப்பிட்டு இது இந்திய வரலாறு என சொல்லும்போது இதை வரலாற்று நூலாக வாசிப்பதற்கான சாத்தியங்கள் காணாமல் போய்விடுகின்றன. இதில் வரலாற்றை சரஸ்வதி நதியில் வேறு தேடுகிறாராம் நூலாசிரியர்.

Indian economist, bestselling writer சஞ்சீவ் கன்யால் எழுதிய ’ஏழு நதிகளின் நாடு’ சிறந்த வாசிப்பனுபவம் உள்ள நூலாக இருக்கலாம். ஆனால் அதை வரலாறு என்று சொல்லாதீர்கள். வரலாறு உங்களை மன்னிக்காது.

“பெண் அரசியல்வாதிகளும் உள்வாங்கிக் கொண்டிருப்பது ஆணாதிக்க சிந்தனைகளைத்தான்”: பேரா. சரஸ்வதி

“பெரியோர்களே! தாய்மார்களே!”

வாக்குக் கேட்கும் அனைத்து கட்சிகளும் பேதம் பார்க்காமல் உச்சரிக்கும் சொற்கள் இவை. பெரியோர் என்றால் அதில் ஆண், பெண் எல்லோருமே வந்துவிடுவார்கள். அடுத்து வருகிற ‘தாய்மார்களே’ என்பது சிறப்பான சொல். தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் வாக்கு வங்கியை நேரடியாக ஓட்டுக் கேட்க இறைஞ்சும் சொல். பெண்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள் என்பது உண்மையா? மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கக் கூடிய பெண்கள் தேர்தலில் ஆண்களைவிட அதிக சதவீதத்தில் வாக்களிக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும் நிரூபணமாகிறது.  தமிழக அரசியல் வரலாற்றில் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்த அரசியல்வாதியாக எம். ஜி. ராமச்சந்திரன் இருந்தார் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவருக்குப் பிறகு அவர் தலைமை தாங்கிய அஇஅதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை தாங்கிய போது பெண்களை தக்க வைத்துக் கொண்டார். எம். ஜி. ஆரின் அரசியல் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு பெண்களைக் கவரும் திட்டங்களை முன்வைத்து களம் காணுகின்றன. குறிப்பாக, திமுக, அதிமுக அறிவிக்கும் இலவச அறிவிப்புகளைச் சொல்லலாம். கருணாநிதி தன்னுடைய ஆட்சியில் கேஸ் அடுப்பையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் தந்தார். அடுத்து வந்த அதிமுக மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகிய இலவசங்களை வழங்கினார். பெரும்பாலான பெண்களின் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்புடைய வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவதன் மூலம் பெண் வாக்கு வங்கியை தனதாக்கிக் கொள்ள அனைத்து கட்சிகளும் போட்டி போடுகின்றன.

பெண்களை வெற்றிக்குரிய வாக்குவங்கியாகப் பார்க்கும் அரசியல் கட்சிகளின் தேர்தல் உத்திகள் எல்லாம் சரிதான். ஆனால், இதே பெண்கள், அரசியலில் பங்கெடுக்க வரும்போது கட்சிகள் அவர்களை எப்படி வரவேற்கின்றன? அவர்களை எப்படி பிரதிநிதித்துவப் படுத்துகின்றன? அரசியலில் பெண்களுக்கான இடம் என்ன?

சுதந்திரத்துக்குப் பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவைத் தவிர மிகப் பெரும் அரசியல் சக்தியாக வேறு பெண் உருவாகவில்லை. சக்தி வாய்ந்த ஜெயலலிதாவின் தலைமைகூட அரசியலில் பெண்களின் பங்களிப்பை கூட்ட முடியவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 2748 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதில் ஒரு சிறு துளி 134 பேர் மட்டுமே!  இந்த 134 பேரில்  அதிமுக சார்பில் 15 பேரும் திமுக 1, தேமுதிக 2, சிபிஎம் 1, காங்கிரஸ் 1 என மொத்தம் 17 பெண்கள் வெற்றி பெற்றார்கள்.

சமூக நீதி கொள்கைகளை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொள்ளும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஏன் சொல்லிக் கொள்ளும்படி இல்லை? பேராசிரியர் சரஸ்வதி ,

“பெண்களைப் பத்தி பொது புத்தி நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு குடும்பத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிற பொதுபுத்தி இருக்கிறதில்லை? அதைப் பிரதிபலிக்கிற ஆணாதிக்க அரசியல்வாதிகளும் பெண்களுக்கு உரிய நீதியை உரிமையைப் பத்தி கவலைப் படாதவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் வாக்கு வங்கிகள் தானே தவிர, அரசியல் அதிகாரத்தில் பங்கு செலுத்தும் உரிமை உள்ளவர்கள் என்கிற நினைவே கிடையாது  இந்த அரசியல்வாதிகளுக்கு. நிலவும் ஆணாதிக்க சமூக சூழல், ஆணாதிக்க அரசியல் சூழலுக்கும் காரணமாக உள்ளது. இந்த ஆணாதிக்க சமூக கலாச்சார சூழலை மாற்றியமைக்கும்போதுதான் ஆணாதிக்க அரசியல் சூழலையும் மாற்ற முடியும். ஆனால் அதற்கான முயற்சியை யாரும் எடுப்பது கிடையாது. ஏனென்றால், ஆணாதிக்கம் பெண்ணடிமை என்பதை ஏதோ போற்றிப் பாதுகாக்க வேண்டிய விஷயமாக, அதுதான் தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்று போற்றி புகழ்ந்துகொண்டு இருப்பதால் சமூகத்தின் பொது புத்தி மாறவில்லை, பொதுபுத்தியை பிரதிபலிக்கிற அரசியல்வாதிகளின் எண்ணங்களும் மாறவில்லை. எல்லாத் தலைமைகளும் ஆணாதிக்க தலைமைகள்தான். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். அது ஜெயலலிதாவாக இருக்கலாம்; ஜெயலலிதாவோ, சோனியோ காந்தியோ பெண்ணுரிமை சிந்தனைகளோட, பெண்களின் சமவாய்ப்புக்காக செயலாற்றுகிறவர்களாக இல்லை. ஏனென்றால் அவர்களும் உள்வாங்கிக் கொண்டிருப்பது ஆணாதிக்க சிந்தனைகளைத்தான்” என்கிறார்.

தன்னுடைய சொந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி, அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்ட ஜோதிமணிக்கு அவருடைய கட்சித் தலைமை ஆணித்தரமான மறுப்பை தெரிவித்தது. கூட்டணியில் இருக்கும் முறைகேடு வழக்குகளில் சிக்குண்ட நபருக்கு சாதகமாக தன் கட்சி தலைமை செயல்படுவதாக பேசினார் ஜோதிமணி.  பெண் என்பதால்தான் இந்த வாய்ப்பு ஜோதிமணிக்கு மறுக்கப்பட்டதா?

“இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸின் மேல் மட்டும் வைக்கவில்லை. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களில் எத்தனை இளைஞர்கள்- பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? இளைஞர்கள் – பெண்கள் பங்களிப்பை ஒழித்து கட்டும் முயற்சியைத்தான் பார்க்க முடிகிறது. 41 பேரில் மூவர் மட்டும் பெண்கள். பெண்களை ஊக்குவிக்காத நிலைமைதான் அரசியல் கட்சிகளிடத்தில் இருக்கிறது. ஆண் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்று வெளிப்படையாகவே சொல்கிறேனே… பெண்கள் இந்த அரசியல்வாதிகளின் வீட்டு வாசலில் போய் நின்று எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். இப்படியான சிந்தனையுள்ள அரசியல்வாதிகளால் சுயமாக சிந்திக்கக் கூடிய, மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க பெண்கள் ஏற்றுக்கொள்ள முடியுவதில்லை.” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார் ஜோதிமணி.

பெரும்பாலான அரசியல்வாதிகள் பெண்களை அடிமைகளாகப் பார்ப்பதாகச் சொல்லும் ஜோதிமணி, சில அரசியல்வாதிகள் பெண்களைப் பார்க்கிற பார்வை, அவர்களுடைய பேச்சு ஆகியவை ஆணாதிக்க மனோபாவத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது என்கிறார். சில தலைவர் ஆணாதிக்க சிந்தனை படிந்த சமூகத்தின் நீட்சியாக இருக்கிறார்கள் என்கிறார்.

தேர்தல் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாக 33 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும் என்று அரசியல் அறிஞர்களும் எல்லா அரசியல் கட்சிகளும் பேசுகின்றன. ஆனால் உண்மையில் 33 சதவீத இடஒதுக்கீட்டை ஒரு வெற்று வாக்குறுதியாகத்தான் எல்லா கட்சிகளுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பேசினால் தேர்தல் நேரத்தில் பெண்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்ற நோக்கில் பேசுகிறார்கள். நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவருவோம் என்று சொன்ன பாஜக மகளிர் மசோதாவை நிறைவேற்றும் பேச்சையே விட்டுவிட்டது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டு இன்னொரு அவையில் முடங்கிப்போனது மகளிர் இடஒதுக்கீடு மசோதா.

தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் தான் அதிகாரம் செலுத்துகிறவராக இருக்கிறார் என்கிற விமர்சனங்கள் வந்தாலும், வீட்டுக்குள் முடங்கிய பெண்களை கட்டாயத்தின் பேரிலாவது பொது வெளிக்கு இழுத்து வந்ததை பெரும் சாதனையாக சொல்லத்தான் வேண்டும். அதேபோல சமீபத்தில் இந்த இடஒதுக்கீடு விகிதத்தை 50 சதவீதத்துக்கு உயர்த்தி சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இந்த இடஒதுக்கீட்டை வரவேற்றுள்ளன.

“இயற்கை நீதி என்று இருக்கிறது சமூகத்தில் சரிபாதியாய் பெண்கள் இருக்கிறார்கள். அந்த இயற்கை நீதிதான் எல்லா தளங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.  பஞ்சாயத்துகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பஞ்சாயத்துகள் முடிவை எடுக்கிற அமைப்புகள் அல்ல, அவை கொடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தை  செயல்படுத்துகிற அமைப்புகள். கொள்கை ரீதியிலான முடிவுகளை இந்த அமைப்புகளால் எடுக்க முடியாது. சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு கேட்பது, அவை கொள்கை முடிவுகள் எடுக்கிற இடங்களாக இருப்பதால்தான்” என்கிற பேரா. சரஸ்வதி, இடஒதுக்கீடு என்பது சர்வரோக நிவாரணி அல்ல என்கிறார். இடஒதுக்கீடு கொடுத்த உடனேயே சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்கிற எல்லா வன்முறைகளும் மனித உரிமை மறுப்புகளும் போய்விடும் என்று சொல்லவில்லை. அரசியல் ரீதியாக வலிமைப் படுத்துகிற முயற்சி. பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு தீர்வு காண்கிற வழியாகப் பார்க்கிறார் பேராசிரியர்.

இடஒதுக்கீட்டில் பதவிக்கு வந்த பெண்களின் முடிவுகளின் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாக அவர்கள் வீட்டு ஆண்கள் இருக்கிறார்கள் என்கிற கருத்தையும் கடுமையாக விமர்சிக்கிறார் பேரா. சரஸ்வதி.  ஆண் அரசியல்வாதிகளாக இருக்கிற இடங்களில் அவருடைய குடும்பம் தாக்கம் செலுத்தவதில்லையா? என்று கேள்வி எழுப்புகிற அவர், சில இடங்களில் பெண்கள் பஞ்சாயத்து தலைவர்களாகவும் மற்ற பதவிகளிலும் அமரும்போது ஆண்களின் சிந்தனைகள் தாக்கம் செலுத்தலாம். அதற்காக எல்ல இடங்களிலும் அப்படித்தான் நடக்கும் என்பது யூகிப்பது அறிவியலற்ற தன்மை என்கிறார்.

“பெண்கள் பதவிக்கு வந்தாலும் அவர்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்பது சொத்தை வாதம்!இதையேதான் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுத்தபோது அவர்கள் ஆண்டைகளின் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றார்கள். ஆனால் இப்போது, அவர்கள் வலிமை பெற்றவர்களாக மாறவில்லையா?” என்பது பேர. சரஸ்வதியின் வாதம்.

இந்த வாதத்துக்கு வலிமை சேர்ப்பதுபோல, பஞ்சாயத்து அமைப்புகளில் கிடைத்த இடஒதுக்கீடே, அரசியல் பின்புலம் இல்லாத தன்னை அரசியல்வாதியாக்கியிருக்கிறது என்கிறார் ஜோதிமணி. அதுபோல பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல அல்லாமல்  ராஜுவ்காந்தி, ராகுல் காந்தி போன்ற ஒருசிலர் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு ஊக்கம் கொடுக்கிறவர்களும் இருக்கிறார்கள் என்கிறார்.

யூத் காங்கிரஸ் தலைவராக ராகுல் இருந்தபோது தன்னைப் போன்ற பெண்கள் இளைஞர்களின் குரல்களுக்கு மதிப்பு கொடுத்தார். இவர்களால் முடியாது என்று ஒதுக்கப்பட்ட பணிகளைக் கொடுத்தார் என்கிற ஜோதிமணி முந்தைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு இன்றைய அரசியல்வாதிகளுக்கு தலைமுறை இடைவெளி இருப்பதாகச் சொல்கிறார்.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை எப்படி அதிகரிப்பது என்பதற்கு ஜோதிமணி, “பஞ்சாயத்துகளில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட இந்த 15 ஆண்டுகளில் ஏராளமான பெண் நிர்வாகிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் தோன்றிவிட்டார்கள். தகுதியான, திறமையான பெண்கள் இல்லையென்று இனி சொல்ல முடியாது” என்கிறார்.

பேராசிரியர் சரஸ்வதியோ, “பெண்களுக்கு சரியான பயிற்சி கொடுத்து, உரிய தெளிவைக் கொடுத்து பதவிக்கு அனுப்புகிற பொறுப்பு அரசியல் கட்சிகளுடையது. எந்தக் கட்சியுமே போராட்டங்களுக்கு முன்னால் நிற்க மக்களாக மட்டுமே பெண்களைப் பார்க்கின்றன.  எந்த கட்சி அரசியல் நுணுக்கத்தையும் ஆளுகைத் திறனையும் பெறுவதற்கான பயிற்சி கொடுக்கிறது? எல்லா கட்சிகளின் தலைமையிலும் ஆண்கள்தானே இருக்கிறார்கள். பெண்களை வெளியைக் கொடுக்காத, போராடி போராடி பெற வேண்டிய கட்டாயத்தில் பெண்களும் பெண்கள் அமைப்புகளும் இருக்கிறார்கள்” என்கிற வழிமுறைச் சொல்கிறார்.

ஜோதிமணி இறுதிக் கருத்தாக இதைச் சொன்னார், “அரசியலுக்கு வரும் பெண்களை ஆண் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வதுதான் சிக்கலே தவிர, மக்கள் எப்போது வரவேற்று கொண்டாடுகிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு உதாரணங்களாக, சோனியா, மம்தா, ஷீலா, மாயாவதி, ஜெயலலிதா போன்றவர்களைச் சொல்லலாம். இதில் குறிப்பிட்டுச் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது  இவர்களில் சிலர் மேல் ஊழல், சர்வாதிகார தன்மை என்கிற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆனால் அதை எல்லாம் மறந்து மக்கள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்” என்றவர்,

“பயணத்தில் தடையாக இருக்கிற எல்லாவற்றையும் எதிர்கொண்டு போராடித்தான் ஆக வேண்டும். எதிர்த்து நிற்கத்தான் வேண்டும்; ஆண் அரசியல்வாதிகளின் அடையாள அழிப்பு முயற்சிகளுக்கு பயந்து பின்வாங்காமல் இருப்பதும் நம்பிக்கைகளை பிரதிபலித்துக்கொண்டே இருப்பதும் முக்கியம்!” என்கிறார்.

அந்திமழை மே 2016 இதழில் வெளியான கட்டுரை.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கும் தீர்ப்பும் குறித்து நக்கீரன் பதிவு

மோடி ஆட்சி மத்தியில் தொடங்கியதும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கின. தமிழகத்தில் மத அடிப்படைவாதம் வளர வாய்ப்பில்லாத சூழலில் சாதி அடிப்படைவாதத்தை கையில் எடுத்தனர், இந்துத்துவத்தின் பின்னணியில் ஒளிந்துகொண்டவர்கள். மோடி ஆட்சிக்கு முன்பே, பாமகவின் சாதி அரசியல்  தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளின் பின்னணியில் அதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்தக் களத்தில் நடத்தப்பட்ட சோதனைதான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரிய போராட்டங்கள், கட்டப்பஞ்சாயத்துகள் எல்லாம்!

மாதொருபாகன் ஒரு புனைவு. தங்கள் சாதியை இழிபடுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களின் விவரிப்பையும் புனைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். நூலை எரிப்பது, அதை எழுதியவரை ஊர்விலக்கம் செய்வது, அவர் வீட்டுப் பெண்களை பொதுவெளிக்கு இழுப்பது என சாதி அமைப்புகள் தொடங்கிய ‘அரசியலு’க்கு அதிகார அமைப்புகளும் அரசும் துணை போயின.  உச்சபட்சமாக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சாதியவாதிகள் கலந்துகொண்ட ‘பஞ்சாய’த்தில் பெருமாள் முருகன்  குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். ஒரு படைப்புக்காக, ஒரு எழுத்தாளனும் நேரக்கூடிய நடந்திருக்கக்கூடாத அவமரியாதையான மன உளைச்சலை ஏற்படுத்தும் தருணங்களாக அவை இருந்திருக்கும். இந்த அடிப்படையிலே பெருமாள் முருகன் எனும் எழுத்தாளன் மரணித்துவிட்டதாக எழுதினார் பெருமாள் முருகன். சாதியவாதிகள் ஓய்ந்தார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பெருமாள் முருகனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் சாதியவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல், இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சாதியவாதிகளின் செயலுக்கு துணைபோன தமிழக அரசுக்கு மிகப்பெரிய அடி இது. வரவேற்கக்கூடியது. ஒரு நூலைப் பிடிக்கவில்லை எனில் தூக்கி எறியுங்கள். அதை வைத்து ஒரு எழுத்தாளனை முடக்க நினைக்காதீர்கள் என்கிறது நீதிமன்றம். சமூகத்தில் ஒளிந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து எழுதும்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. தமிழகத்தின் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கு கிடைத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது.

தீர்ப்புக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் பெருமாள் முருகன், சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுதுவதாகச் சொல்கிறார். அவர் எழுதுவார் என எதிர்பார்க்கலாம். இந்த முன்மாதிரி தீர்ப்பு இதே போன்ற சாதியவாதிகளின் ஒடுக்குதலுக்கு ஆளான எழுத்தாளர் துரை குணாவுக்கும் வழக்கு அலைகழிப்புகளிலிருந்து விடுதலை தரவேண்டும்.

நன்றி: ஜீவா பாரதி (நக்கீரன்)