பிரபல என். ஜி.ஓனாலே இப்படித்தான்!

இதழ் ஒன்றுக்காக பிரபல என் ஜி ஓ ஒருவரிடம் பேட்டி கேட்டிருந்தேன். ஓரிரு தொலைபேசியில் பேசியதுண்டு. முதல் முறை இந்த இதழுக்காக பேட்டி வேண்டும் என்று கேட்டேன். சரி இத்தனை மணிக்கு அழையுங்கள் என்றார். அழைத்தேன். எடுக்கவில்லை.. சிறிது நேரம் கழித்து அழைத்தேன் எடுக்கவில்லை. அடுத்த நாள் இடைவெளி விட்டு அழைத்தும் எடுக்கவில்லை. ஒரு பதினைந்து நாள் கழித்து அழைத்தேன் எடுக்கவில்லை, இதுபோல பல முறை வெவ்வேறு நேரங்களில் அழைத்தும் எடுக்கவில்லை.
 
அவர் பரபரப்பானவர் என்பதால் ஏதோ வேலையில் சிக்கியிருக்கலாம் என ஒவ்வொருமுறையும் நினைத்தேன். ஆனால், அவர் புறக்கணிக்கிறார் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு இதழுக்கோ அல்லது பேட்டியாளருக்கோ பேட்டி கொடுக்க விருப்பமில்லை என நேரிடையாக சொல்லிவிடலாம். இதில் வருத்தப்பட ஏதும் இல்லை. அவரவர் சுதந்திரம்,விருப்பம் என ஒதுங்கிவிடலாம். ஆனால் தருகிறேன் என சொல்லிவிட்டு, எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் அலையவிடுவது எவ்வகையான செயல்பாடு?
 
இதுவே பிரபல அச்சு ஊடகங்களுக்கோ, தொலைக்காட்சி ஊடகங்களுக்கோ அவர் செய்துதிருப்பாரா? சுதந்திர பத்திரிகையாளராக இருப்பதும், அல்லது சிறு பத்திரிகையாக இருப்பதும் இவர்களுக்கு அலட்சியமாகத் தெரிகிறது. என் ஜி ஓக்கள் எதில் அதிக கவரேஜ் கிடைக்கிறது என்பதைத்தான் பார்ப்பார்கள்; புரிந்துகொள்ளக்கூடியதே.
 
என்ஜிஓக்கள் குறித்து விமர்சித்து எழுதிவருகிறேன். அந்த வகையில் அயற்சியாக உணர்ந்தபோதும் அவரை பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்க்காமல் போனதிலும் அவரைப் பற்றி தெளிவு கிடைத்ததிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

கிள்ளிவளவனும் திருமாவளவனும்: படச்சுருள் சாதி அடையாள சினிமா சிறப்பிதழில் என் கட்டுரை

தீவிர சினிமா இதழ்கள் கோட்பாட்டு மொழியில் சற்றே அயர்ச்சி தரும் மொழிநடையிலேயே வருகின்றன. அதிகபட்சம் வார இதழ் வாசிப்பைக் கொண்டிருக்கிற, இலக்கிய வாசிப்பு அனுபவம் இல்லாத சினிமா எடுக்க முயற்சிக்கும், அல்லது ஏற்கனவே சினிமா துறையில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த கோட்பாட்டு கட்டுரைகள் அயற்சியைத் தருமே தவிர, எதையும் கற்றுக்கொடுக்காது என்பது என் எண்ணம்.  ‘படச்சுருள்’ இதழ் அதிலிருந்து விலகி தெரிகிறது.  எளிய வாசகர்களையும் சென்றடையும் வகையில்  அதன் மொழி நடை இருக்கிறது. என்னாலும் வாசிக்க முடிகிறது. 🙂

அக்டோபர் 2016 படச்சுருள்‘சாதி அடையாள சினிமா’ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. இயக்குநர் பாலாஜி சக்திவேல் குறித்து எனக்கு வேறுபட்ட எண்ணம் இருந்தது. விடலைப் பருவத்து காதலை புனிதப்படுத்தி பள்ளிக் குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமாகிவிட்டதோ ‘காதல்’ படம் என்ற விமர்சனம் அது. ஆனால், அவருடைய படச்சுருள் நேர்காணல் மூலம் புதிய விளக்கங்களைப் பெறமுடிந்தது. நன்று. அதுபோல ‘மதயானைக்கூட்டம்’ விக்ரம் சுகுமாறனின் நேர்காணலும்.

இதழில் வந்திருந்த கட்டுரைகள் பலவும் வளர்ந்துவரும் புதியவர்கள் எழுதியது, மலர்ச்சியாகவே இருந்தன. ‘நமது சினிமா சாதி காப்பாற்றும் சினிமா’, ‘சுயபெருமை போற்றுதும்’ ‘சாதி அடையாளத்தில் தமிழ் சினிமா’ ‘அடையாளச் சிக்கலில் உருவான சாதிய சினிமாக்கள்’ என  கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கு ஒருவித தொடர்ச்சியுடனும் தனித்த செய்திகளுடனும் எழுதப்படிருந்தன.

இதில் ‘அடையாளச் சிக்கலில் உருவான சாதிய சினிமாக்கள்’ என்னுடைய கட்டுரை.  நண்பர்கள் இந்தக் கட்டுரைக்கு நேர்மறையான எண்ணங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். உற்சாகம்தான்.

தீவிர சினிமா இதழ்களில் எழுதவும் உழைக்க வேண்டும். அதை எல்லோராலும் செய்துவிட முடியாது. திரை எழுத்து குறித்து எனக்கு போதாமைகள், கற்க வேண்டியவை ஏராளமாக உண்டு.  ஸ்பெஷலிட்ஸ்டாக இல்லாவிட்டாலும் அவ்வவ்போது சினிமா தொடர்பாக எழுத கற்க வேண்டும்.

படச்சுருளில் வெளியான கட்டுரையின் ஒரு பத்தி:

“2015-ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ என்றொரு சினிமா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரித்த படம். ரவுடியாக விரும்பும் போலீஸ்காரர் வீட்டுப் பையனுக்கும் தன் தாயைக் கொன்ற ரவுடியைப் பழிவாங்க கொலை செய்யத் தயாராக உள்ள பெண்ணுக்கும் ஏற்படும் காதலும் விளைவுகளும் கதை. நகைச்சுவைப் படமாகவும் அறியப்பட்டது. ஆனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் நுணுக்கமாக சாதியத்தை சொருகியிருப்பார். வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் கிள்ளிவளவன். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், சேரியில் இருக்கும் ஒரு குடிசையில் அவருடைய படம் மாட்டப்பட்டிருக்கும். வளர்ந்து வரும் அரசியல்வாதி, கொடூரமான கொலைக்காரர். கிள்ளிவளவன் என்கிற பெயர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை மறைமுகமாக குறிப்பிடுவதாக நாம் புரிந்துகொள்ளலாம். அதற்கான காட்சியமைப்புகளை இயக்குநர் அழுத்தமாகவே வைத்திருக்கிறார்.”.

படச்சுருள் இதழை வாங்க