கிட்னி மோசடி பற்றி மீடியாக்களில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை செய்தி வந்துகொண்டு இருக்கிறது…ஆனாலும் சில இடங்களில் இது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
வறுமையை வியாபாரமாக்கும் நவீன கொள்ளையாக உருமாறி இருக்கிறது கிட்னி மோசடி வறுமையைத் தவிர வேறு எதையும் அடையாளமாக சொல்ல முடியாத இந்தப் பகுதிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது. கிட்னிவாக்கம் என்பதுதான் அந்த அடையாளம். கடந்த 20 வருடங்களாக நடந்துவறுகிற கிட்னி வியாபாரமே இந்தப் பேர் வரக்காரணம்.
‘இப்போ போனா கூட கிட்னி வாங்க முடியும்’ என்று சொல்கிற அளவுக்கு இந்தப் பகுதியில் கிட்னி வியாபாரம் நடப்பதாக சொல்கிறார்கள்..
சென்னையின் பகட்டான பகுதியான அண்ணாநகரை ஒட்டி அமைந்திருக்கிறது வில்லிவாக்கத்தில் உள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதி…தள்ளுவண்டி பழ வியாபாரம், காய்கறிகளை தலையில் சுமந்து வீடு வீடாகச் சென்று விற்பது, கட்டட வேலைகளில் மண் சுமப்பது, இப்படிப்பட்ட வேலைகள்தான் இங்கே வாழும் பலருக்கு அன்றாடம் சோறுபோடுகிறது. சம்பாதிப்பதெல்லாம் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே போய்விடும் நிலையில் பண்டிகை, திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு மற்றவர்களிடம் கை நீட்டும் நிலை ஏற்படுகிறது. அஞ்சு வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என பல பெயர்களில் கடன் வாங்க, அன்றாடச் செலவுகளுக்கே அல்லல்படுவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் பூதாகரமாகப் பெருகி நிற்கிறது. இந்தப்பகுதி மக்களின் பொதுவான வாழ்க்கை நிலையே இதுதான். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிலர் அறிமுகப்படுத்தியதுதான் கிட்னி வியாபாரம்!
தங்கள் உடலின் அத்தியாவசியமான ஒரு உறுப்பை, முடியை வெட்டி தூக்கி எறிவதைப்போல கொடுத்துவிட்டு. பிறகு அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் இன்னும் சிலரின் அவல நிலைமை இதோ…
கட்டட வேலை செய்துகொண்டிருந்த தாட்சாயினிக்கு எதிர்காலம் குறித்து நிறையவே கவலை.குடிகாரக் கணவனவால் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் இல்லாத நிலையில், தன் ஒரே மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்று கலங்கிக் கொண்டிருந்தார் தாட்சாயினி…
தாட்சாயினியின் கலக்கம் கிட்னி புரோக்கர்களின் கவனத்துக்கு வர, வறுமையும் புரோக்கர்களின் மூளைச் சலவை வார்த்தைகளில் விழுந்து வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்காக தனது கிட்னியை விற்றிருக்கிறார். வந்ததை வைத்து மகளின் திருமணத்தை முடித்த தாட்சாயினியின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியில். கட்டடத் தொழிலாளியாக செங்கல் சுமந்தவரால் வீட்டு வேலைகள்கூட செய்ய முடியாத நிலை.
வீடு வீடாகச் சென்று பூ வியாபாரம் செய்வதுதான் பிரபாவின் தொழில்.கணவர் ஆட்டோ ஓட்டுநர்… எதிர்பாராத விபத்தில் சிக்கியதில் காலில் அடிபட்டு அதுவும் போனது. இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என நான்கு பேருடைய ஜீவனமும் ஓட பூ வியாபாரத்தில் வரும் வருமானம்தான் ஒரே வழி.கணவரின் மருத்துவ செலவும் குழந்தைகளின் படிப்புச் செலவுகளும் கடனாக வளர்ந்து நிற்க.செய்வதறியாது புலம்பி நின்றார் பிரபா.ஒரு கட்டத்துக்கு மேல் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெறிக்க ஆரம்பிக்க.பிரபாவுக்கு உதயமானது கிட்னியை விற்கும் யோசனை.ஏற்கனவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிட்னி விற்றிருந்ததால் இன்னும் வேலை சுலபமாகப் போய்விட்டது.
கிட்னி ஆபரேஷனுக்கு முன் 2 லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னவர்கள் இறுதியில் கொடுத்தது என்னவோ 80 ஆயிரம் ரூபாய்தான்.கடனுக்கு வட்டிக் கட்டவே அந்தப் பணம் சரியாக இருந்தது என்கிற பிரபா, தன் முடிவை எண்ணி இப்போது கலங்குகிறார்.
கிட்னி தானம் குறித்த மருத்துவ சட்டத்தில் உள்ள அத்தனை ஓட்டைகளையும் பயன்படுத்தி கிட்னி பெற்றவர்கள் அதற்குப் பிறகு பிரபாவை கண்டுகொள்ளவே இல்லை.கிட்னி தானம் வழங்கியவருக்கு 3 மாத கால இடைவெளியில் செய்யப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனை ஒரு முறைகூட பிரபாவுக்கு செய்யப்படவில்லை.
கிட்னி வழங்குவதில் உள்ள மருத்துவ நெறிமுறைகள், சட்டங்கள் எதுவும் இவர்கள் விஷயத்தில் பின்பற்றப்படுவதில்லை.தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்தும் ஏமாற்றியவர்கள் மீது புகார் கொடுக்கவோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவோ பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை. இவர்களை மூலதனமாக்கி தங்களுடைய பைகளை இடைத்தரகர்களும் மருத்துவமனைகளும் நிரப்பிக் கொள்வது தொடர்கதையாகிறது. கிட்னி மோசடி பல காலமாக இந்தப் பகுதியில் நடந்துவந்தபோதும் அதைப்பற்றி எந்தவொரு முன்யோசனையும் இன்றி கிட்னி கொடுத்திருக்கிறார் சேகர்..
கிட்னி விற்ற பணத்தை சதா குடித்து குடித்தே கரைத்திருக்கிறார் சேகர். குடித்தால் இருக்கும் ஒரு கிட்னியும் இல்லாமல் போய்விடும் என்று மனைவி எடுத்துச் சொல்லியும் சேகர் காதில் வாங்கவில்லை.இவரை நம்பி தன் வாழ்க்கை ஒப்புக் கொடுத்த மனைவியும் குழந்தைகளும் இப்போது திசை தெரியாமல் நிற்கிறார்கள்.
கிட்னி தானம் பெறுவதில், கொடுப்பதில் நிறையவே கட்டுப்பாடுகள் உள்ளன. சட்டப்படி ரத்த உறவுக்குள்ளும் அன்பின் காரணமாக நண்பர்களுக்கும் கிட்னி பறிமாற்றம் செய்யலாம். இவை மீறப்படும்போதுதான் கிட்னி தானம் கிட்னி மோசடியாக கருதப்படுகிறது. கிட்னி கொடுத்த தாட்சாயினி, பிரபா, சேகர் ஆகியோர் இந்த வகையில்தான் சேர்த்தி. இவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
நம் நாட்டில் ஒரு வருடத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கிட்னி தேவைப் படுவதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். கிட்னி தானம் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால் பலர் சட்ட விரோதமான முறைகளில் கிட்னி வாங்க முயற்சிக்கிறார்கள். அதனாலதான் கிட்னி மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சில மோசமான நோய் உள்ளவர்களைத்தவிர மற்ற எல்லோரும் கிட்னியை தானமாகத் தரலாம் இந்த மோசடி கும்பலுக்கு சாதகமான விஷயமாகிவிட்டது. கிட்னியை தானம் தந்தபிறகு மீதியிருக்கும் ஒரே கிட்னியை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிற பொறுப்பு இவர்களுக்கு இருக்கு. அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல்படுகிற தாட்சாயினி போன்றவங்கள் கிட்னி தானம் செய்வது தங்கள் உயிரை பணயம் வைப்பதற்கு சமம்…
2009ல் பதிவு செய்யப்பட்டது.