“800 ஆண்டுகளுக்குப் பின் இந்து ஆட்சி”

மக்களவையில் திங்கள்கிழமை சகிப்பின்மை விவாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனம் கிளப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முகமது சலீம் எழுப்பிய விவகாரம், பெரும் சர்ச்சைகளுடன் மக்களவையில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

“800 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் இந்து ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக இதழ் ஒன்றில் வெளியான ராஜ்நாத்தின் பேட்டியை மேற்கோள் காட்டிப் பேசினார் முகமது சலீம்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ராஜ்நாத் சிங், தான் ஒருபோதும் அப்படி பேசவில்லை என்றார். “என்னுடைய நாடாளுமன்ற வாழ்க்கையில் இந்த அளவுக்கு நான் காயம்பட்டதில்லை. இப்படி நான் ஒருபோதும் பேசியதில்லை. நான் எப்போது சொன்னேன் என்பதை சலீம் நிரூபிக்க வேண்டும். இதற்காக அவர் மன்னிப்புக் கோர வேண்டும்” என்றார். பாஜக உறுப்பினர்களும் சலீம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றனர்.

இது குறித்து மேற்கொண்டு பேசிய சலீம், “இல்லாததை எதையும் நான் சொல்லவில்லை. ராஜ்நாத் சிங் பேசியதை வெளியிட்ட பத்திரிகையை இதுகுறித்து நீங்கள் கேட்க வேண்டும். அப்படித் தவறாக எழுதியிருந்தால் அந்த பத்திரிகை மீது அவதூறு வழக்குத் தொடருங்கள்” என்றார்.

இந்நிலையில் ட்விட்டரில் ராஜ்நாத் சிங் பேசியதாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் சலீம் பேசிய விஷயத்தைச் சொன்னவர் மறைந்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் என்று பலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

 

பெண் வணங்கியதால் கோயிலுக்குத் தீட்டு ஏற்பட்டு விட்டதாம்!

shani

அண்மையில் ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கோயில் நிர்வாகி, பெண்கள் மாதவிலக்கானதை கண்டறியும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் அது நிறைவேறும் என்றார். இந்த விவகாரம் நாடு முழுவது பெண்கள் மத்தியில் கண்டனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள, சனி கோயிலில் பெண் ஒருவர் கடவுளை தொட்டு பூஜை செய்ததால் தீட்டுப் பட்டுவிட்டதாகக் கூறி, அந்த கற்சிலைக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

நூறாண்டுகளாக தடை

கடந்த நூறு ஆண்டுகளாக இந்தக் கோயிலில் பெண்கள் வழிபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சனிக்கிழமை மதிய நேரத்தில் இந்தக் கோயிலுக்கு வந்த பெண் ஒருவர், கற்சிலைக்கு பூஜை செய்தாராம். ஒரு சில நொடிகள் கோயில் நிர்வாகம் கவனக் குறைவாக இருந்ததால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாகவும், பிறகு அந்தப் பெண்ணை அழைத்து கண்டித்து அனுப்பிவிட்டதாகவும் கோயில் நிர்வாகி சாயாராம் பங்கர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவத்துக்கு காரணமானதாக இவர் உள்பட, ஏழு கோயில் ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தீட்டு கழிக்கப்பட்டது!

பெண் வணங்கியதால், கற்சிலைக்குத் தீட்டுப் பட்டுவிட்டதாகக் கூறி, பால் மற்றும் எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மகாராஷ்டிரா ஷிரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இந்த சனி கோயிலுக்கும் சென்று வழிபடுவது வழக்கம்.

மறுக்கப்படும் பெண்களின் வழிபாட்டு உரிமை

இந்தக் கோயில் மட்டுமல்லாது மகாராஷ்டிராவில் உள்ள பல கோயில்களில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு தடை உள்ளது. இந்துக் கோயில்களின் வழிமுறையை ஒட்டி சில தர்காக்களில் பெண்கள் மாதவிலக்கான நாட்களில் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக இந்து ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர தபோல்கரின் போராட்டம்

இந்து சனாதன அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், சனிக் கோயில் உள்பட மகாராஷ்டிராவில் உள்ள பல கோயில்களில் பெண்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைக்காகப் போராடினார். பல முறை பெண்களை அழைத்துக் கொண்டு கோயில் நுழையும் போராட்டம் நடத்தி கைதானார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. ‘மகாரஷ்டிர அந்தஸ்ரத்தா நிர்மூலன் சமிதி’ என்ற தன்னுடைய அமைப்பின் மூலம், 2000 வருடங்களாக பெண்களுக்கு வழிபடும் உரிமை மறுக்கப்பட்ட மகாலஷ்மி கோயிலில் 2011-ஆம் ஆண்டு வழிபடும் உரிமைப் பெற்றுத்தந்தவர் தபோல்கர். இந்தக் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தபோல்கர் தொடர்ந்த நீதிமன்ற வழக்கு தீர்ப்பு நோக்கி இருக்கிறது.

 

இந்தியாவின் நம்பர்-1 தீவிரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ்தான்!

இந்தியாவின் நம்பர் ஒன் தீவிரவாத அமைப்பு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்புதான் என்கிறார் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் ஐஜி முசரிஃப் தெரிவித்திருக்கிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆர் எஸ் எஸின் குற்றச்செயல்களை குற்றச்செயல்கள் மீதான நடவடிக்கைகளை பட்டியலிட்டிருக்கிறார்.

* ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களைப் பயன்படுத்தி 13 தீவிரவாத குற்றச்செயல்களில் ஆர்எஸ்எஸ் ஈடுப்பட்டிருக்கிறது.

* பஜ்ரங் தள் செய்த குற்றங்களையும் சேர்த்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை 17-ஆக உயரும்.

* 2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மசூதி குண்டுவெடிப்பு

* 2006 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் மாலேகான் குண்டுவெடிப்பு

* 2007 -ஆம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்டவை ஆர் எஸ் எஸ் மீது குற்றம்சாட்டு நிரூபணமாகி குற்றப்பத்திரிக்கை தாக்குதலான 17 வழக்குகளில் முக்கியமானவை.

* ஆர்எஸ்எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு, அரசியல் அதிகாரத்தால் அது ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.அவர்கள் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

* ஆர்எஸ்எஸ், சாதீய படிநிலைகளுடன் இயங்குகிறது. அதாவது அவர்களுடைய இயங்குதல் என்பது ஒடுக்குதல், அடிமைப்படுத்துதல் என்பதாக இருக்கிறது.

* இப்போதுதான் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவருவதாகச் சொல்வது தவறு, அந்த வேலைகள் எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

* இந்து தீவிரவாதத்தைக் கண்டறிந்து சொன்ன ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு காரணமாக இருந்தது இந்திய உளவுத்துறைதான்.

அணமையில் மும்பை தாக்குதல் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தாங்குதலில் உயிரிழந்த ஹேமந்த் கார்கரே உள்ளிட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முசரிஃப் இந்த விஷயங்களைப் பேசினார்.

‘ஹேமந்த் கார்கரேவைக் கொன்றது யார்?’ என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார் முசரிஃப்.

 

 

கோவன் அப்படியென்ன தவறு செய்துவிட்டார்?

may-day-kovilpatti-kalai-2

மக்கள் பாடகர் கோவன் அரசியல்வாதிகளைப் போய் சந்தித்தது குறித்து நிறைய விமர்சனங்கள் வருகின்றன. சில முற்போக்காளர்களும்கூட சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்கள். நாகரிகமாக எதிரியிடம் கைக்குலுக்குவதைக்கூட விரும்பாத எல்லா நேரத்திலும் பகைமை தோலில் தூக்கி சுமக்க வேண்டும் என்பது இவர்களுடைய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. மனிதத்தை வலியுறுத்தும் பலரும் இதைச் சொல்வது முரணாக இருக்கிறது.

சாதாரணமாக வயதான ஒரு பெரியவரிடம் பேசும்போது குனிந்து வளைந்துதான் பேசமுடியும். அதுதான் பணிவு. அந்தப் பணிவு 90 வயதுகளில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்கும்போது வருவது இயல்பானதே. அதற்கெல்லாம் ஒரு சாயம் பூசப்பார்ப்பது அநாகரிகம். கருணாநிதியைப் பார்த்ததுபோலத்தான் மற்ற தலைவர்களையும் கோவன் சந்தித்திருக்கிறார்.  மரியாதை நிமித்தமாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்ததாக கோவன் சார்ந்த மகஇக அமைப்பு சொல்லிவிட்டது.

எதிர்நிலையில் நின்று பேசக்கூடியவர்கள் ஆனால், தன்னுடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கொடுத்தவர்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இன்னமும் வினவு தளத்தில் கருணாநிதியை, ஸ்டாலினையும் திருமாவளவனையும் விஜயகாந்தையும் கடுமையாக விமர்சித்து எழுதிய கட்டுரை அப்படியேதான் உள்ளன. வினவு தளத்தில் ஆட்சியாளர்களின் தவறு விமர்சித்து எப்போதும் எழுதப்பட்டுதான் வந்திருக்கிறது. நாளை இந்த அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா செய்ததையே செய்தாலும் அவர்கள் விமர்சிக்கத்தான் போகிறார்கள்.

எனவே, எல்லா செயலுக்கும் முடிச்சுகள் போடாமல் கொஞ்சம் நாகரிகக் கண்கொண்டு பாருங்கள் நண்பர்களே!

 

ஜோதிராவ் புலே: அதிகார மையங்களால் மறக்கப்பட்ட வணக்கத்துக்குரிய ஆசிரியர்!

ஏப்ரல் 11, 1827ஆம் ஆண்டு காய்கறி விற்பரின் மகனாகப் பிறந்த ஜோதிராவ் புலே, இந்தியர்களால் மறக்கப்பட்ட, வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட முன்னோடி ஆசிரியர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிற்படுத்தப்பட்ட மாலி சமூகத்தில் பிறந்த ஜோதிராவ், ஆரம்பக் கல்விப் படிப்பை முடித்ததும் அப்பாவுக்குத் துணையாக விவசாயம் செய்ய வேண்டியிருந்தது. ஜோதிராவுக்கு பயில்வதில் இருந்த ஆர்வத்தைப் பார்த்த இஸ்லாமிய, கிறித்துவ அண்டை வீட்டார் அவருடைய தந்தையிடம் மேற்கொண்டு படிக்க வைக்க பரிந்துரைத்தனர். புனித ஸ்காட்டிஸ் பள்ளியில் உயர்நிலை பள்ளிப் படிப்பை படித்து முடித்த ஜோதிராவுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்த அவருடைய குடும்பத்துக்கு உதவும் வகையில் ஏன் அவர் பணியை ஏற்கவில்லை?

தன்னுடன் படித்த பல பார்ப்பனர்கள் ஜோதிராவுக்கு நல்ல நண்பர்களாக இருந்தனர். அப்படியான ஒரு நண்பரின் குடும்ப திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஜோதிராவ் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு சாதியைக் காரணம் காட்டி, ஜோதிராவ் அவமானப்படுத்தப்பட்டார், கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவமே ஜோதிராவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தன்னுடைய மிகப்பெரிய பணி சமூகத்தின் சாதி படிநிலைகளை அகற்றுவது என முடிவு செய்தார். கல்வி ஒன்றே சாதி படிநிலைகளை அகற்றும் என்ற முடிவுக்கு வந்தார். சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி அளிப்பதன் மூலம் அதைச் செய்ய முடியும் என நம்பினார். அதன் முதற்படியாக தன் மனைவி சாவித்ரி பாய்க்கு கல்வி அளிக்க ஆரம்பித்தார்.

பெண்களுக்கென முதல் பள்ளி!

பெண்களுக்கென முதல் பள்ளியை தொடங்கினார் ஜோதிராவ் புலே. இது நடந்தது 1848ஆம் ஆண்டில். தாழ்த்தப்பட்ட பெண்கள் படித்த பள்ளி மாணவிகளுக்கு கல்வியைத் தர எவரும் முன்வராத காரணத்தினால், தன் மனைவி சாவித்ரியிடம் அவர்களுக்குக் கல்வியை போதிக்கும்படி சொன்னார். தன் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் சாவித்ரி மீது உயர்சாதியினர் கற்களை வீசினர். பள்ளியை இழுத்து மூட ஜோதிராவுக்குச் சொல்லும்படி அவருடைய தந்தையை அவர்கள் நிர்ப்பந்தித்தனர். இதனால் ஜோதிராவும் சாவித்ரியும் தந்தையின் வீட்டிலிருந்து செல்ல வேண்டியிருந்தும் அவர்கள் தங்கள் பணியிலிருந்து பின்வாங்கவில்லை. போதிய நிதி இன்மையால் சிறிது காலம் இந்தப் பள்ளி செயல்படவில்லை. நிதி திரட்டி மீண்டும் செயல்படுத்தினார், பெண்களுக்கென மேலும் இரண்டு பள்ளிகளைத் திறந்தார். தாழ்த்தப்பட்ட மஹர், மங் சமூகத்தினருக்கென்றும் பள்ளிகளைத் திறந்தார்.

வரலாறு அதிகார மையங்களால் எழுதப்படுகிறது

கல்வியும் அதிகாரமும் பார்ப்பனர்களுக்கே என்கிற நிலை இருந்த காலக்கட்டத்தில் கல்வியின் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சியைத் தொடங்கி வைத்த ஜோதிராவ் புலே குறித்து எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்? கல்வியோடு நின்றுவிடாமல் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தும் விதவைகள் திருமணத்தை ஆதரித்தும் தொடர்ந்து களப்பணிச் செய்த சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர் ஜோதிராவ். அவர் இந்திய வரலாற்றில் நினைக்கப்படாமல் போனது எதனால்? அவர் மனிதர்களுக்கிடையேயான சமத்துவத்தை மறுத்த இந்து மரபை எதிர்த்தார் என்பதே காரணம். சுதந்திரப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இந்து ஞான மரபை முன்னிறுத்தி போலி சமத்துவத்தையும் போலியான சீர்திருத்தத்தையும் பரிந்துரைத்த பிரம்ம ஞான சபை போன்றவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார். பார்ப்பனர்களை வேடதாரிகள் என்றார். பார்ப்பன விதவைப் பெண்கள், பார்ப்பன பணக்காரர்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதைக் கடுமையாக எதிர்த்தார். பார்ப்பன விதவைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். எனவே பின்னாளில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய பார்ப்பனர்களாலும் சுதந்திரத்திற்குப் பிறகு உயர் பதவிகளை அலங்கரித்த உயர்சாதி இந்துக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவராக மஹாத்மா புலே ஆனார்.

வரலாறு எப்போதுமே அதிகார மையங்களாலே எழுதப்படுகிறது. இந்துப் பெண்கள் சதி என்கிற பெயரின் உடன்கட்டை ஏறுவதை தடுத்த அவுரங்கசீப், வரலாற்றுப் பாடங்களில் மிக மோசமான மொகலாய மன்னனாக குறிப்பிடப்படுகிறார். அவருடைய பெயர் தாங்கிய சாலைக்கு, இந்து சனாதன கருத்துகோளில் செயல்பட்ட அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படுகிறது. பன்முகப்பட்ட இந்திய சமூகம், இந்து சமூகமாக கட்டமைக்கும் பணியைக் காலம்தோறும் அதிகார மையம் செய்துகொண்டே இருக்கிறது. சாமானியர்களின் நாயகர்கள் இப்படித்தான் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

நவம்பர் 28 மகாத்மா புலேவின் நினைவுநாள்