பாமக சாதி அரசியல் நடத்தவில்லையா?!

என்னுடைய முந்தைய பதிவில் பாமக குறித்து எழுதியிருந்தேன். அதற்கு மாதவன் என்பவர் நேர்மறையான பின்னூட்டங்களை இட்டிருந்தார். நேர்மறையான என்று ஏன் சொல்கிறேன் என்றால், சாதி பற்றி எழுதினாலே மிக மோசமான, கண்மூடித்தனமான வசவுகளை பின்னூட்டமாகப் பெற வேண்டியிருக்கும். மாதவன், என் பதிவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மட்டும் பின்னூட்டமிட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் இட்ட பின்னூட்டங்களின் தொகுப்பு இதோ… என்னுடைய விளக்கம், கேள்வியை பின்னால் தருகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி ஜாதிக்கட்சி என்று மக்களோ, கட்சியின் உறுப்பினர்களோ, தலைவர்களோ யாரும் அறிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்களான நீங்கள் தான் பா.ம.க வின் நிலைப்பாட்டை மக்களிடம் மறைத்து அதனை வேறு பிம்பமாக மாற்றி மக்களிடம் காட்டுகிறீர்கள். ஊடகங்களின் உண்மையை தோலுரிக்கும் நல்ல நேர்மையான கட்டுரை. அதே சமயம் நீங்கள் பாமக-வை பற்றி நேர்மையாக எழுதவில்லையோ என தோன்றுகிறது.

ஊழலை மறைக்கும் அதே ஊடகங்கள் தான் பாமக-வை தலித் எதிரியாக சித்தரித்தது என்பது எனது கண்ணோட்டம். இன்றைய நிலை அல்லது தேவை என்பது அதிமுக ஆட்சிக்கு வந்தபின் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் மிக பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. இதை இரண்டு பேர் மட்டும் தான் தட்டி கேட்க முடியும். ஒன்று ஊடகங்கள், மற்றொன்று எதிர்கட்சிகள். இந்த நிலையில் பார்க்கும் போது இதுவரை எந்த ஊடகங்களும் (ஜூனியர் விகடன் சற்று விழித்துள்ளது, தினமலம் தேவைற்கேற்ப) பெரிய அளவில் மக்களிடம் ஊழல் பிரச்னையை கொண்டு செல்லவில்லை. எதிர்கட்சிகள் என்று பார்த்தால் இதுவரை துணிச்சலாக தொடர்ந்து குரல் கொடுப்பது பாமக மட்டுமே. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு ஒத்த கருத்து இல்லையென்றாலும், அவர்களின் ஊழலுக்கு எதிரான நிலைபாடு பாராட்டுக்குரியதே. “ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்” என்ற தலைப்பில் சவுக்கு எழுதியுள்ள கட்டுரையை படித்தால் உண்மை உங்களுக்கு புரியும்.

 

கடந்த 2012ல் தர்மபுரி நத்தம் காலனி இளவரசன் – திவ்யா காதல் காரணமாக எரித்து நாசமாக்கப்பட்டது. அதை எரித்தது வன்னிய சாதியினர் என்பதும், பின்னணியாக இருந்தது பாமக என்பது தர்மபுரி மாவட்ட சிறார்களுக்குக் கூடத் தெரியும். நானும்கூட தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (நான் என்ன சாதியாக இருக்கக்கூடும் என ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்).

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, இளவரசனின் அகால மரணம்(கொலை) வரை பாமக தலைவர்கள் விட்ட அறிக்கைகள், அவர்கள் பின்னணியில் இயக்கியது என எல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை. பாமக ஆதரவு வலைத் தளங்களிலேயே இவர்களின் அறிக்கைகள் அப்படியேதான் உள்ளன.  வன்னியர் என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் இன்றுவரை இவர்கள் அரசியல் நடத்த முடியாது என்பது வெளிப்படையான ஒன்று.

அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டுவந்தது உண்மையில் பாராட்டுக்குரிய ஒன்றுதான். அதற்காக வெளிப்படையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது வெறுப்பை உமிழும் ஒரு கட்சியை அரசியல் அதிகாரத்தில் அமர்த்த முன்மொழிவது ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை மாதவன் போன்ற பாமக அனுதாபிகள் உணர வேண்டும். ஊழல் பேயை ஓட்ட, சாதிப் பேயையா அழைப்பது?

பாமகவுக்கு அரசியல் எதிரி வெளியில் இல்லை, அவர்கள் கட்சிக்குள்ளாக ஒரு எதிரி இருக்கிறது. சாதி அரசியல் என்பதே அந்த எதிரி!

ஜூனியர் விகடனில் வந்த பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி சொல்லி, ஜூவி பாமகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லியிருக்கிறார் மாதவன். ஜூவி அலசியிருக்க வேண்டியது அதிமுகவின் ஊழல்களைத் தானே தவிர, பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி அல்ல. கைமேல் இவ்வளவு விடயங்கள் கிடைத்தால் தமிழகத்தை பரபரப்பாக்கும் வெளிவராத பல தகவல்கள் ஜூவி போன்ற இதழ்கள் தந்திருக்க வேண்டும். இரண்டாம் தரமான கிசுகிசுக்களை கொடுத்து உண்மையில் மக்களை வேறு திசையில் திருப்பும் வேலையைத்தான் இவை செய்கின்றன.

ஊழல் அரசுடன் ஊடகங்களின் கூட்டு; 2015திலும் ஏமாறுவோம் மக்களே!

ஜெயலலிதா அரசின் ஊழல் புகார்களை திரட்டி(இவர்களாக கண்டுபிடித்து அல்ல) அவ்வவ்போது அறிக்கையாக வெளியிட்டு ‘ஊழலுக்கு எதிரான’ இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறது பாமக. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் பாமகவினர் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை அளிப்பது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. இடைத்தேர்தலில் நிற்காவிட்டாலும் ஆளுநரிடம் அளித்த பட்டியலை தங்கள் கூட்டணியில் உள்ள (இன்னமும் கூட்டணியில்தான் இருக்கிறார்களாம்) பாஜகவினருக்கு கொடுத்திருக்கலாம். அல்லது இடைத்தேர்தல் நேரத்தின்போதாவது அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம்.

மக்களவையில் அன்புமணி வெற்றி பாமகவுக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகான பாமகவின் நகர்வுகள் ஒவ்வொன்றும் திட்டமிடப்படுகின்றன. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி மேலும் அவர்களுக்கு உற்சாகமூட்டியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுகள் உள்ள நிலையில்,  சேலம் மாநாட்டில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கும் அறிவிப்புக்குக் காரணம் டெல்லியின் உற்சாகமே.  அறிவித்த கையோடு ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருக்கிறது பாமக.

ஜெயலலிதா அரசின் ஊழல் வெளிவந்தது பாமகவால் அல்ல, ஆனால் அதை தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்கிறது பாமக. ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்பையும் மக்கள் பல முறை அளித்துவிட்டார்கள். இவர்களால் என்ன மாற்றத்தை மக்கள் அடைந்தார்கள் என்பதற்கும் வழமையாக மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் செய்தார்கள் என்பதே பதில்.

‘ஊழலுக்கு எதிரானவர்கள்’, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாயையான வார்த்தைகள்தான். பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். முக்கியமாக ஒரு சாதிக் கட்சியாக உள்ள பாமகவுக்கு எப்படி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அரசியல் அதிகாரத்துக்கு திட்டமிடும் கட்சியின் தலைமை சிந்திப்பதாகத் தெரியவில்லை. தலித்துகள் மீது நேரடியான வன்மத்துடன் அறிக்கை வெளியிட்ட பாமக, இன்று வாக்குக்கு கையேந்தி ‘ஊழலுக்கு எதிரானவன்’ என்ற நல்லவனை முன்னிறுத்துகிறது. ஊழல் பெரியதா, உயிர் பெரியதா என்கிற நிலையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சாமானியனுக்கு உயிரோடு இருப்பதே பெரியது!

மூன்றே ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது, நம்மால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் மக்களை சாதிய ரீதியாக துண்டாட நினைக்கும் ஒரு சாதிக் கட்சிக்கு வரக்கூடாது. இதை ஆதங்கம் என்று சொல்வதைவிட அரசியல் அதிகாரத்திற்கான ஆசை என்று கூறலாம். இந்த ஆசை காரணமாக பாமக தன் வலதுசாரி ஊடகங்களின் ஆதரவை இழந்துவருவதை இனி உணரக்கூடும். வலதுசாரி ஊடகங்களின் ஏகபோக முதன்மையாளரான ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடப்படக்கூடாது என்று தங்களுக்குள் எழுதப்படாத விதியுடன் இவை செயல்படுகின்றன. சாலை சரியில்லை என்பது தொடர்பாக ஏதோ வழமையான மனுவை பாமக அளித்தது போன்றே தமிழக அரசுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணை மனு குறித்த செய்தியும் இரண்டு வரிகளில் வெளியாகியுள்ளது.  அதிலும் தினமணி தமிழக அரசின் ஊழல்கள் என்பதற்கு பதிலாக, ‘தமிழக அரசு மீதான  புகார்களை’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறது. தினத்தந்தி மட்டும் பாமகவின் முழு அறிக்கையில், எடிட் செய்யப்பட்ட பகுதியை வெளியிட்டிருக்கிறது. இணைய ஊடகங்களில்கூட முழு அறிக்கையும் வெளியாகவில்லை. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இந்திய கருப்பு முதலாளிகளின் பட்டியலை வெளியிட்ட எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்துதான் தமிழக அரசின் ஊழல் தொடர்பான செய்திகளைக்கூட வெளியிடக் கூடாது என்கிற கொள்கையை வைத்திருக்கும் தினமணியும் வெளிவருகிறது!

இத்தனை காலமும்(பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல்) பாமகவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின், மிகுந்த கவனத்துடன் பாமகவை தவிர்க்கின்றன, அல்லது அறிக்கைகளை மட்டுப்படுத்துகின்றன. பாமகவும் ஊழலுக்கு எதிரானது அல்ல, வலதுசாரி தமிழ் ஊடகங்களும் ஊழலுக்கு எதிரானவை அல்ல. உண்மையில் தமிழக மக்கள் மாறி மாறி ஊழல் அரசுகளால் ஆளப்பட்ட இந்த ஊடகங்கள்தான் காரணம். இவர்கள் கட்டியெழுப்பும் பிம்பங்களே மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டியது இந்த ஊடகங்களைத்தான். வாக்குக்கு கையூட்டு வாங்குவதை நியாயப்படுத்துவதும், மக்களை ஊழலுக்கு பழக்குவதும் இந்த ஊடகங்கள்தாம்.  ஆகவே நாம் 2015திலும் ஏமாறுவோம் என்பதில் மாற்று இருக்க முடியாது!

(நண்பர் ஒருவர் தினமலரை ஏன் குறிப்பிடவில்லை என இந்தப் பதிவில் கேட்டிருந்தார்.  இரண்டாம் தரமான மொழி நடையில் எழுதப்படும் பிரபல தினசரிகளை நான் படிப்பதில்லை. முக்கியமாக பெண்கள் தொடர்பான செய்திகளை இவர்கள் எழுதும்விதம் அருவருக்கத்தக்கது. அதனால் மலர், தந்திகளை நான் படிப்பதில்லை. ஒரு வகையில் தினமணி எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த இதழ், என்றாலும் அதன் வலதுசாரி தனத்தை என்னால் இனம்காண முடியும். தினமணியுடன் தி இந்து தமிழை சில ஊடகவியலாளர்கள்கூட ஒப்பிட்டு சொல்கிறார்கள். நிச்சயம், தினமணியின் தமிழ் நடையுடன் தி இந்துவை ஒப்பிட முடியாது. தி இந்து, ஆ.வி. பாணி தமிழின் தினசரி வடிவம் என்பதே சரி)

 

ஒரு கூடு, இரண்டு பறவைகள்!

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ காதல் கவிதை(பிப்ரவரி மாதம் ஆயிற்றே)க்கான தலைப்பென்று நினைக்கலாம். இல்லை, இது இரண்டு பறவைகளின் இருப்பிடப் பிரச்னை குறித்து! கடந்த பொங்கலின் போது கிராமத்து வீட்டருகே உள்ள தோட்டத்தில் கண்ட இந்தக் காட்சிகளை படம் பிடித்தோம். ஒரு பட்டுப்போன தென்னை மரத்தில் இருந்த பொந்தில் கூடமைத்து தங்கியிருந்த மைனாவின் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டது ஒரு கிளி. முதல் அதிகாலையில் பார்த்தபோது சில மைனாக்கள் இருந்த அந்த கூட்டில் சற்றே வளர்ந்திருந்த மைனா குஞ்சு ஒன்றும் இருந்தது. அந்த மைனா பெற்றோர் இல்லாத சமயத்தில், பகல் நேரங்களில் வெளியே வந்து அருகில் இருக்கும் மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் அந்தக் கூட்டை ஆக்ரமித்துக் கொண்டது கிளி ஒன்று. கூடு பறிபோனதைப் பார்த்த மைனா குஞ்சு, கிளியிடம் போராடிப் பார்த்தது, கிளி விடுவதாக இல்லை. கிளி முட்டையிடும் காலத்தில் இருந்திருக்கலாம், கூட்டை வெகு நாட்கள் நோட்டம் விட்டு, சமயத்தில் கூட்டைப் பிடித்துக் கொண்டது. மைனா செய்வதறியாது அருகில் இருந்த தென்னை மரக் கிளையில் அமர்ந்து கொண்டிருந்தது. கிளி, மைனா இல்லாத நேரத்தில் கூட்டை விட்டுப் பறந்து அருகில் இருந்த வயலில் காய்ந்த சோளத்தை தின்றுவிட்டு மீண்டும் கூட்டுக்குள் அடங்கியது. கூடு, அருகிலேயே உணவுக்கு வசதி என கிளியின் தேர்வு எனக்கு வியப்பைத் தருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மைனா குடும்பம் தன் வீட்டைக் கைப்பற்ற முயற்சித்தும் இறுதிவரை கிளி விட்டுத் தருவதாக இல்லை. உண்மையில் கிளிகள்தான் அந்த பட்டுப்போன தென்னையில் முதன்முதலாக குடியேறி இருந்தன. எனவே கிளி ஆக்ரமித்தது என்று சொல்வதைவிட மீண்டும் தன் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது என சொல்லலாம். மைனா குஞ்சும் தனியே வாழும் அளவில் வளர்ந்திருந்தது, எனவே அது ஒரு புது வீட்டை தேடிக் கொண்டிருக்கும்!

DSCN0265

DSCN0436

DSCN0508

DSCN0509

DSCN0439

DSCN0559படங்கள்: சண்முகசுந்தரம், நந்தினி

 

ஆம் ஆத்மி, தினமணி, தி இந்து…

கருத்துக் கணிப்புகள் சொன்னதை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றிருக்கிறது. 70க்கு 70 பெற்றாலும் பெறலாம். ஒரு சாதாரண மனிதனின் வெற்றியாக டெல்லி மக்கள் கொண்டாடுகிறார்கள். ஊடகங்கள் கொண்டாடிய மோடிக்கும் அவருடைய  8 மாத ஆட்சிக்கும்  மிகப் பெரிய  பரிசை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் . மாய்ந்து மாய்ந்து மோடி-அமித் ஷா மாயாஜாலம் டெல்லியிலும் பலிக்கும் என்று எழுதிய ஊடகங்களை பின்நோக்கிப் பார்க்கிறேன்.

தி இந்துவின் ஆசிரியராக மாலினி பார்த்தசாரதி பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த நாளின்  கார்ட்டூன் பகுதியில் அரவிந்த கெஜ்ரிவால் எதிர் கட்சி வரிசையில் அமரப் போவதாக சித்திரம் வெளியானது. மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்தவுடன் மாலினி பார்த்தசாரதி அவரைச் சந்தித்து கைகுலுக்கினார். தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி என்னமா இங்கிலீஷ் பேசறார் என டிவி சீரியல் பார்த்து வியக்கும் ஒரு குடும்பத் தலைவியின் வியப்பைக் காட்டியிருந்தார். மோடியிடம் வியப்பதற்கு அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்! போகட்டும்… சாதாரண விஷயத்துக்கே வியப்பை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட மோடி அபிமானி ஒரு பத்திரிகையின் ஆசிரியரானால் எப்படிப்பட்ட நடுநிலை செய்திகள் வெளியாகும் என்பது என் போன்ற வாசகரின் கேள்வி. (தி இந்துவின் வரலாற்றில் ஒரு பெண் ஆசிரியராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதற்காக அவருக்கு வாழ்த்து சொல்லலாம்தான். ஆனால் தாத்தாவின் நிறுவனத்தில் பேத்தி ஆசிரியராக பொறுப்பேற்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்றும் தோன்றுகிறது!) டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஊடகவியலாளர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிரசாரம் செய்தன. தினமணியில் ஒரு செய்தி, அதில் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி என்பதற்கு பதிலாக பாஜக முதல்வர் கிரண்பேடி என்று எழுதி தன் எஜமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது தினமணி.

காலையில் ஆம் ஆத்மி முன்னிலை என்று செய்தி எழுதினாலும் பாஜக பின்னடைவு என்றோ, கிரண்பேடி ஆரம்பம் முதலே பின்னடைவில் இருக்கிறார் என்றோ  வராமல் தணிக்கையுடன் செய்தி வெளியிடுகிறது தினமணி.

இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள் இப்படியான ஒரு தலைபட்சமான, தணிக்கை செய்யப்பட்ட செய்திகளைத்தான் வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையே அவர்களின் சார்பை வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக  நடுநிலை ஊடகமாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறையை சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும். ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்கு உறுதிகளைக்கூட இவர்கள் வெளியிடவில்லை.

என்னுடைய பதிவின் நோக்கம் ஊடகங்களின் ஒரு சார்பை சுட்டிக்காடுவதே அன்றி, ஆம் ஆத்மி மேல் அபிமானம் காட்டுவதல்ல, நான் அபிமானியும் அல்ல.  இந்திய கட்சிகளில் ஆம் ஆத்மி எவ்வகையில் மேம்பட்டதாக இருக்கப்போகிறது என்பதை பார்வையாளராக இருந்து பார்க்கப் போகிறேன். இந்திய ஆட்சியாளர்களின் மேல் நம்பிக்கை இழந்த ஒரு சாமானிய பெண்ணுக்கு உண்டான எதிர்பார்ப்பில் நானும் மாற்றத்தை எதிர்நோக்குகிறேன். ஆனால் அந்த மாற்றம் ஆம் ஆத்மியால் நடக்கும் என்று தோன்றவில்லை!!

’ஐ’யும் ஷங்கரின் மூழ்கிக் கொண்டிருக்கும் கோலிவுட் மசாலா கப்பலும்

90களின் இடையில் கிராமத்து பஞ்சாயத்து, தீவிரவாதி-அரசியல்வாதி-நேர்மையான கதாநாயக படங்கள் ட்ரெண்டாகி தமிழக மக்களை மாவாக்கிக் கொண்டிருந்த நிலையில் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் மசாலா படங்களுக்கு வித்யாச முலாம் பூசி அறிமுகமானார் இயக்குநர் ஷங்கர். 6 பாட்டு, 6 சண்டைதான். ஆனால், அதில் பிரமாண்ட செலவிருக்கும், திருடப்பட்ட ஹாலிவுட் கதையிருக்கும். இதுதான் ஷங்கரின் மசாலா படத்துக்கு தேவையானவை. இந்த மசாலா பாணி அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் கை கொடுத்தது. ஆனால் வரலாற்றில் தொடர் வெற்றியாளர் என்று யாரும் இல்லையே! முதல் சருக்கல் பாய்ஸ். அதைப் பற்றி ஏராளமானவர் பேசிவிட்டார்கள், ஏசிவிட்டார்கள். அடுத்தது பலத்த அடி…வசூல் மன்னனை வைத்து கொடுத்த எந்திரன். அதிலிருந்தாவது பாடம் கற்றுக் கொண்டு நமக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருக்கலாம். அடுத்து ஒரு ரீமேக் படத்தை இயக்கினார். அதுபோல ரீமேக்கிங்கிலாவது கவனம் செலுத்தலாம். அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மிகுந்த பில்ட் அப்பில் ஐ படத்தை இயக்கி உலவ விட்டிருக்கிறார்.

ஐ படத்தில் கதை, திரைக்கதை நேர்த்தி, பிரமாண்ட பொருட்செலவு குறித்தெல்லாம் நான் பேச வேண்டிய தேவையில்லை. நான் விமர்சகர் இல்லை. ஆனால் அந்த சினிமாவைப் பார்த்த ஒரு பார்வையாளராக என்னில் தோன்றியதை பகிர்கிறேன். சமீபத்தில் ஷங்கர் தயாரித்த, இயக்கிய படங்களைப் பார்த்தேன். முதலில் ஐ…

ஷங்கர் என்னும் அறிவாளி, தன்னைச் சுற்றிலும் மெத்தப் படித்தவர்களை வைத்துக்கொண்டுள்ள ஒருவர், முட்டாள்களுக்குப் படம் இயக்குகிறார். மெட்ராஸ் இளைஞனை தமிழகத்தின் கடைக்கோடி சினிமா ரசிகன்கூட நன்றாக அறிவான். உங்கள் சினிமாப் படி பார்த்தால் லிங்கேசன் (கதாநாயகன்) எங்கோ பிறந்து கூவத்து கரை பக்கம் தத்துக்கொடுக்கப்பட்டவனாகத் தெரிகிறான். மெட்ராஸில் வசிக்கும் ஒருவனைக் காட்ட அவனை ’இன்னாமா’ என்று பேச வைத்தால் போதும் என்பது பாலச்சந்தர் கால பழைய ஃபார்முலா. கதை சுடுவதில் உள்ள மெனக்கெடலை இதற்கும் சற்று பயன்படுத்தியிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த மெட்ராஸ் பையன் திருநங்கைகளோடு நட்பு பாராட்டித்தான் பார்த்திருக்கிறேன். வெறுமனே வசைச் சொற்களாக மட்டுமே ‘பொட்டை’ என்பது இங்கே பயன்படுத்தப்படுகிறது. பாலினம் மாறிய ஒருவரைப்பார்த்த சில நொடிகளிலேயே மிகக் கேவலமாக (மூன்றாம் தர ரசிகர்களை குஷிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு) ஊரோரம் புளிய மரம் பாட்டை பாடும் அளவுக்கு கேவலமான மெட்ராஸ்காரனை நான் பார்த்ததில்லை. அவனைத்தான் ஷங்கர் தன் படத்தில் காட்டியிருக்கிறார். நாட்டிலே திறமையான ஒருவரைப் பார்த்த உடனே அவர் திருநங்கை என்பதாலேயே அவரை மலினமாக கதாநாயகனும் அவனது தோழனும் அவமானப் படுத்துவதாக காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படத்துக்கு தேவையே இல்லாத இந்தக் காட்சி அமைப்பின் மூலம் மெட்ராஸ் இளைஞர்களை திருநங்கைகளையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் அவமதித்திருக்கிறார். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

ஒரு திருநங்கை காதல் வயப்படக்கூடாதா? தெரிந்தோ, தெரியாமலோ சில காட்சி அமைப்புகள் மூலம் கதாநாயகியின் காதலைவிட அவருடைய காதல்தான் எனக்கு உயர்வானதாக பட்டது. கதாநாயகனால் அவருடைய காதல் நிராகரிக்கப்படும்போது அவரது துக்கத்தை உணர்ந்தேன். எப்படியோ சாமான்ய ரசிகனுக்கு ஒரு திருநங்கையின் காதலும் அதனால் உண்டான வலியும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எனக்குத் தெரிந்து ஒன்போது என்று சொல்லிக்கொண்டிருந்த பலரும் இன்று திருநங்கைகள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார். திருநங்கைகள் மீதான சமூக கண்ணோட்டம் நேர்மறையாக உருமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சமூகத்தின் ஆழம் வரை சென்று பாயும் கோலிவுட் மசாலாக்கள் சட்டென்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. இந்தப் படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம் முக்கியமானது. இனி இப்படிப்பட்ட காட்சிகளை வைப்பதற்கு கோலிவுட் கனவான்கள் யோசிப்பார்கள்.

மேக்கப் வித்யாசம் காட்ட வேண்டும் என்று எடுக்கப்பட்ட படத்தில் எதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தை கேவலமாக சித்தரிக்க வேண்டும்? இதனால்தான் சொல்கிறேன் ஷங்கரிடம் மசாலா சரக்கு தீர்ந்துவிட்டது என்று.  படம் இயக்குவதில் மட்டும் அல்ல, படம் தயாரிப்பதிலும் இவரிடம் சரக்கு இல்லை. இவர் தயாரித்த கப்பல், கீழ்த்தரமான படம். பால் இச்சைக்காக அலையும் இளைஞர்கள்தான் கதைக்குரியவர்கள். இதையும் நாளை தமிழக தொலைக்காட்சி வரலாற்றீலேயே முதன்முறையாக காட்டும்போது தமிழர் குடும்பங்கள் பார்க்கத்தான் போகின்றன.

எனவே, என்னுடைய முடிவுரைக்கு வருகிறேன். திரு. ஷங்கர் அவர்களே இனி இயக்குவதை விட்டுவிடுங்கள், தயாரிப்பதையும்தான்! நீங்கள் நிறைய சம்பாதித்து சாதித்துவிட்டீர்கள். தமிழில் நல்ல படங்கள் வரவேண்டியிருக்கிறது. அவற்றுக்கு வழிவிடுங்கள்!