நம்மைச் சுற்றி 1000 போபால்கள்!

“நள்ளிரவில் கனவுகளோடு தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, லட்சக்கணக்கானவர்களை முடமாக்கிய போபால் விபத்து நடந்து 22 வருடங்கள் ஓடிவிட்டன. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியோ முறையான நிவாரணங்களோ கிடைக்கவில்லை. இத்தனை பேரை காவு வாங்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர்கள் இன்னும் சொகுசு வாழ்க்கையில் தான் திளைக்கிறார்கள். உலகம் அறிந்து நடந்த இவ்வளவு பெரிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லையே?  இன்னும் நம்மைச் சுற்றி 1000 போபால்கள் இருக்கின்றன!” என்கிறார் சென்னையில் இயங்கும் சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா நாராயணன்.

”கடலூர் மாவட்டத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் பெருமளவில் காற்று மாசு நிறைந்து இருக்கிறது. அழுகிய முட்டையின் நாற்றம், ரப்பர் எரிக்கும் போது வரும் மணம், அழுகிய உடம்பின் நாற்றம், நெயில் பாலிஷ் வாசனை என மாசுபட்ட காற்றிலிருந்து ஏராளமான சாம்பிள்கள் எடுத்திருக்கிறோம். அத்தனையும் சிப்காட்டிலுள்ள ஒவ்வொரு கம்பெனியும் வெளிவிடும் மாசுக்கள்.

இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து சளி, ஆஸ்துமா என சுவாசம் தொடர்பான பாதிப்புகள் அதிகம். இதில் இன்னொரு அவலம்…சிப்காட் பகுதியில் வாழும் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது சவாலான விஷயமாகிவிட்டது. பெண்கள் வயதுக்கு வருவது தள்ளிப்போவது முதல், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு, கருச்சிதைவு, குழந்தையின்மை என்று அவர்களின் வாழ்க்கையில் கோர விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கின்றன.

இந்தப் பகுதியின் ஒவ்வொரு அணுவிலும் கலந்துவிட்ட விஷ வேதிப் பொருட்கள் சிப்காட்டில் மட்டுமல்ல, மேட்டூரில் உள்ள சன்மார் ஆலை, சென்னைக்கு அருகில் அங்கீகரிக்கப்படாத குப்பை எரிக்கும் இடமாக மாறிக் கொண்டிருக்கும் கொடுங்கையூர், கேரளாவில் உள்ள காசர்கோடு எண்டோசல்பான் ஆலை என்று ஆபத்தை அடுத்த தலைமுறைக்கு விதைத்துக் கொண்டிருக்கும் இவற்றின் ஹிட் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கிறது.

சென்னை கொடுங்கையூரில் குப்பைகளை எரிப்பதால் அருகில் வசிக்கும் 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. சன்மார் ஆலை வெளியிடும் ரசாயனத்தால் மேட்டூரைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலத்தடி நீரின் நிறமே மாறிவிட்டது. அந்தப் பகுதிகளில் மக்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தும் புதிய பாத்திரங்கள் ஒரு வாரத்திற்குள் பழுப்பு நிறத்துக்கு வந்துவிடும். இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுகளுடனோ, மூளை வளர்ச்சி அற்றவர்களாகவோ பிறக்கிறார்கள். இதைத்தான் அந்தந்த பகுதியில் வசிக்கும் தன்னார்வம் மிக்க புகைப்படக் கலைஞர்களை வைத்து பதிவு செய்திருக்கிறோம்.

இந்த இடங்களில் எந்த வகையில் பாதிப்பு இருக்கிறது என்பதை ஆவணமாக அரசுக்கு கொடுக்கப் போகிறோம். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடவும் தயாராக இருக்கிறோம்” என்கிறார் ஸ்வேதா.

சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவினர் ‘1000 போபால்கள்’ என்ற பெயரில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியே வரும் கழிவுகள் எந்த அளவு மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்பதை புகைப்படமாக்கி காட்சியமைத்திருந்த போது ‘குங்குமம்’ இதழில் எழுதியது.

மனிதனோடு தோன்றிய உயிரினம்…

அழிந்துவரும் இந்திய வனஉயரினங்களின் பட்டியலில் வரையாடும் ஒன்று. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், இமயமலை தொடர்களில் மட்டுமே வரையாடுகள் வாழுகின்றன. இந்த இரண்டு பகுதிகள்தான் வரையாடுகள் வாழத் தேவையான சூழல் உள்ளதாக காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வரையாடுகள் குறித்து ஆராய்ச்சிகள்கூட குறைவாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில பத்தாண்டுகளில் இந்த உயிரினத்தை வனவிலங்கு காட்சியகங்களில்கூட பார்க்க முடியாமல் போகலாம்.

சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தன்னுடைய எழுத்தில் வரையாடுகள் குறித்து பதிவு செய்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பிந்து ராகவன் என்பவர் வரையாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் எழுதியதன் அடிப்படையில், பிந்து ராகவனை சந்தித்தேன். கால்நடை மருத்துவரான பிந்து ராகவன். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்சமயம் கணவருடன் சென்னையில் வசிக்கிறார். கணவரும் கால்நடை மருத்துவர், பாம்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறார். இருவரும் டேராடூனில் இருக்கும் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்தவர்கள். படிக்கிற காலத்தில் லடாக் வரையாடு குறித்து சிறப்பு ஆராய்ச்சி செய்தவர் பிந்து. பிறகு, அதையே தொடர்ந்து லடாக் வரையாடுகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் என்கிற தலைப்பில் ஆராய்ந்து வருகிறார்.
“மனிதன் தோன்றிய காலத்தில் வரையாடுகளும் தோன்றிவிட்டன என்பதுதான் இவற்றை ஆராய காரணம். உயரமான பனிமலைச் சிகரங்களைக் கொண்டது லடாக். வரையாடுகள் இத்தகைய சூழலில்தான் வாழும். பாறைகளுக்கு நடுவே முளைத்திருக்கும் தாவரங்களை உண்டு வாழக்கூடியவை இவை. ஆடுகளைப் போல இருக்கும் இதன் உருவமும் செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்கு ஏற்ப உடல்வாகும் கொண்டது. பாறை இடுக்குகளில் வசிக்கும் இவை, பனிக்காலங்களில் மலை அடிவாரங்களுக்கு வரும். மலை அடிவாரங்களில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுடன் இவை சேர்ந்து கொள்ளும். இப்படி சேரும்போது வீட்டு விலங்குகளுக்கு வரக்கூடிய தொற்றுநோய்கள், வரையாடுகளுக்கும் பரவும். தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்பட்டு வேகமாக அழிந்துவரும் வரையாடுகள், தொற்றுநோய்க்கு ஆளாகியும் அழிந்துவருகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியில் இருக்கிறேன்” என்கிற பிந்து, நூறு வருடங்களுக்கு முன் வரையாடுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்ததாகவும் தற்போது 2 ஆயிரம் வரையாடுகள் தான் இருக்கின்றன என்கிறார். இவை மலை அடிவாரத்திற்கு வரும் பனிக்காலங்கள்தான் ஆராய்ச்சி செய்வதற்கு உகந்த காலம் என்கிறார் இவர்.
“வரையாடுகள் வேகமாக ஓடக்கூடியவை. இவற்றை பின்தொடர்ந்து போகும்போது சில சமயம், இருட்டிவிடும். தங்கியிருக்கிற இடத்துக்குச் செல்ல முடியாது. பக்கத்தில் மக்கள் வசிக்கிற இடங்களைத் தேடிப் போவேன். விருந்தாளி போல அந்த மக்கள் என்னை உபசரிப்பார்கள். பொதுவாக இந்த பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் நான் ஒரு போதும் அப்படிப்பட்டவர்களை சந்தித்ததில்லை” என்கிறார் பிந்து.
தன் கணவர் ராகவன், மற்றும் சில நண்பர்களுடன் இணைந்து நிழிகிறிணி என்கிற அமைப்பை நடத்திவருகிறார். பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இந்த அமைப்பு.

நன்றி : தினகரன் வசந்தம்
13.5.2007

”கச்சத்தீவை மீட்போம் என்று கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது!”

  

இதுவரைக்கும் வந்த தமிழ் நாவல்களில் மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவலுக்கு தனித்த இடம் உண்டு. மீனவ சமூகத்தின் சிக்கல்கள், அவலங்களை அவர்களுடைய மொழியிலேயே வெளிப்படுத்தியது இந்நாவலின் தனித்துவத்துக்கு காரணம் என்பது விமர்சகர்களின் கருத்து. கொற்கை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தின் பின்னணியில் அடுத்த நாவலை தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். புத்தக காட்சியை ஒட்டி வெளியான கொற்கை நாவல்(காலச்சுவடு பதிப்பக வெளியீடு) வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கொற்கையை முன்வைத்து ஜோ டி குருஸுடன் இந்த நேர்காணல்..

கொற்கை நாவல் எதைப்பற்றி பேசுகிறது?

”ஆழிசூழ் உலகு நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது. முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.”

மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

”சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”

எழுதுவதைத் தாண்டி மீனவர்களின் இன்னல்களை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறீர்கள். குறிப்பாக இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்கள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்ததன் பின்னணி என்ன?

”காலம்காலமாக தமிழக மீனவர்கள், வடமேற்கு இலங்கை நோக்கி மீன் பிடிக்கப்போவதுதான் வழக்கம். 1983ல் இலங்கை யாழ்பாணத்தில் நூலகம் எரிப்பு என்கிற நிகழ்வுக்குப்பிறகு, விடுதலைப்புலிகளின் எழுச்சி தொடங்கியபோதுதான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் தாக்குதல் அரங்கேற்றம் பெற்றது. தமிழக மீனவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் கிடைப்பதாக கருதியே இலங்கை அரசு இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்தது. இன்று ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழப் போராட்டத்தின் பின்னணியில் தென் தமிழக மீனவர்களின் இரத்தமும் கலந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழினம் என்கிற காரணம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இன்னும் ஏராளமான கோர முகங்கள் உண்டு. மீனவர்கள் பிடித்த மீன்கள் பிடிங்கிக் கொண்டு வளையை அறுத்துவிடுவதிலிருந்து காதில் இருக்கிற கடுக்கணை பிடிங்கிக் கொள்வது வரையான கடற்கொள்ளையர்களைப் போன்ற செயல்களையும் அவர்கள் செய்கிறார்கள். பச்சை மீனை திண்ணச் சொல்வது, ஐஸ்கட்டியில் நிர்வாணமாக படுக்கவைப்பது, கடலில் தள்ளிவிட்டு இரண்டு, மூன்று மணி நேரம் நீந்தவிட்டு களைத்துப்போகும்போது ஹெலிகாப்டரிலிருந்து சுட்டுப் பழகுவது, இதையெல்லாவற்றையும்விட அப்பன்-மகன் என்று தெரிந்த பின்னும் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது கொடுமையின் உச்சம்! கச்சத்தீவை மீட்போம் என்று நாட்டில் கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது.

மீனவர்கள் நாதியில்லாதவர், அவர்களுக்கென்று அமைப்புகள் கிடையாது, ஒருங்கிணைந்த குரல் கிடையாது. இதுதான் காரணமேயில்லாமல் இத்தனை பேரின் இறப்புக்கும் பல இழப்புகளுக்கும் காரணம். நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லைகளில் வாழ்கிறவர்கள் தானே என்கிற விட்டேத்தி மனோபாவம். இருபது வருடங்களுக்கும் மேலாக மீனவர்களிடையே பணியாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் தொண்டு நிறுவனங்களிடம்கூட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கான எந்தவித திட்டமும் இல்லை. குறைகளை கணக்கெடுத்திருப்பதுதான் தொண்டு நிறுவனங்கள் செய்திருக்கும் மிகப்பெரிய சேவை!

இதெல்லாம்தான் ‘விடியாத பொழுதுகள்’ என்ற முதல் ஆவணப்படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது. அவலங்களை மட்டும் சொன்னால் எனக்கும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனாலேயே பிழைப்புக்காக எல்லைத் தாண்ட நேரிடும் மீனவர்களுக்கு மாற்று வழியைச் சொல்லும் நோக்கில் விடியலை நோக்கி என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மூக்கையூர் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்வு. மூக்கையூர் பகுதியில் வீணாகிக்கொண்டிருக்கும் ஆழ் கடல் வளத்தை பயன்படுத்த வாய்ப்பாகவும் இந்தத் தீர்வு அமையும். பரவலாக கவனம் பெற்ற இந்த ஆவணப்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது கொடுத்திருக்கிறது. விருது பெறுவது, கவனம் பெறுவது என்பதைவிட என் மக்களின் துயரம் அறியப்படவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மீனவ சமூகத்திலிருந்து வந்த எனக்கு, என் சமூகத்தின் வலி நன்றாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே அலறுகிறார்கள் எம் மக்கள். கைநிறைய சம்பளமும் வசதி குறைவில்லாத வாழ்க்கையும் எனக்கு நிறைவை தந்துவிடாது. எம் மக்களின் வாழ்வுக்காக எதையாவது நான் செய்துகொண்டே இருப்பேன். ஏனெனில் மூச்சு விடுவது மட்டுமே வாழ்க்கையில்லை!”

”இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மக்கள் ஒன்று சேர வேண்டும்!”

ரோமுலஸ்விட்டேகர்இந்தியாவின் ஸ்டீவ் இர்வின். ஆனால், இருவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இவர், ஸ்டீவ் இர்வினைப் போல முதலைகளையும் பாம்புகளையும் வைத்து வேடிக்கை காட்டும் சாகசக்காரர் அல்ல. அவற்றைக் காப்பாற்ற வந்த காட்ஃபாதர்! சென்னை, கிண்டி பாம்புப்பண்ணையும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப்பண்ணையும்  இந்த அமெரிக்கர் உருவாக்கியவை. கிட்டத்தட்ட அழிந்தேவிட்ட சில அரியவகை முதலைகளும் பாம்புகளும் உயிரோடு இருப்பது இவருடைய பண்ணைகளில்தான். ஆக்ரோஷமான முதலைகளிடம் அத்தனை பரிவுகாட்டும் இவருக்கு மனிதர்கள் மீதுதான் கொஞ்சம் கோபம்!

”முதலைகள் பற்றி உங்கள் தாத்தா பாட்டியிடம் கேட்டுப்பாருங்கள். அவ்வளவு கதை சொல்வார்கள். ஆனால், நாமோ மிருகக்காட்சிச் சாலைகளில்தான் முதலைகளைப்பார்க்கிறோம். இன்று ஆறுகளில் முதலைகளே இல்லை என்று சொல்லலாம். மனிதனுக்கும் முதலைகளுக்கும் நடந்தயார்பெரியவன்?’ போட்டியில் முதலைகள் பாவம்,  தோற்றுப் போய்விட்டன. மீன்களையே சாப்பிடும் மீன்கள் இருக்கின்றன. அந்த மீன்களை மட்டும்தான் முதலைகள் சாப்பிடும். முதலைகள் அழிக்கப்பட்டதால் மீன்களைச் சாப்பிடுகிற மீன்கள் அதிகமாகிவிட்டன.எனவே, மற்ற மீன் இனங்கள் குறைந்துவிட்டன. இயற்கையின் சங்கிலித்தொடரில் ஒரு கண்ணியை உருவினாலும் பாதிப்பு எல்லோருக்கும்தான்!

வட இந்திய ஆறுகளில் மட்டுமேவாழ்ந்தகரியால்இனமுதலைகள்அவற்றின் தோலுக்காக மிச்சசொச்சம் இல்லாமல் வேட்டையாடப்பட்டன. தென்னிந்தியாவில் முதலைகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவை பயங்கரமானவை என்ற காரணத்துக்காகவே அழிக்கப்பட்டுவிட்டன. ‘பயங்கரமானதுஎன்று வர்ணிக்கப்படும் எந்தவொரு உயிரினமும் உண்மையில் பயங்கரமானது அல்ல. தன்னைத் தற்காத்துக்கொள்ளவே தாக்குகின்றன. முதலை அற்புதமான குணம் கொண்டது. மனிதர்களைப்போல் தாய்மை குணமுள்ள உயிரினம் அது. முட்டையிடும் சமயத்தில் அதை நெருங்கவே முடியாது. தன் முட்டையை யாராவது களவாடுகிறார்கள் என்று தெரிந்துவிட்டால், எவ்வளவு வேகமாகப்போனாலும் துரத்தி வந்து பிடித்துவிடும்.

மீன்களின் பெருக்கத்துக்குக் காரணமாக இருப்பதால் முதலைகள், மீனவர்களின் நண்பன். அதுபோல பாம்புகள், விவசாயிகளுக்கு நண்பன். விளைவதில் சரிபாதி விளைபொருள்களை வீணாக்கும் அத்தனை எலிகளையும் நம்மால் ஒழிக்கமுடியாது. வயல்வெளி எலிகளை ஒழிக்க அரசாங்கம் எத்தனையோ கோடிகளைக் கொட்டிக்கொடுக்கிறது. ஆனால், பாம்புகள் சர்வசாதாரணமாக ஆயிரக்கணக்கான எலிகளை ஒழித்துவிடும். நாம் அதனைச் சீண்டாதவரை அதுநம்மை எந்தவிதத்திலும் துன்புறுத்தாது. ஆனால், அந்தப் பண்பு நம்மிடம் இல்லையே!

பாம்புகளிலேயே மிக மிக சுவாரஸ்யமானது ராஜநாகம். 13 அடிஅழகானராட்சசன்! பாம்புகளிலேயே ராஜநாகம்மட்டும்தான் கூடுகட்டி முட்டைகளை வைக்கும். மலைக்காடுகளில்தான் வசிக்கும். மேற்குவங்காளத்தில் இருக்கும் சுந்தரவனக்காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் என இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே ராஜநாகங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலைகளில் வாழும் ராஜநாகங்கள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.” ”இதுவரை எந்தப் பாம்பும் உங்களைக் கடித்ததில்லையாஎன்றுகேட்டால், தன் வலது ஆள்காட்டி விரலைத் தடவிக்கொண்டு சிரிக்கிறார். ”இருபது வயதில் அமெரிக்க பாலைவனத்தில் வாழக்கூடிய பற்றிய ஆராய்ச்சிக்காகப் போயிருந்தேன். கொஞ்சம் அலட்சியமாக ஒருபாம்பைப்பிடித்துவிட்டேன். அதுதன்னை தற்காத்துக் கொள்ள என் வலதுகை ஆள்காட்டிவிரலைக் கடித்து விட்டது. அந்தவிரலில்நரம்புகள் துண்டிக்கப்பட்டு, உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்புமேல தப்பு இல்லை. தப்பு என்மேல் தான்!” என்பவர் தொடர்ந்து… ”நான் பிறந்தது நியூயார்க். ஏழுவயதில்அம்மாவோடு இந்தியா வந்தேன். பாம்புபிடிக்க ஆரம்பித்தது நான்கு வயதில். என் ஆர்வத்தைப்புரிந்து கொண்டு பாம்புகள் பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார் அம்மா. பாம்பு, முதலைகளைத்தேடி இந்தியா முழுக்கத் திரிந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் சூழல் எனக் கேற்றதுபோலஇருந்ததால், இங்கேயே தங்கிவிட்டேன். இயற்கை சூழலைக்காப்பாற்றுவது குறித்து எந்த அக்கறையும் நம்மில் பலருக்குக் கிடையாது. முக்கால் பங்குகாடுகள் அழிந்துபோய், தொழிற்சாலைகளாகவும் பொறியியல் கல்லூரிகளாகவும் நிற்கின்றன. சுதந்திரப்போராட்டத்துக்கு இந்தியமக்கள் ஒன்று சேர்ந்ததுபோல, இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மக்கள் ஒன்று சேரவேண்டும். இயற்கையைச் சமநிலைப்படுத்துகிற உயிரினங்களைக் காப்பாற்றினால் போதும்உலகம் சூடாவது பற்றியும் கவலைப்படவேண்டாம், பசுமைப்புரட்சி செய்ய மண்டையை உடைத்துக் கொள்ளவும் வேண்டாம்!” என்கிறார் ரோமுலஸ், ஆதங்கமும் வருத்தமும் தோய்ந்தகுரலில்.

வெளிர் சிவப்பு ஓவியம்!

அண்ணாமலைச்சேரி…! சென்னை பழவேற்காடு சாலையோரம், கடல் நீர் கால் தழுவும் கழிமுகப் பகுதி. காடு, நிலம், கடல், கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்துகிடக்கிறது இயற்கை. குட்டிக் குட்டி மணல் திட்டுகள் நிறைந்த நீர்ப்பரப்பு இதன் சிறப்பு. இதுதான் பூநாரைகளைக் கூட்டம்கூட்டமாக வசீகரித்து வரவழைக்கிறது. அமாவாசை, பௌர்ணமி நேரங்கள் தவிர்த்து கழிமுகப் பகுதிக்குக் கடல் நீர் குறைவாக வரும் நேரங்களில் பூநாரைகள் நூற்றுக்கணக்கில் இரை தேடுவதைப் பார்க்கலாம்.

வெள்ளை கேன்வாஸில் வெளிர் சிவப்பு நிறத்தில் வரைந்த ஓவியத்தில், திருஷ்டிக்காகக் கறுப்பு மை இட்டது போல அத்தனை அழகாக இருக்கிறது ஃபிளெமிங்கோ எனப்படும் பூநாரை!

தமிழகத்துக்கு ஏப்ரல் மாத விருந்தாளிகள் இந்தப் பூநாரைகள். ”இங்கே வரக்கூடிய பறவைகளிலேயே ரொம்ப அழகானது பூநாரைகள்தான். மொத்தம் ஐந்து வகையான இனங்கள் இருக்கு. நம்ம ஊருக்கு கிரேட்டர், லெஸ்ஸர்னு இரண்டு இனங்கள் வரும்.

பரிணாம வளர்ச்சியில் நாரைக்கும் வாத்துக்கும் இடைப்பட்ட இனம் இது. நாலரை அடி வரைக்கும் வளரும். ஒரே இரவில் 600 கி.மீ தூரம் பயணப்படும். இன்னொரு சுவாரஸ்யமான சங்கதிமனிதர்களுக்கு முன்பே பூமியில பிறந்தவை பூநாரைகள். அதாவது, 50 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில இருப்பவை!” என பூநாரைப் பற்றிய தகவல்களை அடுக்கிக்கொண்டே போகிறார் திருநாரணன். சூழலியல் ஆர்வலரான இவர், சென்னைக்கு வருகை தரும் பறவைகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்.பெரும்பாலும் உப்புநீர் உள்ள பகுதிகளில்தான் பூநாரைகள் வசிக்கும். குஜராத்திலிருந்து குளிர் காலத்தில் கிளம்பி வரும் பறவைகள், வெயில் காலம் முடியும் நேரத்தில் முட்டை வைப்பதற்காக மீண்டும் குஜராத் போகும். களிமண்ணில் உருளையான கூடு செய்து, அதில்தான் முட்டை வைக்கும். அதிகபட்சம் ரெண்டு முட்டைகள் வைக்கும். குஞ்சு பொரித்து, வளர்ந்து, பறக்க ஆரம்பிக்கிற நேரத்தில் அங்கேயிருந்து கிளம்பிடும். தமிழ்நாட்டில் பழவேற்காடு, கழிவெளி, கோடியக்கரை, சாத்தான்குளம், செய்யூர் போன்ற பகுதிகளில் பூநாரைகளைப் பார்க்கலாம்.பறக்கத் துவங்கும் காலத்தில் வெள்ளையும் கறுப்புமாக இருக்கும். வளர வளரத்தான் வெளிர் சிவப்பு நிறமாக மாறும். ‘பீடா கரோட்டின்உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான் இதன் வெளிர் சிவப்பு நிறத்துக்குக் காரணம். பாசி, இறாலை விரும்பிச் சாப்பிடும். குச்சிக் கால்களுடன் ஆழம் குறைவான இடத்தில் மணிக்கணக்காக நின்று இரை தேடும். எப்போதும் கூட்டமாகத்தான் இருக்கும். ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு வரிசையாக அத்தனை அழகாக நடந்து போகும். இவை கூட்டமாகப் பறப்பதைப் பார்த்தால், வானத்தில் கோலம் போட்டது மாதிரியே இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு வரை லட்சக்கணக்கில் வந்து கொண்டு இருந்த பூநாரைகள் இப் போது பத்தாயிரமாகக் குறைந்து விட்டதாக சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் விற்பனைக்காக இறால் பிடிப்பது அதிகரித்து வருகிறது. அளவுக்கு மீறி பூநாரைகளின் உணவில் நாம் கை வைக்கிறோம். பகிர்ந்து உண்ணுதல் வேண்டும் என்று சொல்கிற நாமே இப்படிச் செய்தால் என்ன நியாயம்?” என்கிறார் திரு நாரணன்.புலிகள் இருக்கும் காடுதான் நல்ல வளமான காட்டின் அடையாளம் என்று சொல்வதைப் போல, பூநாரைகள் வசிக்கும் இடத்தை வளமான கழிமுகப்பகுதிக்கு அடையாளமாகச் சொல்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள். பூநாரைகள் வசிக்கும் இடத்தில் மற்ற பறவையினங்களும் அதிகமாக இருக்குமாம். அண்ணாமலைச்சேரி பகுதியில் இருநூறுக்கும் அதிகமான பறவையினங்கள் இருப்பதாகப் பதிவு செய்திருக்கிறது மும்பை இயற்கை வரலாறு அறக்கட்டளை. நீர்க்காகம், கூழைக்கடா, நத்தைகொத்தி நாரை, கடல் ஆலா, அரிவாள் மூக்கன், உப்பு உல்லான், நாரை, கொக்கு இனங்கள் என நிறைய வகைகளை இங்கே பார்க்க முடிகிறது. பழவேற்காட்டிலிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது அண்ணாமலைச்சேரி. அங்கிருந்து படகுப் போக்குவரத்து வசதி உள்ளது. சில இடங்களில் மட்டுமே ஆழம் அதிகமாக இருக்கும். ஆழம் குறைவான இடங்களில் படகிலிருந்து இறங்கி, பறவைகள் உள்ள இடத்தின் அருகில் சென்றும் பார்க்கலாம். சித்திரை வெயிலைத் தவிர்க்க அதி காலையிலேயே விசிட் அடிப்பது நல்லது.

பறவைகளே! எங்கு இருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குஇங்கே இருக்கிறோம்!’ என்று கோரஸாகப் பதில் சொல்கின்றன இந்தப் பறவைகள். அண்ணாமலைச்சேரிக்கு ஒரு தடவைபறந்துதான் பாருங்களேன்!