இந்திய சுதந்திரத்தின் போது இணைக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு தரப்பட்டிருந்த சிறந்த அந்தஸ்த்தை மோடி அரசாங்கம் நீக்கி நாற்பது நாட்களாகிவிட்டன. இந்திய அரசியலமைப்பு பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் மற்ற இந்திய மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பை காஷ்மீருக்கு அளித்திருந்தன. காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்குள் இருந்த தனிநாடாகவே செயல்பட்டுவந்தது. காஷ்மீர் மக்களின் விருப்பமும் இந்திய அரசின் விருப்பமும் வேறு வேறாக இருந்ததால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னும் அம்மாநில மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்தது.
பிரச்சினையின் மையப்புள்ளி இந்திய அரசு, காஷ்மீர் முழுவதையும் தனதாகக் கருதியதே. ஆனால், அம்மக்களின் விருப்பம் அது இல்லை. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான பட்டேலிடம் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்தார். 1950-ஆம் ஆண்டு மவுண்ட் பேட்டனின் கூற்றை நினைவு படுத்தி கடிதம் எழுதிய பட்டேல், அவர் சொன்னது எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிகழும் சம்பவங்கள் எடுத்துரைப்பதாக கூறினார்.
வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதுபோல், 370வது பிரிவை நீக்கி காஷ்மீரை இந்திய அரசு தனதாக்கிக் கொண்ட பிறகு பிரச்சினை ஓய்ந்தபாடில்லை; ஓயப்போவதும் இல்லை.
பிரிவு 370வது நீக்கப்பட்ட பின் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் சொல்லும் பாதுகாப்பு எப்படிப்பட்டது? கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரின் நான்கு வீடுகளுக்கு ஒரு வீரர் என்ற அளவில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், அரசியல்வாதிகள், கிளர்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பலர் வீட்டுச் சிறையிலும் விடுதிகளிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துக்கும் மேலாக ‘கல்லெறிகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதின்பருவ, பள்ளி மாணவர்களை பாதுகாப்புப் படை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அதுவும் பொது அமைதி பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் கைது செய்கிறது. விசாரணை இல்லாமலேயே இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களை ஆறு மாதம் வரையில் சிறையில் வைத்திருக்க முடியும்.
இப்படி கைதாகும் சிறுவர்களில் பலர், தாங்கள் செய்யாத குற்றத்துக்காகவே கைதாகிறார்கள். ஸ்ரீநகரின் மத்திய சிறைச்சாலை முன்பு காத்திருக்கும் குடும்பத்தினர், தங்கள் மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை அல்லா அறிவார் என கதறிக்கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு ரோந்துகளின்போது கைதான பலரைப் பற்றிய தகவலைக்கூட அளிக்க மறுக்கிறது போலீசு. ‘முன்பு கல்லெறிதலில் ஈடுபட்டதற்காக முன்னெச்சரிக்கையுடன் கைது செய்யப்பட்டிருக்கும் சிறுவர்கள், வெளி மாநில சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள்’ பகிரங்கமாக அறிவிக்கிறது காவல்துறை.
கைது, ஆறு மாத காலை விசாரணை இல்லாத கட்டாய சிறை ஆகியவை மட்டும்தானா? பிபிசி, வாஷிங்டன் போஸ்ட் போன்ற சர்வதே ஊடகங்கள் இந்திய படைகள் காஷ்மீரிகளை கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்குவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுவருகின்றன.
“அவர்கள் ஓயாமல் மூன்று மணி நேரம் என் பின்புறத்தின் தாக்கினார்கள்; மின்சார அதிர்ச்சி கொடுத்தார்கள். எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சினோம். அப்போதும் அவர்கள் விடவில்லை. அழுக்கையும், சாக்கடை நீரையும் குடிக்க வைத்தார்கள்” என காஷ்மீரைச் சேர்ந்த பஷீர் அகமது கூறியதாக செய்தி நிறுவனமான ஏபி பதிவு செய்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அவர்கள் சேர்ந்துவிட்டதாக சந்தேகப்பட்டு அவர்களை இப்படி சித்ரவதை செய்துள்ளது பாதுகாப்புப் படை. இதேபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்கள் சித்ரவதைக்குள்ளானதை கூறியுள்ளனர்.
.
அதுபோல, கடுமையான பாதுகாப்பையும் மீறி தங்கள் உரிமை பறிப்பை எதிர்த்து வெறும் முழக்கம் எழுப்பி போராடும் மக்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குவதையும் பாதுகாப்புப் படை செய்துவருகிறது. இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட காரணத்துக்காக அரசியல் செயல்பாட்டாளர் ஷெஹ்லா ரசீது மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் சென்ற அவர் கைது நடவடிக்கைக்கு தடை வாங்கியிருக்கிறார்.
தகவல் தொடர்புகள் ஒரு மாதமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே மீண்டும் இணைக்கப்பட்ட பிறகு, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் காஷ்மீர் குறித்து எழுதுவதற்கு தடை செய்துள்ளது அரசாங்கம்.
பிரதமர் தனது சுதந்திர தின உரையில் களிபொங்க கூறிய ‘காஷ்மீரிகளின் பாதுகாப்பு’ மேற்கண்ட நிலையிலேயே உள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் ஒருபடி மேலே போய், காஷ்மீரிகள் மத்திய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக கூறினார். காஷ்மீரிகள் முடிவை வரவேற்கிறார்கள் எனில், ஏன் இத்தனை பாதுகாப்பு? இத்தனை சித்ரவதைகள்? கைதுகள்? இந்திய அரசுக்கு ஆதரவாக இதுநாள்வரை செயல்பட்ட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை? ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் முடக்கப்படுவதும் ஏன்?
‘தேசபக்தி’யின் பெயரால் இந்தக் கேள்விகளுக்கான விடையை அளிக்க மறுக்கிறது அரசாங்கம். ‘நாடு பிடிக்கும் போட்டியினென’ வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தைப் பற்றிய கவலை கொள்ளாமல் பொது சமூகம் ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிக்கிறது. பக்கத்துவீட்டுக்காரரின் விருப்பம் இல்லாமல் அடாவடியாக அவருடைய வீட்டை பிடிங்கிக் கொள்வது போன்றது ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிப்பது.
காஷ்மீரில் வசிக்கும் பெரும்பான்மை முசுலீம் மக்களால் தங்களுடைய பண்டிகையைக் கூட கொண்டாட முடியவில்லை. பக்ரீத்தில் தொடங்கிய அதிர்ச்சி, மிலாது நபி வரை தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்பு வழிபடுதலை அடிப்பை உரிமை என்கிறது. அதையும்கூட பறித்துக்கொண்டு தொழுகைக்காக கூடுவதையும் குற்றம் என்கிறது மத்திய அரசாங்கத்தின் கெடுபிடி.
இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது உறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பு உரிமையை மீறி எதேச்சதிகாரமாக நடந்துகொண்டிருக்கும் மத்திய அரசாங்கள் கிட்டத்தட்ட அனைத்து உரிமைகளையும் முடக்கி வைத்துள்ளது. ‘காஷ்மீரிகளுக்கு விடுதலை’ என்ற பெயரில் காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எழுதுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இல்லாத இத்தகைய கடுமையான முடக்கம் இன்னும் 20 -25 நாட்களுக்கு தொடரும் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
விஜயகாந்த் படங்களில் வருவதுபோல, காஷ்மீரிகள் தீவிரவாதிகளும் அல்ல, இந்தியர்கள் அவர்களை ஒழிக்க வந்த ஆபத்பாந்தவர்களும் அல்ல. பொதுபுத்தியில் உருவாகியிருக்கும் இத்தகைய கருத்துக்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.
இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய மக்கள் என்ன எதிர்வினை ஆற்றுகிறார்களோ அதைப் பொருத்துதான் அமையும் என பத்திரிகையாளர் ஜோ அதிலே கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அரசியலமைப்பு கொடுத்த உறுதி மீறப்படுகிறது எனில் அங்கே ஜனநாயகமும் சோதனைக்குள்ளாவதாகத்தான் பொருள். காஷ்மீரிகள் போராட்டத்தோடு வாழ்பவர்கள். அவர்கள் ஒடுக்குமுறையை 70 ஆண்டுகாலம் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆழ்ந்த அமைதி நிலவுகிறதென்றால், அங்கே பெருவெடிப்பு காத்திருக்கிறது என்பது மற்றொரு பொருள்.
அனைத்துக்கும் மேலாக, பொது சமூகமாகிய நாம் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படும்போது மவுனம் காத்தால், நமது அடிப்படை உரிமைகளையும் இழந்து குரலற்றவர்களாகிவிடுவோம். பெரும்பான்மைவாதத்துக்கு ஜனநாயக நெறிமுறைகள் மட்டும் வேண்டாதவையல்ல, அடிப்படை உரிமைகளை கேட்கும் குரல்களும் வேண்டாதவைதான்.
தினச்செய்தி (13-09-2019) நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை.