காஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?

இந்திய சுதந்திரத்தின் போது இணைக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு தரப்பட்டிருந்த சிறந்த அந்தஸ்த்தை மோடி அரசாங்கம் நீக்கி நாற்பது நாட்களாகிவிட்டன. இந்திய அரசியலமைப்பு பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் மற்ற இந்திய மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பை காஷ்மீருக்கு அளித்திருந்தன. காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்குள் இருந்த தனிநாடாகவே செயல்பட்டுவந்தது. காஷ்மீர் மக்களின் விருப்பமும் இந்திய அரசின் விருப்பமும் வேறு வேறாக இருந்ததால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னும் அம்மாநில மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்தது.

பிரச்சினையின் மையப்புள்ளி இந்திய அரசு, காஷ்மீர் முழுவதையும் தனதாகக் கருதியதே. ஆனால், அம்மக்களின் விருப்பம் அது இல்லை. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான பட்டேலிடம் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்தார். 1950-ஆம் ஆண்டு மவுண்ட் பேட்டனின் கூற்றை நினைவு படுத்தி கடிதம் எழுதிய பட்டேல், அவர் சொன்னது எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிகழும் சம்பவங்கள் எடுத்துரைப்பதாக கூறினார்.

வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதுபோல், 370வது பிரிவை நீக்கி காஷ்மீரை இந்திய அரசு தனதாக்கிக் கொண்ட பிறகு பிரச்சினை ஓய்ந்தபாடில்லை; ஓயப்போவதும் இல்லை.

பிரிவு 370வது நீக்கப்பட்ட பின் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் சொல்லும் பாதுகாப்பு எப்படிப்பட்டது? கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரின் நான்கு வீடுகளுக்கு ஒரு வீரர் என்ற அளவில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், அரசியல்வாதிகள், கிளர்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பலர் வீட்டுச் சிறையிலும் விடுதிகளிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துக்கும் மேலாக ‘கல்லெறிகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதின்பருவ, பள்ளி மாணவர்களை பாதுகாப்புப் படை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அதுவும் பொது அமைதி பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் கைது செய்கிறது. விசாரணை இல்லாமலேயே இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களை ஆறு மாதம் வரையில் சிறையில் வைத்திருக்க முடியும்.

இப்படி கைதாகும் சிறுவர்களில் பலர், தாங்கள் செய்யாத குற்றத்துக்காகவே கைதாகிறார்கள். ஸ்ரீநகரின் மத்திய சிறைச்சாலை முன்பு காத்திருக்கும் குடும்பத்தினர், தங்கள் மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை அல்லா அறிவார் என கதறிக்கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு ரோந்துகளின்போது கைதான பலரைப் பற்றிய தகவலைக்கூட அளிக்க மறுக்கிறது போலீசு. ‘முன்பு கல்லெறிதலில் ஈடுபட்டதற்காக முன்னெச்சரிக்கையுடன் கைது செய்யப்பட்டிருக்கும் சிறுவர்கள், வெளி மாநில சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள்’ பகிரங்கமாக அறிவிக்கிறது காவல்துறை.

கைது, ஆறு மாத காலை விசாரணை இல்லாத கட்டாய சிறை ஆகியவை மட்டும்தானா? பிபிசி, வாஷிங்டன் போஸ்ட் போன்ற சர்வதே ஊடகங்கள் இந்திய படைகள் காஷ்மீரிகளை கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்குவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுவருகின்றன.

“அவர்கள் ஓயாமல் மூன்று மணி நேரம் என் பின்புறத்தின் தாக்கினார்கள்; மின்சார அதிர்ச்சி கொடுத்தார்கள். எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சினோம். அப்போதும் அவர்கள் விடவில்லை. அழுக்கையும், சாக்கடை நீரையும் குடிக்க வைத்தார்கள்” என காஷ்மீரைச் சேர்ந்த பஷீர் அகமது கூறியதாக செய்தி நிறுவனமான ஏபி பதிவு செய்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அவர்கள் சேர்ந்துவிட்டதாக சந்தேகப்பட்டு அவர்களை இப்படி சித்ரவதை செய்துள்ளது பாதுகாப்புப் படை. இதேபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்கள் சித்ரவதைக்குள்ளானதை கூறியுள்ளனர்.
.
அதுபோல, கடுமையான பாதுகாப்பையும் மீறி தங்கள் உரிமை பறிப்பை எதிர்த்து வெறும் முழக்கம் எழுப்பி போராடும் மக்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குவதையும் பாதுகாப்புப் படை செய்துவருகிறது. இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட காரணத்துக்காக அரசியல் செயல்பாட்டாளர் ஷெஹ்லா ரசீது மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் சென்ற அவர் கைது நடவடிக்கைக்கு தடை வாங்கியிருக்கிறார்.

தகவல் தொடர்புகள் ஒரு மாதமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே மீண்டும் இணைக்கப்பட்ட பிறகு, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் காஷ்மீர் குறித்து எழுதுவதற்கு தடை செய்துள்ளது அரசாங்கம்.

பிரதமர் தனது சுதந்திர தின உரையில் களிபொங்க கூறிய ‘காஷ்மீரிகளின் பாதுகாப்பு’ மேற்கண்ட நிலையிலேயே உள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் ஒருபடி மேலே போய், காஷ்மீரிகள் மத்திய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக கூறினார். காஷ்மீரிகள் முடிவை வரவேற்கிறார்கள் எனில், ஏன் இத்தனை பாதுகாப்பு? இத்தனை சித்ரவதைகள்? கைதுகள்? இந்திய அரசுக்கு ஆதரவாக இதுநாள்வரை செயல்பட்ட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை? ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் முடக்கப்படுவதும் ஏன்?

‘தேசபக்தி’யின் பெயரால் இந்தக் கேள்விகளுக்கான விடையை அளிக்க மறுக்கிறது அரசாங்கம். ‘நாடு பிடிக்கும் போட்டியினென’ வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தைப் பற்றிய கவலை கொள்ளாமல் பொது சமூகம் ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிக்கிறது. பக்கத்துவீட்டுக்காரரின் விருப்பம் இல்லாமல் அடாவடியாக அவருடைய வீட்டை பிடிங்கிக் கொள்வது போன்றது ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிப்பது.

காஷ்மீரில் வசிக்கும் பெரும்பான்மை முசுலீம் மக்களால் தங்களுடைய பண்டிகையைக் கூட கொண்டாட முடியவில்லை. பக்ரீத்தில் தொடங்கிய அதிர்ச்சி, மிலாது நபி வரை தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்பு வழிபடுதலை அடிப்பை உரிமை என்கிறது. அதையும்கூட பறித்துக்கொண்டு தொழுகைக்காக கூடுவதையும் குற்றம் என்கிறது மத்திய அரசாங்கத்தின் கெடுபிடி.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது உறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பு உரிமையை மீறி எதேச்சதிகாரமாக நடந்துகொண்டிருக்கும் மத்திய அரசாங்கள் கிட்டத்தட்ட அனைத்து உரிமைகளையும் முடக்கி வைத்துள்ளது. ‘காஷ்மீரிகளுக்கு விடுதலை’ என்ற பெயரில் காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எழுதுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இல்லாத இத்தகைய கடுமையான முடக்கம் இன்னும் 20 -25 நாட்களுக்கு தொடரும் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

விஜயகாந்த் படங்களில் வருவதுபோல, காஷ்மீரிகள் தீவிரவாதிகளும் அல்ல, இந்தியர்கள் அவர்களை ஒழிக்க வந்த ஆபத்பாந்தவர்களும் அல்ல. பொதுபுத்தியில் உருவாகியிருக்கும் இத்தகைய கருத்துக்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய மக்கள் என்ன எதிர்வினை ஆற்றுகிறார்களோ அதைப் பொருத்துதான் அமையும் என பத்திரிகையாளர் ஜோ அதிலே கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அரசியலமைப்பு கொடுத்த உறுதி மீறப்படுகிறது எனில் அங்கே ஜனநாயகமும் சோதனைக்குள்ளாவதாகத்தான் பொருள். காஷ்மீரிகள் போராட்டத்தோடு வாழ்பவர்கள். அவர்கள் ஒடுக்குமுறையை 70 ஆண்டுகாலம் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆழ்ந்த அமைதி நிலவுகிறதென்றால், அங்கே பெருவெடிப்பு காத்திருக்கிறது என்பது மற்றொரு பொருள்.

அனைத்துக்கும் மேலாக, பொது சமூகமாகிய நாம் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படும்போது மவுனம் காத்தால், நமது அடிப்படை உரிமைகளையும் இழந்து குரலற்றவர்களாகிவிடுவோம். பெரும்பான்மைவாதத்துக்கு ஜனநாயக நெறிமுறைகள் மட்டும் வேண்டாதவையல்ல, அடிப்படை உரிமைகளை கேட்கும் குரல்களும் வேண்டாதவைதான்.

தினச்செய்தி (13-09-2019) நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை.

அம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி!

“உன் காதலின் ஒரு துளி கலந்திருந்தது
எனவே, நான் வாழ்க்கையின் முழு கசப்பையும் குடித்தேன்”

இந்திய இலக்கியத்தில் காதலைக் கொண்டாடிய, எழுதித் தீர்த்த ஒரு பெண் கவி உண்டென்றால் அது அம்ரிதா ப்ரீதமாக மட்டுமே இருக்க முடியும். அவருடைய கவிதைகளில் காதலின் உள்ளொளி இருந்தது. அதனால்தான் காலம்கடந்தும் அவருடைய கவிதைகள் நேற்று படைத்தது போல உள்ளன.

நவீன எழுத்தில் பஞ்சாபி மொழிக்கு மகுடத்தை சூடிச் சென்ற அம்ரிதா, பிரிவினைக்கு முந்தைய பஞ்சாபின் குஜ்ரன்வாலா என்ற ஊரில் பிறந்தவர் . அவருடைய தந்தை கர்தார் சிங் கவிஞர், சீக்கிய மத பிரச்சாரகராகவும் இருந்தவர். தாய் ராஜ் பீபி பள்ளி ஆசிரியராக இருந்தவர். தன்னுடைய 11 வயதில் தாயை பறிகொடுத்த அம்ரிதாவும் அவருடைய தந்தையும் லாகூருக்கு குடிபெயர்ந்தனர்.

‘ரெவின்யூ ஸ்டாம்ப்’ என்ற தன்னுடைய சுயசரிதையில், தாயைக் காப்பாற்றாத கடவுளை இனி வணங்கப் போவதில்லை என ஆன்மீகவாதியான தனது தந்தையுடன் வாக்குவாதம் செய்ததை பதிவு செய்துள்ளார். தன்னுடைய பதின்பருவத்தில் தாய் இருந்திருந்தால் தன்னுடைய நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும் என வருந்துகிற அவர், வீட்டுக்குள் முடக்கப்பட்ட தன்னை வேறு உலகத்தை சிருஷ்டிக்க வைத்தது எழுத்து மட்டுமே என்கிறார்.

தனிமையை எழுதிக் கடக்க முனைந்த அவர், தன்னுடைய 13 வயதில் முதல் கவிதை தொகுப்பான ‘அம்ரித் லெக்ரானை’ வெளியிட்டார். ஆன்மீக பாடல் நடையில் எழுதப்பட்டிருந்தது இது. அடுத்து 16 வயதில் வெளியான ‘தண்டியான் கிரண்’ என்ற கவிதை நூல் மூலம் பஞ்சாபின் முதல் புதுக்கவிதை படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதே வயதில் சிறுவயதில் நிச்சயக்கட்ட ப்ரீதம் சிங்கை மணந்தார். அதன்பின் ‘அம்ரிதா ப்ரீதம்’ என்கிற பெயரில் எழுத ஆரம்பித்தார். கட்டாயத்தின் பேரில் சேர்த்துக்கொண்டாரா அல்லது காதலுடன் சேர்த்துக்கொண்டாரா என்பது தெரியாது. ஆனால், அந்தப் பெயர் நிலைத்து இந்திய இலக்கிய உலகில் இறவாப் புகழ் பெற்றுவிட்டது!

அம்ரிதா ப்ரீதமின் ஆரம்பகால கவிதைகள் காதலால் நிரம்பியவை. அதன்பின் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்துடன் உண்டான அறிமுகத்தால் சமூக பிரச்சினைகள் குறித்து எழுதத் தொடங்கினார். 1943-ஆம் ஆண்டின் வங்க பஞ்சத்தை ஒட்டி எழுதப்பட்ட ‘மக்களின் கோபம்’ என்ற கவிதை தொகுப்பும் பிரபலமானது.

பாகிஸ்தானின் இடதுசாரி இதழ்களில் எழுதிய அம்ரிதா, லாகூரில் இருந்த வனொலி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். லாகூரின் இலக்கிய வட்டத்தோடு தொடர்பில் இருந்தார். ஒரு பெண் கவிதைகள் எழுதுவது, முற்போக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பது இப்போதும்கூட விமர்சனத்துக்குரியதாகவே உள்ளது. அம்ரிதாவின் காலத்திலும் அது இருந்திருக்கிறது.

இலக்கிய வட்டாரத்தில் தன்னைச் சுற்றி புனையப்பட்ட ‘காதல்’கள் குறித்து அம்ரிதா தன்னுடைய சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். லாகூரில் மட்டுமல்ல, டெல்லி வந்த பிறகு இங்கேயும் கூட அத்தகைய ‘கிசுகிசுக்கள்’ தன்னைச் சுற்றி கிளம்பியதையும் அவர் கூறுகிறார்.

பத்து லட்சம் பேருக்கும் மேலாக பலிவாங்கிய இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் நேரடி சாட்சியமாக இருந்தவர்களில் அம்ரிதாவும் ஒருவர். 1948-ஆம் ஆண்டு தன்னுடைய 28 வயதில் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து டேராடூனுக்கு ரயிலில் வந்தபோது புகழ்பெற்ற பஞ்சாபி சூஃபி கவிஞரான வாரீஸ் ஷாவுக்கு எழுதுவதாக பிரிவினையின் துயரங்களை கவிதையாகப் பகிர்ந்துகொண்டார்.

பிரிவினை குறித்த எழுத்தப்பட்ட முதல் கவிதை இது. இதை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங், “அவர் உருவாக்கிய அந்த சில வரிகள் அவரை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இறவாப் புகழ் பெற்றவராக்கிவிட்டன”என எழுதினார்.

1984-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சீக்கிய படுகொலை வழக்கின் சமீபத்திய தீர்ப்பொன்றில் அம்ரிதாவின் இந்தக் கவிதையை மேற்கோள் காட்டியிருந்தார் நீதிபதி…

“வெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்துவிட்டன; எங்கு நோக்கினும் ரத்தத்துளிகள்
நஞ்சு பாய்ந்த தென்றல் காட்டில் உள்ள மூங்கில் குழல்களை பாம்புகளாக மாற்றிவிட்டன
அவைகளின் நஞ்சு, ஒளியும் வண்ணமும் மிக்க பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டன”

வெறுப்பின் அரசியல் அரங்கேறும் இன்றைய இந்திய சூழலுக்குப் பொருந்தும்படியாகவும் உள்ளது இந்தக் கவிதை. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை, சீக்கிய கலவரம் அல்லது வெறுப்பரசியலால் தூண்டப்படும் கும்பல் கொலைகளுக்கும்கூட அம்ரீதாவின் கவிதை பொருந்திப் போகிறது. வன்முறை என்னும் நச்சின் பாதிப்பை உள்ளுணர்ந்து கவிதையாகப் படைத்துவிட்டார் அவர். அது காலம் கடந்து நிற்கிறது.

இந்தியா-பாக் பிரிவினையை ஒட்டி எழுதப்பட்ட ‘பிஞ்சர்’(எலும்புக்கூடு) என்ற நாவலும் பிரபலமானது. பின்னாலில் இது இந்தியில் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது.

டெல்லியில் வந்த பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றினார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். தனது இருபத்தைந்து ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். தனது மணவாழ்க்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருந்தது. இருவரும் பேசி இயல்பாகவே பிரிந்தோம் என்கிறார்.

அவருடைய திருமண வாழ்க்கையில் காதல் இருந்ததில்லை. அந்தக் காதலை அம்ரிதா தேடிக்கொண்டே இருந்தார். சாஹிர் லூதியானி என்ற பிரபல கவிஞருடன் அவருக்கு ஆழமான காதல் இருந்தது.

‘சாஹிர் என்னுடைய சாத்தார்
நான் அவருடைய சிமோன்’ என எழுதினார் அம்ரிதா.

‘உன் மரத்தின் கிளையை நான் கண்டபோது
என் உடைந்த இதயத்தின் பறவை அங்கே நிரந்தமாக தங்கிவிட்டது’ சாஹிர் உடனான காதல் குறித்து எழுதிய கவிதை இது. ஆனால், அது ஒரு ‘கோரப்படாத காதலாக’வே எஞ்சிவிட்டது. சாஹிருக்கு அம்ரிதாவின் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிவில்லை.

‘நான் முழுமனதாக உன்னை காதலிக்கிறேன்
நீங்கள் அந்த அளவுக்கு என்னை காதலிக்கிறீர்களா?’ என வினவினார். அந்தக் காதல் முறிந்தது.

‘இது ஆத்மாவால் உணரப்பட வேண்டிய ஒரு உணர்வு
காதல் காதல் என்ற பெயரிலேயே இருக்கட்டும்
அதற்கொரு பெயர் கொடுத்து மாசாக்கிவிடவேண்டாம்’ அவர் துயரப்படவில்லை. மாறாக, சாஹிருடனான காதலைக் கொண்டாடினார்.

அதன்பின், ஓவியரும் கவிஞருமான இந்திரஜித் இம்ரோசுடன் காதல் கொண்டு, தன்னுடை இறுதி காலம் வரை அவருடை வாழ்ந்தார். டெல்லி வந்த தொடக்க காலத்திலிருந்தே அம்ரிதாவின் நண்பராக இருந்தவர் இம்ரோஸ். இவருக்காக இறுதியாக எழுதப்பட்ட ‘மீண்டும் உன்னை சந்திப்பேன்’ என்ற காதல் கவிதையும் புகழ்பெற்றது.

காதால் நிரம்பிய கவிதை உலகத்தைப் படைத்த அவர், தன்னுடைய சிறுகதைகளில் பெண்களின் அக உலகைப் படைத்தார். ‘காட்டுப் பூ’ அப்படியான ஒரு சிறுகதை. பிற்போக்குத்தனங்களோடு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு நகரத்தில் ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைக்கப்படும் ஒரு பெண் காதல் வயப்படுவதே கதையின் மையக்கரு. ஒரு ஆண் எழுதியிருந்தால் அது ஆபாசமான உறவு மீறல் கதையாகியிருக்கும். அம்ரிதா அதை பூப் போல படைத்திருக்கிறார்.

தன்னுடைய எழுத்தை பெண் எழுத்து என வகைப்படுத்துவதில் அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. சுயசரிதையில் அப்படித்தான் குறிப்பிடுகிறார். நேர்காணல் ஒன்றில், “ஒரு ஆண், பெண்ணின் ஆற்றலை நிராகரிக்கிறார் எனில், அவர் தன்னுடைய உள்ளுணர்வை நிராகரிக்கிறார் என பொருள். ஆணின் வெளிப்புறம் ஆண் தன்மையுடையது உள்புறம் பெண் தன்மையுடையது. இரண்டும் சேர்ந்ததுதான் மனித இனத்தின் அடிப்படை” என விளக்குகிறார் அதை.

2005-ஆம் ஆண்டு தன்னுடைய 86 வயதில் முதுமை காரணமாக காலமானார் அம்ரிதா. அவருடைய எழுத்து இறவாப் புகழோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது.

‘நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்
எப்படி எங்கே என்று
எனக்குத் தெரியாது
ஒருவேளை உன் கற்பனையின்
ஒரு பகுதியாக இருப்பேன்
உன் சித்திரத்திரையில்
மர்மமான கோடாக என்னைப் பரப்பிக்கொண்டு
உன்னை உற்று நோக்கிக்கொண்டிருப்பேன்’ என சொல்லிச் சென்றதுபோல…

அம்ரிதா ப்ரீதம் நூற்றாண்டை ஒட்டி, தி இந்து தமிழின் இணைப்பான பெண் இன்று-வில் வெளியான கட்டுரை.