கொள்கையே இல்லாமல் ஆட்சிக் கனவு!

பதின் பருவத்தில் கல்யாண ஆசை வருவதுபோல, தேர்தல் காலத்தில் பலருக்கு கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடிக்கும் ஆசை வந்துவிடுகிறது. நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த சகாயத்தை அரசியலுக்கு வரவேண்டும் என பலர் இயக்கம் நடத்தினார்கள், பேரணி நடத்தினார்கள். அவர் தெளிந்தவர் என்பதால் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் சகாயத்துக்குக் கிடைத்த முகநூல் இளைஞர்களின் ஆதரவைப் பார்த்து,  தனக்கு முகநூலில் இருக்கும் 30 ஆயிரம் ஃபாலோயர்களைப் பார்த்து நாமும் தலைவனாகிவிடலாம் என களமிறங்கியிருக்கிறார் அப்துல்காலமின் தனி ஆலோசகர் பொன்ராஜ். இவர் ஆரம்பித்திருக்கும் கட்சியின் பெயர் ‘அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி’!

அப்துல்கலாமின் 2020 என்ற கனவை நனவாக்கவும் தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள குப்பை அரசியலை தூய்மையாக்கும் அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் பொன்ராஜ். மேலோட்டமாக பொதுமக்களுக்கு இருக்கும் அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு, இன்னொருவருக்கு வெற்றியை பெற்று தந்துவிடும் என்ற அதே மேலோட்டமான கணிப்பில் பொன்ராஜ் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இந்திய கட்சிகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தோமேயானால் எந்தக் கட்சி வெகுமக்களின் உணர்வுகளுடன் ஒத்திசைந்து இயங்கியிருக்கிறதோ, அந்தக் கட்சிகளே நிலைத்து நின்றிருக்கின்றன. மக்களுக்கான சமூகப் போராட்டங்களை, தேசத்தின் விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்த கட்சிகளே மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. இன்று மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாஜக, அதற்காக 30 ஆண்டுகள் ‘உழைக்க’ வேண்டியிருந்தது.

தமிழகத்தில் திமுக தனக்கான இடத்தைப் பிடிக்க எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்தது; ஆண்டுகள் பலவற்றை விலையாகக் கொடுத்தது. டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மியின் சமீபத்திய உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசில் ஊழல் முறைகேடு ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் தொண்டு நிறுவனம் வைத்து நடத்திக்கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் காந்தியவாதி அன்னா அசாரே, மனித உரிமை செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் போன்றோருடன் இணைந்து மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார். அந்தப் போராட்டத்துக்கு ஊழலால் மனம் வெதும்பியிருந்த மக்கள் ஆதரவு அவரை அடுத்த கட்டம் நோக்கி யோசிக்க வைத்தது.

ஊழலற்ற அரசாங்கம் என்ற கோரிக்கை அவர்களை டெல்லியில் ஆட்சியில் அமர்த்தியது. வெறுமனே இந்த ஒரு கோஷத்தை வைத்து மட்டும் அவர்கள் ஆட்சி அமைக்கவில்லை. தொண்டர்களை ஒருங்கிணைத்து மக்களின் குறைகளை வீடுவீடாகச் சென்று கேட்டார்கள். ஃபேண்டஸியான திட்டங்களை முன்வைக்காமல், எதைச் செய்ய முடியுமோ அதைச் சொன்னார்கள். அவர்களுக்குப் பலன் கிடைத்தது. மேலும் டெல்லி என்கிற சிறிய மாநிலத்தில், யூனியன் பிரதேசத்தில் அவர்களால் மக்களிடம் குறைந்த காலத்தில் (இரண்டாண்டுக்கும் குறைவில்லாத) செல்ல முடிந்தது.

ஆனால், இங்கே தேர்தல் வர இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் கட்சி ஆரம்பிக்கிறோம்; ஜெயிக்கிறோம்; ஆட்சியைப் பிடிக்கிறோம் என்று சொல்வது நல்ல நகைச்சுவை துணுக்காகத்தான் இருக்க முடியும்! தன்னுடைய தனிப்பட்ட பதவியால் கிடைக்கும் ஒரு சிறு பகுதி மக்களின் ஆதரவை வைத்து ஒரு தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாது என இவர்கள் உணர வேண்டும்.

விளம்பர நடிகர்களை நடிக்க வைத்து தெரிந்த வேட்பாளர் நமக்குள் ஒருவர் என்ற முழக்கத்துடன் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று அடிக்கடி தொலைக்காட்சிகளில் வருகிறது. யார் இந்தக் கட்சியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இத்தனை பகட்டான, செலவு பிடிக்கும் விளம்பரம் வருவதன் பின்னணி எதையுமே தெரிவிக்காமல் விளம்பரம் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது. இவர்கள் எந்த அடிப்படையில் மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறார்கள்? வெறுமனே சமூக வலைத்தளங்களில் தற்போதைய அரசியல் கட்சிகளை கேலி செய்து ஸ்டேடஸ் போடும் இளைஞர்கள் எல்லாம் தங்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என்பதுதான் இவர்களுடைய நினைப்பா?

மக்கள், இன்றைய அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் மீது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அந்த வெறுப்பு இவர்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்று நினைத்து இன்று கட்சி, நாளை ஆட்சி என கனவு இவர்கள் கனவு காண்கிறார்கள். உண்மையில் இது போன்ற கொள்கையற்ற ‘திடீர்’ கட்சிகளைப் பார்த்தால் நிச்சயம் மக்களுக்கு இன்னும் வெறுப்பு கூடுமே தவிர, இவர்கள் மேல் எள்ளளவும் நம்பிக்கை வராது.

மக்களுக்கு நல்லது செய்ய விரும்பு நல்ல நோக்கம் உள்ளவர்கள் குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்துவிட முடியாது. அதற்காக உழைக்க வேண்டும்; திராவிட கட்சிகளின் 40 ஆண்டுகால அரசியலை மக்கள் மனதில் இருந்து அகற்றி அந்த இடத்தில் அமர, வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். மற்றபடி, உங்களின் அற்ப ஆசைகளுக்காக மக்களின் வெறுப்புணர்வை கிளறிப் பார்ப்பது, உங்களுக்குத்தான் இழப்பைக் கொடுக்கும்.

தினச்செய்தி நாளிதழில் வெளியானது