அருமை வாசகரே யூமா வாசுகி யாருங்கிறதை நீங்க தெரிஞ்சுக்கத்தான் வேணுமாங்கிறதை நீங்களே தீர்மானிக்கும்படி உங்ககிட்டேயே முடிவை விட்டுடறேன்.
நான் யாருங்கிறது ரொம்பவும் தத்துவார்த்தமான கேள்வி. அதில் பல கேள்விகள் உள்ளடங்கி இருக்கு. நான் கவிஞனா, ஓவியனா, நாவலாசிரியனா, சிறுகதை எழுத்தாளனான்னு எந்த ஸ்தானத்தையும் என்னால கோர முடியாது.
எல்லாமே ஒரு மாபெரும் பேரியக்கம்தான். உதாரணத்துக்கு கவிதைங்கிறது ஒரு மாபெரும் பேரியக்கம். அதுல மிக மிக சிறிய அளவில், எனது சூழ்நிலையில் என்னைப் பாதிக்கிற விஷயங்களை கவிதைகளா வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். மாபெரும் கவிதை பேரியக்கத்துக்கு முன்னாடி நான் கவிஞன்னு சொல்லிக் கொள்வது எனக்கு அயற்சியைக் கொடுக்குது.
நான் பிறந்தது பட்டுக்கோட்டையில. அப்பா, நான் சின்ன வயதா இருக்கும்போதே இறந்துட்டார். தந்தையற்ற பிள்ளையைத் தன் பிள்ளைன்னு நினைச்சு என்னோட படிப்பு, வாழ்க்கை, எதிர்காலம் எல்லாவற்றையும் தன்னோட சிந்தனையா எடுத்துக்கொண்ட மிகப்பெரிய அர்ப்பணிப்பைச் செய்தவங்க என் அக்காவும் அவருடைய கணவரும்தான். அம்மாவோட அண்ணனும் தம்பியும் ஓவியர்கள். அதனால ஓவியத்தின் மீதான் ஆர்வம் இயல்பா வந்தது. கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரில ஓவியம் படிச்சேன். நான் பண்ண விரும்பின வேலையை, எனக்கு தெரிஞ்ச வேலையைச் செய்ய எங்க ஊருல எடம் இல்ல.
சென்னைக்குப் பிழைப்புக்காக வந்தேன். ஆரம்பகாலத்துல சென்னையில வாழறதுக்கு நான் சந்திச்ச லௌகீக பிரச்னைகள் நிறைய. பத்து வருஷத்துல நாலு வாட்டி திரும்பவும் சென்னைக்கு வரக்கூடாதுங்கிற முடிவுல, சென்னைக்கும் ஊருக்குமா போய்ட்டு போய்ட்டு வந்திருக்கேன். சென்னையின் ஆரம்ப கால வாழ்க்கையில் கொடூரமான சம்பவங்கள்னு சொல்லக்கூடிய நிகழ்வுகள், மனநிலையைப் பாதிக்கிற நிகழ்வுகள் நிறைய பார்த்தேன்.
இந்த சம்பவத்தைக் கேளுங்க வாசகரே… நகரத்துக்கு ஒதுக்கு புறமா ஒரு சின்ன அறையில் நான் குடியிருந்தேன். வீட்டு ஓனருக்கு அந்த அறையை இடிச்சிட்டு பெரிய அளவுல அதை மாத்தி அமைக்கணும்னு எண்ணம். அறையைக் காலி பண்ண எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்தாங்க. நான் மூணு நாளா தேடியும் வேற வீடு கிடைக்கல. மூன்றாவது நாள் மாலை வீடு திரும்பி களைப்புல தூங்கிப்போனேன். அப்போ பத்து பேர் என் அறைக்குள் வர்றாங்க. கையில கொண்டுவந்திருந்த கடப்பாரையால நாலா புறமும் இடிக்க ஆரம்பிக்கிறாங்க. இப்படி சென்னையின் கொடூர முகங்களை பலப்பல நேரங்களில் பார்க்க முடிந்தது. இந்த அனுபவங்களை ‘சுதந்திர ஓவியனின் தனியறை குறிப்புகள்’ என்ற நாவலாக எழுதிக்கிட்டு இருக்கேன். அதில் சென்னை நகரத்தோட ஆழத்தை நீங்க தொட்டுப் பார்க்கலாம்.
அகால இரவுகளில் சென்னை நகர வீதிகளில் சுற்றி திரிந்த அனுபவங்கள் அதிகம். சிக்கலிலிருந்து மீளுவேணான்னு நம்பவே முடியாத தருணங்கள், அடுத்த ஒரு மணி நேரம் நமக்கு இருக்குமான்னு தவிச்சதும் அதிகம். முழுசா ஆறு நாட்கள் சாப்பிடாம இருந்திருக்கேன். பசியும் பெண்கள் மீதான பேராவலும் என்னைப் பெரிய அளவுல பாதிச்சிருக்கு.
‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ கவிதை தொகுப்பில் உள்ள வரிகள் அந்த காலக்கட்டத்துல யோசிச்சவைதான். பெண்களைப் பற்றிய நினைப்பில் ஆன்ம பூர்வமான வழிபடுதலும் இறைஞ்சுதலும் இருந்தது. மனிதனுடைய ஆன்மிக விடுதலையைப் பெண்களால்தான் கொடுக்க முடியும்னு தீர்மானமா நம்பினேன். இன்னமும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு. ஆனா கடவுளுக்கு மறுபக்கம் இருப்பதைப் போல, கொடூரங்கள் அற்பங்கள் நிறைஞ்ச பெண்களின் இன்னொரு பக்கத்தையும் சமீபகால அனுபவங்கள்ல தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பெண்கள் குறித்து சமன்பட்ட மனநிலையில் இருக்கேன்.
என்னோட எழுத்து நீர்போக்குல நடந்ததுதான். வசந்தகுமார் பொறுப்பா என்னோட சிறுகதைகளை ‘உயிர்த்திருத்தல்’ தொகுப்பா கொண்டுவந்த பிறகுதான் எழுத்தாளரா செட்டாக முடிஞ்சது. வசந்தகுமார் என்னை ஊருக்கு அனுப்பி, அந்த நேரத்துக்கு தேவையான உதவிகளையும் செய்ததால, ‘ரத்த உறவு’ நாவலை எழுத முடிஞ்சது. இதுல என்னோட பங்கு எதுவும் இல்லை. என் சொல்முறை வலிந்து மேற்கொள்ளப் படறதில்லை. நானும் என் எழுத்தும் ஒண்ணு. லட்சியம், பெரிய இலக்கு எதுவும் என்கிட்ட இல்ல. இலக்கியம் என்பது என் பார்வை. வெளிப்படுத்தறதைச் சிறந்த வகையில வெளிப்படுத்தணும், அவ்வளவுதான்.
‘மஞ்சள் வெயில்’ நாவல், ‘இரவுகளின் நிழற்படம்’ ‘கவிதை தொகுப்பு, சிறுவர்களுக்கான மொழிபெயர்ப்புகளையும் செய்துட்டு வர்றேன். ஒரு கலைஞன் முதலாளிக்கு முன்னாடி கூனிக்குறுகி நிக்கிறது பெரிய சாபக்கேடு. மட்டரகமான சினிமா கலைஞனுக்குக் கிடைக்கிற மரியாதைக்கூட நல்ல கலைஞனுக்குக் கிடைக்கிறதில்லை. பணத் தேவையின் விஸ்வரூபத்தைச் சந்திக்கும் தருணங்கள்ல படைப்பு மனோநிலை கெடாமல் பார்த்துக்கறது பெரிய பிரயத்தனமா இருக்கு… வாசகரே.
அடுத்த நாள் சூரிய உதயத்தைத் தரிசிக்க எனக்கு நிறைய
ஆசை. சில மாபெரும் துரோகங்கள் முன் நிற்கும்போது வாழ்க்கையில நுழையறது ரொம்ப சிரமமா இருக்கு. ஆனாலும் என்னுடைய பாடுகள் எல்லாவற்றையும் என் விருப்பத்திற்கு உரியதாதான் பார்க்கிறேன்.
தமிழினி வசந்தகுமார், பஷீர் அகமது போன்ற சில நண்பர்கள் இல்லேன்னா என் வாழ்க்கை வேறுமாதிரியா அமைந்திருக்கும். கணிசமான அளவுக்கு எனக்கு கடன்படுதல் இருக்கு. இவ்வளவு பேரோட உதவி தேவைப்படற நிலையிலா நாம இருந்தோம்னு எனக்கு பெரிய குற்ற உணர்வும் இருக்கு.
கடந்து வந்த வாழ்க்கையில நிறைய தப்பிதங்கள் செய்திருக்கேன். சிலதை நான் உணர்ந்திருக்கேன். உணராமல் போனவைகளை மன்னிச்சுடுங்கன்னு சொல்ல ஆசைப்படறேன்.
என்னுடைய வாழ்க்கை நடைமுறைக்குத் திருமணம் பொருந்தி வராதுன்னு யோசிச்சேன். வரையறுக்க முடியாத வாழ்க்கையில விட்டேத்தியா இருந்தேன். திருமணம் உறுதியான சட்டகங்களால் அறையப்பட்ட நிறுவனம். அதுல என்னுடைய ரோல் சரியா வராதுன்னு நினைச்சேன். விபத்துபோல திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இதைத்தவிர வேற சரியான வழி இருக்க முடியாதுன்னு தோணுது. என்னுடைய பலவீனங்களைத் தன்னால் இயன்றவரைக்கும் சகித்துக் கொண்டிருக்கிற மனைவிக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த வாழ்க்கையில நான் கண்ட மிகப்பெரிய ஆதர்சம், கொண்டாட்டம், நெகிழ்ச்சியா இருக்கிறது என்னுடைய பையன்தான்.
இப்ப இந்த உலகத்துல உயிர்வாழ்றதுக்கான மிகப்பெரிய காரணமா, வாழ்க்கைக்கான எல்லா அர்த்தமும் ஒரு புள்ளியில குவிந்ததுபோல என் பையன் இருக்கான். கை மாறிமாறி வர்ற பந்துபோல நான் ஒருத்தர் கையிலிருந்து இன்னொருத்தர் கைக்கு மாறிக்கிட்டு இருக்கேன். சரியான வார்த்தையில சொல்லணும்னா வாசகரே…‘நான் இருந்துக் கொண்டிருக்கிறேன்’ அதற்கு அப்பால் ஒண்ணுமில்ல.
குங்குமம் இதழுக்காக நான் தொகுத்த எழுத்தாளர் யூமா வாசுகியின் தன் அறிமுகம் இது.
படங்கள் நன்றி : புதூர் சரவணன்