ஊர் திரும்புதல்…

டந்த ஒரு வாரமாக சென்னையின் தட்ப வெப்ப சூழல் சற்றே இதமானதாக உள்ளது. கோடையில் கருகிவிட்ட தொட்டிச் செடிகளில் உயிர் பிழைத்தவை, பசுமையாக பளிச்சென்று காட்சியளிக்கின்றன. கோடையின் கொடும் வெப்பத்தால் வாடி வதங்கி, நுனி இலைகள் கருகி, இலை உதிர்ந்து கிடந்த ராமேஸ்வரம் மல்லி பூத்திருக்கிறது. அதற்கே உரிய பிரத்யேக மணம், அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் காற்றில் மிதந்து வருகிறது. பால்யத்தை நினைவு படுத்துகிறது அந்த மணம்.

பத்து வயது வரை நாங்கள் வாழ்ந்த அந்தக் கிராமத்தின் வீடுகளில் புழைக்கடை தோட்டங்களில் ராமேஸ்வரம் மல்லிச்செடி ஆக்கிரமித்திருக்கும். டிசம்பர் பூச் செடிகள், டெரியா பூக்கள், பீன்ஸ் செடிகள், மிளகாய் செடிகள் என புழைக்கடை தோட்டத்தில் பலவகையான செடிகள் இருந்தாலும் மணத்தால் ஆக்கிரமித்திருந்தது ராமேஸ்வரம் மல்லியே..

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னோக்கி போகச் சொன்னால், நான் அந்தக் காலக்கட்டத்துக்குத்தான் போவேன். பத்து வயதில் அந்த ஊரை விட்டு வந்ததோடு சரி, மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. ஆனால், அந்த ஊரைப் பற்றிய நினைவு மட்டும் என்னை விட்டுப் போனதேயில்லை.

கோடையில் கடுமையான தண்ணீர் வறட்சி இருக்கும் ஊர். கோடையைத் தவிர மற்ற நேரங்களில் எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் நிரம்பி வழியும். சிறு வயதில் Aquaphobia என்கிற நீரைக்கண்டால் அலறுகிற பிரச்சினை இருந்தது. குட்டை அளவு நீரைப் பார்த்தாலும் கண்களை மூடிக்கொள்வேன்.

அந்த கிராமத்திலிருந்து எங்கு சென்றாலும் ஏரி அல்லது குளம், குட்டை, நீரோடைகளைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கும். என் அம்மாவை இறுகப் பற்றிக்கொண்டு, நீர்நிலைகளை ஒட்டிய ஒற்றையடிப்பாதைகளைக் கடந்து செல்வேன். அதுபோல, பேருந்து பயணத்தின் போது, நிரம்பி வழியும் நான்கைந்து ஏரிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். பேருந்து ஏரியில் கவிழ்ந்துவிடுமோ என்கிற பயம், ஏரியைக் கடக்கும் வரை இருந்துகொண்டே இருக்கும்.

கிராமத்திலிருக்கும் குழந்தைகள் நான்கைந்து வயதுகளில் நீச்சல் பழகிக்கொள்வார்கள். நான் மட்டும் நீர் பயம் காரணமாக பழகவேயில்லை. ஒருமுறை என் அண்ணன் கடுப்பாகி, கிணற்றின் மேலிருந்து உள்ளே தூக்கிப் போட்டான். அப்போதும் நீரின் மீதான பயம் காரணமாக நீச்சல் கற்கவில்லை. என் வயதுள்ள நண்பர்கள் கிணற்றில் குளிப்பார்கள். நான் மட்டும் கால்வாயில் குளிப்பேன்.

பிறகு, வெவ்வேறு ஊர்களில் குடியிருந்து சென்னை வரை வந்தாகிவிட்டது. முதன்முதலாக கடலை பார்த்தபோது பயம் வரவில்லை. நீர் மீதான பயம் விட்டுப்போய்விட்டது தெரிந்தது..

……………………………………………………………………………………………………………………
சென்னை வந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக கோடையின் கடுமை, இந்த நகரத்தை விட்டுப் போய்விடலாமா என்கிற எண்ணத்தை அதிகப்படுத்திவிட்டது. கிட்டத்தட்ட போய்விடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.

கோசிகனுக்குமேகூட சென்னையை பிடிக்கவில்லை. ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை எங்களுடைய பூர்வீக கிராமத்துக்கு சென்றாலும், அதுதான் அவனைப் பொறுத்தவரையில் சொந்த ஊர்.

ஊரைப் பற்றிய பேச்சு எடுத்ததும், “காலையில சில்லுன்னு காத்து வரும்..ஏசியே போட்டுக்க தேவையில்லை. அப்புறம் ஆறு மணிக்கெல்லாம் குருவிங்க வந்து எழுப்பிவிடும். பயங்கரமாக மின்னல் அடிக்கும், நிறைய மழை பெய்யும்…” என கண்கள் விரிய வர்ணிப்பான்.

இத்தனைக்கும் அங்கிருக்கும் வீட்டில், இங்கிருப்பதைப் போன்ற எவ்வித வசதிகளும் கிடையாது. ஆனாலும், கிராமத்து வீட்டின் மீது அவனுக்கு இயல்பான ஈர்ப்பிருக்கிறது. முடிவெடுப்பதில் எனக்கு இது உதவியாக இருந்தது. எதிர்காலத்தில் அங்கேதான் வாழப்போகிறோம் என்கிற எண்ணமிருந்தபோதும், எப்போது என தீர்க்கமாக முடிவெடுக்க முடியவில்லை. அது இப்போது முடிந்திருக்கிறது.

ஊரில் வெறுமையாக உள்ள வீட்டை, வாழும் வீடாக மாற்ற வேண்டும். சில நேரங்களில் ஒன்றுமில்லாத வெறுமை, மன உளைச்சலை ஏற்படுத்தியதுண்டு. முதலில் புத்தகங்களும் சில மரச் சாமான்களும் செல்கின்றன. அடுத்த கோடைக்குள் ‘வாழ்வதற்கான வீட்டை’ உருவாக்கிவிட வேண்டும். அதில் பல சிக்கல்களும் சவால்களும் இருந்தாலும், இந்த முறை முடியும் என்றுதான் தோன்றுகிறது.

“தோற்பது எப்படி?”

கோசிகன் படிக்கும் பள்ளியில் ‘அம்மாவை பார்த்தே ஆக வேண்டும்’ என கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய அழைப்பு விடுத்திருந்தார்கள். திங்கள் காலையில் செல்ல முடியவில்லை. மாலைதான் சென்றேன்.

இரண்டாண்டுகளாக உள்ள குற்றச்சாட்டுத்தான். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே சொல்ல அழைத்திருக்கிறார்கள்..

“உங்க பையன் அறிவா இருக்கான்; கிளாஸ்ல நல்லா பதில் சொல்றான். ஆனா, எழுதவே மாட்டேன்கிறான். ஒரு மாசமா எழுதவேயில்லை… கடைசியா கட்டாயப்படுத்தி உட்காரவெச்சி எழுத வெச்சோம்… பெரிய தலைவலியா இருக்கான்னு எல்லா மிஸ்சும் சொல்றாங்க” என மென்மையான குரலில் வேகமாக பேசி முடித்தார் துணை தலைமை ஆசிரியர்.

“எதையும் எழுதிப் போடலைன்னு சொன்னான் மேம்.. வீட்லேர்ந்த நோட்டையே நான்தான் பையில் வெச்சு அனுப்பினேன்” நானும் வேகமாக சொல்லிவிட்டு,

அருகே நின்றிருந்த கோசியைப் பார்த்தேன். இருவரையும் மாறிமாறிப் பார்த்து “நோ மிஸ்…நோ மிஸ்” என்றான்.

“கோசி, ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ல ஒரு டிராமா நடிச்சான் அதிலேர்ந்து அவனை பிடிச்சுபோச்சு..such a talented boy…

போன வருசம் complaint பண்ணப்போ, நான் பெரிசா எடுத்துக்கலை… இந்த வருசம் நானே அனுபவிக்கிறேன்… என்னால முடியல…” என்றார் ஆசிரியர் அவனைப் பார்த்து.

நானும் ‘என்னால முடியலை’ என்றேன்.

“இனி நீதான் திருத்திக்கணும்பா” என பஞ்சாயத்தை ஒருவழியாக முடித்து வைத்தார் ஆசிரியர்.

நான்காவது படிக்கிறான். இரண்டாவதில் இருந்து இதே குற்றச்சாட்டு; இதே பாராட்டு… இந்தப் பிரச்சினையை யாரிடமாவது சொன்னால் கற்றலில் குறைபாடு போன்ற பிரச்சினையாக இருக்குமோ எனக் கேட்பார்கள். அப்படியெதுவும் இல்லை.

சோம்பேறித்தனம்… நன்றாக (சொற்பொழிவே நடக்கும்) பேசுவான். குழந்தைகளுக்கே உரிய திக்கிப்பேசும் மழலை மொழியில் அல்லாமல் மிகச் சிறப்பாகவே உச்சரிப்பான். படிக்கவும் செய்வான். தூங்கும் முன் தினமும் புதுப்புது கதைகளை சொல்வான்.

எழுதுவதில் மட்டும் அத்தனை மெத்தனம். இரண்டு பக்கங்களை எழுத வைப்பதற்குள் நெஞ்சுலி வந்துடும். போன வருடம் நடந்த தேர்வுகளில் அனைத்து பதில்களும் தெரிந்திருந்தும்கூட ஒரே ஒரு விடையை மட்டும் தாளில் எழுதி வைத்திருந்தான்.

பள்ளிகளில் எழுதுவதை குறைத்து கொடுக்கலாம். ஆனால் பள்ளிக் கல்வி முறை அப்படியில்லை. பக்கம் பக்கமா எழுதியே ஆக வேண்டிய கல்வி முறை. எழுதியே ஆக வேண்டும். இந்த ஆண்டு சற்றே வேகம் கூடியிருக்கிறது.

“ஃபர்ஸ்ட் மார்க் வாங்கலாம், ஆனா நீ பாஸ் வாங்கினா போதும்” என பள்ளியிலிருந்து வரும்போது மென்மையாகவே சொன்னேன். தலையை ஆட்டினான்.

வகுப்பு ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் அவனைப் பற்றி புகார் சொல்லத்தான் அழைத்திருந்தார்கள். ஆனால், அவனைப் புகழ்ந்தார்கள். எனக்கு புகார் பற்றிய கவலை இல்லை; புகழ்ச்சி குறித்து மகிழ்ந்தேன்.

நான் எப்போது கடிந்துகொள்வேனோ என்கிற அச்சம் அவனிடம் இருந்தது. திங்கள் இரவு இரவு முதல் காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி எனக்கு. சுத்தமாக பேசவே முடியவில்லை. பேச முயற்சித்தபோது, “அம்மா, ப்ளீஸ் உன்னால பேச முடியலை..பேசதம்மா… ஏன் கஷ்டப்படற”. சிரித்துக்கொண்டே நக்கலாகச் சொன்னான். அவனுடைய கவலை அவனுக்கு. ஆனால், ஒரு நாள் விடுமுறை எடுத்து, என்னைப் பார்த்துக்கொண்டான். நன்றி மகனே… 🙂

………………………………………………………………………………………………………………………….

இரண்டு வாரங்களுக்கு முன் முகநூலிலிருந்து விலகிவிட்டேன். குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சில நேரங்களில் நான் எழுதுவது பலருக்கு மனவருத்தத்தைக் கொடுக்கிறது, கோபத்தை உண்டாக்குகிறது. வினை…எதிர்வினை…விவாதம்… சலிப்பாக உணர்ந்ததால் விலகிவிட்டேன்.

செய்தியாளராக முகநூலிலிருந்து விலகியிருப்பது இழப்புதான். ஆனால், இப்போதைக்கு இந்த விலகல் தேவையாக உள்ளது.

……………………………………………………………………………………………………………………..

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் எழுதிய பதிவுகளை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். சூழலியல் தொடர்பான பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த முகிலனுக்கு ஆதரவாகவே நிறைய பேர் எழுதியிருந்தனர்.

‘மீறல்கள்’ நிகழக்கூடிய சாத்தியங்கள், சந்தர்ப்பங்கள் எல்லோருக்குமே வர வாய்ப்பிருக்கிறது. அது இயல்பானதுதான். ஆனால், மீறல் நிகழ்ந்துவிட்டபின் என்ன நடக்கும் என்பது குறித்து பலர் சிந்திப்பதில்லை. உணர்ச்சிகளின் உந்துதலில் நடக்கும் மீறல்களுக்கான பலனை தொடர்புடையவர்கள் அனுபவிக்கத்தான் நேரிடும். அது உண்டாக்கும் தொடர் சங்கிலி நிகழ்வுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அதோடு, ஆண்மய சமூகத்தில் ‘கட்டிக்கிட்டது ஒன்னு; வெச்சிக்கிட்டது ஒன்னு’ என்கிற வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச அறம் குறித்த உணர்வை தள்ளி வைத்து விடுகின்றன. தன்னுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை எனில் முகிலன் அதிலிருந்து வெளியேறியிருக்கலாம்; ‘காதலித்த’ பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கலாம். விவாகரத்தை நிகழக்கூடாத விசயமாகக் கருதும் சமூக உணர்வு, திருமண மீறல்களை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது.

…………………………………………………………………………………………………………………

’தோற்பது எப்படி?’ என்கிற ஒலிபரப்பு நிகழ்ச்சி குறித்து அண்மையில் அறிந்தேன். வெற்றியாளர்களின் தோல்வி அனுபவங்களை மட்டும் பகிர்வதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. பத்திரிகையாளர் எலிசபெத் டே தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிகளை இங்கே கேட்கலாம்.

இப்படியொரு நிகழ்ச்சியை உருவாக்க பின்னணி காரணங்கள் குறித்து எலிசபெத் டே எழுதிய இந்தக் கட்டுரை Why we should learn to embrace failure. எனக்குப் பிடித்திருந்தது.

சமீப காலமாக சற்றே ஆழமாக விசயங்களை அணுகிப்பார்த்து எழுதும் யோசனை வந்துகொண்டிருக்கிறது. எலிசபெத்தின் கட்டுரை அகத்தூண்டலை உண்டாக்கியிருக்கிறது. அப்படியேதும் முயற்சித்தால் இங்கேயேதான் எழுதவிருக்கிறேன்.

………………………………………………………………………………………………………………..

கடந்த மாதம் நெருக்கடி காரணமாக மீண்டும் ஊடகங்களில் பணிவாய்ப்புத் தேடினோம்; நண்பர்களும் உதவினார்கள். ஆனால், நேர்மறையான எந்த பதிலும் கிட்டவில்லை. இது எதிர்ப்பார்த்ததுதான். உண்மையில், பணிதேடிவது எனக்கே பிடிக்கவில்லை. மனதளவில் தயார்ப்படுத்திக்கொண்டுதான் தேடினேன். அமையவில்லை. உண்மையாகவே மகிழ்ச்சி.

அந்த அமைப்பை குறை சொல்லிக்கொண்டே அதே அமைப்பில் 12 மணி நேரம் பணியாற்ற நேர்வது கொடுமையாகவே இருக்கும். 12 மணி நேர கொடுமையை தாங்குவதற்கு நான்கைந்து மணி நேர கொடுமையை தாங்கிக் கொள்ளலாம். அல்லது வேறு வழியைக் கண்டுபிடிக்கலாம்.

……………………………………………………………………………………………………………….

சில ஆண்டுகளாக எனக்கு PMDD (premenstrual dysphoric disorder) பிரச்சினை உள்ளது. பெண்களுக்குள்ள (20 பேரில் ஒருவருக்கு) பொதுவான பிரச்சினை இது. மாதவிடாய் காலத்துக்கு முன்பு கோபம், எரிச்சல், கவனக்குறைவு, இனம்புரியாத வருத்தம், காரணமே இல்லாத அழுகை, விரக்தி போன்ற உணர்வு உருவாகும். இதுதான் PMDD. சில நேரங்களில் மாதவிடாய் முடியும்வரைகூட தொடரும். ஹார்மோன் சமநிலை குலைவதால் இந்தப் பிரச்சினை வரலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முழுமையான காரணமும், மருந்துகளும் இல்லை.

ஆபத்தாக, தற்கொலை உணர்வுகூட சிலருக்கு வரலாம். சில நேரங்களில் எனக்கும்கூட அப்படித் தோன்றுவதுண்டு. ஆனால், தற்கொலையைக் காட்டிலும் எனக்கு மன உறுதி அதிகம். என் நண்பர் ஒருவர், இந்தப் பிரச்சினை உள்ளவர். அவருக்கும் இந்த உணர்வு உள்ளதென்று கூறினார். இந்த உணர்வு நிலையிலிருந்து வெளியேற உடற்பயிற்சி செய்வேன் என்றார். பிரச்சினை உணர்ந்தவர்களுக்கு பிரச்சினை இல்லை. பிரச்சினையை கைகொள்வது அவர்களால் முடிகிறது. இப்படியொரு பிரச்சினையை அறியாத பெண்களும் இருக்கிறார்கள். பல சமூக அழுதத்தங்களின் காரணமாக அவர்களுக்கு மேலும் மன அழுத்தம் அதிகமாகவே வாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் இந்த சமயத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பேன். பிரச்சினைகள் வலிய வந்தாலும் சுரணையில்லாமல் நடந்துகொள்வேன். விரக்தியாக எண்ணங்கள் வரும்போது அடுத்த வாரம் சரியாகிவிடும் என சொல்லிக்கொள்வேன்.

மோசமான முடிவுகளை எடுக்க மனம் உந்தித்தள்ளும், அப்போது அதன் பேச்சைக் கேட்கவே கூடாது. அழும் உணர்வு வந்தால், தனிமையில் அழலாம்.

குடும்பத்தில் உள்ளவர்களிடம் இந்தப் பிரச்சினையை சொல்லி, ஒத்துழைக்கக் கேட்கலாம். அதிகப்படியான கோபத்தை குறும்பு செய்யும் மகனிடம் காட்ட வேண்டியிருக்கும், தாமதிக்காமல் அவனிடம் மன்னிப்பு கேட்டு விடுவேன். பிரச்சினை முடிந்தது.

யாரும் இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை, உங்களுக்குப் பிடித்த விசயங்களை அந்த சமயத்தில் செய்யுங்கள். படம் பார்க்கலாம், படிக்கலாம், எழுதலாம். நான் கொரிய சீரியல்களைப் பார்ப்பேன். 🙂

PMDD காரணமாக ஏராளமான சண்டை- சச்சரவுகளும் வந்துள்ளன. அந்தக் காலத்தை கடந்துவிட்ட பிறகு, இதற்கெல்லாம் இப்படி வினையாற்றியிருக்கத் தேவையில்லை எனத் தோன்றும். அதே சமயம் சில நல்லவைகளும் நடக்கலாம். எனக்கு நடந்திருக்கிறது.

PMDD ஒரு மோசமான பிரச்சினைதான். ஆனால், அதை கடக்க பழக்கப்படுத்திக்கொள்ள முடியும்.