மெட்ரோபாலிடன் நகரங்களில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆண்களின் சகிப்பின்மைதான் காரணம்!

ஷோபா டே… இந்தியாவின் ‘பெஸ்ட் செல்லர்’ எழுத்தாளர். ‘சூப்பர் ஸ்டார் இந்தியா’ என்கிற புத்தகத்தை சென்னையில் வெளியிட வந்திருந்த ஷோபாவைச் சந்தித்தோம்…
”ஒரு பக்கம் பெண்களுக்கு அதீதமான சுதந்திரம் கிடைக்குது. இன்னொரு பக்கம் டெல்லி, மும்பை போன்ற மெட்ரோபாலிடன் நகரங்களில்கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாயிட்டே வருது. இதற்கு என்ன காரணம்?”
”இத்தனை ஆயிரம் வருடங்களாக வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருந்த பெண்கள் வெளியே வர ஆரம்பித்திருப்பதில் ஆண்களுக்கு நிறைய வருத்தம். பெண்கள் தங்களோட எல்லா வேலை களையும் பறிச்சுக்கிறாங்க என்கிற எண்ணம் ஆண்கள் மனசில் கசப்பா படிஞ்சுபோயிருக்கு. பெண்களோட சுதந்திரமான சிந்தனை அவங்க உடை விஷயத்திலும் வெளிப்படுது. வேலைக்குப் போகிறதால பொருளாதார ரீதியாகவும் வலுவா இருக்காங்க. தங்கள் அம்மா போலவோ, பாட்டி போலவோ நடத்தப்படுவதை எதிர்க்கிறாங்க. ஆண்களால இதைச் சகிச்சுக்க முடியலை. பெண்களைவிட இயல்பிலேயே உடலால் பலப்பட்டிருக்கிற ஆண்கள் தங்களோட கோபத்தை, பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வது மூலமாகத் தீர்த்துக்கிறாங்கன்னுதான் நான் நினைக்கிறேன். மும்பையில புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இரண்டு பெண்கள்கிட்ட அத்துமீறி நடந்துக்கிட்ட அந்த கும்பலோட மனநிலையும் இதுதான். மற்ற பல விஷயங்களோடு ஆண்களின் இந்த மனநிலையைச் சமாளிக்கவும் பெண்கள் கத்துக்கணும்.”
”நகர்ப்புறம் சார்ந்த பிரச்னைகளையே நாம் அதிக அளவுல பேசிக்கிட்டிருக்கோம். கிராமங்களில் தீர்க்க முடியாமல் நாளுக்கு நாள் சாதிப் பிரச்னைகள் வளர்ந்துக்கிட்டே இருக்கு. அதற்கு சமீபத்திய உதாரணம் உத்தப்புரம். இதுபோன்ற பிரச்னைகளை நீங்கள் கவனிக்கிறதுண்டா?”
”கிராமங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் சாதி வேற வேற பேரோட இருந்துக்கிட்டு இருக்கு. நம்மோட தேசிய அரசியலே சாதியை அடிப்படையா வெச்சு தானே இருக்கு? சாதி அடிப்படையில்தானே தேர்தல்ல வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்குறாங்க? இப்போ இருக்கிற இளம் தலைமுறைகூட சாதியை விரும்புதே! இந்தச் சாதியில், இன்ன உட்பிரிவுல உள்ள வரன் தான் வேணும்னு சாதியை வெளிப்படையா போட்டுக் காட்டுற எத்தனை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம்! கலப்புத் திருமணங்கள் மூலமாதான் சாதி ஒழியும். ஆனா, எத்தனை இளைஞர்கள் சாதியை மறுத்து திருமணம் செய்ய முன்வருவார்கள்? சமூகத்தோட முன்னேற்றதுக்கு சாதி என்பது பெரிய தடைக்கல் என்பதை சாதியைத் தூக்கிப் பிடிக்கிறவங்க உணரணும்!”
”நீங்க மகாராஷ்டிரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். ‘வடமாநிலத்தைச் சேர்ந்தவங்க மும்பையைவிட்டு வெளியேற வேண்டும்’னு தொடர்ந்து ராஜ் தாக்கரே சொல்கிறாரே உங்களுக்கு இதில் உடன்பாடு உண்டா?”
”எனக்கு ராஜ் தாக்கரேவை நன்றாகத் தெரியும். ரொம்ப ரொம்பப் புத்திசாலியானவர். அவரோட புத்திசாலித்தனத்தை அரசியல்ல காட்ட நினைக்கிறார். புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கிற அவர் மாநில, தேசிய அளவுல தன்னை நிலைப்படுத்திக்கிறதுக்காகச் செய்த தந்திரம் இது. ஆனா, அதுக்கு மகாராஷ்டிரத்துல ஒரு சதவிகித ஆதரவுகூடக் கிடைக்கலை. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவங்க மீது எந்தவிதமான தாக்குதலும் இதுவரைக்கும் நடக்கலை. இனிமேலும் நடக்காதுங்கிறதுதான் உண்மை!”
”நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கும்னு நம்பறீங்களா?”
”எனக்கு இட ஒதுக்கீட்டில் சுத்தமா நம்பிக்கையில்லை. அது பெண்களுக்கான ஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதி ரீதியான ஒதுக் கீட்டுக்கும் பொருந்தும். நாடாளுமன்றத்தில் அந்த இடத்துக்குப் பொருத்தமான பெண்கள்தான் போகணும். இட ஒதுக்கீடு கொண்டு வந்தா, ஏற்கெனவே அந்த இடத்துல இருந்துட்டிருக்கிற ஆண் தன் மனைவியையோ, மகளையோ கொண்டு வருவான். பின்னாடி இருந்து அவளை இயக்குவான். ஜனநாயகத்துக்கு இது ஆரோக்கியமான விஷயமா இருக்காது!”
”உங்கள் குடும்பம் பற்றி..?”
”கணவர் திலிப். அன்பா, அறிவா ஆறு குழந்தைகள். ஆறு பேரும் அவங்களுக்குப் பிடிச்ச வேலைகள்ல செட்டிலாகிட்டாங்க. மூத்தவனுக்கு 34 வயசாகுது. ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிடுச்சு. அடுத்தடுத்து ரெண்டு பேருக்குத் திருமணம் ஆகப்போகுது. உலகத்திலேயே எனக்குப் பிடிச்சது என் குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கிறதுதான்!’’
2008ல் நான் பணியாற்றிய ஆனந்த விகடன் இதழுக்காக எடுத்த நேர்காணல் இது.
நன்றி: ஆனந்த விகடன்