”தனியா வாழற பெண் எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான்” – பாமா


பாமாவுக்கு ரொம்ப நாளா ஒரு ஆச உண்டு. எதுக்கெடுத்தாலும் ஆம்பளயதான் கேக்குறாங்க. கரண்ட் பில்லு கட்டணும்னாலும் ஆம்பள. ஒரு போன் வேணும்னாலும் ஆம்பள வேணுங்கறாங்க. அதான் சம்பளத்துக்குப் புருசன் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு ஆச. கேக்கறவங்களுக்கெல்லாம் இவன்தான் புருசன், புருசன்னு காட்டணும். ஏன்னா இந்த சமூகம் எப்பவும் அப்பா, கணவன், மகன், அண்ணன், தம்பின்னு ஒரு ஆம்பளயத்தான் புடிச்சி வச்சிருக்கு. சம்பளத்துக்குப் புருசன் வேலைப் பார்த்து, வேலை முடிஞ்சா அவன் வேலையைப் பார்த்துட்டு போறமாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா நல்லா இருக்கும்னு பாமாவுக்கு நினைக்கத் தோணுது. ஏன்னா தனியா ஒரு பொம்பள வாழ்க்கை நடத்தறதுங்கிறது இந்த ஆண்மைய சமுதாயத்துல என்னைக்குமே ஒரு கேள்விகுறியாதான் இருக்குது.

ஏன் இவ கல்யாணம் கட்டிக்கல?
எவனையாவது மனசுல நெனச்சுட்டு இருக்காளோ?
இவ வீட்டுக்கு யார் யார் வாராங்க?
எவ்வளவு நேரம் பேசறாங்க?
வர்றவங்ககிட்ட இவ எப்படி பேசுறா?
சிரிச்சுப் பேசுறாளா? மொறச்சிப் பேசுறாளா?

இப்படி கேள்விகள் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும்.

அதாவது தனியா வாழற பெண் இந்த சமுதாயத்துக்கு எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான். இதையெல்லாம் மீறி பாமா சுதந்திரத்தை விரும்பறா.

அதுக்காக இன்னும் எத்தனை விதமான கேள்விகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கா.
மதுரை மாவட்டம், புதுப்பட்டி பிறந்து, வளர்ந்தது. மத்த பெண்களைவிட தலித் பெண்கள் சுதந்திரமானவங்க. ஒண்டிக்கிறதுக்காக மட்டும்தான் சின்ன குடிசை. மத்தபடி வெளியிலதான் ஒலகம். பேசவும் சிரிக்கவும் ஆடவும் பாடவும் சுதந்திரம் இருந்தது. அந்த சுதந்திரத்தை அனுபவிச்சவ பாமா. ஆனாலும் கல்யாணம்னு வரும்போது எல்லா பெண்களைப்போல இவங்களும் சராசரியாதான் வாழ்ந்தாகணும். ஆணுக்காகவே, ஆணின் வசதிக்காகவே மனைவி, குழந்தை எல்லாம். ஆண்கள் எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்ல வரலை. ஜனநாயக முறை குடும்பத்துல இல்லன்னு சொல்ல வர்றேன்.
ஒடுக்கப்படற தலித் பெண்களை மீட்கணும்னா, அவங்களுக்குக் கல்வி கிடைக்கணும். கல்வி ஒண்ணுதான் அவங்களை உயர்த்தும்னு நம்பிக்கை. அதுக்காகவே தன் வாழ்க்கையை வாழணும்னு கிறித்துவ மடத்துல சேர்ந்தா பாமா. ஆனா, அங்கயும் சமூகத்துல இருக்குற அத்தனை ஏற்றத்தாழ்வுகளும் இருந்தது. பண்பாடு, ஜாதி, மொழி, பணம்னு அங்கயும் ஏகப்பட்ட பிரிவினைகள்.

துக்கத்துல இருந்தாலும் சந்தோசமா இருக்குறமாதிரி காட்டிக்கிற பாவ்லா வாழ்க்கை அது. சமத்துவம், சகோதரத்துவம்ங்கிற கிறித்துவ மதிப்பீடுகள் அங்கே காணாமல் போய்கிட்டு இருந்துச்சு. பணக்கார பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பாமா டீச்சர் தேவையில்லை. வேற யாராவது செஞ்சுட்டு போகட்டுமே.

பாமா என்ன நினைச்சுப் போனாளோ அது அங்க இல்ல. ஏழு வருசத்துக்கு அப்புறம் மடத்தை விட்டு வந்தாச்சு.
பெறகுதான் போராட்டம் ஆரம்பமாச்சி. ஒரு பொண்ணு மடத்தை விட்டு வந்துட்டான்னா அது அவ சார்ந்த குடும்பத்துக்கே மானக்கேடான விசயமா இருக்கும். அதனால வீட்டுக்கும் போக விரும்பலை. தனியாகவே வாழ்ந்துக்கலாம்னு முடிவு பண்ணி, மதுரையில வாடகைக்கு வீடு எடுத்து தங்கியாச்சு. வேலைக்காக அலைஞ்சிட்டு இருந்த நேரம். தொண்டையை அடைக்கிற துக்கம் இருந்துகிட்டே இருக்கு. அழுது முடிக்கவும் முடியல. நண்பர் ஒருத்தர் எழுதுனா துக்கம் தீரும்னார். எழுதிக் காட்ட, இலக்கியமா இருக்கு. முழுசா எழுதுன்னார். துக்கத்தை, வாழ்க்கையை எழுதின பிறகு அது ‘கருக்கு’ன்னு நாவலா வந்தது.
92-ம் வருசம் நாவல் வந்ததும் பல விசயங்கள் நடந்தது. இலக்கிய ஒலகத்துல மொழியிலயும் வடிவத்திலயும் புது முயற்சின்னாங்க. கிறித்துவ அமைப்புகள்ல இருந்து முணுமுணுப்பு வந்தது. உண்மையை எழுதினதால அதை அவங்க மறுக்கல. ஆனா, எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்ப்பார்க்காத எதிர்ப்பு. புதுப்பட்டி மக்கள், நம்ம ஊரப்பத்தி அசிங்கமா எழுதிட்டாளேன்னு கோவப்பட்டாங்க. ஊருக்குள்ள கொஞ்ச காலம் போக முடியல. படிச்ச பிள்ளைகள் நாவலைப் படிச்சி காட்டி ஊரைப்பத்தி பெருமையாதான் எழுதியிருக்கான்னு புரிய வைக்கவும். பாமாவைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. பெறகு அவங்க கதைகளைச் சொல்லி இதையும் எழுதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் ‘சங்கதி’, ‘வன்மம்’ன்னு நாவல் ரெண்டும் ‘கிசும்புக்காரன்’னு சிறுகதை தொகுப்பும் எழுதணும்னு நெனச்சி எழுதினது.
பாமா ஊர விட்டு வந்து பல வருசங்கள் ஆனாலும் பேசும்போது மொழி மாறியிருக்கே தவிர, எழுத ஒக்காந்தா புதுப்பட்டியோட மொழிதான் வந்து ஒக்காந்துக்குது. அந்த மொழிய எழுது பிரியமா இருக்கு. செல பேர் கெட்ட வார்த்தைகயை அப்படியே எழுதறதா சொல்றாங்க. இது கெட்ட வார்த்தை, இது நல்ல வார்த்தைன்னு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.

ஒரே வார்த்தை ஒருத்தருக்குக் கெட்டதாவும் இன்னொருத்தருக்கு நல்லதாகவும் தோணலாம். உண்மையைப் பதிவு பண்ணும்போது நல்லது, கெட்டது பார்க்கக்கூடாது.

யாரு பாமா? வாழ்க்கையை நேசிக்கிற, வாழ்க்கையை வாழத் துடிக்கிற மனுசி. அண்ணன், தம்பி, அப்பா, அம்மா, நண்பர்கள், சமுதாயம் கொடுத்த எத்தனையோ பிரச்னைகளுக்கு ஊடாக சந்தோசத்தை அனுபவிக்கிறவ பாமா. கடந்த காலத்தைப் பத்தியோ, எதிர்காலத்தைப் பத்தியோ கவலைப்படாம இந்த நிமிசத்துல வாழறவ. எல்லோரும் கேப்பாங்க, ‘வயசாயிட்டா என்ன பண்ணுவே?’ன்னு. தள்ளாத வயசு வரைக்கும் வாழ்வோம்னு யாரால சொல்ல முடியும்? பெத்த புள்ளைகளே தள்ளிப்போன்னு சொல்ற காலமிது. பணம் பிரதானமாயிட்ட காலத்துல உறவுகளுக்கு மரியாதை இல்லை. அதுக்கு இதுவே பரவாயில்லை. பாமா செத்துக்கிடந்தா எடுத்துப் போடுங்க. ஏன்னா, செத்ததுக்கு அப்புறம் பாமாவுக்கு கவலைப்பட ஒண்ணும் இல்லை. அதப்பத்தி நீங்கதான் கவலைப்படணும்!

குங்குமம் இதழில் ‘நான்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சிலரை நேர்காணல் செய்து, அவர்கள் மொழியிலேயே ஒரு தொடர் எழுதியிருந்தேன். அதில் இடம்பெற்ற பாமாவின் தன் அறிமுகம் இது.
சென்னைக்குள்ளேயே நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்த நான், பாமாவைப் பார்க்க உத்தரமேரூர் போனதுதான் முதல் வெளியூர் பயணம். அதற்குப் பிறகு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அந்தவகையில் ஒரு நல்ல அனுபவத்துக்கு பாமா தொடக்கமாக இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.
தலித் இலக்கியத்தில் பாமாவின் எழுத்துக்களுக்கு தனித்த இடம் உண்டு. பள்ளி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் அவர் நிறைய எழுத வேண்டும். அவருடைய ‘கருக்கு’ நாவலும் ‘கிசும்புக்காரன்’ சிறுகதை தொகுப்பும் அவசியம் படிக்க வேண்டியவை. தமிழில் ’கருக்கு’ நாவல் தள்ளுபடி விலையில் வாங்க ஆங்கிலத்தில் படிக்க 
கருக்கு அமேசானிலும் கிடைக்கும்

1 thoughts on “”தனியா வாழற பெண் எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான்” – பாமா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.