jump to navigation

பறவைகள்தான் இவருடைய உலகம்! பெப்ரவரி 5, 2010

Posted by மு.வி.நந்தினி in environment, சுற்றுச்சூழல், செங்கால் நாரை, பறவைகள், பால் பாண்டி.
Tags: , ,
4 comments

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பரப்பளவிலும் உயிர்சூழலிலும் வேடந்தாங்கலைவிட பெரியது. கூந்தன்குளத்தில் மற்றுமொரு சிறப்பு…இங்கு வலசை வரும் பறவைகளுக்கும் ஊர் மக்களுக்கும் உள்ள உறவு. பல கிலோமீட்டர் கடந்து வீடு தேடி விருந்துக்கு வரும் பறவைகளை கூந்தன்குளம் மக்கள் உபசரிக்கும் விதம் உலகமக்களுக்கெல்லாம் பாடம்! அனைத்திலும் உச்சமாக பால் பாண்டி என்ற தனிமனிதரின் பங்களிப்பு பிரமிப்பு ரகம். கூந்தன்குளம் மக்களுக்கு வலசை வரும் பறவைகள் விருந்தாளிகள் என்றால், பால் பாண்டிக்கு பெற்றெடுத்த பிள்ளைகள்! வலசை வரும் பறவைகள் கூடு கட்டி, குஞ்சு பொறிக்கும் சமயத்தில் கூட்டிலிருந்து தவறி விழுவது இயல்பு. கால் ஒடிந்து, உடலில் காயம்பட்ட இளம் குஞ்சுகளை எடுத்து காப்பாற்றி குணமாக்கும் அரிய பணியைத்தான் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக செய்துவருகிறார் பால் பாண்டி.

“பறவைகளோடு பறவையாக பிறந்து, வளர்ந்தது கூந்தன்குளத்துலதான். சின்ன வயதிலேயே பறவைகள் மேல அன்பு நிறைய. கூட்டிலிருந்து தவறி விழுகிற பறவை குஞ்சுகளை எடுத்து, காப்பாத்திவிடுவேன். பத்தாவது வரைக்கும் படிப்பு. வேலை தேடி குஜராத்துக்குப் போனேன். ஆனா ஞாபகம் முழுக்க ஊர் பற்றிதான். ஒருகட்டத்தில் இனி முடியாதுன்னு ஊருக்கே திரும்பிட்டேன். குஞ்சுகளை எடுத்து காப்பாத்தறது, அதுகளுக்கு மீன் பிடிச்சு போடறதுன்னு பறவைகள்தான் என் உலகம்னு மாறிப்போச்சு. பிறகு படிப்படியா கூந்தன்குளத்துக்கு வருகிற பறவைகள் ஒவ்வொன்றையும் கவனிக்க ஆரம்பிச்சேன். பறவை எப்படி கூடுகட்டும்? எத்தனை முட்டைகள் வைக்கும்? எத்தனை நாள் அடைகாக்கும்? குஞ்சுகளுக்கு எப்படி உணவளிக்கும்னு ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிச்சேன். அப்போ ஊருக்கு வந்த பறவையியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப் என்கிறவர் பறவைகள் பற்றி சலீம் அலி எழுதின புத்தகத்தை கொடுத்து அறிவியல் ரீதியா தெரிஞ்சிக்க உதவினார்” என்கிற பால்பாண்டியின் பணிகளைப் பார்த்த தமிழக வனத்துறை, சரணாலய உதவியாளராக்கி இருக்கிறது.

“கூந்தன்குளத்துக்கு கூழக்கடா, பூநாரை, கரண்டிவாயன், நீர்காக்கை(மூன்று வகை), செங்கால்நாரை, பாம்புதாரா, செண்டுவாத்து, புல்லிமூக்கு வாத்து, நத்தை கொத்திநாரை, அரிவாள் மூக்கன்(மூன்று வகை), நாமக்கோழி,. கானாங்கோழி, சாம்பல்நாரை, சாரை நாரை, முக்குலிப்பான், சம்புகோழி, பட்டைத்தலை வாத்து என 174 வகையான பறவைகள் வருது. சைபீரியாவிலிருந்து ஏராளமான வாத்து வகைகள் வரும். மற்ற பறவைங்க எல்லாம் குஜராத் போன்ற இந்திய பகுதிகளிலிருந்து வருகிறவைதான். பூநாரை ஆயிரக்கணக்கில் வரும். அதோட வெளிர்சிவப்பு நிறமும் உயரமும் கொள்ளை கொள்ளும் அழகு! ஊருக்கு நடுவுல இருக்கிற இந்த குளமும் குளத்தை சுற்றி வளர்ந்திருக்கிற மரங்களும்தான் பறவைகளின் வாழ்விடம். 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருமேனி ஆத்துல இருந்து குளத்துக்கு தண்ணீர் வருது. தை அமாவாசைக்கு வரும் பறவைகள் ஆடி அமாவாசை முடிந்ததும் கிளம்பிப்போகும். சீஸன் நேரத்துல ஊர்பக்கம் வந்தா மூக்கைப்பொத்திக்கிட்டுதான் நடமாட முடியும். காரணம் பறவைகளோட எச்சம்தான். பறவைகள் அந்த அளவுக்கு கூட்டம் கூட்டமாக வரும். பறவைகள் எச்சமிடுகிற குளத்து தண்ணீரை ஊர்மக்கள் விவசாயத்திற்கு காலங்காலமாக பயன்படுத்திட்டு வர்றாங்க. அவங்க நம்பிக்கை பொய்க்காம மூணு மேனி மகசூல் நிச்சயமா கிடைக்குது” என்கிறார் பால் பாண்டி.

கூட்டியிலிருந்து தவறி விழும் பறவை குஞ்சுகளுக்கு கால்நடை மருத்துவத்தில் கற்றுக்கொண்ட முறைப்படி சிகிச்சை அளிக்கிறார் பால் பாண்டி. இவரின் சூழலியல் ஆர்வம் பறவைகளோடு நின்றுவிடவில்லை. கூந்தன்குளத்தைச் சுற்றி ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டு, வளர்த்திருக்கும் பெருமை அவரையும் அவருடைய மனைவி வள்ளித்தாயையும் சேரும்.

“அரச மரம், ஆலாமரம், நவ்வா மரம், புளிய மரம், அத்தி, வேம்பு, வாகை, மருதம், இலுப்பை, தூங்குமூஞ்சி, புங்கன், புங்கை, வாசாமடக்கி, அழகுகொண்டை, கருவேலம் என பறவைகள் கூடுகட்டும் மரங்களாகப் பார்த்து நட்டு, நீர் ஊற்றி, பராமரித்து நானும் என் மனைவியும் தோப்பாக்கி இருக்கிறோம். நான் இந்த அளவுக்கு பறவைகளுக்காக அர்ப்பணிப்போட பணிசெய்ய காரணம் என் மனைவி வள்ளித்தாய்தான். என்னைவிட அவரோட அர்ப்பணிப்பு பெரியது. பறவைகளுக்காக தன் உயிரையே துறந்தவர் வள்ளித்தாய். கூட்டிலிருந்து தவறி விழுகிற இளம்குஞ்சுகள் நெஞ்சில் அடிபட்டதால வாயில் ரத்தம் கக்கும். நாம வாயில் தண்ணீர் வைச்சு வேகமாக பறவை குஞ்சுகளுக்கு செலுத்தணும். அப்படி செலுத்தும்போது இரத்தம் வெளியேறி, அதுகளால சுவாசிக்க முடியும். இப்படி தொடர்ந்து என் மனைவி செய்து செய்துதான் பறவை வைரஸ் தாக்கி, இருதய வால்வு செயல்படாம போச்சு. முதல் முறை ஆபரேஷன் நடந்து பிழைச்சுக்கிட்டாங்க. இரண்டாவது தாக்கினப்போ ஆபரேஷன் நடந்தும் இறந்துட்டாங்க” பால் பாண்டியின் கண்கள் கலங்குகின்றன. பால் பாண்டி - வள்ளித்தாய் தம்பதியின் காதலும் இவர்களுக்கு பறவைகள் மேல் இருக்கும் காதலும் கூந்தன்குளம் வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பூட்டும் விஷயங்கள். இவர்கள் குறித்து ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தம்பதியின் பணியைப் பாராட்டி கேரள அரசு முதல்கொண்டு பல சுற்றுச்சூழல் அமைப்புகள் விருது கொடுத்து கவுரவித்துள்ளன. ஆனாலும் பால் பாண்டியின் வாழ்க்கைத் தரம் அரசாங்கம் தரும் சொற்ப வரும்படியில் தான் தொடர்கிறது.

“2500 ரூபாய் சம்பளத்தை வச்சிக்கிட்டு நானும், பிள்ளைகள் நாலு பேரும் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம். நிரந்தர வேலை இல்லை. மனைவியோட ஆபரேஷன் செலவுக்காக மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கின பணத்தையே இன்னும் திருப்பித்தர முடியலை. என் மனைவியும் என் போல வேலை பார்த்துட்டு இருந்தா. அவ போனதுக்குப் பிறகு, பென்சன் தந்திருக்கலாம். அது கிடைக்கிறமாதிரி தெரியலை, மனைவியோட வேலையை என் குடும்பத்தில் யாருக்காவது கொடுக்கலாம். பொருளாதார ரீதியான கவலை இருந்தாலும் அடுத்து இந்தப் பறவைகளை யார் பார்த்துக்குவாங்க என்கிற கவலைதான் பெரிதாக இருக்கு. நிறைய பேர் கூந்தங்குளத்துக்கு ஆராய்ச்சிக்காக வர்றாங்க. இங்கிருந்து ஏராளமான விஷயங்களை கத்துக்கிட்டு போறாங்க. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற இன்னும் ஏழு வருடங்கள் இருக்கு. அதற்குள் என்னைப்போல பத்து பேரை கூந்தன்குளத்துக்கு உருவாக்கி தந்துடணும். ஆனா கடந்துபோன இருபத்தியேழு வருஷத்துல அப்படியொருத்தரையும் பார்க்க முடியலை” ஆதங்கத்தோடு தன்னை கடந்து செல்லும் பறவைக் கூட்டத்தைப் பார்க்கிறார் பால் பாண்டி.

பறவைகள் பலவிதம்…ஒவ்வொன்றுக்கும் தனிகுணம்!

றவை நோக்கராக பறவைகளின் இயல்புகளை கூர்ந்து நோக்கிவரும் பால் பாண்டியன், சில பறவைகள் தனிச்சிறப்புகளை பகிர்ந்துகொள்கிறார்…

ன்றுகூடி வாழும் குணமுடையது கூழக்கடா. பறவையின் எடை ஏழிலிருந்து எட்டு கிலோவரை இருக்கும். இரண்டு முட்டைகள் இடும். பத்தொன்பது நாட்கள் அடைகாக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ரோமம் இல்லாமல் குரங்கு குட்டிகளைப்போல இருக்கும்.

செங்கால் நாரை அழகிலும் அறிவிலும் சிறந்த பறவை. வீட்டுப் பறவைகளைப் போல மனிதர்களோடு பழகும் குணமுடையது. முட்களை வைத்து கூடுகட்டி, இளம்தளிர்களால் மெத்தை அமைக்கும். மீன்தான் பிரதான உணவு. குஞ்சுகளை குளிப்பாட்டும். வெயிலில் குடை போல தன் சிறகை விரித்து குளிப்பாட்டிய குஞ்சுகளை நிறுத்தி குளிர்போக வைக்கும்.

லகு கரண்டிபோல் உள்ளதால் கரண்டிவாயன் என பெயர் இந்தப்பறவைக்கு. உடல் பால் போல வெண்மையாக இருக்கும். நான்கு முட்டை இடும். முட்டையிடும் காலத்தில் கழுத்துப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிற வளையம் அழகிலும் அழகு!

படம் உதவி:ஆர்.ஆர்.சீனிவாசன்

காணவில்லை: டானியலின் கல்லறை ஜனவரி 29, 2010

Posted by மு.வி.நந்தினி in ஆதவன் தீட்சண்யா, சேகுவேரா, தோழர் கே.டானியல், வெண்மணி.
Tags: , , ,
1 comment so far

ஆதவன் தீட்சண்யா

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியர். இலங்கை தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட கட்சியின் முன்னெடுப்பில் உருவான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். மார்க்சீய அறிதல்முறை மற்றும் தலித் உள்ளுணர்வின் வழியே சமூகத்தின் அடிப்படையையும் நிகழ்வுப் போக்குகளையும் விளங்கிக் கொண்டவர். தமிழர் என்ற பொது அடையாளத்திற்கு வெளியே தாழ்த்தப்பட்ட மக்களை நிறுத்திவைப்பதற்கு சாதியம் வழங்கிக் கொண்டிருந்த உளுத்துப்போன நியாயங்களையும் நடைமுறைகளையும் தனது எழுத்தாக்கங்கள் வழியே அம்பலப்படுத்தியவர். அவரது எழுத்துகள் அவரை தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி என்ற பெருமைக்கு உயர்த்தி நிறுத்தியுள்ளன. விழுங்க முடியாத முள் அல்லது மறக்க முடியாத சொல்லாக அவரது பெயர் மேலெழுந்து வந்தது. .மார்க்ஸ், தஞ்சை பிரகாஷ் போன்ற தமிழக எழுத்தாளர்கள் பலருடனும் தோழமை கொண்டிருந்தவர்

இப்படி சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு புரட்சிகரமான வாழ்வைக் கொண்டிருந்த தோழர் கே.டானியல், மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து 1986 மார்ச் 23 அன்று தஞ்சையில் காலமானார்.வெண்மணிக்குப் போய் அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு வரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமலே போய்விட்டதென்கிறார் அவரது உற்றத்தோழர் வி.ரி.இளங்கோவன். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளும் டானியல் நினைவுநாளும் ஒன்றுதான். டானியலின் கல்லறையை மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்தது. கடந்த சிலவருடங்களில் மாதம் ஒருமுறையாவது ஏதேனுமொரு வேலையாக தஞ்சாவூருக்குப் போய்வந்து கொண்டுதானிருக்கிறேன். டானியலின் கல்லறையை இம்முறையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஒவ்வொருமுறை போகும்போதும் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் நிகழ்ச்சிகள், அதற்குப் பிறகு தோழர்களுடனான சந்திப்புகள் என்று இருந்துவிட்டு கிளம்பி வந்து வண்டி பிடிப்பதே வழமையாய் இருந்தது. இம்முறையும் அப்படி வந்துவிட்டிருந்தால் மனம் தொந்திரவு அடைந்திருக்காது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.ஜனவரி 22 அன்று தஞ்சை மாவட்ட தமுஎகச செயலாளர் களப்பிரனின் தங்கை திருமணம். மண்டபத்திலிருந்து அறைக்குத் திரும்பி தோழர்கள் தஞ்சை சாம்பான், சோமலிங்கம் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கொஞ்சநேரத்தில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவும் திரைத்துறையில் பணியாற்றி வரும் தோழர் சசிகுமாரும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் எனது இலங்கைப் பயணம் குறித்து திரும்பியது. ( ஆதவன் எப்படி போய்வந்தார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று விஷமத்தனமாக பாவ.செயப்பிரகாசம் பழிபோட்டுக் கொண்டிருக்கிறாரே அந்த பயணம் பற்றியதுதான். அவருக்கு பதில் சொல்ல இதுவல்ல இடம். வேறு இடம் கிடைத்தாலும் அவரது ஊத்தை உளறல்களுக்கு பதில் சொல்லி ஆகப்போவதென்ன?) மலையகத்திலாகட்டும் கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திலாகட்டும் அங்குள்ள எழுத்தாளர்கள் மறைந்த தோழர் டானியல் மீது வைத்திருக்கும் ஈடுபாடு அளவற்றதாய் இருப்பதையும், ஹரிகிருஷ்ணனின் மணல்வீடு டானியல் சிறப்பிதழாக வெளியானதை அவர்களில் பலர் நினைவு கூர்ந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தேன். டானியலின் நாவல்கள் குறித்து புதுவிசையில் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரை, டென்மார்க்கிலிருக்கும் தோழர் கரவைதாசன் கொண்டு வரவிருக்கும் இனி இதழில் வி.ரி.இளங்கோவன், சிவசேகரம், சி.கா.செந்திவேல், எஸ்.சந்திரபோஸ் ஆகியோர் டானியல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் என்று அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த போதுதான், டானியல் கல்லறைக்குப் போவமா தோழர் என்று கேட்டேன். பிறகென்ன, ஐந்துபேரும் கிளம்பினோம்.

தஞ்சையின் ராஜகோரியும் அதையடுத்துள்ள இடுகாடும் திறந்தவெளி பீக்காடாக நாறிக் கொண்டிருக்கின்றன. உயிருள்ள மனிதர்கள் வாயில் மலத்தை திணிக்கிற கேடுகெட்ட நாட்டில் செத்தவர்கள் மேல் கழிந்துவைப்பதில் யாருக்கு என்ன வருத்தமிருக்கப் போகிறது? பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு அருகில்தான் டானியலின் கல்லறை என்று உறுதியாக தெரிவித்த சாம்பான் அவ்விடத்திற்கு அழைத்துப்போனார். (பாவம் திமுக. யாராவது ஒரு அழகிரியை மட்டும் பார்த்துக்கொள்கிற வலுவும் மனமும்தான் அதற்கிருக்கிறது போலும். பட்டுக்கோட்டை அழகிரியெல்லாம் இனி எதற்கு? சீந்துவாரற்று கிடக்கிறது அந்த கல்லறை).

தஞ்சை சாம்பானும், சசிகுமாரும் அங்குமிங்குமாக தேடிச் சலித்துவிட்டு கடைசியில் உதட்டைப் பிதுக்கி நின்றனர். இத்தனைக்கும் அவர்கள் ஏற்கனவே டானியல் கல்லறைக்கு வந்துபோனவர்கள்தான். ஆனால் அப்படியெதுவும் அங்கு தென்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டால் பானையைத் திறந்து யானையைத் தேடுகிற மாதிரி அவரும் சசியும் அங்குமிங்குமாக அலைந்தார்கள். ராவணன் என்கிற தோழரை செல்போனில் அழைத்து சரியான இடம் குறித்த விவரங்களைத் கேட்டுக்கொண்டு மீண்டும் தேடினோம். ஒருவேளை இவர்கள் சரியான இடத்தை மறந்திருக்கக்கூடும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

தோழர்..மார்க்ஸ் சரியான இடத்தை சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையில் அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. ஒருவேளை யாராவது இடித்துத் தள்ளியிருப்பார்களோ என்று யோசிக்கக்கூட எனக்கு தைரியம் வரவில்லை. சோர்வும் ஏமாற்றமும் பீடித்த மனநிலையோடு அறைக்குத் திரும்பிய கொஞ்நேரத்தில் தோழர் மார்க்ஸ் லைனில் வந்தார். விசயத்தை சொன்னதும் அவரும் பதறிவிட்டார். அவருக்கும் டானியலுக்குமான நெருக்கமும் தோழமையும் அப்படியானது. அழகிரியின் கல்லறைக்குப் பக்கத்தில் அதேவரிசையில்தான் டானியல் கல்லறை என்று உறுதியாக தெரிவித்தார். பிப்ரவரி 2ம் தேதி தஞ்சை வரவிருப்பதாகவும் அப்போது நேரில் சென்று பார்ப்பதாகவும் அவர் கூறியது சற்றே ஆறுதலாயிருந்தது. இடுகாடு முழுவதும் மண்டிக் கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப் பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன்.

தோழர்கள் சசியும் கீரனூர் ஜாகீர் ராஜாவும் அலைபேசியில் தெரிவித்த அண்மைச்செய்திகள்:

மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திற்காக தஞ்சை வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியனிடமும், எஸ்.தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்காக வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடமும் டானியலின் கல்லறைக்கு நேர்ந்துள்ள கதியை சசி எடுத்துரைத்திருக்கிறார். இதனிடையே தஞ்சை மாநகராட்சி உறுப்பினராயிருக்கும் சசியின் நண்பர் குமார், “உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் கல்லறையைக்கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லையே” என்கிற அவமானமும் ஆதங்கமும் கொண்டு இப்பிரச்னையை 25.01.2010 அன்று அவைக்கூட்டத்தில் எழுப்பியிருக்கிறார். டானியலின் கல்லறைக்கு நேர்ந்த கதியை தஞ்சை நாளிதழ்களும் கவனப்படுத்தி வெளியிட்டுள்ளன. டானியல் இப்போது ஒரு பேசுபொருளாகியிருக்கிறார் தஞ்சையில். “சரியான இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள், அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்கும் வகையில் மிகச்சிறப்பாக கல்லறையை எங்கள் செலவில் எழுப்பித் தருகிறோம் என்று பலர் முன்வந்திருப்பதாக சசி கூறிய தகவல் நெகிழ்ச்சியளிக்கிறது. புனரமைப்புக்கு உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் தோழரே என்று உயிர்மெய் தமயந்தியும் (நார்வே) கூறியிருக்கிறார்.தோழர் டானியலின் நினைவுநாளான மார்ச் 23 நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக இருந்து போராடி ஈட்டிய வெற்றிகள், அவரது நூல்கள், அவர் உருவாக்கிய அறிவுப் பாரம்பரியம், முன்னெடுத்த தலித் இலக்கியம் ஆகியவற்றின் வழியாக நம்முடனேயே இருக்கும் தோழர் டானியலுக்கு அவரது கல்லறையையாவது மீட்டுத்தர என்ன செய்யப்போகிறோம்? அந்த பீக்காட்டில் அவரது கல்லறையை மறுபடியும் தேடப்போகிறோமா அல்லது அவருக்குரிய மரியாதையுடன் புனரமைக்கப்பட்ட ஒரு கல்லறையின் முன் அஞ்சலி செலுத்தப்போகிறோமா என்பதை அரசாங்கமும், தஞ்சை மாநகராட்சியும்தான் இனி சொல்லியாக வேண்டும்.

கல்லறைகளைப் பற்றிய பிற நினைவுகள்…

) லண்டன் ஹைகேட் இடுகாட்டில் இருக்கும் காரல் மார்க்சின் கல்லறையைப் பார்க்க இப்படித்தான் நானும் ஷோபாசக்தியும் கீரனுடன் கிளம்பிப்போனோம் ஒரு சாயங்காலப் பொழுதில். சுடுகாட்டை பூட்டிவைப்பார்கள் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடுங்குளிர் காலமானதால் மாலையில் 4.30 மணிக்கே கதவடைத்துவிட்டார்கள். எதெதற்கோ சுவர் தாண்டுகிறவர்கள் இருக்க, மார்க்ஸ் கல்லறையைப் பார்க்க சுவரேறி குதித்தால் என்ன என்றுகூட யோசித்தோம். கீரன்தான் நாளைக்கு வருவோம் என்று சமாதானம் சொன்னார். பிறிதொருநாள் நானும் காண்டீபனும் போய் பார்த்தோம். யாரோவொரு தனிநபர்தான் தன் சொந்த செலவில் மார்க்சின் கல்லறையைக் கட்டியதாக சொன்னார்கள். அந்த கல்லறைத் தோட்டத்தில் 300 வருடங்களுக்கு முந்திய பல கல்லறைகளைக்கூட காணமுடிந்தது.

) கலை இலக்கிய ஆளுமைகளின் கல்லறைகள் ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் அழகுணர்ச்சியுடனும் பிரான்சில் பராமரிக்கப்படுவதை நேரில் கண்டு நெகிழ்ந்த அனுபவத்தை ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.) இலங்கை மலையகப்பகுதியில் வீறுடன் செயல்பட்ட செங்கொடி சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் அவர்களின் கல்லறையைப் பார்த்ததும்கூட இப்படியான ஒரு அனுபவம்தான். கடும் மழையில் சிக்கிக் கொண்டு வெகுவாக தாமதமாகி இருட்டும் நேரத்திற்குதான் அங்குபோய் சேர முடிந்தது. ஒரு தேயிலைத் தோட்டத்தினூடே நீளும் சாலையொன்றின் ஓரத்தில் சுந்தரத்தின் கல்லறை இருந்தது. தொழிலாளி வர்க்கத்திற்காக தோழர் சுந்தரம் ஆற்றிய பணிகள் குறித்து மரியாதை கொண்டிருந்த சிங்களவரான ஒரு கம்யூனிஸ்ட் தன் சொந்த செலவில் அந்த கல்லறையை கட்டியதாக தோழர்கள் ஜேம்சும் மகேந்திரனும் தெரிவித்தார்கள். தொழிலாளர்களை ஒடுக்கி தனக்கு ஆதாயம் தேடித் தந்த பெரிய கங்காணிகளின் கல்லறைகளை எஸ்டேட் நிர்வாகங்களே கட்டி வருடந்தோறும் நினைவுதினத்தை அனுஷ்டித்து வருவதும், தமக்காக உழைத்து மாண்ட ஒரு தலைவரின் கல்லறையை தொழிலாளிவர்க்கம் கண்டுகொள்ளாதிருப்பதும் ஏனோ இவ்விடத்தில் நினைவில் தோன்றி உறுத்துகிறது.) சேகுவேராவை கொன்றவர்கள் அவரை எங்கே புதைத்தார்கள் என்பது 30 வருடங்கள் கழித்தே வெளியுலகுக்கு தெரியவந்தது. கொன்றபிறகும் ஆத்திரமடங்காமல் சேவின் கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெடுத்துவிட்டு புதைத்தார்கள் என்கிற குறிப்புதான் கண்டுபிடிக்க உதவியாய் இருந்தது. தோண்டியெடுக்கப்பட்ட அவரது எலும்புக்கூடு வழியே உலகம் மீண்டும் சேகுவேராவை கண்டது.)டானியலின் கல்லறையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கு வருந்திய தோழர்.அழகிய பெரியவன், பெருநகரத்தின் கழிவுகளால் திணறி அழுக்கேறிப் போன கடலின் ஓரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமாதி முறையான பராமரிப்பின்றி இருந்ததைக் காணநேர்ந்ததாக கவலை தோயக்கூறினார்.

இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை ஜனவரி 8, 2010

Posted by மு.வி.நந்தினி in ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், சமூகம், சிங்கள ராணுவம், தமிழ், நேபாள மாவோயிஸ்ட்கள், போராட்டம், போர்ச்சூழல்.
Tags: ,
add a comment

மே 1′  2009ல் எழுதி காணாமல் போன ‘இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை’ கட்டுரையின் மறுபிரசுரம் இது…

”குடிக்கத் தண்ணி வேணும்” என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் ‘வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்’ என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான் அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை ‘திருடன்’ என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக் கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச் செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான். சிங்கள அரசியல்வாதிகள்தான் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் எனில் தமிழன் இன்னொரு தமிழனை கொல்வதை எந்த வகையில் சேர்ப்பது? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்’ என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும் சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார். என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும். ஈழத்தமிழர் போராட்டத்தையும் இன்னல்களையும் மலிவான அரசியலுக்காகப் பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகளைப்போல சாகச மனநிலையில் அணுகும் பெருங்கும்பல்கள் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கிறது என்ற ஷோபா சக்தியின் கூற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன் . உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது! இறுதியாக…எனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன் என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!

ஆழ்கடலில் திசைமாறிய படகு… December 31, 2009

Posted by மு.வி.நந்தினி in குடும்பம், சமூகம், சினிமா, பார்டான்ஸர், பாலியல் தொழிலாளி, பெண்கள்.
Tags: ,
2 comments

பார்டான்ஸர்களின் மறுபக்கம்

 கோயில் திருவிழாக்களில், அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில் இந்தப் பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்மிதமிஞ்சிய ஒப்பனையும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை. கேபரே டான்சர், டிஸ்கோ டான்சர் இன்னும் சில பல பெயர்களில் இவர்களை அழைக்கிறோம். இந்த நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறதா அல்லது அறுவறுக்க வைக்கிறதா என்கிற தர்க்கம்தான் இவர்கள் குறித்து நாம் காட்டும் அதிகபட்ச அக்கறையாக இருக்கும்! நிதர்சனத்தில் இந்த நடனப்பெண்களின் வாழ்க்கை ஆழ்கடலில் திசைமாறிப்போன படகு போன்றது. கரை திரும்புவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது! இதோ அவர்களுடைய வாக்குமூலங்கள்தான் அதற்கு சாட்சி

என் பேரு ஜோதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்தது, வளர்ந்தது சென்னையிலதான். தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படற குடும்பம். அப்பாவுக்கு சரியான சம்பாத்யம் கிடையாது. இதுலதான் அம்மா, நான், தம்பி, தங்கச்சிங்க வாழ்ந்தாவணும். ஏழாவதுக்கு மேல படிக்க இஷ்டமில்லாம போயிடுச்சி. அப்புறம் அக்கம் பக்கத்துல சின்ன சின்ன வேலைகளுக்கு போயிட்டு இருந்தேன். அப்படி வேலைக்குப் போன இடத்துலதான் அவரைப் பார்த்தது. அந்த வயசு நல்லது கெட்டதை யோசிக்கத் தெரியாது. நல்லா வச்சி காப்பாத்துவாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அவர் சரி கிடையாது. பிறந்த வீட்டிலேயாவது ரெண்டு வேலை சாப்பாட்டுக்கு வழி இருந்துச்சி. இங்க ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம, தினம் பட்டினியா கிடக்க வேண்டிய நிலை. அப்பதான் ஏரியாவுல தெரிஞ்ச ஒருத்தர்நீ ஏன் இப்படி கிடந்து கஷ்டப்படற? வெளிநாட்டுல டான்ஸ் ஆடப்போனா கைநிறைய பணம் கிடைக்கும். உன் செலவுக்குப் போக, தம்பி, தங்கச்சிங்களுக்கும் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கலாம்னு. முதல்ல துபாய்க்கு அழைச்சுட்டு போனாங்க. ‘லட்சக்கணக்குல பணம் கிடைக்கும். சேட்டுங்க நகையெல்லாம் போடுவாங்கன்னு நிறைய சொன்னாங்க. ஆனா அங்க நிலைமையே வேற. மூணு நாளைக்குள்ள டான்ஸ் ஆடி நூறு டோக்கன் எடுக்கணும். ஒரு டோக்கனுக்கு இவ்வளவு ரூபாய்னு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிச்சுடுவாங்க. டான்ஸ் பார்க்க வர்றங்க. நம்ம டான்ஸ் புடிச்சிருந்தா காசு கொடுத்து டோக்கன் வாங்குவாங்க. எந்த அளவுக்கு டோக்கன் அதிகமா வாங்கறமோ அந்த அளவுக்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடவே பணமும் கிடைக்கும். மூணு நாளைக்கு நூறு டோக்கன் எடுக்கணுங்கிறது முடியாத காரியம். அப்போதான் எங்களை அழைச்சிட்டு போன ஏஜெண்ட்டுகளோட நிஜ முகம் தெரிய ஆரம்பிக்கும். ‘டான்ஸ் ஆடி டோக்கன் எடுக்கலைன்னா என்ன? அதே காசை நாலு பேருக்கிட்ட படுத்து சம்பாதின்னு கட்டாயப்படுத்த ஆரம்பிப்பாங்க. எனக்கும் இதுதான் நடந்தது. நான் அதுக்கு சம்மதிக்கவே இல்லை. அடி-உதை, சூடுன்னு தினம் தினம் சித்திரவதை. ஒரு கட்டத்துக்கு மேல வந்தது வந்துட்டோம், நாம நிறைய சம்பாதிச்சு கொடுக்கப்போறதா நினைச்சுட்டு இருக்கிற குடும்பத்துக்கு நாம எதை செய்யப்போறோம்னு நினைச்சு நான் என் முடிவை மாத்திக்கிட்டேன் ஜோதியின் வார்த்தைகளில் வாழ்க்கையின் மீதான சலிப்பு தெரிக்கிறது.

” 12 மணி வரைக்கும் டான்ஸ் ஆடணும். அதுக்கு மேல 10, 20 பேருகிட்ட படுக்கச்சொல்வாங்க. துபாய்க்கு போறோம்னு தான் பேரு. ஏதோ ஒரு அபார்ட்மெண்ட்ல எங்களை தங்க வைப்பாங்க. 3 மாசம் இருந்தாலும் 3 வருஷம் இருந்தாலும் அந்த நாலு சுவத்தைதான் பார்த்துட்டு இருக்கணும். மெஷினைவிட கேவலமான வாழ்க்கை. இப்படியே தொடர்ந்தா பைத்தியம் பிடிச்சுடுமேங்கிற பயத்துல அங்கிருந்து வெளியேறணும்னு முடிவு செய்தேன். எவ்வளவோ கெஞ்சி கேட்டும் எங்களை அழைச்சுட்டு போன ஏஜெண்ட் விடலை. சென்னையில இருந்த நண்பர்கள் போலீசுக்குப் போயிடுவோம்னு மிரட்டியதால் என்னை பிளைட் ஏத்தி அனுப்பிவைச்சாங்க. இத்தனை கஷ்டத்துக்கும் பிறகு எனக்கு கிடைச்சது என்னவோ வெறும் ஐயாயிரம் ரூபாய்தான்!” என்கிற ஜோதி தற்சமயம் சென்னையில் உள்ள சில கிளப்புகளில் ஆடி வருகிறார். வெளிநாடுகளுக்கு போவதைவிட சென்னையிலேயே ஓரளவு பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறைவு என்பது ஜோதியின் கருத்து.

வெளிநாடுகள்ல டான்சுக்குன்னு கூப்பிட்டு போறதே மெயினா தொழில் செய்யறதுக்குதான். வடபழனி ஏரியாவுல இப்படி பெண்களை அனுப்பி வைக்கறதுக்கே ஏகப்பட்ட ஏஜெண்டுகள் இருக்காங்க. சினிமா ஆசையில ஜெயிக்கவும் முடியாம, வாழவும் வழியில்லாம தவிக்கிற பெண்கள்தான் இவங்களோட டார்கெட்!” என்கிற ஜோதியின் கூற்றுக்கு உதாரணம் காட்டுவதாக இருக்கிறது கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் அனுபவம்.

திருச்சியை பூர்விகமாகக் கொண்ட கவிதாவுக்கு படிப்பு ஒன்பதாம் வகுப்பு. வாழ்வு தேடி குடும்பத்தோடு சென்னை வந்தவர். சினிமாவில் மேக்கப் அசிசிஸ்டெண்டாக வேலை. “இந்த வேலைக்கு காலம் முழுக்க நூறு ரூபாய்தான் கிடைக்கும். கேபரே டான்ஸ் ஆடினா மூணு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிக்கலாம்என்ற ஆசை வார்த்தைகள் கவிதாவின் குடும்ப கஷ்டத்துக்கு வடிகாலாக இருக்க, கேபரே டான்ஸ் ஆடப்போனார்.

முதல்ல உள்ளூர்ல ஆடிட்டு இருந்தேன். வெளியூர் போன அதிகமா சம்பாதிக்கலாம்னு பாண்டிச்சேரிக்கு அனுப்பினாங்க. மூணு மாசம் அக்ரிமெண்ட். முன்னாடியே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டாங்க. நம்ம குடும்ப கஷ்டத்துக்கு விடிவு கிடைச்சுடுன்னு போனா.. கேபரே டான்சுக்கு இன்னொரு பக்கமும் இருக்குன்னு அப்புறம் தெரிய ஆரம்பிச்சது. வெறுமனே டான்ஸ் மட்டும் ஆடினா ஆயிரம் ஆயிரமா பணம் கொட்டிடாதுன்னு தொழில் செய்ய வற்புறுத்தினாங்க. வழக்கம்போல சித்ரவதை. வேற என்ன செய்ய முடியும்? அவங்க சொல்றமாதிரி கேட்க ஆரம்பிச்சேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகு அங்கேயிருந்து வெளியேறினேன்என்கிற கவிதா, தான் இப்படி பாலியல் தொழிலாளியாக மாறியது தன் வீட்டுக்கு தெரியாது என்கிறார்.

வெளியூருக்கு போகும்போது ஷூட்டிங் போறன்னு சொல்லிட்டு போவேன். இப்ப லோக்கல்லதான் ஆடிகிட்டு இருக்கேன். டான்ஸ் மட்டும் ஆடினா ரெண்டாயிரம், மூவாயிரம்தான் கிடைக்கும். தொழிலும் சேர்த்து செய்தா ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் எடுத்துட்டு வரலாம். திருவிழாவுலயும் ஆடப்போறேன். அங்கேயும் சில பேர் கேப்பாங்க. எனக்கு விருப்பம் இருந்தா போவேன். வேற வழியில்லாம இந்த வாழ்க்கைக்கு வந்துட்டோம்னு ஒவ்வொரு நாளும் வருத்தப்படறோம். இதுல இருந்து விடுபடணும்னு விரும்பறோம். ஆனா எங்களை மனுஷியாகூட சிலபேர் மதிக்கிறதில்லை. குடும்பத்தோடு கோயில், குளம்னு எங்காவது போயிருப்போம். புரோக்கருங்க அங்க வந்து வர்றீயான்னு கூப்பிடுவாங்க. புரோக்கருங்க மட்டும் இல்லை, வெளியூருக்கு போன இடத்துல யாருக்காவது நம்ம போன்நம்பர் கிடைச்சுட்டா போதும் சொல்ல முடியாத சித்ரவதைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அவங்க கூட போக விருப்பமில்லைனு சொல்லும்போது அவங்களால தாங்கிக்க முடியாது, அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சுடுவாங்கஎன்கிறார் கவிதா.

பதினாறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்திருக்கிறார் புஷ்பா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேலத்தை சேர்ந்த இவர், காதலின் பேரால் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அதனாலேயே சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர். வழி தேடி சென்னைக்கு வந்தவர், புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளால் படுகுழியில் விழுந்திருக்கிறார். திருவிழாவுக்கு நடனம் ஆடப்போன இடத்தில் பாலியல் தொழில் செய்ய வந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்க, கொடுமையின் உச்சகட்டமாக நான்கு பேர் கொண்ட கும்பல் புஷ்பாவை கட்டி வைத்து பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது. அதன் பாதிப்புகள் புஷ்பாவின் கண்களில் இன்னமும் உணரமுடிகிறது. இப்போது கேபரே டான்ஸர் என்பதோடு பாலியல் தொழிலாளியாகவும் உருமாறியிருக்கிறார் புஷ்பா.குடும்பத்தில் பணப்பிரச்னை, கணவன் அல்லது காதலனால் ஏமாற்றப்படுதல், சினிமா கனவு இதில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் கேபரே ஆடும் பெண்கள். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என துப்பறிந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் குற்றம் சொல்ல வேண்டியதிருக்கும். “மற்ற பெண்களைப் போல எங்கள் வாழ்க்கையும் மாறணும்என்கிற இந்தப் பெண்களின் அடிப்படை உரிமைக்கு மதிப்பளிப்பதே குற்றவுணர்ச்சியிலிருந்து நம்மை காப்பாற்றும்!

நன்றி : சூரியகதிர்

இலங்கை இப்போது… December 17, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இன உணர்வு, இலங்கை தமிழர், சமூகம், சூரியகதிர், தீட்சண்யா, புதுவிசை, போராட்டம்.
5 comments

தமிழ் இலக்கிய சூழலில் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டு எழுதிவரும் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. அதிகார வர்க்கத்தின் மீது தயங்காமல் விமர்சனம் வைக்கக்கூடியவர். சிறுகதை, கவிதை, கட்டுரை என இயங்கிவரும் ஆதவன், புதுவிசை என்கிற கலாச்சாரக் காலண்டிதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார். இவர் எழுதி பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி என இரு கவிதை நூல்களும் எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள், இரவாகிவிடுவாதலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை என இரு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன. மலையக மற்றும் இலங்கை தமிழர்களின் வாழ்நிலை குறித்து அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்திருக்கிறார் ஆதவன். சூரியகதிர் மாதமிருமுறை இதழுக்காக மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு ஆதவனின் பதில்

 
# இலங்கை பயணத்தின் நோக்கம் என்ன?  
நமது நேரடிச் சொந்தங்களான மலையகத்தமிழரை சந்திப்பது, இலங்கைத் தமிழர்களின் வடபகுதிக்குச் செல்வது- விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாகச் சொல்லிக்கொண்டு அந்த அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நிகழ்த்தி முடித்திருக்கும் அட்டூழியங்கள், அத்துமீறல்கள், படுகொலைகள் குறித்து நேரடியாக அறிவது, இன்றைய சூழலை விளங்கிக்கொள்வது, வாய்ப்பிருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களுக்கு சென்று நிலைமையை நேரில் அறிவது என்பவைதான் எனது பயணத்திட்டம். அக்டோபர் 8 முதல் 15 வரை கண்டி, மாத்தளை, ஹட்டன் ஆகிய மலையக நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றிய தோட்டங்கள். 16-18 கொழும்பு. 19-21 யாழ்ப்பாணம். 22 மாலை நாடுதிரும்பினேன். குழு விவாதங்கள். அந்தனி ஜீவா, ஜோதிகுமார், ரங்கன் போன்ற தோழர்கள் ஏற்பாட்டில் சிறியதும் பெரியதுமாக நடந்த 11 நிகழ்வுகளில் பங்கெடுத்தேன்.

 
# போருக்குப் பின் இலங்கை எப்படி இருக்கிறது? பாதுகாப்பு கெடுபிடிகள், மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை, அரசியல், ராணுவரீதியான போக்குகள்?
 நாட்டின் எந்த மூலையிலும் துண்டுத்துக்காணி இடத்திலும் மணல்மூட்டைகளுக்குப் பின்னால் தயார்நிலையில் குமிந்திருக்கிறது ராணுவம். போர் உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதான பீதியே நிலவுகிறது. குண்டுதுளைத்து பாழடைந்த கட்டிடங்கள், கைவிடப்பட்ட வீடுகள், அடர்ந்த புதர்கள் என்று எங்கு பார்த்தாலும் ஒரு துப்பாக்கிக்குழல் துருத்திக் கொண்டுள்ளது. எந்நேரமும் நம்மை கண்காணிக்கிறது ஒரு ராணுவக்கண். தினசரி ஒருமுறையாவது ராணுவச் சோதனைக்கு உட்படாமல் பொதுஇடங்களில் நடமாடும் சுதந்திரம் அங்கு ஒருவருக்கும் வாய்க்கவில்லை. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் 40 நிமிட விமானப்பயணம். ஆனால் பறப்பதற்கு முன்னும் பின்னுமாக ஒருவர் 6 மணிநேரம் ஆர்மிக்காரர் முன் கைகளை பக்கவாட்டில் விரித்துக்கொண்டு சோதனைக்கு நின்றாக வேண்டும். -9 பாதைவழியே கொழும்பு திரும்புவதற்கும் இதே பாடுதான். பயணிகளை மூட்டை முடிச்சுகளோடு இறக்கி சோதனையிடுவதும், அரசாங்க கட்டிடங்களுக்குள் நுழைகிறவர்களை அங்குலம் அங்குலமாக சோதிப்பதுடன் அவர்களின் செல்போன் காமிரா போன்றவை பறித்துவைத்துக் கொள்ளப்படுவதும், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரால் முள்வேலிகளால் தடுத்துவைக்கப்பட்ட பிரதேசங்களும் ஆட்சியாளர்களின் அச்சத்தையும் சந்தேகப்புத்தியையும் அம்பலப்படுத்துகின்றன. பிடிபடாமல் தப்பித்துவிட்ட புலிகள் என்ற சந்தேகத்துடனேயே பொதுமக்களை அரசாங்கமும் ராணுவமும் அணுகுகின்றன.
 முன்பேனும் ராணுவத்திற்கு புலிகள் என்ற திட்டவட்டமான கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் இருந்தார்கள். இப்போது எதிரி யாரென்றே தெரியாத நிலை. ஆனால் எவரொருவராலும் எந்தநேரத்திலும் தன் நாட்டுக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற தன்முனைப்பை விரைத்துநிற்கிற ஒவ்வொரு ராணுவச்சிப்பாயிடமும் பார்க்கமுடிகிறது. இந்த தன்முனைப்பு, வெறுமனே ஒரு ராணுவத்தானுக்கு உரியதல்ல. அது, நீ சிங்களவன், இது உன்னுடைய- உனக்கே உனக்கான நாடு- அதை பத்திரமாக பார்த்துக் கொள்வது உனது பொறுப்பு என்று இனவெறியேற்றப்பட்டவனின் மனநிலையிலிருந்து பிறக்கிறது. எனவே தன்னை கடந்துபோகிற ஒருவரை உயிரோடு அனுப்புவதோ தன் நாட்டுக்கு ஆபத்தானவர் என்று சுட்டுத்தள்ளுவதோ அந்த கணத்திலான அந்த சிப்பாயின் கருணையின்பாற்பட்டதாக இருக்கிறது. அவ்வாறு சுட்டுத்தள்ளினாலும் அதற்காக அவர் யாரிடமும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடு ஒன்றுமில்லை. அத்துமீறல்களை எதிர்க்கும் ஆற்றல்கொண்ட மக்களோ அமைப்புகளோ அங்கு இல்லை. மனிதசமூகத்தின் மேன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்யவேண்டிய இளைஞர்சக்தி சீருடையணிந்த ஒரு இனவெறிப் பட்டாளமாக திசை மாற்றப்பட்டுள்ளது. எதிரியை வேட்டையாடும் வன்மத்தையும் கனத்த ஆயுதங்களையும் சுமந்துகொண்டு தினமும் விரைப்பாக தயாராகி குறுக்கும் நெடுக்கும் உலாத்திக் கொண்டிருக்கிற அந்த சிப்பாய்களின் மனநிலையில் ஏற்படும் சிதைவுகள் அந்த சமூகத்தை என்னவாக்கப் போகிறது என்பது வெறுமனே உளவியல் பிரச்னை அல்ல. நம்மூரில் நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் ஊதாரித்தனமாக வைக்கப்படுவதை விடவும் பலமடங்குப் பெரியதான கட்அவுட்களில் ராணுவத்தினரின் மூர்க்கமான முகங்கள் அச்சமூட்டுகின்றன. ராஜபக்ஷே கட்அவுட்களில்கூட தனியாய் நிற்பதில்லை, ராணுவத்தினர் புடைசூழவே காட்சி தருகிறார். அரசாங்க விளம்பரங்களில்கூட ராணுவச் சிப்பாய்களின் படங்களே பெருமிதத்தோடு இடம் பெறுகின்றன. ராணுவத்தினரை கதாநாயகர்களாகக் கொண்டாடுவது அவர்களது வீரதீரச் செயல்களுக்காக அல்ல. அவர்கள் வெளிப்படுத்திய சிங்கள இனவாதத்திற்காகத்தான் என்பதை புரிந்துகொள்வது கடினமான விசயமல்ல. போரின் வெற்றியைக் கொண்டாடுவது என்ற பெயரால் ராணுவத்தை முன்னிறுத்தி சிங்களப் பெருமிதம் தொடர்ந்து விசிறிவிடப்படுகிறது. ராணுவத்தின் மீதான மக்களின் இந்த ஈர்ப்பை யார் அறுவடை செய்வது என்கிற போட்டியின் வெளிப்பாடுதான் இப்போது ராஜபக்ஷேவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையே முட்டித் தெறிக்கிறது. அந்த நாட்டில் இன்றுவரை நாடாளுமன்ற ஜனநாயகம் நீடித்திருப்பதாக அலட்டிக்கொண்டாலும் உண்மையில் அங்கு ராணுவம்தான் சமூகத்தை கட்டியாள்கிறது.
 யாழ்ப்பாணத்திற்குள் ஒருவர் நுழைவதோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதோ பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றால் மட்டுமே சாத்தியம். ( இந்த நிபந்தனை கடந்தவாரம் தளர்த்தப்பட்டிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது) யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு செல்கிற பேருந்துகளில் உங்களது இருக்கை எண்ணை ஒதுக்குவதும்கூட ஒரு சிப்பாய்தான் என்பதே நிலைமையை விளங்கிக்கொள்ளப் போதுமானது. வவுனியா செல்லும் பேருந்துகள் புறப்படும் இடம்கூட ராணுவத்திடம்தான் உள்ளது. 8.30க்கு புறப்படும் பேருந்தில் செல்கிறவர், அங்கு அதிகாலை 5.30 மணிக்கே சோதனைக்காக வரிசையில் நின்றாக வேண்டும். அங்குள்ள கழிப்பறைகளில்கூட தண்ணீர் கிடையாது. தமிழருக்கு தண்ணீர் ஒரு கேடா என்ற நினைப்பாயிருக்கும். ராணுவச் செலவுக்கான நிதிஒதுக்கீட்டை அதிகரிப்பது, ராணுவத்தினரின் எண்ணிக்கையை இப்போதுள்ளதுபோல் இரட்டிப்பாக்குவது என்ற ஆட்சியாளர்களின் முடிவுகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, வாழ்வியல் நெருக்கடி தாளாமல் ஒருவேளை சிங்களவர்கள் போராடத் தொடங்கினால் அவர்களுக்கும் எதிரானதுதான். மக்களைப் பொறுத்தவரை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க சிலர் கொடிய விஷப்பாம்புகளுடன் கண்ணாடி கூண்டுக்குள் வாழ்கிற சாகசத்தைப் போல இந்த ராணுவ கெடுபிடிக்குள் வாழப்பழகிவிட்டார்கள். முதல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் யாழ்ப்பாணம் இருக்கிறது. இப்போது தமிழர்களின் முழுப்பகுதியையும் ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. 9 பாதையில் பயணிக்கிறபோது ஆனையிறவு தொடங்கி ஓமந்தைவரைக்கும் ஒரேயொரு சிவிலியனைக்கூட காணமுடியவில்லை. அந்த நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருந்த எல்லா சிற்றூர்களும் கிளிநொச்சி போன்ற நகரங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கோயில்கள், தேவாலயங்கள், கல்விக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், தண்ணீர் தொட்டி எதுவும் மிஞ்சவில்லை. எத்தனையோ தலைமுறை தாண்டி பலன் கொடுக்கும் பனைமரங்கள் தலைவெட்டப்பட்டு மொட்டைமொட்டையாக ஆயிரக்கணக்கில் நிற்பதும் மனித நடமாட்டமற்ற பகுதிகளில் மாடுகள் கேட்பாரற்று அநாதைகளாக சுற்றியலைவதும் நெஞ்சையறுக்கும் காட்சிகள். ஆளரவமற்ற அந்த பாதை நெடுகிலும் நிறுத்தப்பட்டிருக்கும் சிப்பாய்களுக்கு இன்னும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள். அதேவேளையில் மக்களின் நண்பர்கள் என்று காட்டிக்கொள்கிற பகட்டுக்கும் குறைவில்லை. இழவுவீட்டாருக்கு நெருங்கிய உறவினர்கள் சாப்பாடு செய்து பகிர்வதுபோல, பொன்னாலைக்கட்டியான் என்ற தமிழர்கிராமத்தில் ஒரு இழவுவீட்டிற்கு ராணுவமுகாமிலிருந்து சாப்பாடு செய்து அனுப்பட்டதாம். முகாமிலிருந்து விடுவிக்கப்படுபவர்களுக்காக கட்டப்படவிருக்கிற அடுக்குமாடி குடியிருப்புகளில் சிங்களவர்களும் குடியமர்த்தப்படலாம் என்கிற அச்சம் இப்போதே உலவுகிறது. -9 பாதையின் இருமருங்கும் காட்டை அழித்து உருவாக்கப்பட்டுள்ள வெற்றிடங்களில் ராணுவ முகாம்கள் அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தமிழரல்லாதாரை குடியேற்றும் திட்டமும் அரசிடம் இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது. குண்டுசத்தமும் ஷெல்லடியும் ஓய்ந்திருக்கும் இன்றைய நிலை அமைதிக்கு பதிலாக ஒரு உறைந்த திகிலூட்டும் மௌனத்தையே கொண்டு வந்திருக்கிறது. மக்கள் இறுகிய மௌனத்தின் வழியாக எல்லாத்துயரங்களையும் கடக்க எத்தனிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் எஞ்சியிருக்கும் விதவைகளையும் அங்கவீனர்களையும் மனநிலைப் பிறழ்ந்தவர்களையும் பார்த்துப் பார்த்து மருகிப் போய் உறைந்து நிற்கும் அவர்கள் மனம் திறந்து பேச இன்னும் கனகாலம் செல்லும். இந்தப் போரை உசுப்பேற்றி கொன்றதில் நமக்கும் பங்கிருக்கிறது என்ற குற்றவுணர்வில் நாம் காத்திருக்க வேண்டியதுதான். அங்கிருந்து தமிழர்கள் வெளியிடும் சஞ்சிகைகள் எதிலும் ஈழப்போராட்டம், அல்லது ராணுவத்தின் அட்டூழியங்கள், முகாம்களில் வதைபடும் மக்களின் துயரம் என்று எதையும் பேரளவில் காணமுடியவில்லை. தணிக்கையும் சுயதணிக்கையும் அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தை அந்தளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறது. நாளிதழ்களில் ஓரளவுக்கு இதுகுறித்த செய்திகளைப் பார்க்க முடிந்தது.

# முகாம்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததா?

 யாழ்ப்பாணம் செல்வதே எனக்கு பெரும்பாடாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்கு முதல்முறையாக செல்பவர் விமானத்தில்தான் சென்றாக வேண்டும். விமான டிக்கெட் பெறவேண்டுமானால் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அனுமதிக் கடிதம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த ஏற்பாடுகளை தோழர்கள் ரங்கனும் அந்தனிஜீவாவும் செய்துகொடுத்தபோதும், எனக்கு 19ம் தேதிதான் டிக்கெட் கிடைத்தது. 22ம் தேதி நாடு திரும்பவேண்டிய நிலையிலிருந்ததால் முகாம் எதற்கும் செல்ல முடியவில்லை. ஆனால் முகாம்களில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்கள் சிலரை சந்தித்து அவர்களது துயரங்களை கேட்டறிய முடிந்தது. நான் தங்கியிருந்த விடுதியின் சமையல்காரரின் குடும்பம் 1996ல் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு குடிபெயர்ந்திருக்கிறது. மீன்பிடித்தொழில் அவர்களுக்கு. போர் உக்கிரமடைந்த நிலையில் காடுகளுக்குப் போகிறார்கள் புலிகளோடு. நிலவறைகளில் பதுக்கம். ராணுவம் அழித்து நொறுக்கி வரவர இவர்கள் மூட்டைமுடிச்சுகளோடு பத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஓடியோடிப்போய் பதுங்க வேண்டியிருந்திருக்கிறது. நடந்துவர முடியாத நோயாளிகள் வயோதிகர்கள் அங்கவீனர்களை அப்படியப்படியே பங்கருக்குள் கைவிட்டுவிட்டு ஓடியுள்ளனர். கைவிடப்படப்பட்ட அந்த பங்கர்களுக்குள் ஒருவேளை யாராவது உயிர் பிழைத்திருந்தாலும் கூட ஒருவருக்கும் தெரியப்போவதில்லை. இனி புலிகளை நம்பி உயிரையும் போக்கிக்கொள்வதில் அர்த்தமில்லை. எனவே படகேறித் தப்பித்து நேவியிடம் சரண். பின் முகாமில் வதிந்து ஆகஸ்டில் விடுவிப்பு. இப்போது அவர்களின் பிரச்னை, வீடு. வன்னிக்குப் போன அவர்களின் ஒரு குடும்பம் இப்போது ஐந்தாக பெருகி யாழ்ப்பாணம் திரும்பி நடுத்தெருவில் நிற்கிறது. தொழிலுக்குச் செல்ல படகோ வலையோ இல்லை. பணம் நகை எதுவும் மிஞ்சவில்லை. அவற்றை விற்றுத்தான் கடைசிநாட்களில் சீவித்திருக்கிறார்கள். எல்லாமும் தோற்றாகிவிட்டது. தெரிந்த தொழிலுக்கு அவர்களால் திரும்ப முடியவில்லை. நீர்மேலிருந்தவர் நெருப்புக்குள் கரிபடுகிறார். முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுகிறவர்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை. முப்பது ரூபாய்கு ஒரு டீ விற்கிற நாட்டில், அரசு கொடுக்கிற சிறுதொகையை வைத்துக்கொண்டு அந்த மக்கள் எப்படி மீண்டெழ முடியும்?

 # இலங்கை தமிழர்களின் நிச்சயமான வாழ்வாதாரம் குறித்து பேசாதநிலை தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்து ஏதேனும் முன்னெடுப்புகள் இலங்கையில் (அரசு அல்லாத) புலம்பெயர்ந்த இடங்களில் நடக்கிறதா?

 .) ஐரோப்பா அல்லது பிறநாடுகளில் அடைக்கலம் புகுந்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோர் ஐந்தாறு ஆண்டுகளில் அங்கு பொதுசமூகத்தோடு இணைந்து வாழவும் குடியுரிமை பெறவும் முடிகிறது. ஆனால் கால்நூற்றாண்டு காலமாய் தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் வதியும் இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் அகதிகள்தான் என்பதை எமது புதுவிசையில் தொடர்ந்து எழுப்பிவந்தோம். வவுனியா முகாமைப் பார்க்கப்போன நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைபேர் தமிழ்நாட்டிலுள்ள முகாம்களுக்கு சென்றிருப்பார்கள் என்பது தெரியவில்லை. அண்டி வந்தவர்களையே ஆதரிக்காத இந்த தமிழ்நாட்டு சமூகம் இலங்கைக்குப் போய் என்னத்த கிழிக்கப்போகிறது? கழுத்துநரம்பு புடைக்க ராஜபக்சேவையும் சிங்களவர்களையும் இங்கு வசைபாடித் திரிவதால் அங்குள்ள தமிழர்களுக்கு நன்மையேதும் விளையப் போவதில்லை.

) புலம்பெயர் நாடுகளின் புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் சிறுமைப்படுத்துவதன் மூலம் இலங்கையில் அமைக்கமுடியாத தனி ஈழத்தை இணையத்திலாவது அமைத்தே தீர்வோம் என்று மும்முரமாய் பாடுபட்டுக் கொண்டுள்ளனர். ஒரு இருபதாண்டுகள் கழித்து தனிஈழப் போராட்டம் பற்றி அறிந்துகொள்ளும் தரவுகளை இணையத்தில் தேடும் ஒருவருக்கு அங்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், தோல்விகள் எதற்கும் புலிகள் அமைப்போ தலைமையோ பொறுப்பல்ல என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் அதிரடியான அறிக்கைகளையும் இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்களையும் இணையத்தில் உலவவிடுவதோடு இவர்கள் பணி நிறைவு பெறுகிறது. எனவே இவங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் அவர்கள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை எட்டிவிட்டவர்களாக இருக்கிறார்கள்.

.) யாழ்ப்பாணத்தில் பெரியபெரிய பதாகைகளையும் கொடிகளையும் கட்டிக்கொண்டு தொண்டு நிறுவனங்கள் என்கிற ஃபண்டு நிறுவனங்களின் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் பறக்கின்றன. மாளிகை போன்ற பெரிய வீடுகள்தான் அவற்றின் அலுவலகங்கள். அரசியல்ரீதியான பிரச்னைகளை இந்த அமைப்புகள் கொடுக்கும் சோற்றுருண்டைகள் தீர்த்துவைக்க முடியாது. ஒருசில அமைப்புகளைத் தவிர மற்றவற்றுக்கு சுனாமி கொள்ளை போல இதுவும் ஈழமக்களின் பெயரால் கொள்ளையடிக்கும் வாய்ப்புதான்.

) புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் கொழும்பிலும் வாழக்கூடிய பொன்னாலைக்கட்டியான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து நிதிதிரட்டி போரினால் முற்றிலும் அழிந்துபோன தங்கள் ஊரை மீள கட்டியெழுப்புவதாக அந்த குழுவின் நிர்வாகி மருத்துவர்.ஞானகுமரன் தெரிவித்தார். இம்மாதிரியான முயற்சிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன.

) புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிறுகுழு இப்போதைய சூழலைப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டிய தளங்களை கண்டறிய முயற்சிக்கிறது. ராணுவரீதியில் பலவீனமாக இருந்த பல்வேறு நேரங்களில் அரசியல் தீர்வு, சமஸ்டிமுறை என்றெல்லாம் புலிகள் பேசியதைதான் இவர்களும் முன்வைக்கிறார்கள். அதற்காக துரோகிகள், அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்று தூற்றப்படுகிறார்கள். எனினும் அரசியல் உரிமைகளை அடையும் சக்திகள் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்துதான் உருவாக முடியும் என்பதை உணர்ந்து அதற்கான தொடர்புகளை மேற்கொண்டுள்ள இந்த சிறுபகுதியினர் நம்பிக்கையளிக்கின்றனர்.

 # விடுதலைப் புலிகள் இனிவிடுதலைப் புலிகள் குறித்து இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை என்ன-? அடுத்தக்கட்ட போருக்கு தயாராவோம் என்று இங்கிருந்து கிளம்பும் கோஷங்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கு

 பிரபாகரன் மீண்டும் வருவாராமே என்று அங்குள்ளவர்களிடம் கேட்டால், வரட்டுமே.. வந்து என்ன செய்யப் போகிறார்இத்தனை ஆயிரம் போராளிகளையும் இவ்வளவு ஆயுதங்களையும் பெருந்தொகையான பணத்தையும் வைத்துக்கொண்டே ஒன்றும் செய்ய ஏலாதவர் இனி வந்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். ஒருவேளை வந்தால் அவரும் ஒரு இணையதளத்தையோ பிளாக்கையோ அமைத்துக்கொண்டு அட்டைக்கத்திதான் வீசமுடியமேயன்றி ஆயுதத்தை தூக்கமுடியாது என்கிறார்கள்.யாழ்ப்பாணம் நாவலர் அரங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது ஒரு அன்பர் சொன்னார்- தமிழர்கள் மானஸ்தர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவர்கள் தனித்துவமானவர்கள், பிற இனத்தோடு சேர்ந்து வாழ முடியாதவர்கள், தனிநாட்டுக்கு குறைவான எதிலும் அவர்கள் திருப்தி கொள்ள முடியாது என்றெல்லாம் உங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேசுவது உண்மையென்றால், தனி தமிழ்நாட்டுக்காக போராட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இவர்களது வீராப்புக்கும் வெத்துச் சவடாலுக்கும் ஏன் எங்கள் உயிரையும் வாழ்வையும் பணயம் வைக்கிறார்கள்? என்று.வவுனியா முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கும் 1280 பேரை அழைத்துப்போக யாழ்ப்பாண நூலகத்தினருகில் உள்ள துரையப்பா ஸ்டேடியத்தின் வாயிலில் காத்திருந்த ஒரு கூட்டத்திடம் உரையாடிக் கொண்டிருந்தோம். ஒரு மீனவப்பெண் சொன்னார்- எத்தனை இம்சைஇன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையாலயே ( துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

 # இலங்கை தமிழர்கள் வாழ்வுரிமைக்காக நம்மைப் போன்ற வெளியில் இருக்கும் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? (அல்லது) இலங்கை தமிழர்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்?

வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும், அதுவே நீங்கள் செய்யும் பேருதவி என்பதுதான் அவர்கள் நமக்கு விடுக்கும் வேண்டுகோள். காடு அதிர்கிறது மீண்டும் எழுகிறது என்றெல்லாம் வீராவேசமாக இங்குள்ள பத்திரிகைகள் வெளியிடும் பரபரப்பு செய்திகள் கண்டு அவர்கள் பதறுகின்றனர். இப்படியான செய்திகள், தனது ராணுவ கெடுபிடிகளை நீட்டித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு உதவும் என்று கண்டிக்கின்றனர். ஒருவேளை அரசாங்கத்துக்கு இப்படி மறைமுகமாக உதவுவதுதான் இவர்களது உள்நோக்கமோ என்றும் சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவே இணையதளங்களிலும் யூடியூப்களிலும் வெளியிடப்பட்ட வீரதீர புகைப்படங்களையும் வீடியோக்காட்சிகளையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு தமிழனையும் உற்றுஉற்று பார்த்து சந்தேகிக்கும் ராணுவத்தாருக்கு உதவும் பொறுப்பற்ற பேச்சுகளையும் அறிக்கைகளையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்ற அவர்களது வேண்டுகோள் நம் தமிழ்த்தேச தலைவர்களின் இதயங்களை தைக்கவேயில்லை. இந்திய அரசாங்கம் ஏன் தமிழர்களை ஆதரிக்கவில்லை? இலங்கையின் ஒடும் வாகனங்கள் டாடாவும் லேலண்டும். இருசக்கர வாகனமென்றால் பஜாஜ், ஹீரோ ஹோண்டா, டி.வி.எஸ். தொலைத்தொடர்பில் ரிலையன்சும் ஏர்டெல்லும். நாடு முழுதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் பெட்ரோல் நிலையங்கள். அங்கிருந்த பெரிய சிமெண்ட் ஆலை இப்போது பிர்லாவிடம். நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்டங்கள் இந்தியருக்கு சொந்தம். இவையன்றி இலங்கையின் அன்றாடப் பயன்பாட்டில் புழங்கும் பொருட்களில் 90 சதமானவை இந்திய தயாரிப்புகள். தமிழர்கள் என்ற சிறுபான்மையினரை ஆதரித்து இலங்கை என்கிற இவ்வளவு பெரிய சந்தையை இழக்க இந்திய முதலாளிகளும் வர்த்தக நிறுவனங்களும் தயாரில்லை. இவர்களது சந்தை நலனுக்கு பாதிப்பில்லாத ஒரு அணுகுமுறையைதான் சோனியா, வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா என்று யார் ஆண்டாலும் கடைபிடிப்பார்கள்.

# மலையகத்தமிழர்கள் வாழ்நிலை என்னவாக உள்ளது?

இலங்கைக்குப் போய் திரும்பியிருக்கிறேன் என்றதும் எல்லோரும் யாழ்ப்பாண தமிழர்களைப் பற்றிதான் விசாரிக்கிறார்கள். ஆனால் இலங்கையில் ரயில்பாதை அமைக்கவும் பாலங்கள் கட்டவும் துறைமுகம் தோண்டவும் காப்பி தேயிலைப் போன்ற பெருந்தோட்டங்களில் வேலைசெய்யவும் 19 ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ்காரர்களால் பிடித்துச் செல்லப்பட்டு இன்று மலையகத்தமிழர் என்றழைக்கப்படும் நமது முன்னோர்களைப் பற்றி ஒருவரும் விசாரிப்பதேயில்லை. அவர்களும் தமிழர்கள். அவர்களது பூர்வீகம் என்ற இந்த தமிழ்நாட்டில் அவர்களுக்காக ஒரு கைப்பிடி மண்ணும் இல்லை. இருநூறாண்டுகளாக எஸ்டேட்டுகள் என்ற திறந்தவெளி சிறைச்சாலைக்குள்ளும் அனேக இடங்களில் முள்வேலிக்குள்ளும் அடைக்கப்பட்ட வாழ்க்கைதான் அவர்களுடையது. கடும் உழைப்புச் சுரண்டலுக்கு இன்றளவுக்கும் ஆளாகியிருப்பவர்கள். 83 வன்செயலின்போது சிங்களவர்களாலும் ராணுவத்தாலும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள். பல்லாயிரக்கணக்கான அடி உயரத்திலுள்ள மலைகளுக்கு தாங்களே பாதையமைத்து மேலேறிப் போனவர்களில் பலர் இன்னும் சமதளத்திற்கு இறங்கவேயில்லை. உயரங்களிலும் சிகரங்களிலும் வசித்தாலும் அவர்களது வாழ்க்கை அதலபாதாளத்தில்தான். ஒருவேளை மலையகத்தமிழர்களில் 87 சதமானவர்கள் தலித்துகள் என்பதோ, டாலரும் பவுண்ட்சும் இல்லாத கூலித்தமிழர்கள் என்பதோ அல்லது பரபரப்பாக கவனிக்கப்படாது என்பதாலோ அவர்களைப் பற்றி தமிழ்த்தேசியவாதிகளோ, இனமானக் காவலர்களோ, ஊடகங்களோ பேசுவதேயில்லை. இலங்கையின் மலையகத்தமிழர் பற்றி மட்டுமல்ல, உலகம் முழுவதும் தமது காலனிகளாயிருந்த 40 நாடுகளுக்கு பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டு மக்களை பிடித்துப்போயிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியர் அழைத்துச் செல்லப்பட்டதன் (?) 150வது ஆண்டு விழாவை வெட்கங்கெட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்திலாவது 40 நாடுகளுக்கும் புலம் பெயர்த்து கொண்டுபோகப்பட்ட தமிழர் நலன் குறித்த விவாதம் தொடங்கப்பட வேண்டும். இல்லையானால் ஈழத்தமிழருக்காக வடிக்கப்படும் கண்ணீரை கபடம் நிறைந்ததென்றே வரலாறு குறித்துக் கொள்ளும்.

நன்றி : சூரியகதிர் 

”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!” நவம்பர் 21, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், அலையன்ஸ் பிரான்சேஸ், இலங்கை தமிழர், கனிமொழி, குடும்பம், குட்டி ரேவதி, சமூகம், சாதி, சித்த மருத்துவர், சூரியகதிர், தமிழ், பெண்கள், லீனா மணிமேகலை.
Tags: , , , , , , ,
7 comments

 

photo : 'marakkanam' Bala

தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும் வருகிறார். சித்த மருத்துவர், புகைப்படக்காரர் என மேலும் பல முகங்கள் குட்டி ரேவதிக்கு…வெகுஜன பத்திரிகைகளில் இதுவரை பேசாத சில விஷயங்களை பேச வைக்க வேண்டும் என்ற முனைப்போடு குட்டி ரேவதியை அணுகியபோது ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார். நன்பகல் வேளை ஒன்றில் சென்னை அலையன்ஸ் பிரான்சேஸ் வளாகத்தின் மர நிழல்களுக்கிடையே நடந்தது இந்தச் சந்திப்பு…

”படைப்பாளி என்பவர் சமூகத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார்? பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது?”

எனக்குப் பிடிக்காததை இதுவரை வலிந்து செய்ததில்லை. தொலைதூரத்தில் தெரிகிற குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்ற திட்டமிடலும் இல்லை, எந்த அவசரமும் இல்லை. கவிதை எழுதுவது என் இயல்பு. கவிதையின் நீட்சியாக என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். தடாகத்தில் தூக்கி எறியப்படுகிற கல்போல படைப்புகளைச் சமூகத்தின் முன் வைக்கிறோம். அதிர்வுகள் பெரிதாக இருக்கலாம், சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், சமீப காலமாக தமிழ் படைப்பாளிகளுக்கு அதிகாரத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஈழம் சார்ந்து படைப்பாளிகளின் அணுகுமுறை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இங்கே போர் இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. சவுகர்யமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைப் போல படைப்பாளிகளும் மந்தமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் என… என் வாயால் அவர்கள் பேரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை – பெண் கவிதைகள் குறித்து இதுவரை அவர்கள் நேர்மையான அணுகுமுறையோடு விமரிசனம் செய்ததில்லை. இதை திட்டமிட்ட சதி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து இப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழும்போது, பின்னால் வரும் சந்ததிக்குப் பெண் கவிதை குறித்த வரலாறே தெரியாமல் போகலாம்!

”இலங்கை பிரச்சினையில் அரசியல்வாதிகளைப்போல இலக்கியவாதிகள் நடந்துகொண்டார்கள் என்கிற விமரிசனம் எழுந்துள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன?”

சமீபகாலமாக ஈழ வரலாறு குறித்து அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நமக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பூகோள ரீதியான உறவுகள், சமூக, வரலாற்று, அரசியல் உறவுகள் நெகிழ்வைத் தருகின்றன. இப்படிப்பட்ட எந்த வகையான புரிதலும் இல்லாமல் ஆறேழு மாதங்களாக இலக்கியவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கவியரங்கங்கள் கேலிக்கூத்தாகத்தான் இருந்தன. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற கொலைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாகத்தான் இவர்கள் நடந்துகொண்டார்கள். நம்முடைய தம்பியோ, அண்ணனோ காயப்பட்டிருந்தால் உடல், மனம் என சகலமும் துடித்திருக்குமே! அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா? இதைவிட அபத்தம், தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது? மொழியின் புளகாங்கிதத்தை பேசவா? தமிழ் மக்கள் குறித்தோ, பண்பாடு, இலக்கியம் குறித்தோ எந்தவித அறிதலும் அரசுக்குக் கிடையாது. நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை. 80,90 வயதுகளைக் கடந்த தமிழ் அறிஞர்களை வைத்து நடத்தப்படுகிற உலகத் தமிழ் மாநாட்டால் என்ன நடந்துவிடப்போகிறது? பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம்?! வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத வன்முறை ஈழத்தில் நடந்திருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகாலமும் இதுவெறும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டதாலேயே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நம் எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

 ”ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில், தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார். கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள், விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?”

சட்டம் போட்ட பிறகுதான் ஊடகங்கள் ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்பதில்லை. அரசுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு ஊடகங்கள் தன்னளவில் சுயமாக மக்களுக்காகச் செயல்பட முடியும். ஆனால், மனித மனங்களில் படிந்துபோயுள்ள வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவையாகத்தான் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்திலும் அனந்தலட்சுமி கொலை சம்பவத்திலும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் தன்மைக்கு ஏற்றபடிதான் ஊடகங்கள் செயல்படுகின்றனவே தவிர சமூக மாற்றத்துக்காக அல்ல. சமூகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஒருவர், தன்னை இருபால் விருப்பமுள்ளவர் என சொல்லிக்கொள்வது மீடியாவின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சி. சமூகத்தின் மீது ஆழமான பார்வை வைத்திருக்கிறவர்களால் மேலோட்டமாக போகிற போக்கில் இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டைக் கொடுக்க முடியாது.

”சமீப காலமாக ‘லிவிங் டுகெதர்’ என்று சொல்லப்படுகிற திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அதிகரித்து வருகிறது. இது திருமணம் என்கிற நிறுவன அமைப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறீர்களா..?”

நானும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வகையில், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது திருமண அமைப்புக்கு மாற்றாக இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால், முழுமையான மாற்றாக இருக்கும் என்று கூற முடியாது. பெண் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளுக்கும் திருமணம் என்கிற அதிகார அமைப்பின் முரண்பாடுகளுக்கும் இது தீர்வு தரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. ஆனால் திருமணம் என்பது காலில் போடப்பட்ட அடிமைச் சங்கிலி. அதனால், நல்ல ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை நான் வரவேற்கிறேன். இந்த வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆண்களுக்கும்கூட இது இறுக்கம் தளர்ந்த வாழ்க்கையாக இருக்கும். இருவருடைய வாழ்க்கையும் லகுவாக அமையும். விவாகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என லெனின் சொன்னது போலத்தான் இன்றைய திருமண வாழ்க்கை இருக்கிறது. விவாகரத்தும் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையும் நம் நாட்டில் கொடுமையான விஷயங்கள். ஆனால், திருமண அமைப்புக்குள் போகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விடுதலைக்கான கனவுகள் திறந்திருக்கும். பெரியார் சொன்னதுபோல, ‘ஐந்து வருடம் சேர்ந்து வாழுங்க. அதுக்குப்பிறகு குழந்தை வேணும்னு நினைச்சா பெத்துக்குங்க..!’

 ”இறுதியாக…நாடாளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றினீர்கள். இப்போது கட்சியிலிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் விலகலுக்கும் என்ன காரணம்..?”

அரசியல் ரொம்ப அவசியம். ஆனால் அதற்கு இன்னும் நான் தயாராகவில்லை! மக்களோடு இன்னும் கீழே இறங்கி வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. கூடவே தற்கால அரசியல் சூழலில் பெண்களுக்கான இடம் கேள்விக்குரியதாக இருக்கிறது. காலம் இருக்கிறது, மீண்டும் என்னுடைய அரசியல் பிரவேசம் எழுச்சியோடு நிகழும்!

நன்றி : சூரியகதிர்

பெண்களும் சாதி உணர்வும் நவம்பர் 2, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், குடும்பம், சமூகம், சாதி, பெண்கள், முத்துராமலிங்க தேவர்.
Tags:
10 comments

FACES

டந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். இந்த ஆண்டுதான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவை சென்னை எப்படி கொண்டாடுகிறது என்பதைக் காண முடிந்தது. சாதி வெறியின் அறுவறுப்பான கொண்டாட்டம்நீ முந்தி நான் முந்தி என ஓட்டுக் கட்சிகள் நடத்தும் ஆபாச கூத்துக்கள். முத்துராமலிங்க தேவரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் நந்தனம் வழியே அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் இந்த கேவலங்களை நேரடியாக பார்க்க முடிந்தது.அப்பட்டமான சாதிவெறிக் கொண்டாட்டம்கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த அந்த சிறுவர்களின் முகத்தில் அப்படியொரு வெறித்தனம்சாலையில் பிதுங்கி வழிந்த நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் ஒரு பெண் சாதி குறித்து சொன்ன அந்த பெருமித வார்த்தைகள் நினைவில் வந்து வந்து போயின.

திருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரியவர காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே நினைக்கிறவர்.

எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க தேவர் ஜாதிஅவர் வேற ஜாதிநாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்?

தான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றவும் செய்கிறார். பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும். பொதுவெளியில் கிடைக்காத சுதந்திரம் பெண்களை சாதி உணர்வற்றவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இது விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பெண்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பேசும்போது பெண்களுக்கும் சாதிக்குமான உறவு குறித்தும் பேச வேண்டும்

மீண்டும் எழுதுகிறேன்..! அக்டோபர் 15, 2009

Posted by மு.வி.நந்தினி in ஊடகம்.
7 comments

எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. காட்சி ஊடகப்பணி எனக்கு சரிவரவில்லை. மீண்டும் பத்திரிகைக்கே திரும்பியிருக்கிறேன். இது புதிய இதழ்… சூரிய கதிர்! எனக்கான வெளியும் சுதந்திரமும் நிரம்பவே கிடைக்கும் என நம்புகிறேன். நண்பர்களின் வாழ்த்துகளுக்காக காத்திருக்கிறேன்.

சிற்றிதழ்களை ஏன் படிக்க வேண்டும்..? மே 7, 2009

Posted by மு.வி.நந்தினி in உன்னதம், சிற்றிதழ் அறிமுகம், புதுவிசை.
Tags: , , , , , , , ,
11 comments

visai_wrapper_3604வெகுஜன பத்திரிகைகள் மூலமாகத்தான் எனக்கு சிற்றிதழ்கள் அறிமுகமானது. கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் பெயர்களை மட்டுமே அறிந்து  வைத்திருந்தேன்.  தினமணி இதழில் சில நாள் பயிற்சியின் நண்பனாகிப்போன தனபால் சிங், புக்லேண்ட்டுக்கு அழைத்துப்போய் சிற்றிதழ் உலகத்தை காண்பித்தவன். தொடக்க காலங்களில் சிற்றிதழ்கள் படிக்கும்போது என்ன இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றியதுண்டு. (ஆரம்பகால சிற்றிதழ் வாசகர் அத்தனை பேருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்) பிறகு படிக்கப்படிக்க எண்ணத்தில் தெளிவு வந்தது. நான் பத்திரிகை பணியை ஆரம்பித்தது பெண்கள் பத்திரிகை நிருபராகத்தான். அப்போது என்னுடைய சிற்றிதழ் படிக்கும் பழக்கம் சக ஊழியர்களிடையே கேலிக்குரிய விஷயமாக இருந்தது.  சமையல் குறிப்பு எழுதுவதற்கு எதற்கு இலக்கியம் படிக்க வேண்டும்?  மற்றவர்கள் குறித்து எனக்குத் தெரியாது… என்னுடைய எழுத்தும் சிந்தனையும் மேம்பட்டதற்கு சிற்றிதழ்களின் பங்கு கணிசமானது.

சில வருடங்களுக்கு  முன்பு பல நல்ல படைப்புகளைத் தாங்கி வந்த சிறுபத்திரிகைகள், இன்று இடைநிலை பத்திரிகைகளாக வளர்ந்துள்ளன. வரவேற்கத் தகுந்த மாற்றம்தான் எனினும் இந்த பத்திரிகைகள் சில சமயம், ஆங்கில பதிப்பகங்கள் மாதந்தோறும் வெளியிடும் புக்லெட்டுகளைப் போல இருக்கின்றன். இந்த பத்திரிகையில் இன்னின்னார்தான் எழுதுவார் என ஆரம்ப கட்ட வாசகனுக்கும் புரிந்துவிடும் அளவுக்கு, திரும்பதிரும்ப ஒருசிலரே எழுதுகிறார்.  பத்திரிகைகளே பதிப்பகம் நடத்துவது காரணமாக இருந்தாலும் ஒரே வகையான எழுத்துகளைப் படிக்க அலுப்புத் தட்டுகிறது. சில இதழ்களை படிப்பதையே நிறுத்திவிட்டேன்.

இடைநிலை விட்ட இடத்தை நிரப்பும் விதமாக புதுவிசை, உன்னதம் போன்ற  இதழ்கள் காத்திரமான  பொருட்செறிவுடன் வருகின்றன. தலித்தியம், பெண்ணியம், மொழிபெயர்ப்பு, புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் என எதிர்பார்ப்புகள் வீண்போகாத அளவுக்கு  விஷயங்களைத் தாங்கி வருகின்றன. இதுபோன்ற இதழ்களுக்கு பொருளாதார பின்புலம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக  ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.  உன்னதம் இதழைக் கொண்டுவர கெளதமசித்தார்த்தன் நிலங்களை விற்றுவிட்டதாக கேள்வி.  ஆதவன்தீட்சண்யாவும் தன் கைகாசிலேயே செய்கிறார், சில சமயம் நண்பர்கள் உதவக்கூடும். புதுவிசை காலாண்டு இதழாக வந்து கொண்டிருக்கிறது.  உன்னதம் பண இருப்பைப் பொறுத்து…

ந்த இதழ் உன்னதம் (ஏப்ரல் 09)  சாதியும் அரசியலும் சிறப்பு  இதழாக வந்திருக்கிறது. சாதி குறித்த தற்கால இருப்பை அறிந்து   கொள்ள படித்தாகவேண்டிய இதழ்.

unnatham_logo_100உன்னதம்

ஆலந்தூர் அஞ்சல்

கவுந்தப்பாடி-638455

ஈரோடு மாவட்டம்

பேசி-9940786278

புதுவிசை (ஏப்ரல் – ஜூன் 09) நடராசா சுசீந்திரனின் விரிவான நேர்காணலும் கோ.ரகுபதி எழுதிய தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம் என்ற கட்டுரையும் முக்கியமானவை.

புதுவிசை

பி-2 டெலிகாம் குடியிருப்பு

ஓசூர்-635109

தொலைபேசி: 04344 244933

நண்பர் ஜூலியனுக்கும் தமிழ்மணத்திற்கும் மே 3, 2009

Posted by மு.வி.நந்தினி in Uncategorized.
9 comments

நண்பர் ஜூலியன், உங்களுக்கு என்மேல் அப்படியன்ன பகையோ தெரியவில்லை…தொடர்ந்து நான் செய்ததற்கு, செய்யாததற்கு நீங்களாக அர்த்தம்  கற்பித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நேற்று  உங்களுடைய பதிவிற்கு ஒரு  பின்னூட்டம்  இட்டேன்.

“நண்பரே, என்னுடைய பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. பின்னூட்டம் போடவும் முடியவில்லை. இதற்கும் எனக்கும்  எந்த தொடர்பும் இல்லை. நடுவில் இரண்டு  நாட்களாக இணைய இணைப்பு வேறு  இல்லை. பின்னூட்டத்தை  அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஒரே ஒரு பின்னூட்டத்தை தவிர எனக்கு  வந்த  எல்லா பின்னூட்டங்களையும் தான் அனுமதித்திருக்கிறேன். உங்களுடைய கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்பதற்காக என்னை தனிப்பட்ட முறையில் ஏன்  தாக்குகிறீர்கள்?”

இந்த  பின்னூட்டத்தை  நீங்கள் அனுமதிக்கவில்லையா? அல்லது நான்  பின்னூட்டமிட்ட முறை சரியில்லையா? (பிளாக்கரில்  பின்னூட்டமிடுவது சற்றே புரியாமல்  இருக்கிறது) இன்னொன்றும் தெளிவுபடுத்துகிறேன் என் பெயரில்தான்  பின்னூட்டம் இட்டேன்.  அனானி,  புனைபெயரில் எழுதுவது எனக்கு உவப்பாகாத விஷயம்.  அதனாலேயே என் பெயரில் எழுதுகிறேன். யாரோ ஒருவர் பின்னூட்டமிட்டதற்கு நான் பொறுப்பாக முடியாது. என்னுடைய புறச்சூழல் காரணமாகவே என்னால் எல்லா பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்க முடியவில்லை. எனக்கும் ஆனந்த விகடனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களுடைய பெயரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். என்னைத்தான் தாக்குகிறீர்கள் என்றால் தொடர்புள்ளதாகக் கூறிக்கொண்டு அவர்களை ஏன் தாக்குகிறீர்கள்? என்னுடைய பதிவுக்கான எதிர்வினை என்பது போய் முழுக்க முழுக்க என்னைப்பற்றிய தனிப்பட்ட தாக்குதலில் நீங்களும் உங்கள் பதிவுக்கு பின்னூட்டமிடும் சிலரும் இறங்கியிருக்கிறீர்கள். நண்பர்களே நீங்கள் நினைப்பதுபோல் எவ்வித பக்கபலமும் எனக்கில்லை. தயவு செய்து உங்களுடைய அர்த்தமற்ற தாக்குதல்களை நிறுத்துங்கள். மாற்றுக்கருத்துக்களை நான் விரும்புகிறேன், வரவேற்கிறேன்.

தமிழ்மணத்திற்கு,உங்களுடைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே என்னுடைய பதிவை நீக்கியிருக்கிறீர்கள் என்று நினைத்துத்தான் அப்படி எழுதினேன். கோபத்துடனோ வருத்தத்துடனோ எழுதவில்லை. உங்களுடைய முடிவுகளுக்கு கட்டுப்படுகிறேன் என்ற அடிப்படையில் எழுதப்பட்டது. நீங்கள் நீக்கவில்லை எனில் தமிழ்மணம் நீக்கியதுஎன்று எழுதியதற்காக மன்னிப்புக்கேட்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நட்சத்திர அழைப்பை ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றுக்கும் நானேதான் பொறுப்பாக முடியும். உங்கள் மீது எந்த அவதூறையும் எழுதும் எண்ணம் இல்லை. ஏனெனில் தமிழ்மணத்தின் மூலம் அடைந்த அறிதல் ரீதியாக பலன்கள் நிறைய. பின்னூட்டமிடும் அனானி நண்பர்களுக்கு,

நீ எனக்கு இதை செய்துவிட்டாயா.. உன்னை எழுதிக்கிழிக்கிறேன் பார்!’ என்று மிரட்டிப் பிழைக்கும் பத்திரிகையாளர் அல்ல நான். அது என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். குற்றம் சொல்வதனாலும் பொருத்தமாக சொல்லுங்கள்.