பெண்களும் சாதி உணர்வும் நவம்பர் 2, 2009
Posted by மு.வி.நந்தினி in அரசியல், குடும்பம், சமூகம், சாதி, பெண்கள், முத்துராமலிங்க தேவர்.Tags: சாதி
8 comments

கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். இந்த ஆண்டுதான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவை சென்னை எப்படி கொண்டாடுகிறது என்பதைக் காண முடிந்தது. சாதி வெறியின் அறுவறுப்பான கொண்டாட்டம்…‘நீ முந்தி நான் முந்தி‘ என ஓட்டுக் கட்சிகள் நடத்தும் ஆபாச கூத்துக்கள். முத்துராமலிங்க தேவரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் நந்தனம் வழியே அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் இந்த கேவலங்களை நேரடியாக பார்க்க முடிந்தது.அப்பட்டமான சாதிவெறிக் கொண்டாட்டம்…கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த அந்த சிறுவர்களின் முகத்தில் அப்படியொரு வெறித்தனம்…சாலையில் பிதுங்கி வழிந்த நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் ஒரு பெண் சாதி குறித்து சொன்ன அந்த பெருமித வார்த்தைகள் நினைவில் வந்து வந்து போயின.
திருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரியவர காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே நினைக்கிறவர்.
‘எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது‘ என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க தேவர் ஜாதி…அவர் வேற ஜாதி…நாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்?‘
தான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றவும் செய்கிறார். பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும். பொதுவெளியில் கிடைக்காத சுதந்திரம் பெண்களை சாதி உணர்வற்றவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இது விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பெண்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பேசும்போது பெண்களுக்கும் சாதிக்குமான உறவு குறித்தும் பேச வேண்டும்…
மீண்டும் எழுதுகிறேன்..! அக்டோபர் 15, 2009
Posted by மு.வி.நந்தினி in ஊடகம்.5 comments
எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. காட்சி ஊடகப்பணி எனக்கு சரிவரவில்லை. மீண்டும் பத்திரிகைக்கே திரும்பியிருக்கிறேன். இது புதிய இதழ்… சூரிய கதிர்! எனக்கான வெளியும் சுதந்திரமும் நிரம்பவே கிடைக்கும் என நம்புகிறேன். நண்பர்களின் வாழ்த்துகளுக்காக காத்திருக்கிறேன்.
சிற்றிதழ்களை ஏன் படிக்க வேண்டும்..? மே 7, 2009
Posted by மு.வி.நந்தினி in உன்னதம், சிற்றிதழ் அறிமுகம், புதுவிசை.Tags: இந்துத்துவம், உன்னதம், சாதியின் அரசியல், சிற்றிதழ், சிற்றிதழ் அறிமுகம், தலித்தியம், நடராசா சுசீந்திரன், புதுவிசை, பெண்ணியம்
10 comments
வெகுஜன பத்திரிகைகள் மூலமாகத்தான் எனக்கு சிற்றிதழ்கள் அறிமுகமானது. கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் பெயர்களை மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். தினமணி இதழில் சில நாள் பயிற்சியின் நண்பனாகிப்போன தனபால் சிங், புக்லேண்ட்டுக்கு அழைத்துப்போய் சிற்றிதழ் உலகத்தை காண்பித்தவன். தொடக்க காலங்களில் சிற்றிதழ்கள் படிக்கும்போது என்ன இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றியதுண்டு. (ஆரம்பகால சிற்றிதழ் வாசகர் அத்தனை பேருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்) பிறகு படிக்கப்படிக்க எண்ணத்தில் தெளிவு வந்தது. நான் பத்திரிகை பணியை ஆரம்பித்தது பெண்கள் பத்திரிகை நிருபராகத்தான். அப்போது என்னுடைய சிற்றிதழ் படிக்கும் பழக்கம் சக ஊழியர்களிடையே கேலிக்குரிய விஷயமாக இருந்தது. சமையல் குறிப்பு எழுதுவதற்கு எதற்கு இலக்கியம் படிக்க வேண்டும்? மற்றவர்கள் குறித்து எனக்குத் தெரியாது… என்னுடைய எழுத்தும் சிந்தனையும் மேம்பட்டதற்கு சிற்றிதழ்களின் பங்கு கணிசமானது.
சில வருடங்களுக்கு முன்பு பல நல்ல படைப்புகளைத் தாங்கி வந்த சிறுபத்திரிகைகள், இன்று இடைநிலை பத்திரிகைகளாக வளர்ந்துள்ளன. வரவேற்கத் தகுந்த மாற்றம்தான் எனினும் இந்த பத்திரிகைகள் சில சமயம், ஆங்கில பதிப்பகங்கள் மாதந்தோறும் வெளியிடும் புக்லெட்டுகளைப் போல இருக்கின்றன். இந்த பத்திரிகையில் இன்னின்னார்தான் எழுதுவார் என ஆரம்ப கட்ட வாசகனுக்கும் புரிந்துவிடும் அளவுக்கு, திரும்பதிரும்ப ஒருசிலரே எழுதுகிறார். பத்திரிகைகளே பதிப்பகம் நடத்துவது காரணமாக இருந்தாலும் ஒரே வகையான எழுத்துகளைப் படிக்க அலுப்புத் தட்டுகிறது. சில இதழ்களை படிப்பதையே நிறுத்திவிட்டேன்.
இடைநிலை விட்ட இடத்தை நிரப்பும் விதமாக புதுவிசை, உன்னதம் போன்ற இதழ்கள் காத்திரமான பொருட்செறிவுடன் வருகின்றன. தலித்தியம், பெண்ணியம், மொழிபெயர்ப்பு, புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் என எதிர்பார்ப்புகள் வீண்போகாத அளவுக்கு விஷயங்களைத் தாங்கி வருகின்றன. இதுபோன்ற இதழ்களுக்கு பொருளாதார பின்புலம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. உன்னதம் இதழைக் கொண்டுவர கெளதமசித்தார்த்தன் நிலங்களை விற்றுவிட்டதாக கேள்வி. ஆதவன்தீட்சண்யாவும் தன் கைகாசிலேயே செய்கிறார், சில சமயம் நண்பர்கள் உதவக்கூடும். புதுவிசை காலாண்டு இதழாக வந்து கொண்டிருக்கிறது. உன்னதம் பண இருப்பைப் பொறுத்து…
இந்த இதழ் உன்னதம் (ஏப்ரல் 09) சாதியும் அரசியலும் சிறப்பு இதழாக வந்திருக்கிறது. சாதி குறித்த தற்கால இருப்பை அறிந்து கொள்ள படித்தாகவேண்டிய இதழ்.
உன்னதம்ஆலந்தூர் அஞ்சல்
கவுந்தப்பாடி-638455
ஈரோடு மாவட்டம்
புதுவிசை (ஏப்ரல் – ஜூன் 09) நடராசா சுசீந்திரனின் விரிவான நேர்காணலும் கோ.ரகுபதி எழுதிய தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம் என்ற கட்டுரையும் முக்கியமானவை.
புதுவிசை
பி-2 டெலிகாம் குடியிருப்பு
ஓசூர்-635109
தொலைபேசி: 04344 244933
நண்பர் ஜூலியனுக்கும் தமிழ்மணத்திற்கும் மே 3, 2009
Posted by மு.வி.நந்தினி in Uncategorized.8 comments
நண்பர் ஜூலியன், உங்களுக்கு என்மேல் அப்படியன்ன பகையோ தெரியவில்லை…தொடர்ந்து நான் செய்ததற்கு, செய்யாததற்கு நீங்களாக அர்த்தம் கற்பித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நேற்று உங்களுடைய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் இட்டேன்.
“நண்பரே, என்னுடைய பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. பின்னூட்டம் போடவும் முடியவில்லை. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நடுவில் இரண்டு நாட்களாக இணைய இணைப்பு வேறு இல்லை. பின்னூட்டத்தை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஒரே ஒரு பின்னூட்டத்தை தவிர எனக்கு வந்த எல்லா பின்னூட்டங்களையும் தான் அனுமதித்திருக்கிறேன். உங்களுடைய கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்பதற்காக என்னை தனிப்பட்ட முறையில் ஏன் தாக்குகிறீர்கள்?”
இந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்கவில்லையா? அல்லது நான் பின்னூட்டமிட்ட முறை சரியில்லையா? (பிளாக்கரில் பின்னூட்டமிடுவது சற்றே புரியாமல் இருக்கிறது) இன்னொன்றும் தெளிவுபடுத்துகிறேன் என் பெயரில்தான் பின்னூட்டம் இட்டேன். அனானி, புனைபெயரில் எழுதுவது எனக்கு உவப்பாகாத விஷயம். அதனாலேயே என் பெயரில் எழுதுகிறேன். யாரோ ஒருவர் பின்னூட்டமிட்டதற்கு நான் பொறுப்பாக முடியாது. என்னுடைய புறச்சூழல் காரணமாகவே என்னால் எல்லா பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்க முடியவில்லை. எனக்கும் ஆனந்த விகடனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களுடைய பெயரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். என்னைத்தான் தாக்குகிறீர்கள் என்றால் தொடர்புள்ளதாகக் கூறிக்கொண்டு அவர்களை ஏன் தாக்குகிறீர்கள்? என்னுடைய பதிவுக்கான எதிர்வினை என்பது போய் முழுக்க முழுக்க என்னைப்பற்றிய தனிப்பட்ட தாக்குதலில் நீங்களும் உங்கள் பதிவுக்கு பின்னூட்டமிடும் சிலரும் இறங்கியிருக்கிறீர்கள். நண்பர்களே நீங்கள் நினைப்பதுபோல் எவ்வித பக்கபலமும் எனக்கில்லை. தயவு செய்து உங்களுடைய அர்த்தமற்ற தாக்குதல்களை நிறுத்துங்கள். மாற்றுக்கருத்துக்களை நான் விரும்புகிறேன், வரவேற்கிறேன்.
தமிழ்மணத்திற்கு,உங்களுடைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே என்னுடைய பதிவை நீக்கியிருக்கிறீர்கள் என்று நினைத்துத்தான் அப்படி எழுதினேன். கோபத்துடனோ வருத்தத்துடனோ எழுதவில்லை. உங்களுடைய முடிவுகளுக்கு கட்டுப்படுகிறேன் என்ற அடிப்படையில் எழுதப்பட்டது. நீங்கள் நீக்கவில்லை எனில் ‘தமிழ்மணம் நீக்கியது‘ என்று எழுதியதற்காக மன்னிப்புக்கேட்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நட்சத்திர அழைப்பை ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றுக்கும் நானேதான் பொறுப்பாக முடியும். உங்கள் மீது எந்த அவதூறையும் எழுதும் எண்ணம் இல்லை. ஏனெனில் தமிழ்மணத்தின் மூலம் அடைந்த அறிதல் ரீதியாக பலன்கள் நிறைய. பின்னூட்டமிடும் அனானி நண்பர்களுக்கு,
‘நீ எனக்கு இதை செய்துவிட்டாயா.. உன்னை எழுதிக்கிழிக்கிறேன் பார்!’ என்று மிரட்டிப் பிழைக்கும் பத்திரிகையாளர் அல்ல நான். அது என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். குற்றம் சொல்வதனாலும் பொருத்தமாக சொல்லுங்கள்.
இறுதியாக… நன்றி! மே 2, 2009
Posted by மு.வி.நந்தினி in ஊடகம்.Tags: ஊடகம்
10 comments
நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தது எனக்காக மட்டுமே. எந்வொரு ஊடகத்திலும் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் கருத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டே எழுத வேண்டி இருக்கிறது. அது இங்கே இருக்காது என்பதாலேயே தொடர்ந்தேன். தமிழ்மணமும் ஒரு ஊடக நிறுவனமே என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. குறைந்தபட்சம் முன் அறிவிப்பை கொடுத்துவிட்டாவது என்னுடைய பதிவை நீக்கியிருக்கலாம். எனினும் என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்தமைக்கு நான் நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னிப்பு கோருகிறேன்… மே 1, 2009
Posted by மு.வி.நந்தினி in மன்னிப்பு.Tags: மன்னிப்பு
9 comments
நட்சத்திர பதிவராக குறைந்தபட்சம் தினம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் திட்டமிட்டிருந்தேன். புறச்சூழல் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்றாகக்கூடிக்கொண்டே இருக்கின்றன. நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இந்த நேரத்தில்தான் வீட்டுக்கு வண்ணம் பூச தோன்றியிருக்கிறது. குப்பைகளுக்கு நடுவே வாழ்வதுபோல இருக்கிறது இரண்டு வாரங்களாக. வீட்டில் உள்ள நாங்கள் சீக்காலிகளாகியும் உரிமையாளர் மனமிறங்கி வேலைகளை தூரிதப்படுத்தாமல் இருக்கிறார். நடுவே தோழியின் திருமணத்திற்காக சுற்றியது… எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு நாட்களாக இணைய இணைப்பு தூண்டிக்கப்பட்டிருக்கிறது.நாளைக்காவது பிரச்சினையை சரிசெய்து விடுவார்கள் என நினைத்து,இப்போது இன்டர் நெட் சென்டரிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து புதிய பதிவுகளை எதிர்பார்த்திருந்த, எதிர்பார்க்கும் நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை மே 1, 2009
Posted by மு.வி.நந்தினி in ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், போர்ச்சூழல், விடுதலைப் புலிகள்.Tags: இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம்
add a comment
“குடிக்கத் தண்ணி வேணும்“ என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் ‘வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்‘ என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான் அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை ‘திருடன்‘ என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக் கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச் செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான்.
? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்‘ என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும் சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார்.
என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
. உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது!
இறுதியாக…எனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன் என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!
ஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்முறை ஏப்ரல் 27, 2009
Posted by மு.வி.நந்தினி in ஆணாதிக்கம், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள், பெரியார்.Tags: ஃபிர்தவுஸ், எகிப்து, சூன்யப் புள்ளியில் பெண், தூக்கு தண்டனை, நவ்வல் எல் சதாவி, பாலியல் தொழிலாளிகள், பெரியார்
12 comments

“எந்தவொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்!”
- ‘சூன்யப்புள்ளியில் பெண்’ நாவலில் இருந்து…
பெண்ணிய சொல்லாடல்களும் பெண்ணிய புரட்சியும் காலந்தோறும் நடந்தபடியே உள்ளன. அவை அந்தந்த காலகட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவே தவிர, தொடர்ந்து பேரியக்கமாக வளர்ந்து மாபெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த தவறிவிடுகின்றன. சாதி ஒழிப்பு, பிராமணீய எதிர்ப்பு, பெண் விடுதலை உள்ளிட்ட புரட்சிக்கருத்தாக்கங்களை ஏற்படுத்தியவர் பெரியார். அவர் வழிவந்த திராவிட இயக்கம் அமைப்பு ரீதியாக வலுவாக வளர்ந்தும், திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால் பேரியக்கமாக வளரவேண்டிய பெரியாரின் கருத்துக்கள் நீர்த்துப்போய் வெறுமனே பிராமணீய எதிர்ப்பு என்பது மட்டுமாக எஞ்சி நிற்கிறது. சாதி ரீதியிலான ஒடுக்குதல்களும் பெண்கள் மீதான சமூக வன்முறைகளும் இன்று வடிவம் மாறி முன்பைவிட கொடூர முகத்துடன் வளைய வருகின்றன.
பெண்கள் கடல் தாண்டிப்போய் பணம் சம்பாதிக்கும் இக்காலக்கட்டத்திலும்கூட, ஒரு பெண்ணின் மறுமணம் என்பது கனவிலும் நினைத்துப்பார்க்கக்கூடாத விஷயம்தான்! எட்டு மாத கைக்குழந்தையானாலும் சரி, எண்பது வயது மூதாட்டியானாலும்சரி பெண்ணுடல் எப்போதும் இச்சைக்குரியதாகவே உள்ளது ஆண்களுக்கு. வீடு, பள்ளி,கல்லூரி, பணியிடம் என சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண் சுரண்டலுக்கு உள்ளாகிறாள். பெண் ஒடுக்குமுறை குறித்து நாம் நிறைய பேச வேண்டியுள்ளது. பெரியார் கருத்துக்களை கொண்டு செல்ல அவருடைய நிறுவன வழிதோன்றல்களால் இனி முடியாது என்னும் உண்மையோடு சூன்யப்புள்ளியல் பெண் நாவல் குறித்து எனது பகிர்தல்களை உங்கள் முன் வைக்கிறேன். சூன்யப்புள்ளியில் பெண் நாவலில் வரும் ஃபிர்தவுஸின் வாழ்க்கைச் சூழல், அவள் எதிர்க்கொள்ளும் வன்முறைகள் நம் சூழலுக்கும் பொருந்திப்போவதாலேயே நாவல் குறித்து பேச விரும்புகிறேன் .
எகிப்தின் நைல் நதியோரம் வாழும் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மூத்தவள் ஃபிர்தவுஸ். வறுமை சூழ்ந்த அந்த குடும்படும் அவளைச்சுற்றியுள்ள சமூகமும் சிறந்த அடிமையாக வாழ்வதற்கான அடிப்படையை குழந்தைப்பருவம் முதலே கற்றுக்கொடுக்கத் தொடங்குகின்றன. வீட்டு வேலைகளை செய்வதற்கும் உடன் பிறந்தவர்களை கவனிப்பதற்கும் தன் வீட்டிலேயே அடிமையாக பணிக்கப்படுகிறாள். எதிர்பாராத சூழ்நிலையில் அப்பாவும் தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட, உடன் பிறந்தவர்களும் வறுமை காரணமாக குழந்தைகளாகவே பலியாகிடும் போது மாமாவின் பராமரிப்பில் விடப்படுகிறாள் ஃபிர்தவுஸ். அவளின் குழந்தைமையை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட அதே மாமாவுடன் எகிப்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். மாமா தன்னை வேலைக்காரியாக, பாலியல் அடிமையாக நடத்தினாலும் பள்ளிக்கு அனுப்பி வைப்பவனாகவும் இருக்கிறான். நடுநிலைப்பள்ளி வகுப்புகளை முடிக்கும் ஃபிர்தவுஸை, அவசரஅவரசமாக 60 வயது கிழவனுக்கு கணிசாமான வரதட்சணைத் தொகைக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் மாமாவும் அவரது மனைவியும். குணத்திலும் உருவத்திலும் அருவருப்பை ஏற்படுத்தும் அந்தக்கிழவனின் அடிஉதைகளை தாங்கப்பொறுக்காமல் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள் ஃபிர்தவுஸ்.
மற்றவர்களை பசியில் விட்டு, தான் மட்டும் உண்டு ஏப்பம் விடும் அப்பா, அப்பாவுக்குரிய இடத்தில் இருந்துகொண்டு தன் உடலைச் சுரண்டிய மாமா, பேராசைப் பிடித்த கருமி கணவன் என அதுவரை எதிர்கொண்ட ஆண்களைவிட, வீட்டை விட்டு வெளிவந்த பிறகு ஃபிர்தவுஸ் எதிர்கொள்ளும் ஆண்கள் எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் அல்ல. வேலை வாங்கித்தருகிறேன் என்ற பெயரில் தானும் சுரண்டி, அவளை விற்பனை பொருளாக்குகிறான் ஒருவன். அவனிடமிருந்து தப்பித்துப்போனவள் முற்போக்கு பேசுபவனின் காதலில் விழுகிறாள். அவனுடைய முற்போக்குத்தனம் படுக்கை அறையை பகிர்ந்துகொண்டு, பணம் நிரம்பப் படைத்த இன்னொருத்தியுடன் செல்கிறது. சோர்ந்துபோகும் ஃபிர்தவுஸ், மேல்தட்டு வர்க்க பாலியல் தொழிலாளி ஒருத்தியின் மூலம் தன்னுடலுக்குரிய விலையை தானே நிர்ணயிப்பவளாக மாறுகிறாள். அன்பு, காதல் என்ற பெயரில் இலவசமாக தன்னைப் பயன்படுத்திக்கொள்ள இனி ஒருபோதும் எந்த ஆணையும் அனுமதிப்பதில்லை என முடிவெடுக்கிறாள். அரபு மன்னர்களையும் அரசு உயர்பதவியில் இருப்பவர்களையும் மகிழ்விக்கும் தேர்ந்த மேல்தட்டு பாலியல் தொழிலாளி ஆகிறாள் அவள். தனக்குரிய தானே நிர்ணயித்து வாழ்ந்து கொண்டிருப்பவளின் வாழ்க்கையில் அரசியல் செல்வாக்குமிக்க தரகனின் தலையீடு ஏற்படுகிறது. தனக்குரிய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க முடியாதவளாய் சந்தர்ப்ப வசத்தில் தரகனை கத்தியில் குத்திக் கொல்கிறாள். ஃபிர்தவுஸை கைது செய்து குற்றவாளியாக்கி தூக்கு தண்டனை விதிக்கிறது அரசு. நீதி வலுபடைத்தவர்களுக்கானது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.
எகிப்து உளவியல் மருத்துவரும் பெண்ணிய எழுத்தாளருமான நவ்வல் எல் ஸதாவி சிறையில் இருந்தபோது சந்தித்த தூக்கு தண்டனைக் கைதி ஃபிர்தவுஸ். ஓர் எளிய விவசாயப் பின்னணியில் ஆரம்பிக்கும் ஃபிர்தவுஸின் வாழ்க்கை திசை மாறி இறுதியில் அசாதாரணமாக முடிகிறது என்பதை அழுத்தமாக கூறுகிறது இந்நாவல். ஆரம்பத்திலும் நாவல் முடியும்போது மட்டும் ஆசிரியர் வந்துபோகிறார். மற்றபடி நாவல் முழுக்க ஃபிர்தவுஸின் பார்வையிலேயே செல்கிறது, சுயசரிதைக்குரிய நடையுடன். ஃபிர்தவுஸின் மனஉணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது நவ்வலின் எழுத்து.
ஃபிர்தவுஸின் வாழ்க்கையில் சற்றுநேர பூன்னகையைப் பூக்க வைத்தவர்கள் பால்ய வயது தோழனும் நடுநிலைப் பள்ளியில் வகுப்பு ஆசிரியை இக்பாலும்தான். தன் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டத்திலும் சூன்யமாக்கியது ஆண்களே என்பது ஃபிர்தவுஸின் நிலைப்பாட இறுதியில் நிற்கிறது. பெண்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆண்தான் பின்னணி என்பது அவள் முன்வைக்கும் முடிவு. “நீங்கள்(ஆண்கள்) எல்லோரும் பயங்கர குற்றவாளிகள். நீங்களெல்லோருமே அப்பாக்கள், மாமாக்கள், கணவர்கள், தரகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், எல்லாவகையான தொழில்களை செய்யும் எல்லா ஆண்களும்…”
ஆண்வயப்பட்ட சமூகத்தில் பெண்ணுடல் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு ஆவணமாக இருக்கிறது இந்நாவல். இதுபோன்ற ஆயிரம் ஆவணங்களை நம் சமூகத்திலிருந்தும் எடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டுவதே இந்நாவல் குறித்த எனது இந்தப்பதிவின் நோக்கம். மறுக்கிறவர்கள் தினத்தந்தி கட்டம்கட்டி எழுதும் “அழகி பிடிபட்டார்” கதைகளைப் படிக்காமல் அழகிகளின் மறுபக்கத்தைப் படித்துப் பாருங்கள்!
சூன்யப் புள்ளியில் பெண்
நவ்வல் எல் சதாவி
ஆலந்தூர் அஞ்சல்
கவுந்தப்பாடி
ஈரோடு மாவட்டம்
நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை! ஏப்ரல் 27, 2009
Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், சமூகம், செப்டம்பர் 11, நேபாள மாவோயிஸ்ட்கள், புதுவை சுகுமாறன், போராட்டம், போர்ச்சூழல், விடுதலைப் புலிகள்.Tags: அரசியல், ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர் பிரச்சினை, செப்டம்பர் 11, நேபாள மாவோயிஸ்ட்கள், விடுதலைப் புலிகள்
48 comments
தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன பேசினாலும் நம்முடைய சார்பு நிலையில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அதாவது புலிகளுக்கு ஆதரவு-இலங்கை தமிழருக்கு ஆதரவு அல்லது புலிகளுக்கு எதிர்ப்பு-இலங்கை அரசுக்கு ஆதரவு. இவை இரண்டைத்தவிர மற்றொரு நிலைப்பாடும் இருக்கக்கூடும், தேவையாக இருக்கிறது என்பதை பலரும் சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல்கொண்டு ஊடகங்கள் வரை தங்கள் ஆதாயத்துக்குகேற்றபடி நிலைப்பாட்டினை எடுக்கின்றன. பொதுபுத்தியில் படிந்துபோயுள்ள தமிழர் என்கிற இனவுணர்வைத் தூண்டி ஆதாயம் பெறப்பார்க்கின்றன. அறிவுஜீவிகள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களின் செயல்பாடும் இப்படித்தான் உள்ளது. சாதி உணர்வு, மத உணர்வு எந்த அளவுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு கண்மூடித்தனமான இன உணர்வும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதே.
இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதை விட்டுவிட்டு அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதுதான். இன்னும் பல தசாப்தங்களுக்கு போரை நடத்திக்கொண்டிருப்பதா? போர் முடிவுக்கு வரும்பட்சத்தில் தமிழர், இலங்கையில் நிலையான அமைதியோடு வாழ வழிவகை என்ன? நம்முன் இருக்கும் கேள்விகள்…
நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஆயுத ஏந்திய மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையை இலங்கை பிரச்சினையில் புலிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? நேபாளத்தில் மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் பிரச்சினைகள் என்றால் இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினை என்று மேலோட்டமாகப்பார்த்து தள்ளிவைக்காமல் இது குறித்து சிந்தனையும் விவாதமும் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு நேபாள அரசியல் நிர்ணநய சபைக்கான தேர்தலுக்குப் பார்வையாளராக சென்று வந்திருந்த புதுவை சுகுமாறனிடம் நான் கண்ட நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது. நான் பணியாற்றிய வார இதழில் வெளியானது . சூழ்நிலை கருதி மீள்பிரசுரம் செய்கிறேன்.
மக்கள் ஆட்சியா, மன்னர் ஆட்சியா என்று புயல் வீசிக்கொண்டு இருந்த நேபாளத்தில் இப்போது ஜனநாயகக் காற்று! பத்தாண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டத்தின் முடிவில், மாவோயிஸ்ட்கள் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலின் பார்வையாளராகச் சென்று வந்த மனித உரிமை ஆர்வலர் புதுவை கோ.சுகுமாறனுடன் ஒரு சந்திப்பு…
”ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்பான மாவோயிஸ்ட்கள் நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று?”
”நேபாள மக்களின் ஒரே வருமானம் சுற்றுலாதான். காட்மாண்டு நகரம், இரண்டு மலைகளுக்கு நடுவே கோடையிலும் கொப்பளிக்கும் நாராயணி ஆறு. இந்த இரண்டும் கொள்ளை அழகுடையவை. இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும்தான் நேபாளத்தின் உண்மையான முகம். விவசாயம் நொடித் துப்போன பல லட்சம் பேர் கூர்க்காக்களாக, இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் கிளம்பிவிடுகிறார்கள். கடந்த 240 ஆண்டுகளாக மன்னரைக் கடவுளாக நினைத்து, அவர் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் நேபாள மக்கள். 1996ல் மன்னர் குடும்பத்துக்குள்ளேயே நடந்த படுகொலைகள் அந்த நம்பிக்கையை முதன்முறையாகத் தகர்த்தன. அதன் பிறகுதான் கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் மாவோயிஸ்ட்கள். கடந்த பத்தாண்டுகளாக நடந்த போராட்டத்தில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 ஆயிரம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, மூன்றாவது முறையாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இப்போது நடந்தது. மாவோயிஸ்ட்கள் இதில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வென்றதற்கு அரசியல்ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தாலும் அடித்தட்டு மக்களை ஒன்றிணைத்ததுதான் முக்கியமான காரணம்! தேர்தல் மிக அமைதியாக நடந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித ஓட்டுப்பதிவு நடந்தது. ரொம்பவும் சாதாரணமாக மரத்தடியில் ஓட்டுப் பெட்டியை வைத்திருந்தார்கள். ஓட்டு எண்ணுவதும்கூட அதீத பாதுகாப்பு இல்லாமல் எளிமையாக, நேர்மையாக நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி என்பது, நேபாள மக்களின் அமைதிக்குக் கிடைத்த வெற்றி!”
”ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பியிருக்கும் மாவோயிஸ்ட்கள், இதே நிலையைத் தொடர்வார்களா?”
”செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்தது அமெரிக்கா. இதனால், விடுதலைப் புலிகள் உள்பட பல போராட்டக் குழுக்கள் அந்தந்த நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. நேபாள மாவோயிஸ்ட்கள் மட்டுமே இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டவிடம், ‘ஜனநாயகப் பாதையில் நீடிப்பீர்களா?’ என்று கேட்டோம். ”ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் ஆயுதம் தூக்கினோம். இனி, அது தேவைப்படாது. ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்” என்றார்.”
”நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை இந்தியா எப்படிப் பார்க்கிறது?”
”ஒருவகையில் இது இந்தியாவுக்குக் கிடைத்த அடிதான். மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைவதை ஒருவித படபடப்புடன்தான் பார்க்கிறது இந்தியா. நேபாளத்தில் செல்வாக்கான கட்சியான மாதேஸி கட்சி, ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் பங்கேற்க மறுத்து வந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை இருப்பதாகச் சொல்கிறார்கள். அரண்மனையிலிருந்து வெளியேறப்போகும் நேபாள மன்னரை இந்தியாவில் தங்கவைக்க இந்திய அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். அதை மாவோயிஸ்ட்கள் விரும்பவில்லை. இதுவரை சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்கிறார்கள். இந்தியா என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்!”
”நேபாள மாவோயிஸ்ட்களின் இந்த வெற்றி, மற்ற ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு வழிகாட்டுமா?”
”நிச்சயமாக! 1983லிருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளால் இதுவரை அமைதியை எட்ட முடியவில்லை. காரணம், மாவோயிஸ்ட்களைப் போல நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த முன்னுதாரணத்தைப் பரிசீலிக்கச் செய்ய வேண்டிய நேரம் இது!”
14-5-08
லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி! ஏப்ரல் 13, 2009
Posted by மு.வி.நந்தினி in அரசியல், இந்துத்துவம், ஒரிசா, கந்தமால், பழங்குடிகள், பா.ஜ.க. வேட்பாளர், லக்ஷ்மணானந்தா கொலை.Tags: இந்துத்துவம், கந்தமால், பா.ஜ.க. வேட்பாளர், லக்ஷ்மணானந்தா கொலை
8 comments

ஒரிசாவில் இந்துத்துவம் - பின்னணி
ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் ‘இந்துத்துவ‘ தீவிரவாதத்திற்கு உதாரணமாகும் சிறப்புத் தகுதி உடையது. காலங்காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் தலித்துகளும் பழங்குடிகளும் இம்மாவட்ட மக்கள். கிறித்துவ மிஷனரிகள் தலித், பழங்குடிகள் மத்தியில் பணியாற்றிவருகிறார்கள். விளைவாக மதமாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பழங்குடிகள் கிறித்துவர்களாக மாறும்போது பழங்குடிகளுக்குண்டான அரசாங்க உரிமைகள் அத்தனையும் கிடைக்கும் என்பதும் தலித்துகள் கிறித்துவர்களாக மாறும் தலித்துகளுக்குரிய உரிமைகள் இல்லை, அதனால் மிஷனரிகள் பிரத்யேக உரிமைகளை தலித்துகளுக்குப் பெற்றுத்தர முயற்சித்தார்கள் என்பதும் இங்கு தலித்-பழங்குடிகளிடையே புகைச்சல் ஏற்பட்டதன் பின்னணி. இதை ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க போன்ற இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. இந்த புகைச்சலை ஊதிப்பெரிதாக்கிள எரிய விட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தன். 1994 முதல் தலித்-பழங்குடி மோதல் கிறித்துவர்கள்-இந்துக்கள் இடையேயான மோதலாக உருவெடுத்தது. விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆஸ்ரமங்கள் என்ற பெயரில் கந்தாஸ் பழங்குடி இன மக்களை வன்முறையாளர்களாக இந்துத்துவ ரவடிகளாக மாற்றத் தொடங்கியது. இதில் முக்கியமானவர் லக்ஷ்மாணனந்தா சாமியார் 1960களிலே கர சேவை செய்வதற்காக கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்தவர். கிறித்துவத்துக்கு மாறும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பழங்குடி மக்களை இந்துத்துவ விஷத்தை ஊட்டி ஏவி விட்டுக்கொண்டிருந்தவர். கிறித்துவதுக்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை ‘தாய்‘ மதத்திற்கு திருப்புவதுதான் பல பத்தாண்டுகளாக இவர் செய்து வந்த குறிப்பிடத்தகுந்த மற்றொரு வேலை!
கிறிஸ்துமசுக்கு முன் தினமான டிசம்பர் 24, 2007ல் சதாரணமாக இருதரப்பினருக்கிடையே ஆரம்பித்த வாய்ச்சண்டை கிறித்துவ தலித்துகளுக்கு எதிராக பெரும் கலவரமாக வெடித்தன் பின்னணியில் லக்ஷ்மணானந்தா சாமியார் இருந்ததாக கைகாட்டுகிறார்கள். சர்ச்சுகளுக்கு முன்பு தலித் கிறித்துவர்கள் உயிரேடு கொலுத்தப்பட்டது, கிராமம் கிராமமாக கிறித்துவர்களின் வீடுகள்,இருந்த சுவடே தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டது, குழந்தை,பெண்கள் உள்பட பல கிறித்துவர்கள் தேடிக் கொல்லப்பட்டது என வன்முறைகள் ‘இந்துத்துவ‘ தீவிரவாதிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்டன. (தலையில் காவித்துணி கட்டி, இரண்டு கைகளும் வாள் ஏந்தி விண்ணை அதிரவைக்கும்படி கூவிக்கொண்டு வன்முறையை காட்டிய ஒரு ‘காவித்தொண்ட‘ரின் புகைப்படம் அத்தனை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கலாம்!) பா.ஜ.க ஆதரவோடு ஆட்சியை அலங்கரித்துக்கொண்டிருந்த நவீன் பட்நாயக் அரசு வன்முறையை தடுத்து நிறுத்தும் நோக்கில் எதுவும் செய்யவில்லை, கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அந்த தாக்குதலின் போது சேதமான வீடுகள்கூட இன்னும் அங்கே சீரமைக்கப்படவில்லை.
லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி!
கடந்த வாரம் என்னுடைய தோழியை சந்திப்பதற்காக எத்திராஜ் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். தோழியை பார்க்க நேரமெடுத்ததில் எதிரே இருந்த ஷாப்பிங் காம்ளக்ஸ்சுக்குள் நுழைந்து பராக்கு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் காப்பிகள் கண்ணில் பட்டன. ‘லக்ஷ்மணானந்த படுகொலை - யார் கொலையாளி?’ தலைப்பில் எஸ்.குருமூர்த்தி துக்ளத் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் நகல்கள் அவை. அந்தக்கடைக்காரர் காவித்தொண்டர் போலும் இலவச விநியோகம் செய்துகொண்டிருந்தார்.
ஆகஸ்ட் 2008ல் லக்ஷ்மணானந்தா என்ற விஷ்வ ஹிந்து பரிஷத் சாமியார் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் குருசாமி. கட்டுரையின் சாரம் லக்ஷ்மணானந்தா, ஒரிசாவில் ஆற்றிய தொண்டுகள், அப்பாவியான அவரை கிறித்துவ தீவிரவாத அமைப்புகளும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து தீர்த்துக்கட்டினர் என்பதே. அவர் துணைக்கு அழைத்திருந்தது ஒரிசா முன்னாள் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவரை.
” ‘இந்த(கந்தமால்) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள்‘ என்று ஒரிஸ்ஸாவின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவர் தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார்” என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டு..

வேட்பாளரைக் காணவில்லை!
இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பா.ஜ.கவில் தனித்த இடம் உண்டு. நான்கு சிறுபான்மையினரை வெட்டிக்கொன்றால் அல்லது 40 சிறுபான்மையினர் வீடுகள் நாசமா போகக்காரணமாக இருந்தால் இந்தா புடி எம்.பி சீட்டு என்று வெளியே சொல்லப்படாத சட்டம் இருக்கும்போல. போன மாதம்தான் குஜராத் கலவரத்தில் தேடப்பட்டு வந்த மோடி அமைச்சரவையின் உயர் கல்வித்துறை அமைச்சர் போலீசில் சரணடைந்தார். இப்போது கந்தமால் தொகுதி வேட்பாளர் அசோக் சாகுவைத் தேடுகிறது மாநில போலீஸ். எம்.பி ஆகி அமைச்சர் ஆவதற்குள் விதி விளையாடிவிட்டது. முன்னாள் விஷ்வ ஹிந்து தொண்டரும் ஐபிஎஸ் படித்தவருமான அசோக் சாகு, ஒரிசாவின் குருசாமி! தேடித்தேடி ‘கிறித்துவ‘ பயங்கரவாதம், ‘முஸ்லிம்‘ தீவிரவாதம் என்றெல்லாம் கட்டுரை எழுதுவார். (சங்க் பரிவார் இணைய தளத்தில் இவருடைய கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும்) எழுதுவதோடு, காவித்தொண்டாற்றுவதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எம்.பி.சீட்டுக்கு ஆசைப்பட்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். போதாத காலம்… தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவர் பேசிய ‘எழுச்சியூட்டும் பேச்சு‘(‘லக்ஷ்மணானந்தா சாமிகளை கொன்றது யார்? கொலை செய்தவனுக்குத் தெரியுமா இதற்கு பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும் என்று?’) தேர்தல் ஆணைய விதிகளின்படி சர்ச்சைக்குரிய பேச்சாகிவிட்டது. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல்துறை காத்திருக்க அப்ஸ்கான்ட் ஆகிவிட்டார் அசோக் சாகு!
இப்படிப்பட்ட மதிப்பிற்குரியவர் எழுதிய கட்டுரைகளைத் தோண்டித்துருவி ஆராய்ந்து கந்தமால் மக்களின் ரட்சகர்களாக காவித்தொண்டர்களை முன்னிறுத்த கட்டுரை எழுதியிருக்கிறார் குருசாமி. அப்பட்டமான மத படுகொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது காவித்துணி. இப்போதைக்கு அது கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது!