சந்திரபாபு நாயுடுவை கலங்கடிக்கும் செக்ஸ் முறைகேடு!

செம்பரக் கட்டைக் கடத்தலை ‘பல’ யுத்திகளைக் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆட்டம் காண வைத்திருக்கிறது ‘கால் மணி’ முறைகேடு. அதென்ன கால் மணி?

பணம் தேவைப்படுவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்தால் வீட்டிற்கே வந்து பணம் தருவார்கள்.  பணம் என்றால் சும்மா கிடையாது; வட்டிக்குத்தான். அதுவும் கந்துவட்டி போல பத்து வட்டி, பதினைந்து வட்டி அல்ல. மீட்டர் வட்டி! இருபது, முப்பது வட்டி. அதாவது 100 ரூபாய் கடன் கொடுத்தால் அதில் 30 ரூபாய் வட்டியாக பிடித்துக்கொள்வார்கள். கடனைத் திருப்பிச்செலுத்தும்போது அசலைவிட வட்டிதான் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆந்திராவின் பல பகுதிகளில் குறிப்பாக விஜயவாடாவில் இந்த கால் மணி மிகவும் பிரபலமானது.

இந்த விதத்தில் அவசரத்து பணம் வாங்கிய மக்கள், ஒரு கட்டத்தில் கட்ட முடியாமல் தவித்திருக்கிறார்கள். இதில் ரூ. 2000கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

chandrababu naidu
இந்த முறைகேட்டில் மீட்டர் வட்டி மட்டும் பிரச்சினையல்ல…கடன் கட்ட முடியாதவர்களின் வீட்டுப் பெண்களை பாலியல் தொழிலுக்குத் தள்ளியதாக பெரும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. கால் மணி மூலம் ரூ. ஒன்றரை லட்சம் கடன் பெற்ற ஒரு பெண், ரூ. ஆறு லட்சத்தை கட்ட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதாகவும் அதைக் கட்டத் தவறியதால் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப் பட்டதாகவும் புகார் தெரிவித்தார். இதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் செய்தார்கள். கால் மணி முறைகேடு, செக்ஸ் முறைகேடாக மாறியது.

இதில் உச்சக்கட்ட விவகாரமே இந்த முறைகேட்டில் ஆளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம் எல் ஏக்கள் ஈடுபட்டார்கள் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக வைக்கிறது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்.

கால் மணி முறைகேட்டை விசாரிக்க தனிப் படை அமைத்திருப்பதாக சொல்லியிருக்கும் சந்திரபாபு நாயுடு, வெள்ளிக்கிழமை ஆந்திர சட்டமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். சந்திரபாபு நாயுடுவின் கட்சி எம் எல் ஏக்களுக்கு நேரடியாக தொடர்பு இருக்கும்போது எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும் என ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்  நகரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நடிகை ரோஜா, சட்டமன்றத்தில் சந்திர பாபு நாயுடுவின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார். இதற்காக ரோஜாவை ஒரு வருட காலத்துக்கு சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைவிதித்தார் சபாநாயகர்.

வெளியே வந்த ரோஜா, “ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் எல்லாம் கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர் தகுதியானவரே கிடையாது. இந்த செக்ஸ் முறைகேட்டில் சந்திரபாபு நாயுடுவும் அவருடைய மகனுமே சம்பந்தப்பட்டிருக்கும்போது, எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும்?” என அதிரடியாகப் பேசினார்.

மரக்கட்டைகளுக்காக அப்பாவித் தமிழர்களின் உயிரை துச்சமென நினைத்து அவர்களை சுட்டுக் கொல்வதற்கு ஆதரவாக இருக்கும் முதலமைச்சர், தன் சொந்த மக்களுக்கு மட்டும் அனுசரணையாக இருப்பார் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

தினச்செய்தி நாளிதழில் வெளியானது