முசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா?

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், கடந்த திங்கள்கிழமை நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.

மத ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இசுலாமியர் அல்லாத மக்களுக்கு மோடி கடவுளைப் போன்றவர் என்றும் 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முசுலீம் நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்த இந்து அல்லாதவர்களுக்கும் குடியுரிமை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முசுலீம் அல்லாத அகதிகளுக்கு மோடி வாழ்க்கையை வழங்கியிருப்பதாகவும் நெகிழ்ந்தார். “நரகத்தைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்துவரும் மக்களை காப்பாற்றும் கடவுளாக நரேந்திர மோடி மாறியிருக்கிறார். கடவுள் அவர்களுக்கு வாழ்க்கையை கொடுத்தார். அவர்களுடைய அன்னையர் பிறப்பு கொடுத்தனர். ஆனால், நரேந்திர மோடி அவர்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்” எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களும் பாஜகவினரும் திரும்பத் திரும்ப பிரதமர் மோடியை ‘ஆபத்பாந்தவராக’ ‘கடவுளுக்கு இணையானவராக’ முன்னிறுத்தி வருகின்றனர். பொதுப்படையாக நல்லதுதானே செய்கிறார் என்கிற தொனியும் மக்களிடைய இவர்கள் கொண்டு சேர்க்கிறார்கள்.

கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்றே அனைத்து மதங்களும் சொல்கின்றன. ஆனால், இவர்களுடைய கூற்றுகளில் உள்ள இரு வேறு விசயங்கள் மூலமாக, இவர்களின் ஒருதலைபட்சமான ‘கடவுளை’ இனம் காணலாம்.

முதலாவதாக, முசுலீம் நாடுகளில் மற்ற மதத்தினர் மத ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது, 1947-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 23% சிறுபான்மையினர் இருந்ததாகவும், அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டோ அல்லது துரத்தப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ தற்போது 3.7 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் கூறினார்.

அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறிய இந்த ‘புள்ளிவிவரம்’ பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைக்குள் உலகத்தை அடக்கி விடுகிற இந்தக் காலத்தில் ஒரு கணம்கூட பொய் நிலைத்திருக்காது. பாகிஸ்தான் அரசின் அலுவலர் ரீதியிலான விவரங்களில் 1947-ஆம் ஆண்டு 2.83 சதவீத சிறுபான்மையினர் அங்கு வசித்துள்ளனர். 1972-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது 3.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1981-ஆம் ஆண்டு 3.3 சதவீதமாகவும் 1998-ல் 3.7 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது.

இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் 2017-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் தோராயமாக 4 சதவீத சிறுபான்மையினர் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள், பாகிஸ்தானின் தென்பகுதியான சிந்து மாகாணத்தில் இவர்கள் வசிக்கிறார்கள்.

மோடி – ஷா திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டிருக்கும் முசுலீம் நாடுகளில் ‘பாதுகாப்பில்லாமல் வாழும்’ சிறுபான்மையினருக்கான இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும் சீக்கியர்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். தங்களுக்கு இப்படியொரு குடியுரிமை தேவையில்லை என அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அதோடு, முன்னெப்போதையும்விட, பாகிஸ்தான் அரசு சிறுபான்மையினரின் நலனின் அக்கறை செலுத்திவருவதும் செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக்கொண்டுதான் உள்ளது.

அடுத்து, வங்கதேசத்துக்கு வருவோம். அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி 10. 7 சதவீதமாக உள்ளனர். இந்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துதான் காணப்படுகிறது.

வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசில் இரண்டு இந்து அமைச்சர்கள் பதவியில் இருக்கிறார்கள். ஒருவர் உணவுத்துறை அமைச்சர் சதன் சந்திர மசூம்தார், இன்னொருவருவர் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்வபன் பட்டார்சார்ஜி. ஆளும் அவாமி லீக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களும் உள்ளனர். இவர்களைத் தவிர ஏழு இந்து எம்.பிக்களும் உள்ளனர்.

அரசியல் தவிர, நீதித்துறையிலும் அரசு நிர்வாகத்தில் பல இந்துக்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். கலை – பண்பாடு சார்ந்த துறைகளிலும் பல இந்துக்கள் கோலோச்சி வருகின்றனர்.

இதுநாள்வரை இந்து தேசியவாதிகள் அண்டை முசுலீம் நாடுகள் குறித்து பரப்பி வந்தவை மிகையானவை என கள நிலவரங்கள் சொல்கின்றன. வங்கதேசத்தின் அடிப்படைவாதிகள் அவ்வவ்போது இந்துக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைகொண்டபோது, வங்க தேச மக்கள் அதை முறியடித்திருக்கிறார்கள்.

அடிப்படையில் வங்கதேசம் ஒரு மக்கள் குடியரசு நாடு. அங்கே மத அடிப்படைவாதம் இருந்தாலும் சிறுபான்மையினருக்கான அதிகார பகிர்வில் தற்போதுள்ள மோடி தலைமையிலான அரசைவிட அது முற்போக்கானது. பாஜக ஒரு முசுலீம் வேட்பாளரைக்கூட நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கவில்லை. முசுலீம்கள் பெருவாரியாக உள்ள உத்தர பிரதேசத்தில் ஒரு முசுலீம் எம்.எல்.ஏ., எம்.பி.கூட பாஜகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. முசுலீம்களை முற்றிலுமாக ஒதுக்குகிறது இந்த அரசு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

எனவே, அமித் ஷா முசுலீம் நாடுகளில் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் சிவராஜ் சிங் சவுகான் மோடி முசுலீம் நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் கடவுள் என்பதும் திரிக்கப்பட்டவை; உண்மைக்கு புறம்பானவை.

இரண்டாவதாக, குடியுரிமை பெறப்போகும் முசுலீம் அல்லாத இந்துக்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், சமணர்களுக்கு என்ன திட்டங்களை இந்திய அரசு வைத்திருக்கிறது என்பதும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அண்மையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, குடியுரிமை பெறுகிறவர்கள் எங்கே குடியமர்த்தப்படுவார்கள் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கும் ஆளும் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் தரப்படவில்லை.

அசாமில் ‘சட்டவிரோத குடியேறிகளை’ வெளியேற்றுவதற்காக செயல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்காக அரசு ரூ. 1600 கோடி செலவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இந்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். குடிமக்கள் அல்லாதவர்களை அடைத்து வைக்கும் ‘தடுப்பு முகாம்’களுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது. அவர்களை கண்காணித்தல், அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தல், அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல் என கூடுதல் செலவினங்களும் உள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் அதன் பிறகு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தவிருப்பதற்கும் இன்னும் ஏராளமான நிதி ஒதுக்கப்பட வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் தீவிரமாக கிளம்பியுள்ள நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு இப்போது நடைமுறைப்படுத்தப்படாது என அரசு அறிவித்து, குறுக்கு வழியான தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்துக்கு கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்த விவகாரங்களால் நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் அதே வேளையில் சர்வதேச கண்காணிப்பு நிதியம், இந்தியாவின் பொருளாதார மந்தநிலை உடனடியாக மேலே எழ முடியாத நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறது.

இத்தகையதொரு நிலையில், எந்தவொரு முடிவையும் உடனடியாக எட்டாத நாட்டு மக்களுக்கு எந்தவகையில் நன்மை தராத ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பின் வெளிப்பாடாக மத்திய அரசு தனது திட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.

பர்மாவில் பெரும்பான்மை பவுத்த மத அரசால் மிகக் கடுமையாக இன அழிப்புக்கு ஆளான (சர்வதேச சமூகம் இதை இன அழிப்பு என்றே சொல்கிறது) ரோகிங்கியா மூசுலீம்களுக்கு ‘சிறுபான்மையினரின் கடவுளான’ மோடி எந்தவித கரிசனத்தையும் காட்டவில்லை. இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த ரோகிங்கியாக்கள், சர்வதேச சட்டங்கள் அனுமதித்துள்ள அடிப்படைவசதிகள்கூட இல்லாமல் இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். ரொகிங்கியாக்கள் பழங்குடியின சமூகம் என்பதால், சர்வதேச முசுலீம் சமூகமும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதும் துயரமானது.

அவ்வளவுதூரம் போவானேன்… 30 ஆண்டு காலம் பவுத்த பெரும்பான்மைவாதத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்த தமிழ் ‘இந்துக்களை’ ஏன் ‘கடவுள்’ மோடி கரிசனம் காட்டவில்லை. தமிழர் இந்துக்கள் இல்லையா? அல்லது தமிழர்கள் மீது கடவுளுக்கு கருணையில்லையா? சிவராஜ் சிங் சவுகான் புகழ்ந்ததைப் போல, மோடி இவர்களுக்கு மட்டும் ஏன் புதிய வாழ்க்கையை தர மறுக்கிறார்?

முசுலீம் நாடுகளில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்கள் எனக் கூறி, இங்கிருக்கும் முசுலீம்களை அச்சுறுத்தி, அகற்றும் இந்து தேசியவாதத்தின் திட்டத்தை அமலாக்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. எத்தனைதான் பூசி மெழுகினாலும் இவர்களுடைய இனவெறுப்பு திட்டத்தின் உண்மை முகத்தை மூடி மறைக்க முடியாது.

ஆறாண்டுகாலம் இந்து தேசியவாத அரசு விதைத்திருக்கும் முசுலீம்கள் மீதான வெறுப்பின் விதை, இப்போது சட்டமாக்கல் முறைகளால் முளைவிட்டுக்கொண்டிருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், மதச்சார்பற்ற நாடு என்கிற அடித்தளத்தில் கட்டப்பட்ட ‘இந்தியா’ காணாமல் போகும். எனவே, இந்தப் பொய்க்கடவுள் பிம்பங்களில் விழுந்துவிடாமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

நன்றி: தின செய்தி. (27-12-2019)