நான் மாட்டிறைச்சி விரும்பி…

மாட்டிறைச்சி உண்பேன் என்று சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை.  மாட்டிறைச்சி உண்பது கீரையும் காயும் சாப்பிடுவதுபோல அவரவர் உணவுப் பழக்கம் சார்ந்தது.  உணவுப் பழக்கம் சார்ந்து ஒதுக்குவது, ஒடுக்குவது நெடும்காலமாக இருந்து வந்தாலும் அதை சட்டத்தின் பிடிக்குள் நிறுத்துவது தற்போதைய மதவாத ஆட்சியின் செயல்திட்டமாக உள்ளது.  இது அப்பட்டமான உரிமை மீறல் செயல்.  வரலாற்று முந்தைய காலம் தொட்டே இருந்துவரும் ஒரு உணவுப் பழக்கத்தை மதத்தின் பெயரால் சட்டம் இயற்றி தடுப்பது பாசிசத்தின் உச்சம். மாட்டிறைச்சி விலை மலிவானது, அதே நேரத்தில் சத்தும் குறைவில்லாதது. சத்துக் குறைவால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அவதியுறும் நாட்டில் மாட்டிறைச்சி தடை போன்ற சட்டம் எவ்வளவு பிற்போக்குத்தனமானது? உலக நாடுகளில் எங்கேயும் இதுபோன்ற அடிப்படை உரிமையை பறிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்காது. இப்படியொரு சட்டம் தமிழகத்தில் வந்தால் நிச்சயம் நான் குடும்பத்தோடு தெருவில் இறங்கிப் போராடுவேன்.

jhapost

பசு என்னும் புனிதம் எப்படி கட்டமைக்கப்பட்டது என்று இந்திய வரலாற்று அறிஞர் டி. என். ஜா தனி புத்தகமே எழுதியிருக்கிறார். அதில் இந்து அமைப்புகள், இந்து அரசுகளால் புனிதங்களாக மதிக்கப்படும் புராண நூல்களில் பசுமாட்டின் இறைச்சி எத்தகைய ருசியுடையது என்று சிலாகித்திருப்பதாக எழுதியிருக்கிறார். நூலின் விலை ரூ. 200தான். கோழி, ஆட்டின் இறைச்சியை மட்டும் உண்ணும், மாட்டிறைச்சி உண்பவர்களை, உண்பதை ‘அய்யே’ என்கிற பார்வை பார்க்கும் அன்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். என்னுடைய பரிந்துரை…

எனக்குத் தெரிந்த ஒரு பெண், என்னைப் போல மாட்டிறைச்சி உண்பவர்தான், நாங்கள் ஒருமுறை பேசிக் கொண்டோம். இத்தனை பத்திரிகைகளில் ஏன் ஒன்றில் கூட மாட்டிறைச்சி ரெசிபி ஒன்றுகூட வருவதில்லை என்று நான் கேட்க, ‘நாம் போடுவோம்’ என்றார். இறுதியில் அவருக்கான வாய்ப்பு வந்தது. ஆனால், தன் லட்ச ரூபாய் மாத சம்பளம் காரணமாக மாட்டிறைச்சி ரெசிபி பிரசுரத்தை அவர் நிறுத்திவிட்டதாகக் கேள்வி.

ஆமாம் ஊடகங்கள் எல்லாம் ஒற்றை விழுக்காடில் இருக்கும் பார்பனர்களால், பார்ப்பனர்களுக்காக நடத்தப்படுபவைதான். மாட்டிறைச்சி உண்பவர்கள் இன்னமும் பத்திரிகைகளை காசு கொடுத்து வாங்கும் அளவுக்குக்கூட பொருளாதார வளர்ச்சி பெறமுடியவில்லை. அப்படியே பெற்றாலும் மேலே சொன்ன பெண் பத்திரிகையாளர் போல ‘கர்வாப்ஸி’ பெற்று புனிதமடைந்து விடுகின்றனர். போகட்டும் நான் மாட்டிறைச்சி ரெசிபி நிறைய வைத்திருக்கிறேன். நேரமின்மை காரணமாகவே எழுதவில்லை. நான்கு பெண்கள் தளத்தில் எழுதுவேன்.